Saturday, February 6, 2010

ஆலிவர் ட்விஸ்ட்! எழுத்து காலத்தின் கண்ணாடியாக...!

என்னுடைய இன்னொரு வலைப்பக்கங்களில் பொருளாதாரம், வங்கிகள், அரசியலைத் தொட்டு எழுதிய சில பதிவுகளில், சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் கதையைப் படிக்கும் படி சிபாரிசு செய்வது உண்டு. முக்கியமான காரணம், அந்தக் கதையின் தொடக்கமே இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி எப்படி கிராமங்களில் இருந்து மக்களை நகர்ப்புறத்துக்கு, சேரிகளில் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து தள்ளியது என்பதை விவரிக்கும், காலத்தின் கண்ணாடியாக இருப்பதை அறிந்து கொள்வதற்காகத் தான். ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறான். அவனைப் பாதித்த விஷயங்கள், சமூகத்தில் அவன் பார்த்த, அவனைப் பாதித்த நிகழ்வுகள், அவனுடைய ஆதங்கத்தோடு சேர்ந்தோ, அல்லது அவன் புரிந்து  கொண்ட விதத்தை ஒட்டியோ தான் அவன் படைப்புக்கள் இருக்கும். மனிதனை நேசிக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரிடத்திலும் காணக் கிடைக்கிற பொதுவான பண்பு இது. 

தமிழில் மட்டுமல்ல, பொதுவாகவே வலைப் பதிவுகளைப் படிக்க வருபவர்கள், மேலோட்டமாகவே பார்த்துவிட்டுப்போய் விடுகிறார்கள்.அவர்களைக் குறை சொல்லியும் பயனில்லை. இன்றைக்கு எழுத்து என்பது, அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு  ஓட வைக்கிற  ஃபாஸ்ட் ஃபுட் சமாச்சாரமாகவே ஆகிப்போன நிலையில், ஆழ்ந்த வாசிப்பு என்பது மிகவும் அரிதாகிப்போன விஷயமாகவே படுகிறது.

இப்படிக் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு, அந்த அவஸ்தையோடேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியின் பக்க விளைவுகளில் எழுந்த கதை ஆலிவர் ட்விஸ்ட்! சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய இரண்டாவது கதை இது. ஒரு சிறுவனை மையமாக வைத்து எழுதிய கதை என்று பார்த்தால், அவருக்கு இது முதலாவது முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் பரவியதாக இருக்கும் இரண்டு சுவாரசியமான வாக்கியங்கள், உங்களுக்கும் கூடத் தெரிந்தது தான்,  இந்தக் கதையில் தான் இருக்கிறது!

ஒன்று, "சட்டம் ஒரு கழுதை!"

கிட்டத் தட்ட  நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னால் டிக்கென்ஸ் எழுதிய  இந்த வார்த்தை, இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!

இன்னொன்று, "தயவு செய்து ஐயா, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்!"

சாதாரண ஜனங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்து, இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் கெஞ்சல்!

தொழிற்புரட்சியின் முக்கியமான அம்சம், தேவை இருக்கிறதோ இல்லையோ, உற்பத்தி செய்து அதை நுகர்வோர் தலையில் கட்டி விடுவது! கிராமப் பொருளாதாரத்தின் வலிமை இருப்பதைப் பகிர்ந்து கொண்டு, வளர்ச்ச்சி இல்லை என்றாலும் தேய்மானமாவது இல்லாமல் இருந்தது. தொழிற்புரட்சி அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டதன், ஏழைகளையும் உற்பத்திசெய்ததன் ஆரம்ப காலத்தைத் தொட்டுச் செல்லும் கதை ஆலிவர் ட்விஸ்ட்.

Bentley's Miscellany என்ற பத்திரிகையில். 1837 பெப்ருவரியில் தொடங்கி, 1839 ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக வெளிவந்த தொடர்கதையாகத் தான், ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகமானது. 

சட்டம் ஒரு கழுதை, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று சில வாக்கியங்களை அறிமுகப் படுத்திப் பிரபலப் படுத்தியது மட்டுமல்ல, அந்த நாளைய சரித்திரக் குறிப்பேடுகளில் கூடப் பதிவு செய்யப் படாமல் இருந்த ஏழை மக்களின் துயரங்களை விரிவாகப் பதிவு செய்த, சமூகப் பிரக்ஞையோடு  வெளிவந்த  முதல் புதினம் இது தான்

மற்ற எழுத்தாளர்கள், பணம் படைத்தவர்களைப் பற்றியே எழுதி எழுதி மாய்ந்துகொண்டிருந்த நேரத்தில், வெளிவந்த வித்தியாசமான எழுத்து இது.

