Pages

Friday, February 19, 2021

#ராயல்அக்க்ப்போர் ஒரு "கோமகனின் காதல்" பிரிட்டனைப் பாடாய்ப்படுத்துகிறதாம்!

கோமகன், காதல் என்றாலே நிறைய வில்லங்கம் நிறைய  ஊர்வம்பு, அக்கப்போர்  என்ற கலவையாக இருப்பது பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் மட்டும் தான்! உலகில் வேறு பல ராஜகுடும்பங்கள் இருந்தாலும் இந்தக் குடும்பத்தைப் போல, அந்தரங்க விஷயங்கள் ஊடகங்களில் அலசிக் காயப்போட்டது மாதிரி வேறெங்கும் இருந்தது இல்லை! அரசனோ சம்சாரியோ இருவருமே ஆசாபாசங்கள் நிறைந்த மனிதர்கள் மட்டும் தான்! புனிதர்கள் அல்ல! அவர்களுடைய அந்தரங்கத்தைப்   பொதுவெளியில் கதைப்பது ஒருவகை ஊர்வம்பு மட்டும் தான்! washing the dirty linen in the public என்ற வழக்குச் சொல்லை ஆரம்பித்து வைத்ததே இங்கிலாந்தின் Tudor வம்சத்து அரசர்கள் காலத்தில் இருந்து தான் என்பது பிரிட்டிஷ் வரலாற்றின் கேவலமான அம்சம்! எதனால் தெரியுமா? அரசனும் அரசியும் உறவு கொள்வதற்கு முன்னால் பாதிரிகள் கூடி படுக்கையறையில் ஜெபம் செய்வதும், மறுநாள் காலையில் படுக்கையில் உறவுகொண்டதற்கான சுவடுகள் இருந்ததா என்று பரிசோதனை செய்வதில் இருந்து உண்டான வழக்கு அது. இப்போது பிரிட்டனை ஆள்வது Windsors வம்சம் முந்தைய அரசபரம்பரைகளை மிஞ்சிய ராயல் அக்கப்போர்களாக, பிரிட்டிஷ் ஊடகங்களில் மட்டுமல்லாமல் உலக ஊடகங்களாலும் கதைக்கப்படுவதாக இன்றைக்கு ஆகியிருக்கிறது. 


பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் இரண்டாவது பேரன் ஒரு அமெரிக்க டிவி நடிகை மேகன் மார்க்கிலை காதல் திருமணம் செய்துகொண்ட நாளிலிருந்தே பிரிட்டிஷ் ஊடகங்கள் கொஞ்சம் பொறாமை, வெறுப்பு கலந்த செய்திகளை பிரசுரிக்க ஆரம்பித்துவிட்டன. இயல்பாகவே பிரிட்டிஷ் மீடியாவுக்கு அமெரிக்கர்கள் என்றாலே கொஞ்சம் இளப்பம்! மட்டந்தட்டுவதும் கூட  வாடிக்கைதான்! அதுவும் போக மூத்த இளவரசர் வில்லியம், இளையவர் ஹாரி இருவருக்கும் இடையில், ஒரு பனிப்போர், ஹாரியின் திருமணத்துக்குப் பிறகு ஆரம்பித்ததாக  ஊடகங்களில் செய்திகள், மறுப்பு என மாறி மாறி வந்துகொண்டே இருந்ததில், கடந்த வருடம் ஹாரி மேகன் தம்பதியினர் அரசகுடும்பத்தின் சீனியர் உறுப்பினர்களாகச் செயல்படுவதில் இருந்து வெளியேற இருப்பதாக செய்தி ஒன்று கசியவிடப்பட்டது. பாட்டி எலிசபெத் ஒரு சமரச முயற்சியாக இளைய பேரனும் அவர் மனைவியும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய ஒருவருட காலம் அவகாசம் கொடுத்ததில், ஹாரியும் மேகன் மார்க்கிலும் தங்கள் மகன் ஆர்ச்சியுடன் முதலில் கனடாவிலும், அது சரிப்பட்டு வராததால் அமெரிக்காவிலும் குடியேறினார்கள். அரச குடும்பத்தை சார்ந்திராமல், Netflix முதலான ஊடகங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு மில்லியன் கணக்கான் டாலர்களை சம்பாதித்து காலை வலுவாக ஊன்றிக்கொண்டும் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விடத் தீர்மானித்து விட்டமாதிரியே செய்திகள். 



