Pages

Friday, April 16, 2010

கருத்தொற்றுமை காண்பதற்கு.....முடியாத ஐந்து வழிகள்...!

டோனி மோர்கன் என்றொரு வலைப் பதிவர்! இவருடைய வலைப் பதிவுகள் பெரும்பாலும் கிறித்தவ சர்ச்சுகளின் நிதி நிர்வாகத்தைப் பற்றியது, கிறித்தவ சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப்பட பதிவுகள்  என்றாலும் கூட, பதிவுகளில், மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம் குறித்த சில விஷயங்களைப் பற்றிய கருத்துக்கள்  கொஞ்சம் யோசிக்க  வைப்பதாக இருக்கும். அப்படிப் படித்த நல்ல  பதிவுகளில் ஒன்று கருத்தொற்றுமை Consensus பற்றியது!

டோனி மோர்கன், இந்தக் கருத்தொற்றுமை என்பது வெறும் கேலிக் கூத்து என்பதைக் குறைந்தது ஐந்து காரணங்களை வைத்தாவது சொல்லிவிட முடியும் என்கிறார்.

கருத்தொற்றுமை ஏற்பட சில அடிப்படைத்தேவைகள், காரணிகள் இருக்கவேண்டும்! கீழே உள்ள படத்தைப் பாருங்கள்! இங்கே நாம் கருத்தொற்றுமை பற்றிப்  பேசுகிற பெரும்பாலான தருணங்களில், இவை எதுவுமே இருப்பதில்லை!



 
டோனி மோர்கன் சொல்கிறபடி பார்த்தால், இந்தக்  கருத்தொற்றுமை என்பதே அர்த்தமில்லாத வெறும் வார்த்தை! எப்படி என்று கொஞ்சம் பார்க்கலாமா?

முதலாவதாக, கருத்தொற்றுமை என்ற வார்த்தை, குறிப்பிட்ட ஒரு தருணத்துச் சூழ்நிலையோடு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.  


மாற்றம் என்பது  ஒரு பக்குவ நிலை, அதற்குத் தயாராக இருக்கும் தைரியம் எல்லோருக்குமே இருப்பதில்லை. கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே, மாற்றத்திற்குத் தயாராக இருப்பவர்கள், இல்லாதவர்கள் இரண்டு தரப்பையும் ஒன்றாக உட்கார்த்தி வைக்கும் போதே, தேக்க நிலை வந்து விடுகிறது.  

Status Quo என்றபடிக்கு, எப்படி இருந்ததோ அதே பழைய நிலையிலேயே நிற்பது என்பது, கருத்தொற்றுமை என்பதன் முதல் கோணலாக, அவலட்சணமாக இருக்கிறது. 

இரண்டாவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும்போதே, அங்கே எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகி,  சந்தைக் கடை மாதிரி இரைச்சலும், கூச்சலுமாகிப் போய் விடுகிறது.  


தரங்கெட்ட விஷயங்களும், எதிர்மறையான போக்குகளும், கெட்ட எண்ணம் உடையவர்களுமே கூட சம வாய்ப்பு என்ற சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து, உண்மையான குறிக்கோளை எட்ட விடாமல் செய்துவிடுகிற வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது.

மூன்றாவதாக, தைரியமான முடிவுகளை, நல்ல விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் எடுபடாமல் போய்விடுகிறது. நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைப் பேச முடியாமலேயே போய்விடுகிறது.  


நடுநிலை என்பது ஆகச் சிறந்தது எது என்று சீர்தூக்கிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது என்பதற்குப் பதிலாக, மதில் மேல் பூனை மாதிரி ரெண்டுங் கெட்டானான  நிலையை எடுப்பது தான் என்றாகிப் போய்விடுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம், இங்கே மதச் சார்பின்மை-செக்குலரிசம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கும் விதம்!