கதை ஆலிவர் ட்விஸ்ட் என்ற சிறுவனைச் சுற்றியே ஆரம்பிக்கிறது. இவனைப் பெற்றுப்  போட்டதும் தாய் இறந்து விடுகிறாள். தந்தை யார் என்று தெரியவில்லை. ஏழைகளுக்கான சட்டம் என்ற ஒன்றின் கீழ் நிர்வகிக்கப் படும் ஒரு விடுதியில் முதல் ஒன்பது வருடங்கள்! இல்லாதவர்கள் அனுபவிக்கும் கொடுமை பசியுடன் அந்த ஒன்பது வருடங்கள் இருப்பதை,கானா காப்பீடு, சமூகக் காப்பீடு என்று இப்போதுகூடச் சொல்லப் படுவதில் உள்ள ஓட்டைகளை, அந்தக் காலத்திலேயே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்!

ஒன்பது வயது நிறைந்ததும், திருமதி மான் நிர்வகித்து வரும் அமைப்பில் இருந்து, வேலை செய்வதற்கு வேறோர் இடத்திற்கு அனுப்பப் படுகிறான் ஆலிவர் ட்விஸ்ட்! அங்கே தான், பசி தாங்க முடியாமல், "தயவு செய்து ஐயா! இன்னும் கொஞ்சம்!" என்று உணவுக்குக் கெஞ்சுகிறான்.ஐயோ பாவம் என்று கொஞ்சம் சோறு போட்டால் இன்னும் கொஞ்சம் என்று கேட்பாயா என்று அங்கே இவன் மீது கோபம் வருகிறது ஐந்து பவுண்ட் கொடுக்கும் எவர் வேண்டுமானாலும் இவனை அழைத்துச் செல்லலாம் என்று முடிவாகிறது. அந்த நாளைய பிரிட்டிஷ் சமூக அமைப்பு, தங்களுடைய சொந்த ஜனங்களையே எப்படி நடத்தியது, ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் எப்படி, வீட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள் என்பதைக் கொஞ்சம் ஆழ்ந்து யோசிக்க வைக்கிற பகுதி இது. பணம் படுத்தும் பாடு எப்படிப் பட்டது என்பதைப் போகிற போக்கிலேயே சொல்கிற இடமாகவும் இந்தப் பகுதி இருக்கிறது.

உள்ளூர் பாரிஷில்(ஒரு சர்ச் அமைப்பு) இருக்கும்  சோவெர்பெரி என்பவர்,  வேறு ஒரு மோசமான நபரிடம் தள்ளிவிட இருந்த நிலையில் தலையிட்டுத் தன வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மனிதர் நல்லவர் தான்! ஆனால், அவர் மனைவிக்கு, இந்தச் சிறுவனைப் பிடிக்கவில்லை. அங்கே இருந்த வேலையாட்களுமே கூட இவனைக் கொடுமைப்படுத்துகிறார்கள். அதில் ஒருவனைத் திருப்பித் தாக்கியதால், தண்டிக்கப் படுகிறான். ஆலிவர்  அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுகிறான்! பசியும்,துயரமும் தொடர்ந்து துரத்துகிறது.

லண்டனை நோக்கிப் பயணப்படும் நேரத்தில்,  ஜாக் டாகின்ஸ் என்ற சம வயதுள்ள ஒருவனைச் சந்திக்கிறான்.

ஏய்ப்பதில் கலைஞன் (the artful dodger) என்றே அவனுடைய வட்டாரத்தில்  அழைக்கப்படுவதில் காரணமில்லாமல் இல்லை. பிக் பாக்கெட் அடிப்பதில் கலைஞன் மட்டுமில்லை, ஆலிவர் மாதிரி ஆதரவற்ற சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய கூட்டத்தில் சேர்க்கும் வலைஞனும் கூட! தன்னுடைய குரு ஃபாகின்சிடம் அழைத்துப் போகிறான். எளிதாகச் சம்பாதிக்கலாம், சுகமாக வாழலாம் என்ற கனவுகளைத் தந்திரமாக இப்படிப்பட்ட ஆதரவற்றவர்களிடம் விதைத்து, அவர்களை உபயோகிக்கும் ஒரு கொடூரமான கும்பல் அது.

