Pages

Thursday, February 13, 2020

தெளிவாகப்பேசும் பானு கோம்ஸ்! தெளிவில்லாத தந்தி டிவி!

பிரசாந்த் கிஷோருடைய உத்தி டில்லி தேர்தலில் எடுபடவில்லையா? என்று அந்தப்பக்கங்களில் இரண்டு நாட்களுக்கு முன்னால் எழுதிய பதிவு, சில பயனுள்ள பின்னூட்ட விவாதமாக ஆரம்பித்ததில் ஒரு மனநிறைவு! பதிவுகள் வெறும் அரட்டைகளாக குறுகிப் போய்விடாமல், வாசிப்பதில்  கொஞ்சம் பயனுள்ள உரையாடலாகவும் இருக்கவேண்டும் என்கிற என் ஆசை எப்போதாவது இதுமாதிரி நடந்து விடும்!


அரவிந்த் கெஜ்ரிவால் இந்துத்துவ அரசியலை கையில் எடுக்கிறார் -பானு கோம்ஸ் இதுதான் யூட்யூப் தளத்தில் இருக்கும் தலைப்பு! ஆனால் மேலே பார்த்தால் பாஜக செஞ்ச தப்பு,  - பானுகோம்ஸ் என்றிருப்பதன் உள்நோக்கம் என்னவென்று புரிந்துகொள்ள முடியாதா என்ன? அதை விடுங்கள்! ஆனால் பானு கோம்ஸ் இந்த 39 நிமிட நேர்காணலில் டில்லி தேர்தல் முடிவுகளைக் குறித்து மிகத்தெளிவாகத் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். நண்பர் ஜோதி ஜிக்குப் பரிந்துரை செய்யத்தகுந்த வீடியோ இது. யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவுக்கு வந்த கமென்டுகளில் விஜய் சந்திரன் என்பவர் பிஜேபி தன்னுடைய ஆதரவு வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வருவதில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டது என்கிறார். 8 தொகுதிகளில் :100 ஓட்டுக்கு குறைவான வித்தியாசத்தில், 19 தொகுதிகளில் :100 - 1,000 ஓட்டு வித்தியாசத்தில் 9 தொகுதிகளில் :1,000 - 2,000 ஓட்டு  வித்தியாசத்தில், ஆக மொத்தம் 36 (8+19+9) தொகுதிகளில் 2,000 ஓட்டுகளுக்கு குறைவான வித்தியாசத்தில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது என்கிற அவரது ஆதங்கம், பின்னூட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் புள்ளிவிவரம் தவறானது என்று சொல்கிறார்கள் இங்கே 

 


இன்னொரு விவாதம், தேசியக்கட்சிகள் வெர்சஸ் மாநிலக்கட்சிகள் என்ற தலைப்பில் தந்திடிவி ஆயுத எழுத்து நிகழ்ச்சியை நேற்று நடத்தியிருக்கிறது.ஒரு சரியான தலைப்புதான்! ஆனால் பங்கேற்றவர்கள் தலைப்பை சரியாகப்புரிந்து கொண்டுதான் விவாதம் செய்தார்களா என்பது சந்தேகம் தான்! வீடியோ 42 நிமிடம். முதல்வரியில் சுட்டி கொடுத்திருக்கிற பதிவில் நண்பர் பந்துவுக்கு பதிலாகச் சொன்னது இது: 


டில்லித் தேர்தல் முடிவுகளை தேசியக்கட்சி வெர்சஸ் மாநிலக்கட்சி என்று குறுக்கிப்பார்ப்பதற்கு முன்னால் இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்னென்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டால், நடப்பு அரசியலின் கோளாறுகளை உள்ளது உள்ளபடி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். கொஞ்சம் பார்க்கலாமா? 1962களில் தேசியப்பிரச்சினைகளில் மட்டுமே அக்கறை காட்டிய நேரு மாதிரியே மாநிலங்களிலும் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசுகளும் செயல்பட்டதற்கான எதிர்வினையாக மாநிலக் கட்சிகள் உருவாகி வளர்ந்தன. ஆக மாநிலக்கட்சிகள் ஒரு தேசியப்பார்வை இல்லாமலேயே வளர்ந்தன என்று பொதுமைப்படுத்தலாம். தேசியக்கட்சிகள் , மாநிலக்கட்சிகளுடைய வருகைக்குப் பின்னராவது மாநிலப் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தினவா என்றால் இல்லை. இந்திரா காலத்தில், மாநிலத்தில் நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குத் தோள்கொடு என்பதாகக் குறுகிப் போனது. 1977 இல் இந்திராவின் சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனதா கட்சி என்று ஒன்றிணைந்த மாநிலக் கட்சிகள், ஒரு சரியான தேசியப்பார்வை இல்லாத ஒரே காரணத்தால் சிதறி, 1980 இல் மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வர உதவுகிற மாதிரி ஜனதா கட்சி பரிசோதனை தோல்வியடைந்தது.

