Friday, February 25, 2011

சப்த வசுக்கள்..! ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் சிறுகதை



"மொத மொதல்ல ஒரு தலைச்சன் பொறந்துது. எண்ணி ஏழே நாள்தான் இருந்துது. ...ப்ச்...அப்பறம்...பாவம்...'

அம்மாவின் இந்த வார்த்தையில் பழகித்தான் வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் போயிருக்கின்றன அவனுக்கு.

தங்களுக்கெல்லாம் முந்தி வந்து மூவிரு நாள் இருந்து சென்று விட்ட அந்த ஜீவன் இன்று எங்கு இருக்கும்?

ஒரு வேளை தங்களிலேயே யாராகவேனும் கூடப் பிறந்திருக்குமோ? ஒரு தடவை எல்லாரையும் கூர்ந்து கவனித்தான். தன்னையும் எதேச்சையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். ஏதோ அப்படி இருந்தாலும் ‘இதோ’ என்று தெரிந்துவிட சாத்தியம் ஏதோ அங்கு இருக்கும் பாவனை.

இருப்பாரைக் கவனி. இல்லாதாரைப் பற்றி என்ன யோசனை?

அவன் குடும்பத்திலேயே பலமுறை அவனுக்கு சொல்லப் பட்டதுண்டு. ஆனாலும் அந்தத் தலைச்சன்.........?

சிறு வயதில் பாச்சுவாத்தில் அவனுக்குத் தங்கை பிறந்திருக்கிறது என்று செய்தி. பாச்சு ஏதோ முக்கியத் தகவல் இவனுக்கு மட்டும் முதல் தகவல் கொடுக்கும் வேகத்தில் வந்து சொல்லிய பின் மூன்று நாள் கழித்து அவர்கள் வீட்டில் ஏதோ தூளி போல் கட்டிப் புறப்பட்டார்கள்.

இவனும் பாச்சுவோடு சேர்ந்து துக்கம் காத்திருக்கிறான்.

ஒரு தடவை, இரண்டு தடவை பொறுத்துப் பார்த்தாள் அம்மா.

"என்னடா இது சும்மா அதைப் பத்தியே பேசிண்டு? வேலையைக் கவனி. அவாளெல்லாம் பெருமாள்ட்ட  சௌக்கியமா போய்ச் சேர்ந்திருப்பா. .."

"இருக்கறவாதான் ஐயோ பாவம்.... போனவா புண்ணியம் செஞ்சவா. அதுவும் பொறந்து கண்ணு முழிக்காம போயிட்றது எல்லாம் கொடுத்துவச்சதுகள்.... என்னமோ அதையே பெனாத்திண்ட்ருக்க..? படிக்கற வேலையைப் பாரு."

அவன் பேசுவதைக் கேட்க அப்பாவுக்குப் பிடிக்கும். சந்திர கதி சூர்ய கதி என்று ஒருவாறு அதன் பயணகதியை ஃபிக்ஸ் பண்ண முயல்வார்.

அதற்குள் அம்மா, ‘போய் கறிகா இல்லை. வாங்கிண்டு வாங்கோ’ என்று துரத்திவிடுவாள்.

ஆனாலும் அந்தத் தலைச்சன் அங்கு எங்கோதான் சுற்றிக் கொண்டு இருக்கும்.

மாலை நேரம். வெளியில் விளையாடி விட்டு வந்து கைகால் அலம்பிக் கொண்டு வீட்டுப் பாடம் படிக்க உட்காரும் வேளையில் அம்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வு. பழைய நினைவுகள் ஏதேனும் எழுந்துகொள்ளும். அந்த நினைவுகளைக் கொஞ்சம் எடுத்துத் தூசி தட்டி வைக்கும் போது அங்கு எங்கோ இடுக்கில் இந்தத் தலைச்சன் உட்கார்ந்திருக்கும். கொஞ்ச நேரம் அதை லாலனை பண்ணுவாள்.

அவன் பாடத்தை நிறுத்திவிட்டு உற்றுக் கேட்கிறான் என்றதும் பேச்சை மாற்றி விடுவாள்.