கைக்குட்டை விற்கிற சாக்கில் தங்களைப் பிக்பாக்கெட் அடிப்பதற்குத் தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்து, ஆலிவர் இந்தக் கும்பலை விட்டு விலக முனைகிறான். பிக்பாகெட் அடிக்கிற முயற்சியில் டாகின்ஸ் அம்பலப்பட்டு, ஆலிவரும் இன்னொருவனுமாக டாகின்சுடன் தப்பித்து ஓடுகிறார்கள். மற்ற இருவரும்தப்பித்துவிட, ஆலிவர் மட்டும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறான். நடந்ததைப் பார்த்த சாட்சிகளில் ஒருவர், ஆலிவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை எடுத்துச் சொல்லவும் விடுவிக்கப் படுகிறான். பிரவுன்லோ என்ற முதியவர் இவன் மேல் இரக்கப் பட்டுத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

அதுவும் நிலைக்காமல் போகிறது. கும்பல் தலைவன்  ஃபாகின்ஸ், தன்னுடைய கையாளான நான்சி என்ற பெண்ணை அனுப்பித் தந்திரமாக ஆலிவரை மறுபடி கும்பலுக்குள் கொண்டு வந்து விடுகிறான். வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் முயற்சி ஒன்றில் ஆலிவர் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப் படுகிறான். எதிர்பாராத விதமாக அந்த முயற்சி தோற்றுவிடுகிறது, ஆலிவர் சுடப்படுகிறான். வீட்டில் இருப்பவர்களால்,
ஆலிவர் காப்பாற்றப் பட்டு, அவர்களுடைய அரவணைப்பும் கிடைக்கிறது.

இவனை மறுபடி கும்பலுக்குள் சிக்க வைத்த நான்சி, இவன் மீது இரக்கம் கொள்கிறாள். ஆலிவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தவிக்கிறாள். அதே கும்பலில் இருக்கும் இவளது காதலன் சைக்ஸ் எதிராக இருக்கிறான். திருட்டுக் கும்பலுக்குள்  மோன்க்ஸ் என்ற புது நபர் வந்து சேர்கிறான். ஆலிவரைத் தீர்த்துக் காட்டுவதில் அவன்  அதிக அக்கறை காட்டுகிறான். தொடர்ந்து நிகழும் மோதல்களில் சைக்ஸ் தன் காதலி நான்சியைக் கொன்று விட்டு, தப்பியோட முயலும்போது தானும் கொல்லப் படுகிறான்.

மோன்க்ஸ் ஏன் ஆலிவரைத் தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறான் என்ற மர்மமும் உடைகிறது. அவன் ஆலிவருக்கு சகோதரன் முறையானவன்.  ஆலிவர் ஒரு பணக்காரனின் வாரிசு என்றெல்லாம் தெரிய வருகிறது. ஃபாகின்ஸ் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறது. அப்புறம், பிரிந்திருந்த உறவுகள் எல்லாம் சேர சுபம் சுபமே என்று கதை முடிகிறது.

புத்தக விமரிசனம் என்று முழுக்கதையுமே சொன்னால் எப்படி என்று கேட்கிறீர்களா?

இங்கே கதையில்  பெரிதாக ஒன்றுமே இல்லை.தமிழில் அனாதை ஆனந்தன் என்ற பெயரில் ஏவிஎம் தயாரிப்பில்,  ஏவிஎம் ராஜன், ஜெயலலிதா, மாஸ்டர் சேகர் நடித்து, இதே கதை படமாகவும் வந்தது. இப்போது சொன்ன அவுட்லைனை வைத்து படமாக வந்திருந்தாலும், முக்கியமான ஒன்று மிஸ்ஸிங்! அது தான், எழுத்தாளன், தான் வாழ்ந்த காலத்தை எழுத்தில் பிரதிபலித்துக் காட்டியிருந்த விஷயங்கள்!  அதை விட்டு விட்டு படமாக எடுத்தபோது, அங்கே எதுவுமே இல்லை! 


எழுத்தில் தெரியும் ஜீவனை, வாசிப்பின் வழியாக உணர முடிவது போல, மாற்று ஊடகமாகப் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடுவதுமில்லை.

கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தீர்களானால், ஏழாவது உலகம் கதை,(இன்னமும் படிக்கவில்லை) நான் கடவுள் படம்(பார்த்தாயிற்று) இவற்றில் பேசப்படும் பிச்சை எடுப்பவர்களின் நதி மூலம் இங்கே ஆலிவர் ட்விஸ்ட் கதையில் ஃபாகின்ஸ் கும்பலை வைத்து ஆரம்பிப்பதையுமே பார்க்க முடியும். இந்த அவலங்கள்,  பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை அடிமைப்படுத்தியவுடன் செய்த முதல் காரியம் கிராமங்கள் அழிக்கப் பட்டு, மக்கள் நகர்ப்புரங்களுக்குக் கூலிகளாக விரட்டப் பட்டதில் இருந்து ஆரம்பித்தது தான்! அதற்கு  முன்னால், இந்திய சமூகத்தில் இருந்ததே இல்லை! இந்திய கிராமப் பொருளாதாரம், சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரமாக, பகிர்ந்து கொள்கிற தன்மையில் இருந்தது, கொஞ்சம் வரலாறு படித்தவர்களுமே தேடித் தெரிந்து கொள்ள முடிகிற விஷயம்.

ஆலிவர் ட்விஸ்ட்! நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னால் எழுதிய கதை தான்! இன்றைக்கும் கூட, சமூகம், பொருளாதாரம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு சொன்ன படைப்பாகவும் இருப்பது தான் இதன் சிறப்பு.

நாவலை முழுதாகப் படித்துப் பாருங்கள்! எழுத்தின் ஜீவனை அங்கே தான் கண்டு கொள்ள முடியும்!




4 comments:

  1. வாருங்கள் திரு.ராகவன்,

    ஒரு புத்தகத்தைப் படிப்பது, அதன் தாக்கங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற ஆரம்பம், நல்லதா, அல்லவா என்ற கேள்வியே இங்கே எழவில்லையே! இங்கே நான் படித்த, படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள், என் சிந்தனையோட்டத்தைத் தீர்மானிக்கும், பண் படுத்தும் கருவிகளாக ஆரம்ப நாள் முதலே இருந்து வருகின்றன. அது தனிமனிதனைச் சார்ந்தது.

    இங்கே பகிர்ந்து கொள்வது, பிறருக்கும் பயன்படக்கூடும் என்ற ஒரே எண்ணத்தில் மட்டுமே. இந்தக் கதையைப் படித்திருக்கிறீர்களா, உங்களுடைய கருத்து என்னவாக இருந்தது, அல்லது இந்த விமரிசனம் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசையை உண்டுபண்ணியதா இல்லையா, வேறு என்ன குறைநிறைகள் இந்த விமரிசனத்தில் தெரிகிறது என்பதைக் கொஞ்சமேனும் தொட்டுச் சொல்லியிருந்தால், உங்களுடைய பின்னூட்டம் இன்னமும் பயனுள்ளதாக இருக்கும்.

    என்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  2. தலைவரே இன்னிக்குத்தான் உங்க பக்கம் பார்த்தேன், பொறுமையா படிச்சிட்டு வர கொஞ்சம் டைம் குடுங்க..:)) சின்ன வேண்டுகோள் இந்த எழுத்து நிறம் கண்ணை பறிக்கிறது.. ஏதாவது செய்யவும்..:)

    நன்றி..:)

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி சங்கர்! அவசரமே இல்லை, நிதானமாகப் படியுங்கள், கதைகளை! அதன் ஜீவனோடு!

    வலைத்தள வடிவமைப்பில் தேவைப்படுகிற மாற்றங்களை விரைவில் செய்கிறேன். அப்புறம், உங்களுடைய பதிவில் உரையாடல் அமைப்பு நேற்றைக்குத் திரையிட்ட திரைப்பட விமரிசனத்தைப் படித்தேன். தலைநகரில் வசிப்பதில் வேறு பல தலைவலிகள் இருந்தாலும், இந்த மாதிரி முயற்சிகள், சந்திப்புக்கள் சாத்தியமாவதும் ஒரு ஆறுதல் தான்.

    உங்கள் பதிவில், திரைப்படத்தைப் பற்றிய உங்கள் விமரிசனத்திற்கு ஒரு பதில் எழுதலாம் என்றால், இருபத்தேழு பேரை அனுமதித்த ப்ளாக்கர், என்னை அனுமதிக்கவில்லை. அவ்வப்போது, சில குறிப்பிட்ட பதிவுகளில் பின்னூட்டமிட முடியாமல் ப்ளாக்கர் செய்யும் சித்து விளையாட்டுக்களுக்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)