#Megxit என்று பிரிட்டிஷ் ஊடகங்களால் ஊதிப்பெரிது படுத்தப்பட்ட இந்த விவகாரம் கடந்த ஒருவருட காலமாகவே புகைந்துகொண்டிருந்ததில் இளவரசர் ஹாரி தம்பதியினர், தாங்கள் செயல்படும் ராஜ குடும்பத்தினராகத் தொடரப்போவதில்லை என்று தெளிவாகத் தங்களது முடிவை பிரிட்டிஷ் ராணிக்குத் தெரியப்படுத்தியிருப்பது இன்றைக்கு ராயல் அக்கப்  போராக ஊடகங்களில் பரபரப்பாகியிருக்கிறது.
அவர்கள் இனிமேல் அரசகுடும்பத்தினருக்கு அளிக்கப் படும் கௌரவ ராணுவ பதவி அடைமொழிகளையோ, மாட்சிமை தாங்கிய என்ற முன்விகுதியையோ பயன் படுத்த முடியாது என்பதை மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
     
பிரச்சினை இப்போது வேறுவிதமாகத் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறது என்பதுதான் உச்சகட்ட தமாஷ்!
எலிசபெத்துக்கு அடுத்து அரசராகப் பதவியேற்க மகன் சார்லஸ் காத்திருக்கிறார். அவருக்குப்பின் அவரது மூத்த மகன் வில்லியம் இவர்களெல்லாம் பதவிக்கு வந்து என்ன பெரிதாகக் கிழித்துவிடப்போகிறார்கள்? முடியாட்சி  எலிசபெத்துடனேயே முடிந்து போகட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவரே இனி இருக்கவேண்டும் என்கிற குரல்கள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக உரத்து எழ ஆரம்பித்திருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் முடிவிலேயே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்துவிட்டது பிரிட்டிஷ் அரச குடும்பம் அதற்குப்பிறகும் கூட எழுபத்தைந்து ஆண்டுகள் தாக்குப்பிடித்து விட்டது. காலாவதியாகிப் போகிற நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது போல! 

#ஊர்வம்பு ஒரு பிரிட்டிஷ் "கோமகனின் காதல்" ஒரு புத்தகம்!

 

4 comments:

  1. பதவியில் இருந்து என்ன செய்யப் போகிறார்கள்?  அரசில் இவர்கள் சம்மதம் இன்றி எதுவும் நடைபெறாது என்கிற நிலை இருக்கிறதா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நம்மூரில் ஜனாதிபதி மாதிரி அங்கே ராணிதான் அரசியல் சாசனப்படி அரசின் தலைவர். நேரடியாகத் தலையீடு இருக்கிற மாதிரிக் காட்டிக்கொள்ளாவிட்டாலும், அவரது விருப்பத்துக்கு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது அதுவும் தவிர பிரிட்டிஷ் ராணி அல்லது ராஜாதான் ஆங்கிலிகன் சர்ச்சின் தலைவரும் கூட இப்படி அரசின் தலைவராகவும் மதத்தின் தலைவராகவும் இருப்பது வேறெங்கும் இல்லாத விசித்திரம்.

      முடியாட்சி போதும் என்கிற குரல் அங்கே நீண்ட நாட்களாகவே இருந்தாலும், ராணியின் அபிமானிகளிடமே மகன் சார்ல்ஸ், பேரன் வில்லியம் இருவர்மீதுமான அதிருப்தி, ஹாரி மேகன் அரசகுடும்பத்திலிருந்து வெளியேறியது, இன்னமும் அதிகமாகியிருக்கிறது'. ஆங்கிலேயர்கள் தங்கள் பழமைவாதத்தின் அடையாளம் பெருமிதமாக எலிசபெத்தை மட்டுமே பார்க்கிறார்கள் ஸ்ரீராம்! இலை பழுப்பாகி உதிரக் காத்திருக்கிறது, அவ்வ்ளவு தான் !