எதிர்த்த வீடு கரைவழிச் சோழியர்கள் வீடு. அவர்களாத்து டேச்சு கதை கதையாய்ச் சொல்வான். எந்த மரித்த ஜீவன் தங்காத்தில் பின் எந்த ஜீவனாக வந்து பிறந்தது என்று துல்லியமான விவரம் காட்ட அவனால் முடியும். தயவு அவன் கிராமத்துத் தாத்தா ஒருவர்.

ஏன் ஒரு ஜன்மத்தில் எங்கோ பொறையில் ஒளித்து வைத்துப் போன காதுக் கம்மலை அடுத்த பேத்தியாகப் பிறந்து நினைவாக இங்க இருக்குன்னு எடுத்துத் தந்ததாக டேச்சு சொல்வதைக் கேட்டால்தான் நம்பமுடியும்.

இருந்தாலும் அவர்கள் மீட்டில் மூன்றாவது குழந்தை, நாலு வயசு, அழகான பெண் குழந்தை, அதன் சிரிப்பு என்பது சர்வ ஆகர்ஷணம். காரணம் என்ன என்று தெரியவில்லை. இப்படித்தான் கேள்விக் குறியாகிப் போனது. நேர்த்திக்கடன் பாக்கி. அதுக்குத்தான் வசூல் என்று அப்பொழுதும் டேச்சு ஃபைலைக் க்ளோஸ் பண்ணிவிட்டான்.

ஒரு நாள் டேச்சு, இவன், கண்ணாமணி, விச்சு எல்லாரும் சேர்ந்து இரவு 8 மணி வரையில் துளசிங்கத்தாத்துத் திண்ணையில் இருட்டுப் புறை ஒட்டுத் திண்ணையில் சீரியஸான டிஸ்கஷன்.ஆவி இருக்கா இல்லையா?

வழக்கம் போல் டேச்சுதான் ஆவிக்குக் குலம் கோத்திரம், சயனம் சஞ்சாரம் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டான். ஒரு நாள் காலை 2 மணிக்குத் தெரு வழியாகவே ஓர் ஆவி போனதையும், அது இவன் முழித்திருக்கிறான் என்று உணர்ந்து இவாத்துக் குறட்டை உற்றுப் பார்த்து முழித்ததாகவும், உடனே டேச்சு சம்யோசிதமாகக் குறட்டை விடும் சப்தத்தை அபிநயிக்கவே அது சரிதான் என்று சாந்தமாகி டேச்சுவாத்து லைட் கம்பம் வழியாகப் பிடித்துக் கொள்ளாமலேயே ஏறி மாடிப் பக்கம் எங்கோ போய் விட்டதாகவும் கூறினான்.

"இவன் வுட்டா ரீலு உடுவாண்டா இவன்" என்று கண்ணாமணி கடுப்பாகிக் கத்தியதற்கு, டேச்சு முனீஸ்வரன் மேலயே சத்யம் செய்து விட்டான். அதற்கப்புறம்தான் ஆவி என்பது மறுக்க முடியாத உண்மை கிவிட்டது இவனுக்கு.

விச்சுவுக்கு ஏன் திடீரென்று தோன்றியதோ, கட்டைக் குரலில், "ஏய்! நாம சுடுகாட்டில சத்தம் போடாம ஒரு மந்திரம் சொல்றேன் அதைச் சொல்லிண்டே போய் நின்னா நிச்சயம் இதெல்லாம் அங்கதாண்டா வரும். அப்ப பார்த்துடலாம். ஆனா இந்த டேச்சுவைக் கூட்டிக்கிட்டுப் போகக் கூடாதுடா. சமயம் பார்த்து டமார்க் குசுவை விட்டான்னா அவ்வளவுதான் அதெல்லாம் கடுப்பாயிடும். துரத்த ஆரம்பிச்சுடும் அப்பறம்....."

டேச்சு உத்தரவாதம் தந்ததன் பேரில் உளவுப்படை மறுநாளே புறப்பட்டுப் போய்ப் பதுங்கிப் பதுங்கிச் சுடுகாட்டை அடைந்தது.

கொஞ்சம் முன்னாடியே வந்து விட்டதாக அலுத்துக் கொண்டான் டேச்சு. இரவு 11.45 மணி இருக்கும்.

