மாற்றங்களை எதிர்கொள்வது, மாற்றங்களுக்குத் தயாராவது என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது Organizations, Organizational behaviour  என்று  ஒரு நிறுவனம், நிறுவனப் பண்புகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவது நல்லது. 
 மாற்றங்களுக்குத் தயாராவது என்பதே ஒரு நல்ல தலைமை, எங்கே  இருக்கிறோம்,அடுத்து எங்கே போகவேண்டும் என்பதில் தெளிவான பார்வை, அதைக்  குழப்பமில்லாமல் செயல்படுத்துகிற லாவகம், ஊழியர்கள் என்றால் உத்தரவுக்காகக்  காத்திருப்பவர்கள் என்று மட்டுமே இல்லாமல், தங்கள் பொறுப்பை உணர்ந்து  பொறுப்புடன் செயல் படுகிறவர்களாக, தலைவர்கள் கொண்டு வர விரும்பும்  மாற்றத்தை சாதிக்க ஆர்வத்துடன் ஈடுபடுகிற கூட்டாளிகளாக மாற்ற முடிவதில்  தான் இருக்கிறது!
 நிறுவனம் என்பது என்ன?  நிறுவனப்   பண்புகள் என்பது என்ன? இந்தியச் சூழ்நிலைகளில், நாம் சாதாரணமாக நினைத்துக்    கொண்டிருப்பதற்கு நேர்மாறாகத் தான்  இவை பற்றிய விவரம், விளக்கம்,    வியாக்கியானம் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிறுவனப்   பண்புகளைக் குறித்த பதிவொன்றை சென்ற மாதம், சேத் கோடின் பதிவுகளில்   படித்தது, தொடர் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது.
இங்கே   பெரும்பாலான நிறுவனங்கள், குறிப்பாக அரசுத்துறை, பொதுத்  துறையில்    இயங்குபவை  தங்களை ஒரு கட்டமைக்கப் பட்ட, ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கிற    அமைப்பாகவே உணராமல், ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியிலேயே செயல்    படுவதையும், என்ன நோக்கத்திற்காக நிறுவனம் தொடங்கப்பட்டதோ அதற்கு எதிராகவே    பல தருணங்களில் செயல் படுவதையும் பார்க்க முடியும். ஒரு சரியான தலைமை    இல்லாதது, தெளிவான செயல் திட்டம் இல்லாதது, ஒரு தெளிவான பார்வை இல்லாதது    இப்படி இந்த அமைப்புக்கள் குறைப் பிரசவங்களாகவே இருப்பதற்குக் காரணங்களை    அடுக்கிக் கொண்டே போகலாம்.
சமீபத்தில் சேத் கோடின்  பக்கங்களில் கார்பரேட்டுகளுக்கு மனசாட்சி கிடையாது  என்ற  தலைப்பிலான  பதிவைப் படித்துவிட்டு, இங்கே உள்ள பல நிறுவனங்களுடைய   பிரச்சினைகளோடு,  குறிப்பாக பொதுத்துறையில் இயங்கும்  ஒரு புள்ளிராசா  வங்கியின் தோற்றுக்  கொண்டே  இருக்கும் இயல்போடு  பொருத்திப் பார்த்து  யோசித்துக் கொண்டிருந்தேன். பல பொதுத்துறை  நிறுவனங்களுக்கு மனசாட்சி  மட்டுமில்லை, குறைந்தபட்ச மூளை கூடக் கிடையாது.  எல்லாம் ஹிஸ் மாஸ்டர்ஸ்  வாய்ஸ் தான்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி  தேவை இல்லை என்பது, நன்றாகவே  புரிகிறது.ஆனால்  என்ன செய்ய?!
சேத் கோடின் சொல்வதைக் கொஞ்சம் என்னவென்று பார்த்து விடலாம்! அவர் சொல்கிறார், நிறுவனங்களுக்கு மனசாட்சி கிடையாது, அதெல்லாம்  அங்கே உள்ள நபர்களுக்கு மட்டும் தான்!
"நான் என்ன  செய்யட்டும், என்னுடைய  துறைக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது!", "நான் இங்கே  வேலைதான் செய்கிறேன்" ,  "என்ன பண்ணுவது? இது என்னுடைய வேலை" இப்படிச்  சொல்கிறபோதே, உங்களுடைய  மனசாட்சியையும் கழற்றி வைத்து விட்டு, உங்கள்  பொறுப்பைத் தட்டிக்  கழிக்கிறீர்கள் என்கிறார் சேத் கோடின்
 
பொறுப்பைத்  தட்டிக்  கழித்து விட்டு, வேறெவர் மீதோ பழியை சுமத்தி விடுவது கொஞ்சம்  சிரமமே இல்லாத  குறுக்குவழிதான்!  
