Pages

Wednesday, March 6, 2019

கூட்டணிப் பாவங்கள்! அரசியல்களம் இன்று!

தமிழ்நாடு கூட்டணிக் குழப்பங்களுக்கு அனேகமாக ஒரு இறுதிவடிவம் இன்று எட்டப்படலாம்! அதிமுக அணி இன்னமும் முழுமைபெறாமல், பிரேமலதா உபயத்தில் இழுத்துக் கொண்டே வருவதும் கூட இன்றைக்கு நீங்கள் இதை வாசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முடிவுக்கு வந்துவிடலாம்! புதுச்சேரியை சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள் தான் என்றாலும், பிரதான கட்சிகள் இரண்டும் ஒருசீட் இரண்டுசீட் பேரத்தில் உதிரிக் கட்சிகளோடு மணிக்கணக்கில் பேரம்பேசி, ஒருவழியான பிறகே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய நிலைமைக்கு வந்திருப்பது பலமா? பலவீனமா?

இந்த விவாதத்தில் திமுகவின் பிரதிநிதி பேசுவதைக் கேட்க மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. என்னபடம் இயக்கினார் என்றுகூடத் தெரியாத கௌதமன் கூட ஒரு கட்சி ஆரம்பித்து சட்டமன்றத்தேர்தலில் 25 சீட் ஜெயிப்போம் என்று பேசுகிற அளவுக்கு மாநிலத்தில் பெரிய கட்சிகளுடைய பலம் தேய்ந்துகொண்டே வருவதை மறந்துவிட்டுப் பேசுவது என்ன அரசியல்?
வாசகர் ரிஸ்வான் கருத்தாக இப்படிப் படம்போட்டு ஹிந்து நாளிதழ் மகிழ்ந்து கொள்கிற அதே நேரம் வைகோ திமுகவைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசினார் என்பதும் பழைய வீடியோ ஆதாரங்களோடு திருப்பித் தாக்கிக் கொண்டிருக்கிறது.


திமுகவுக்கு எதிராக 25 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவை தொடங்கிய வைகோ, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகும் வாய்ப்பு 29 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு கிடைக்கிறது என்று நக்கல் அடித்துச் செய்தி வெளியிட்டிருப்பதும் இதே ஹிந்து நாளிதழில் தான்!  

மாநிலக்கட்சிகள் வலுவாக இருக்கின்றனவா என்ற கேள்விக்கு இது ஒருசோறு பதம்.  இங்கேமட்டும்தான் இப்படியா? வாருங்கள்! உத்தரப்பிரதேச அரசியல் தமாஷாவையும் பார்த்துவிடலாம்!
படத்தில் அகிலேஷ் யாதவுடன் இருப்பது முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரன் ஜெயந்த் சௌத்ரி! அப்பா அஜித்சிங் நடத்தும் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சிசார்பாக அகிலேஷுடன் தொகுதிப்பங்கீடு செய்துகொண்டு 3 இடங்களைப் பெற்றிருக்கிறார். அதுவா விஷயம்? இல்லை!

செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் சொன்னதுதான் அரசியல் தமாஷாவின் உச்சமே! மெகா கூட்டணியில் காங்கிரசும் இருக்கிறது. அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதாக! சமாஜ்வாதி கட்சி தனது இடத்தில் ஒரு தொகுதியைக் கூடுதலாக RLD கட்சிக்கு வீட்டுக் கொடுத்து 37 இடங்களிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளில் போட்டி இடாமல் காங்கிரசுக்கு வீட்டுக் கொடுப்பதாக சென்ற ஜனவரியிலேயே அறிவித்ததுதான்! இப்படி நக்கலாக!

காங்கிரசின் நிஜமான யோக்கியதை தான் என்ன? தலை' கள் மட்டுமே இருக்கிற விசித்திரமான கட்சி அது! முறையான கட்சி அமைப்போ தொண்டர்களோ இல்லாமல் மேலிட நியமனத்தில் மட்டுமே இயங்குகிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிற கும்பல் அது! காலிப்பெருங்காய டப்பா என்பதற்கு சாட்சியாக இன்னமும் அந்தப் பெயருக்கு வாக்களிக்கிற அப்பாவி ஜனங்கள் பரவலாக இருப்பதால், தேசியக் கட்சியாக இன்னமும் நம்பப்படுகிற வேடிக்கை! ஏதோவொரு பதவி பொறுப்பு இல்லாவிட்டால் கிறுக்குப் பிடித்து விடும் நபர்களால், நேரு இந்திராவாரிசுகளுக்கு அடிமைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டதாக வேடமிடுகிறவர்களால் ஆன ஒரு amorphous body!

பானாசீனா குடும்பம் முழுக்கவே வழக்குகளில் ஜாமீன் பார்ட்டிகளாகி விட்டதால், மிச்சமிருக்கும் ஒரே ஒருநபர் மருமகள் ஸ்ரீநிதியை களமிறக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன!

சிவகங்கை எம்.பி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது என்கிறார்கள் அக்கட்சியினர். தொகுதி நிலவரப்படி சிதம்பரமோ அல்லது அவரது மகன் கார்த்தி ஆகியோர் போட்டியிடுவதை மக்கள் விரும்பவில்லை என்று பேசப்படுகிறது. இதனால், தன் மருமகள் டாக்டர்.ஸ்ரீநிதியை களத்தில் இறக்கிவிட சிதம்பரம் முடிவு செய்திருக்கிறார்.  இது விகடன் தளச் செய்தி!    

விஷவிருட்சங்கள் மேலும்மேலும் வளராமல் தடுப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

என்ன செய்வதாக உத்தேசம்? சொல்லுங்களேன்!   
        

4 comments:

  1. //கௌதமன் கூட ஒரு கட்சி ஆரம்பித்து சட்டமன்றத்தேர்தலில் 25 சீட் ஜெயிப்போம்// - நல்லாத்தான் கவனித்து எழுதினீங்களா? திரும்பவும் வேணும்னா அவர் என்ன சொன்னார்னு கேட்டு எழுதுங்க. 25 வோட் ஜெயிப்போம் என்றுதான் நான் படித்த ஞாபகம்.

    ReplyDelete
    Replies
    1. 25 சீட்டுன்னு படிச்சதாத்தான் ஞாபகம்! ஆனால் இதெல்லாம் வெத்துவேட்டு என்பதும் ஏதோ ஒரு ஆதரவு வியாபாரம் என்பது மட்டும் தெரியும்! )))

      Delete
  2. //மிச்சமிருக்கும் ஒரே ஒருநபர் மருமகள் ஸ்ரீநிதியை களமிறக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன!// - கார்த்திக்கு ஒரு குழந்தை உண்டே... அதுவும் ஜாமீன்லயா இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. அய்யே! சின்னக் குழந்தையை எல்லாமா இந்த ஆட்டத்தில் சேர்க்கணும்? :(( #எகோசஇ

      Delete