இவனுக்கு அந்தத் தலைச்சன் அங்குதான் எங்காவது தென்படும் என்ற நிச்சயம் அதிகப்பட்டது.

டேச்சுவுக்கு முழிகள் முகத்தைவிட்டுத் தனியே வந்துவிட்டன என்பது போலத்தான். உளவுத்துறைக்கு வெளிப்படையாகவே உதறல். எல்லாம் டேச்சுவால் என்று பொதுப் பழி.

‘நான் என்னடா பண்ணட்டும். விச்சுதாண்டா சொன்னான்’ என்று தொண்டையோடு தொண்டையாக ரகசியமாக அரைத்தான். ஆவிகளின் காதில் விழுந்திருக்காது.

ஒண்ணரை, இரண்டு மணி இருக்கும் மண்டபத்தை ஒட்டிய இருட்டுத் திட்டு திடீரென எழுந்துகொண்டது. எவ்வளவு கைகள் என்று நிச்சயமாகத் தெரியவில்லை. அப்படியும் இப்படியும் நகர்வு.

ஐயய்யோ...! இந்தக் கூட்டம் இருப்பது பார்த்துவிட்டதா? இந்தப் பக்கம் நோக்கியே வருகிறது.

கண்ணாமணிக்கு அடக்க முடியவில்லை. வாய் தந்தி!! 'முதலில் வாங்கடா' என்று ஓட ஆரம்பித்தவன். கூட்டமே அவன் பின்னால் மந்திரித்து விட்டால் போல்.

‘ஏய் இங்க என்னடா இம்மா நேரத்துல பண்றீகளூ?’ என்று அது கேட்கிறது. இவனுக்கு அந்தக் குரல் ஆரடிக் குரல் போல் இருக்கிறது.

‘ஆரடி?’ ஆரடி?’ என்று ஒரு பைத்தியம். பாவம் வாழ்ந்து பின் கெட்டு, துரத்தப்பட்டு, ஜீவனம் பிடுங்கப்பட்டு, நிம்மதியாகத் தூங்க சுடுகாடு புகலிடம்.

ஒரு வேளை இதனிடமே கேட்கலாமோ அந்தத் தலைச்சன் பற்றி........ 

'ஏய் சீக்கிரம் வாடா..... '

மற்ற எல்லாரும் பக்குவமாகப் போய் செட்டில் ஆகி விட்டார்கள். இவன் தான் கொஞ்சம் கவனப் பிசகில் சத்தம் வர, ஏய் யாரது? என்பதைத் தொடர்ந்து லைட்டுகள் போடப்பட்டு, இவன் என்னமோ நிதானமாக விளக்குபவன் போல் ‘நான் தான் கதவைத் திறந்துண்டு வந்தேன்’ என்று சொல்ல, பிறகு பெரிய இன்வெஸ்டிகேஷன், எதிர்வீட்டு மாமா, வீட்டில் உள்ளவர்கள், வாசலில் ஒண்ணுக்குப் பெய்ய வந்த கிழவர் -- ஐம்பேர் ஆயம், எண்மர் குழுவாக ஆகி, தெருச் சட்ட சபை ஆக இருந்தது. 

நல்ல வேளை. யாருடைய குரலோ ‘எல்லாம் நாளை காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற தீர்ப்பில் கலைந்து போனது.

மறுநாள் இவனின் தகப்பனாரும், தாயும் துயரக் காட்சியாய் அழாக் குறையாகக் கேட்டார்கள். டேச்சு, கண்ணாமணி இன்னும் மற்றவர்களின் வீட்டுப் பெரியவர்களும் இவன் வீடு தேடி வந்து விட்டனர்.


‘இந்தப் பசங்க போக்கே ஒன்னும் சரியில்லை’

"என்ன சார்! ராத்திரி எழுந்து சுடுகாட்டுக்குப் போயிருக்கானுக...."

"என்னடா என்ன குறை வைச்சோம் உங்களுக்கு..."

"வந்து பொறந்துருக்கு பார் போன ஜன்ம கர்மம்!?".

"ஏண்டா நீயாவது இவாளுக்குச் சொல்லக் கூடாதோ? நீயும் சேர்ந்து போனியா?"

"என்ன அம்மக்கள்ளனாட்டம் உம்முனு இருக்காத. சொல்லு".