எதற்கு? இந்த மாதிரி ஆசாமிகளால் நிரப்பப்  பட்ட நிறுவனம்  அல்லது பிராண்ட், வேகமாகக் காணாமலேயே போவதற்குத் தான்! 
முந்தைய நாட்களைப்  போல அல்லாமல்,  நிறுவனங்களுக்கு இப்போது அதிக பலம், முதிர்ச்சி இருக்கிறது.  எந்த  அளவுக்குத் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, திறமையாக, வேகமாகச் செயல்   படுகிறார்களோ அந்த அளவுக்கு பொருளாதாரத்தையும் மக்களையும் மாற்றக் கூடிய   வல்லமை உள்ளதாக இருக்கிறது.இப்படிச் சொல்கிற சேத் கோடின், ஆகக் கூடி நாம்   செய்ய வேண்டியதெல்லாம், தனிநபர்களாகப் பார்த்து,  யாரோ வந்து இதை நீ தான்   பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று சொல்கிற வரை காத்திருக்காமல், (அப்படி   எவரும் வந்து சொல்லவும் மாட்டார்கள் ) தாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி   செய்ய வேண்டும் என்பதற்கு முழுப் பொறுப்பேற்று செயல்பட்டாகவேண்டும்  என்றும்  முத்தாய்ப்பாகச் சொல்கிறார்.
இந்தப் பதிவைப் படித்துவிட்டுக் கொஞ்சம் யோசித்துக் கொண்டு இருந்ததில்,  ஏன் சில  நிறுவனங்கள், குறிப்பாகப் பொதுத்துறை நிறுவனங்கள், கற்றுக்   கொள்ளும் நிறுவனங்களாகத்  தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறிக் கொண்டே   இருக்கின்றன என்பதைப்  பார்த்தபோது, அருவருப்பும் ஆயாசமும் தான் மிஞ்சுகிறது 
ஒரு நிறுவனம்,  கற்றுக் கொள்ளும்  நிறுவனமாக, மாற்றங்களுக்குத் தன்னைத் தகவமைத்துக்  கொள்ளும் திறனுடையதாக  இருக்கிறதா என்பதை எப்படி அளவிடுவது? எதை வைத்துத்  தெரிந்து கொள்வது?
எந்த ஒரு  நிறுவனமும், ஒரு குறைந்தபட்ச  நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தான் கட்டப்  படுகிறது. அந்த நோக்கங்களை  நிறைவேற்ற மனிதர்கள்  தேவைப்படுகிறார்கள்.  அப்படித் தேவைக்காகத்  தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்கள், எந்த அளவுக்கு  நிறுவனத்தின் நோக்கங்களைப்  புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள்   என்பது  முதலில்! 
அதற்கப்புறம், அதை நிறைவேற்றுவதில் எந்த  அளவுக்குத் திறமை,  ஈடுபாட்டுடன் செயல் படுகிறார்கள் என்பது! இந்த  இரண்டுக்கும் இடைவெளி  எதுவும் இருக்கிறதா என்ற சுய சோதனை, இடை வெளியை  நிரப்ப என்ன செய்கிறார்கள்  என்பது அடுத்து. ஆக இப்படி  ஒரு நிறுவனம் நல்ல  முறையில் இயங்குகிறதா  இல்லையா என்பது ஒரு புறம்! காலத்துக்கேற்ற படி,  மாற்றங்களுக்குத் தயாராக  இருப்பது, மாற்றிக் கொள்வதும் இன்னொரு புறமுமாக,  ஒரு நிறுவனம், அதில் உள்ள  நபர்கள் பண்புகளை வளர்த்துக் கொண்டாக வேண்டி  இருக்கிறது. 
ஆக நிறுவனப்  பண்புகள் என்று  சொல்லும்போதே, அது அதில் பணியாற்றும் மனிதர்களுடைய ஒட்டு  மொத்தப் பண்பை  அளவீடாகக் கொண்டு சொல்லப் படுவது என்பது தெளிவு.