      Delete
  2. போப், ஒவ்வொரு நாட்டின் அரசியலிலும் தலையிட்டு, தங்கள் அங்கீகாரத்துடந்தான் செய்யணும் என்று ஆரம்பித்ததை எதிர்த்து பிரிட்டனில் தனியாக சர்ச் ஆரம்பிக்கப்பட்டது வரலாறு. சர்ச் தலைவர், பிற்பாடு அரச குடும்பத்திற்கு அனுசரணையாக நடந்துகொள்ளாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, மதத் தலைவராக அரசி/அரசன் இருக்க ஆரம்பித்தது.

    இவர்களுடைய வைரநகை கலெக்‌ஷன், தங்கம் போன்றவை பிரமிக்கவைக்கக்கூடியது. ராஜ்யசபா, லோக்சபாவில் இவர்களுடைய செங்கோல் (மாதிரி ஆனால் பெரிய அளவில்) முழுக்க தங்கத்தினால் ஆனது. அரச ரெப்ரெசெண்டேடிவ் ஆக இருப்பது.

    ஆனால் எல்லாம் காலி பெருங்காய டப்பாதான்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெல்லைத்தமிழன் சார்!

      வருமானத்துக்காக வாடிகன் பாவ மன்னிப்புச் சீட்டுக்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததை எதிர்த்தே மார்டின் லூதர் என்கிற பாதிரியார் ஒரு protest movement ஐத் தொடங்கி நடத்தியதாக அந்தநாட்களில் பள்ளிப்பாடங்களில் படித்ததுண்டு, ஆனால் அதன் பின்னால் நிறையக்காரணங்கள் இருந்தன அதில் இங்கிலாந்தில் நடந்தது ஒரு நடுவாந்தரப்புரட்சி. ஆண்வாரிசு இல்லையென்பதற்காக இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றி மறுமணம் செய்துகொள்ள விரும்பியதை அன்றைய வாடிகன் போப் ஏழாம் கிளெமென்ட் அனுமதிக்கவில்லை கிபி 1534இல் எட்டாம் ஹென்றி தானே இங்கிலாந்து சர்ச்சின் முழு அதிகாரம் படைத்தவர் என்று அறிவித்துக் கொண்டு ஒரு கிளர்ச்சி செய்தது அடுத்துவந்தவர்களால் அப்படியும் இப்படியுமாக ஊசலாடியதை கிபி 1559 இல் அரியணை ஏறிய முதலாம் எலிசபெத், தன்னுடைய 44 ஆண்டுகால ஆட்சியில், ஒரு பிரெஞ்சு ப்ரோட்டஸ்டன்ட் பாதிரி ஜான் கால்வின்'வகுத்த ப்ரோட்டஸ்டன்ட் வழிக்கும் கத்தோலிக்கன் வழிக்கும் இடைப்பட்டதான ஒரு நடுவாந்தரத்தீர்வை உறுதி செய்ததில், அரியணையில் இருப்பவரே Church of England இன் தலைமையும் என்றானது.

      கிறித்தவம் கத்தோலிக், ப்ரோட்டஸ்டன்ட் என இரண்டாகப் பிளவு பட்டதன் முக்கியமான விளைவாக அதுவரை மதத்தின் பெயரால் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த அறிவியல் வேகமாக வளர்ந்து புதிய கண்டுபிடிப்புக்கள் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்படவும் காரணமாக இருந்தது என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும்

      தொழிற்புரட்சியின் இன்னொரு முக்கியமான விளைவு ஆலிவர் குரொம்வெ தலைமையில் அரியணைக்கு எதிராக நடந்த மக்களுக்கே முழு உரிமை என்பதான போராட்டமும் கூட இங்கிலாந்தில் இப்படி நடுவாந்தரப்புரட்சியாகவே முடிந்தது அரியணை, பிரபுக்கள் சபை அப்படியே நீடிக்கும் அதோடு சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கிற மக்களவையும் இருக்கும் என்பதான ஒரு நாடாளுமன்ற ஜனநாயகமும் உண்டானது.

      வரலாற்றைத் தட்டையாகப்பார்க்காமல் நிகழ்வுகளோடு என்னென்ன விளைவுகளும் சேர்த்து உண்டாயின என்பதையும் பார்க்கவேண்டுமே!

      Delete