Friday, October 19, 2012

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனும் பின்னே ஸென்னும் கீபோர்டு எலியும்

கொஞ்சம் பிறவேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டதில் இந்தப் பக்கங்களில் எழுதுவதே அனேகமாக மறந்து போய்விட்டது! புதிய விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்த முனைப்பில், வழக்கமாக வாசித்துக் கொண்டிருந்த சில இழைகள் படிக்கும் வரிசையில் பின்னுக்குப்போயின. நல்லவேளை, வெறும் எட்டு-பத்து நாட்களுக்குள்ளானவைதான்!வாசிப்பதை எட்டிப் பிடித்து விடலாம் என்று திறந்தபோது, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் இந்த இழை கொஞ்சம் கட்டிப் போட்டு விட்டது.

படியுங்களேன்! நீங்களும் கட்டுப் படுகிறீர்களா, அல்லது........!!
.



ஸான் மோட்ஸு மிகவும் கண்டிப்பானவர்.

யார் எந்த விதத்தில் தங்கள் இஷ்டத்துக்குக் கத்தினாலும் அதை ஒருநாளும் சூ சூ என்று தலையிட்டு அடக்கமாட்டார். காரணம் தெரியாமலேயே பலர் தாமாக அடங்குவர்.

பல கிராமங்களிலிருந்து வந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சி எடுப்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

புதுவிதமான சண்டைப் பயிற்சிகள். அதற்கு ஏற்றாற்போல் புதுவித அடிவயிற்று ஒலிகள்.

பெரிய யந்திரத்திற்குள்ளே வித வித கோணங்களில் ப்ளெடுகள் திரும்பி திரும்பிச் சுழல்வதைப் போல் சீடர்கள் கைகளை விதவிதமான கோணங்களில் கரணை மட்டை போல் ஆக்கித் திருப்புவதைப் பார்க்கும் போது கடலில் பெரிய மீன்கள் சுழன்று அடிப்பது போல் இருக்கும்.

ஆனால் இவ்வளவு ரகளையிலும் மோட்ஸு தூங்குபவர் போல் அமர்ந்திருப்பார்.

சரி கிழம் தூங்கிடிச்சு என்று முன் வரிசை மூன்றைக் கடந்த நாலாவது வரிசையில் ஒருவர் அசிரத்தையாக முதுகைச் சொரிந்தாலும் போதும் அந்தச் சீடரின் பெயர் உச்சத்தாயியில் அவரிடமிருந்து வரும்.

தலையைக் குனிந்தபடி இருக்கும் கிழம் எப்படிக் கண்டுபிடிக்கிறது?

சீடர்கள் தூக்கத்தில் கூட களரிக் கூக்குரல்களைக் கத்த ஆரம்பித்து விட்டனர்.

ஒரு நாள் பின் ஜாமத்தில் மோட்ஸு நட்ந்தார். அப்பொழுது இளம் மாணிகள் தங்கி இருந்த கூடத்திலிருந்து பயிற்சி ஓலங்கள் கனவில் வாய்குளறி வந்து கொண்டிருந்தது.

மோட்ஸுவிற்கு கவலை. மாணிகளுக்கு மௌனம் என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடுமோ!

மறுநாள் ஒரு வினோத பயிற்சியை ஆரம்பித்தார்.

யாரும் எதுவும் செய்யக் கூடாது; பேசக் கூடாது.

மௌனம் அதைப் பழக வேண்டும்.

அண்டை அயல் கிராமங்களில் இருந்த பழைய ஸென் முதியவர்களுக்கு அது வேடிக்கையாய் இருந்தது.

மௌனத்திற்குப் பயிற்சியா?

முதல் நாள் பயிற்சி முடிந்தது. மறுநாளும்.

பிறகு அவர்களைக் கூப்பிட்டு மௌனம் கடைபிடித்த காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்றார்.

பொய் தேவையே இல்லை என்ற சூழ்நிலையை வைத்திருந்தார் ஆகையாலே மாணிகள் தயங்காமல் கூறினார்கள்.

“மற்ற மாணிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த முதல் வரிசையில் இருக்கும் மூன்றாவது மாணி என்னை அன்று எப்படித் திட்டினான்; அதற்கு அவனை மலையிலிருந்து உருட்டிவிடுவதுதான் வழி. ஒரு நாள் அப்படிச் செய்தால்....இவ்வாறுதான் எண்ணம் இட்டுக் கொண்டிருந்தேன்” என்றான் ஒரு மாணி.

இப்படி ஒவ்வொருவரும் சொல்லுவது மொத்தத்தில் அடுத்தவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதிலும், அடுத்தவர் சொன்னதை மனத்தில் போட்டு சினம் வளர்த்து கறுவுவதிலுமாக இருந்தது.

“நீங்கள் மௌனமாக இருக்கச் சொன்னால் முன்னிலும் அதிகமாக சத்தம், இரைச்சல் என்று அவதிப்பட்டிருக்கிறீர்கள்.

புரிகிறதா?....” என்றார்.

ஆம் ஐயனே!

“நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உணர்ந்து திருத்திக்கொண்டு முன்னேறும் வழிகளைப் பார்க்காமல்...அடுத்தவரைப் பற்றி எண்ணியும், கறுவியுமே உங்கள் தியானம் கழிந்திருக்கிறது.”

தலையைக் கவிழ்ந்து அமர்ந்திருந்தனர் சீடர்கள்.

”சரி. நாளை ஒரு நாள் அவகாசம் தருகிறேன். முழு மௌனம். நல்லபடியாகப் பயன் கொள்க” என்று சொல்லிப் போகவிட்டார்.

நாளை மறுநாள் கூப்பிட்டுக் கேட்டார்.

“மௌன காலத்தில் என்ன சிந்தனை?” என்று.

சீடர்கள் உற்சாகமாக இருந்தனர்.

அநேகமாக அனைவரும் மோட்ஸுவினுடைய உபதேசத்தை நினைத்துக் கொண்டிருந்ததாகவும், மௌனம் எவ்வளவு முக்கியம் என்று மோட்ஸு கூறியதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்ததாகவும், மோட்ஸு எப்படி மௌனத்தில் இருப்பார் என்று கற்பனை பண்ணிக் கொண்டிருந்ததாகவும் -- இப்படித்தான் மாறி மாறி கூறினார்கள்.

ஒரு சிலர் தாங்கள் பக்கத்து கிராமங்களில் பழைய கிழங்கள் மௌன பயிற்சியைக் கிண்டல் அடித்ததை நினைத்துக் கொண்டதாய்க் கூறினர்.

மோட்ஸு கவலை தோய்ந்த குரலுடன் கூறலானார்,

“பார்த்தீர்களா! மௌனம் என்பது இப்பொழுதும் உங்களுக்கு எட்டவில்லை. அதைபற்றி நான் செய்த உபதேசமும், நானும்தான் உங்கள் சிந்தனையில் இருந்திருக்கிறது. கிராமத்து ஏச்சுகள் இருந்திருக்கின்றன. ஆனால் மௌனத்தில் இருக்க வேண்டியது இல்லை.”

ஒரே ஒரு சீடன் மட்டும் தயங்கிக் கொண்டு சொன்னான், தன் மௌனத்தில் தான் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததாக.

சிறிது முகம் மலர மோட்ஸு அவனைப் பார்த்தார்.

அவன் மேலும் சொன்னான், “ஆம் மௌன காலத்தில் நான் என்னைப் பற்றியே சிந்தித்தேன். எதிர்காலத்தில் நான் மோட்ஸுவின் இடத்தில் அமர்ந்ததும் சீடர்களுக்கு என்ன பயிற்சி அளிக்கலாம், மௌனப் பயிற்சியையே ஏதாவது மலை குகைகளில் ஏற்பாடு செய்யலாம் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டிருந்தேன்” என்றான்.

மோட்ஸு முக மலர்ச்சி எல்லாம் மறைந்து ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.

சிறுவயதில் அவர் குரு கூறியது ஞாபகத்திற்கு வந்தது -- “கிடைத்தற்கரியது மௌனம். மனத்திலும் பிறரைக் கொண்டு சத்தம் செய்தே வாழ்பவன் பரிதாபத்திற்கு உரியவன்” 

ஒரு கூகிள் குழுமத்தில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதியது. அவருக்கு நன்றியுடன்!

*****


இன்று மாலை மனிதர் பேசுகையில் ஒரு கட்டளை போட்டார்.மீற முடியவில்லை, ஆனால், எனக்கோ வேறு விதமான சூழ்நிலை! இருக்குமிடமே வைகுந்தம், கைகூப்பித் தொழும் திசையே ஸ்ரீரங்கம் என்ற மாதிரி, நவராத்ரிப் பொழுதில் தக்ஷிணேஸ்வரியை , இங்கிருந்தே கைகூப்பி நமஸ்கரிக்கிறேன். சரணடைகிறேன்.


வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே



2 comments:

  1. இருக்குமிடமே வைகுந்தம், கைகூப்பித் தொழும் திசையே ஸ்ரீரங்கம்

    மௌன காலத்தில் -- அருமையான பகிர்வுகள்..

    ReplyDelete
  2. ஸான் மோட்ஸுக்குத் தான் தன் சீடர்களின் அவ்வப்போதிய நடவடிக்கைகளுக்கான மாற்றுப் பயிற்சிகளை நினைத்து நினைத்தே பெரும் மன இரைச்சலாகி விட்டது. இந்த இரைச்சலை வெல்ல முதலில் மெளனத்தை, தான் கடைபிடிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அந்த சமயத்தில் தான் மெளனம் என்பது உபதேசம் மட்டுமே என்பது அவர் நினைவுக்கு வந்து சிக்கல் புரிந்தது. உபதேசங்களை நடைமுறைப்படுத்துவது எப்படி என்று நீண்ட நேரம் யோசித்த பொழுது...

    நடைமுறைச் சாத்தியங்களையே உபதேசங்களாக்குவது தான் அதற்கான சுலப வழியாகத் தெரிந்தது.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)