எந்த ஒரு  நிறுவனமாக  இருக்கட்டும், அது ஒரு கற்றுக்கொள்ளும் நிறுவனமாக இருக்கிறதா,   வெற்றிகரமாகச் செயல் படுகிறதா என்பதை, அந்த நிறுவனம் சந்திக்கும்   பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்கிறது என்பதைக் கவனித்தாலே புரிந்து கொள்ளக்   கூடியது தான்.
ஒரு பிரச்சினை, சவாலை எதிர்கொள்ளும் தருணத்தில் ----
 
முதலாவதாக, அந்தப் பிரச்சினை அல்லது சவாலைப் புறக்கணிக்கிறார்களா , அதற்குரிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்களா?
இரண்டாவதாக, அடுத்தவர் மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களா?
மூன்றாவதாக, இந்த  மாதிரிப் பிரச்சினை, புகார், குறை எப்போதுமே இருப்பது  தான் என்ற மாதிரி  அதைக் குறித்து ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களா? என்ன  செய்ய வேண்டும்  என்பதில் கவனம் செலுத்தத் தவறுகிறார்களா?
இந்த மூன்று கேள்விகளில் எந்த ஒன்றிற்கும் ஆமாம் என்பது பதிலாக   இருக்குமானால், அந்த நிறுவனம் கற்றுக் கொள்ளத் தவறுகிற, சீக்கிரமே   காலாவதியாகிப் போய்விடக் கூடிய நிறுவனம் தான் என்பதில் எந்த சந்தேகமும்   வேண்டாம்! அப்புறம், அதில் உள்ள ஆசாமிகளுமே கூட, அதே கதிக்குத் தான்   போகவேண்டியவர்கள் என்பது தனியாகச் சொல்ல வேண்டிய ஒன்றா என்ன!
இப்படி இல்லாமல்-----
பிரச்சினைகள், புகார்கள், குறைபாடுகள் எல்லாம் அந்த நிறுவனம் செயல்படும்   விதத்தில், பின்பற்றும் நடைமுறைகளில் தான் இருக்கிறது என்பதைப் புரிந்து   கொண்டு, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும், அதே மாதிரி   எதிர் காலத்தில் நிகழாமலும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, அந்த   நிறுவனத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் பணியாற்றுகிறவர்கள் முன்வந்து ஏற்றுக்   கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றிருந்தால், அந்த நிறுவனம்   தன்னுடைய அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளக் கூடிய நிறுவனமாக    இருக்கிறது, மாறிவரும் சூழலுக்கேற்றபடி, தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும்,   தன்னுடைய திறமையைப் பெருக்கிக் கொள்ளவும் தெரிந்த வளரும் நிறுவனமாகவும்   இருக்கிறது.
பிரச்சினைகள், அவை விடுக்கும் சவால்கள் என்பவை பயமுறுத்துபவையோ, தலையைச்  சீவி விட்டுப் போகிறவையோ   அல்ல! திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கிடைக்கும்  அற்புதமான வாய்ப்புத்  தான்! பிரச்சினை என்று பார்த்தால், பிரச்சினைதான்!  அதே நேரம், அதில்  இருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு,  அது ஒரு கற்றுக்  கொள்ளும் அனுபவம் மட்டுமல்ல, அதையும் தாண்டி அடுத்த  கட்டத்துக்குக்  கொண்டு சேர்க்கும் ஏணியாகவும் இருக்கிறது.
இதில் புள்ளிராசா வங்கி எங்கே வருகிறது என்று கேட்கிறீர்களா? இங்கே இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்!
 
புள்ளிராசா வங்கி,  தலையில் இருந்து வால் நுனி வரை, எவருக்கும் தன்னுடைய    பொறுப்பு என்னவென்பதே இன்றைக்கும் தெரிந்து கொள்ளாமலேயே வண்டி ஒட்டிக்   கொண்டிருக்கிறது. பிரச்சினைகள், புகார்கள் வெடித்து வெளியே வரும் வரை   எவரும் எதுவுமே செய்ய மாட்டார்கள்,   அப்படி வரும் சமயத்தில், எவர் மீதாவது   பழியைச் சுமத்தி வெளியே அனுப்பி விட்டால், Off with his head, Off with her head! என்று  தலையை சீவ உத்தரவு போட்டு   விட்டால்  எல்லாம் சரியாகப் போய்விடும் என்று நம்பி செயல்பட்டுக் கொண்டே   புள்ளிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிற பொதுத் துறை வங்கி அது!