நான்காவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்யும் முனைப்பு, பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே வளர்த்துக் கொண்டிருப்பதாக மாறிப்போய் விடுகிறது. ஒ
ரு ஆரோக்கியமான விவாதம், அழுத்தமான கருத்தைப் பேசினால், எங்கே மற்ற தரப்பு விறைத்துக் கொள்ளுமோ என்ற பயத்தில், நடக்காமலேயே தவிர்க்கப் படுகிறது.  

அந்த நேரத்துக்கு, இரண்டு தரப்பையும் சமாதானமாகப் போகும்படிக்  கெஞ்சலாக,  விரிசலை பெயின்ட் அடித்து மறைத்துவிடலாம் என்கிற மாதிரியானதாக, நின்று விடுகிறது.

ஐந்தாவதாக,கருத்தொற்றுமை என்கிற பெயரில், இப்போதிருக்கும் நிலையை விட உயரத் தவிக்கும் கனவுகளின் சிறகுகளை முறிப்பதாக மட்டுமே நடக்கிறது. கொஞ்சம் வித்தியாசமாக, ஆக்கபூர்வமாகச் சிந்திக்க முற்படுபவர்களை, கூட்டத்தோடு கோவிந்தா என்று போய்விடும்படி வற்புறுத்துகிறது.  


மறுப்பவர்களை வலுக்கட்டாயமாகப்  பேசாமல் இருக்கும்படி மிரட்டுகிற கட்டைப் பஞ்சாயத்தாகவுமே பெரும்பாலான சமயங்களில் மாறிவிடுகிறது.

அரசியலாகட்டும், அல்லது பணிபுரியும் இடமாக இருக்கட்டும்! கருத்தொற்றுமை என்பது எப்படி ஏற்படுகிறது, அல்லது ஏற்படாமல் போகிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!

*கருத்தொற்றுமை என்ற பேரில் ஒருவிதமான தேக்கநிலை அல்லது அதே பழைய நிலை  உங்கள் மீது திணிக்கப் படுகிறதா?

*எதில் கருத்தொற்றுமை அவசியம் என்பதை விட்டு விலகி, சம்பந்தமே இல்லாமல், சந்தைக் கடையாகவும், சண்டைக்களமாகவும் ஆகி விடுகிறதா?

*மிகச் சொற்பமான அளவிலேயே சொல்லப் பட்டாலும், சொல்வதன் உண்மையை ஏற்றுக் கொள்ள முடிகிறதா, அல்லது கும்பலாகக் கூச்சல் போட்டே நல்ல விஷயம் கூட அம்பலமேறாமல் போய் விடுகிறதா?

*கூட்டமாகச் சொல்வது தான் சரி, அது சரி அது சரி என்று தலையாட்டிப் பொம்மைகளாக்குகிறதா அல்லது, தீர்க்கமாகச் சிந்திக்க இடம் இருக்கிறதா?

*நடுநிலைமை என்ற பெயரில், சுதந்திரமாகச் சிந்திப்பது தடுக்கப் படுகிறதா?


இந்த ஐந்து காரணங்கள் அத்தனையும் உங்களுடைய அனுபவத்தில், யோசித்ததில்  பொருந்துகிறதா?

கூடுகிறதா? குறைகிறதா?


உங்களுடைய  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கேட்போம்!  



2 comments:

  1. a very nice post . it especially prevents us from thinking the negative aspects.

    ReplyDelete
  2. ஏஞ்சல்,

    நேர்மறை, எதிர்மறை என்பதெல்லாம் ஆரோக்கியமான இயக்கத்தின் கூறுகள்! ஒன்று இருந்தால், நிச்சயம் இன்னொன்றும் வந்துவிடும்! கருத்தொற்றுமை ஏற்பட, அப்போதைய நிலையை அப்படியே தொடர்கிற என்று ஆரம்பிக்கும்போது ஒரு ஜடத்தன்மை, inertness வந்துவிடுகிறதே! அங்கே தான் தேக்க நிலைமை, பின்னடைவு, மூடத்தனம், மூர்க்கத்தனம் எல்லாமே வந்து சேருகிறது.

    இன்னும் கொஞ்சம் விரிவாக யோசிக்க முடியுமா....!

    ReplyDelete