அப்புறம் மாநிலக்கட்சியாக ஆட்சியைப் பிடித்தவை என்ன சாதித்தன என்பதைக் கொஞ்சம் பட்டியலிட்டால், சாதனைகள் கொஞ்சம்! வேதனைகள் நிறைய என்று பார்க்க வேண்டும்! உதாரணத்துக்கு, இங்கே இலவசங்களை வாரியிறைப்பதற்கு முன்னால் அதற்கான நிதியாதாரங்களை எப்படித் திரட்டுகிறார்கள் என்பதைப்பற்றி, அவர்களும் கவலைப்படுவதில்லை, இலவசங்களில் மயங்குகிற ஜனங்களும் கவலைப்படுவதில்லை. கருணாநிதி 3000-3500 பெறுமானமுள்ள இலவச டிவி கொடுத்தார். சுமங்கலி கேபிள் விஷன் வழியாக மாறன் குடும்பத்தினர் வருடாவருடம் 2400 வரை கேபிள் கட்டணமாக சம்பாதித்துக் கொண்டார்களே! அதற்கு பதிலாக வீட்டுக்கொரு கழிப்பறை கட்டித்தர எந்தமாநிலக்கட்சியாவது யோசித்ததுண்டா? இலவசங்களுக்கு பதிலாக கிராமத்தில் சோலார் மின்விளக்கு, பொதுக் கழிப்பிடங்கள், குடிநீர்வசதி இவைகளைப் படிப்படியாகச் செய்திருக்கலாமே!, செய்தார்களா? இப்படி யோசித்துப் பாருங்களேன்!

இலவச மின்சாரம் கொடுத்தார் கேஜ்ரிவால்! சந்தோஷம்! ஆனால் மின்சாரம் இலவசமாகக் கிடைப்பதில்லையே! யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ஜனங்களைத் தயார்ப்படுத்த வேண்டியது ஒரு அரசின் கடமை. கேஜ்ரிவால் அதைச் செய்தாரா? ஒரு மாநிலக் கட்சியாக இருப்பது, பொறுப்பில்லாத்தனத்துக்கு கொடுக்கப்படும் லைசன்சாகவே இந்தியச்சூழலில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?

கொஞ்சம் விரிவாகப்பேச வேண்டிய விஷயம் இது.           

மீண்டும் சந்திப்போம்.  

3 comments:

  1. பார்க்கிறேன். நன்றி

    ReplyDelete



  2. நாம் ஒன்றை விரும்பினால் ஏதோவொரு வகையில் அதனைப் பற்றி நல்ல அபிப்ராயம் உருவாக்கவே விரும்புவோம். நான் பாஜக ஆட்சியில் தொடர வேண்டும். மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அவர்களின் முட்டாள்தனங்களையும் சுட்டிக்காட்டவே விரும்புகிறேன். பானுவின் பேச்சை முழுமையாகக் கேட்டேன். முட்டாளத்தனமாகவே எனக்குத் தோன்றுகின்றது.
    உருவாக்கிய கல்விக்கூடங்களால் பலன் ஒன்றுமில்லை என்கிறார். உருவாக்கிய மருத்துவமனைகளை விட இன்ஸ்யூரன்ஸ் இருந்தால் சிறப்பு என்கிறார்.
    உங்களுக்கே தெரியும். எனக்கு கோபம் வந்தால் ஏடாகூடாமாக எழுதிவிடுவது என் வாடிக்கை.
    சுருக்கமாகவே சொல்கிறேன்.
    "தேச விரோதிகளுக்கு வாக்களிக்காதீர்கள்" என்னும் பிரதமர் மோடியின் பேச்சைத் தில்லி மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
    ஒரு பிரதமர் பதவியில் இருப்பவர் வாக்கு அரசியலுக்காக இப்படி பேசலாமா? ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை இன்று பாஜக வை தாக்கியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதி ஜி!

      பானுகோம்ஸ் சரியாகத்தான் சொன்னார். . ஆனால் இன்னமும் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்! PMJAY என்ற ஆயுஷ்மான் பாரத் ஜன ஆரோக்ய யோஜனா எல்லாவிதமான மருத்துவ முறைகளிலும், தனியார் மருத்துவமனைகள் உட்பட எல்லா மருத்துவமனைகளிலும் சிகிட்சை பெற உதவுகிற மாதிரியான ஒரு திட்டம் 2018 அக்டோபரில் அறிவிக்கப்பட்டது . https://www.orfonline.org/research/ayushman-bharat-pmjay-at-one-a-step-closer-to-universal-health-coverage-55807/ இங்கே அதைப்பற்றிய விவரங்களைப் பார்க்கலாம். தனியார் மருத்துவமனைகள் போலி பில்களைவைத்துக் காசுபார்த்தன என்ற கூக்குரல் .ஆரம்பத்தில் கிளம்பியது. அதையும் மீறி இந்தத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 44 லட்சம் என்ற அளவுக்கு போனது 2019 செப்டம்பர் மாத நிலவரம்.

      26 மாநிலங்கள் இந்தத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகின்றன. ஆனால் மேற்கு வங்கம், தெலங்கானா, ஒரிசா, டில்லி இந்த 4 மாநிலங்கள் மட்டும் அரசியல் காரணங்களுக்காக இதைச் செயல் படுத்த மறுத்தன. டில்லியில் மாற்றாக கேஜ்ரிவால் கொண்டுவந்த மருத்துவமனைகள் ஒரு கைவைத்தியம் என்ற அளவுக்குள் சுருங்கிவிடுகிற விஷயம். இங்கே கானா காப்பீடு என்று பெரிதாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டு அப்புறம் புஸ்ஸாகிப் போன கதை நினைவிருக்கிறதா?

      கல்விக்கூடங்கள் விஷயமும் அப்படித்தான். விவரங்களை சரிபார்த்துவிட்டு பிறகு சொல்கிறேன் வீம்புக்காக செய்யப்படுகிற காரியங்கள் நிலைப்பதில்லை. .

      Delete