"இல்ல.... அந்தத் தலைச்சன் அங்க இருக்குமான்னு பார்க்கப் போனேன்...."

"அதான் அதான்! இவனுக்கு அதே பல்லவிதான்!. என்ன கர்மாந்திரமோ.....பெத்தவ நானே மறந்துட்டு ஒக்காந்திருக்கேன். உனக்கு என்னடா வழுச நாயி...தலைச்சன்.....மண்ணாங்கட்டின்னு. எங்க பாவத்தைக் கொட்டிக்கறதுக்குன்னே வந்து தொலைச்சிருக்கியா? "

"அது பாருங்கோ....சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்துருக்கா,,,பசங்க...ஏதாவது சாங்கியம் பண்ணிடுங்கோ .....ஏன் சொல்றேன்னா..... "

ஓய் சும்மா இதான் சாக்குன்னு ஏதாவது கதை பண்ணாதீர் சாங்கியம் அது இதுன்னு...வேலையைப் பாரும்.... நீர் ராத்திரி ஆச்சுன்னா அப்பப்ப அங்க சுடுகாட்டுப் பக்கம் தானே ரகசியமாப் போயிட்டு வரீர். உமக்கு என்ன சாங்கியம் பண்து.............?

"சூ ....பேசாம....எதாவது கிண்டியாய நமன்னு சொல்லிவுட்றீரே..... "

எந்தச் சம்பவமும் போன்றே சுடுகாட்டுச் சம்பவமும் சூடு தணிந்து அன்றைய பொழுது மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தது.

மாலையில் தெருமுக்கில் கதாகாலட்சேபம் ஆரம்பம். இவனையும் கூட்டிக் கொண்டு இவன் தந்தை அங்கு போகும் சமயத்தில் சந்தனு கங்கை கெட்டம். அஷ்ட வசுக்கள். சாபத்தால் பிறந்து, உடனே அவளால் கொல்லப் பட்டு, எட்டாவது மிஞ்சியது.

மிஞ்சின வசு பீஷ்மர்.........

இவனுக்கு மீண்டும் தலைச்சன் பிரச்சனை.

ஆம் அந்தத் தலைச்சன்கள் ஏழு பேர் என்ன ஆனார்கள்? அந்த எட்டாவது பீஷ்மனுக்கு இந்தக் கேள்வி எழுந்திருந்திருக்குமா?

இப்படி அங்கங்கே பிறந்து உடனே பதிவு இல்லாமலேயே இறந்து மறையும் இந்த மாதிரியான ஸப்த வசுக்கள் என்ன ஆகின்றார்கள்?
தலைச்சனும் ஸப்த வசுக்களாய் ஆகியிருக்குமோ?

கதையிலிருந்து திரும்பி வரும் போது ஆரடிப் பைத்தியம் கத்திக் கொண்டு இருந்தது கந்தன் கடையின் பக்கம்....


"அந்தக் கெட்ட பசங்களோட சேராத...."

******
சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்து ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஒரு அற்புதமான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். சில நுணுக்கமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். 

இந்தச்சிறுகதையில் நீங்கள் புரிந்து கொள்வதென்ன என்பதைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன், கேட்கலாம்!



2 comments:

  1. இந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.

    ......இருந்தாலும், அப்படியே எடுத்து போட்டு பகிர்ந்து கொள்ளும் போது, அவர்களுக்குத் தெரிவித்து கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. ஒன்லைன் கமென்ட் தானா வேறெதுவும் சொல்வதற்கு இல்லையா என்று முந்தைய பதிவொன்றில் கேட்டதற்காகவா இப்படி?!

    திரு மோகனரங்கனுடன் பேசிவிட்டுத் தான் அவருடைய கதைகளை இந்தப்பக்கங்களில் வெளியிட்டிருக்கிறேன். தவிர, எந்த ஒரு படைப்பாளியின் படைப்புக்களையும் திருடுகிற நோக்கம் இந்தப்பக்கங்களில் இல்லையே! ஒரு விமரிசனத்திற்காக, படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்து கொள்வதாக மட்டுமே இந்தப் பக்கங்களில் எழுதுகிறேன். அவ்வளவுதான்!

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)