Pages

Saturday, September 21, 2019

ச்சும்மா ஜாலிக்கு! ரோஷக்காரி! பட விமரிசனம்!

நேற்றைக்கு எங்கள் பிளாகில் ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை வீடியோவாக நிலவே நீ சாட்சி படத்திலிருந்து இரண்டு பாடல்களைப் பகிர்ந்திருந்ததில் நடிகர் முத்துராமனைப் பற்றிய ஒரு கமென்ட் : இரண்டாவதில் சூப்பர் ஃபிட்டாகத் தெரிகிறார் முத்துராமன். இந்த ஃபிட்னெஸ்ஸைத் தேடி ஓடியே அவர் காணாமற்போனார் என்பது நினைவுக்கு வருகிறது. சில சமயங்களில் இந்த உடம்பை அதன் இஷ்டப்படியும் விட்டுவிடுவதே நல்லது எனவும் தோன்றுகிறது.  இதைப் பார்த்ததும் நினைவுக்கு வந்த வேறொரு திரைப்படத்தில் முத்துராமன் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டர்! கோடீஸ்வரன் V S ராகவனுடைய லக்கேஜை தூக்கிக் கொண்டு வெளியே அவரது கார் அருகில் வரும்போது, கார் self எடுக்காமல் மக்கர் செய்கிறது. முத்துராமன் தனியாளாக அந்தக் காரைத் தள்ளிக்கொண்டே வீடுவரை கொண்டுவந்து சேர்த்து விடுகிறார்!    

ரோஷக்காரி! 1974 இல் வெளியான தமிழ்த் திரைக் காவியம்! நவரசத் திலகம் ஆக முத்துராமனும் கலைஞர் திலகம் ஆக ரவிச்சந்திரனும் கே ஆர் விஜயாவும் சேர்ந்து நடித்த படம்! கதை பழம்பெரும் எழுத்தாளர் பிலஹரி என்பதால் பார்க்கலாமே என்று மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு பார்த்தபடம். நாற்பத்தைந்து வருடத்துக்கு முன்னால் வந்தபடம் இப்போதும் கூட பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது!


மணவாள நாயுடு (SV சுப்பையா) ஒரு தபால்காரர்! காலைப் பொழுதில் ஆண்டாள் பெருமாள் படம் வைத்துப் பாசுரம் சேவிக்கும் காட்சியோடு  ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகம் ஆகிறார்கள்! மூத்தமகன் பட்டாபி (முத்துராமன்) ரயில்வே போர்ட்டர், அடுத்தமகன் ரகுராமன்(ரவிச்சந்திரன்)  கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான், என்பதை வசனங்களில் தெரியப்படுத்துகிறார்கள்! ஏகாம்பரம் என்கிற  வக்கீல் குமாஸ்தாவாக         சோவும், பால்காரி இசக்கியாக மனோரமாவும் முதல்காட்சியிலேயே அறிமுகம். அடுத்து முதலில் சொன்னமாதிரி ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்குகிற கோடீஸ்வரன் தர்மலிங்கம்  (VS ராகவன்) வீட்டுக்கு வருகிற காட்சியில் அவரது ஒரே மகள் சீதா (கே ஆர் விஜயா)  திருமணம் எப்படி கிராண்டாக நடக்கவேண்டும் எனத் தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்துகிற காட்சி.

ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் சினிமாவில்,கதைகளில் சுவாரசியமேது? கல்லூரியிலேயே காதலர்களாக கதாநாயகனும் கதாநாயகியும்! படிப்பு முடிந்து அவரவர் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.கதாநாயகியின் தந்தை மகள்மீது பாசமுள்ள தந்தையாக, அதே நேரம் நல்ல அந்தஸ்துடன் கூடிய மாப்பிள்ளையாக வரவேண்டுமென்கிற ஆசையுடன்!
  

இந்த ஒரே டூயட் பாட்டுடன்  கே ஆர் விஜயா ரவிச்சந்திரனை திருமணம் செய்துகொள்கிறார்! சொன்னபேச்சு கேட்கா விட்டால் சொத்து முழுவதையும் கோவில் குளத்துக்கு எழுதிவைத்துவிடுவேன் என்ற தந்தையின் மிரட்டலுக்கு   சொத்து வேண்டாம், நான் ஆசைப் பட்டவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று ரோஷக்காரியாக மகள் நிற்பதில் தந்தையே திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஆனால் அடிக்கடி மகளின் புகுந்த வீட்டைச் சீண்டுகிற மாதிரி சில காட்சிகளில் மகள் மரணப் படுக்கையில் கிடக்கும் நேரத்தில் தான் மனிதர்களை ஏழை, பணக்காரன் என்று பிரித்துப் பார்ப்பது தவறு என்று புரியும் எனத் தந்தையிடம் சொல்கிறாள். கார்விபத்தில் தந்தை மரணப் படுக்கையில் மகளிடம் பேசுகிற காட்சிக்குப் பிறகுதான் கதையில் ஒரு திருப்பம்! சொத்துக்களை ரோஷக் காரியான மகள் சீண்டமாட்டாள் என்று மருமகன் பெயரில் உயில் எழுதி வைத்திருப்பதில் கதாநாயகனைப் புதுப்பணக்காரத் தனம், சொந்தக் குடும்பத்தையே பிரிக்கிறது. கதாநாயகியும் புகுந்த வீட்டாரோடு நாயகனைப் பிரிகிறாள்!

கதாநாயகனை ஏமாற்றி சொத்தைப் பறிக்க வில்லன் வில்லி வேண்டாமோ? மேனேஜர் ராமதாஸ், தங்கையாக  CID சகுந்தலா அதற்காகவே இருக்கிறார்களே! குடிபோதையில் சொத்துக்களை எழுதிவாங்கிக் கொண்டு நாயகனைத் துரத்தி விடுகிறார்கள்! நாயகன் சோற்றுக்குத் திண்டாடுகிறான் தெருவில் பிச்சை எடுக்கிறான். இப்படியே போய்க் கொண்டு இருந்தால் கதையை எப்படி முடிப்பது?

எப்படி முடிக்கிறார்கள் என்பது தான் சுவாரசியமான க்ளைமேக்ஸ்! இப்போது வருகிற பல குப்பைத் திரைப் படங்களுக்கு மத்தியில் இந்தப் பழைய படம் கொஞ்சம் சுவாரசியமாகத் தான் இருக்கிறது. கதைக்காகத் தான் நடிகர்களே தவிர, நடிகர்களுடைய இமேஜுக்காகக் கதை பண்ணத்தெரியாத காலத்தைய படம் என்று உறுதியாகச் சொல்ல முடிகிற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. முழுப்படமும்  யூட்யூபில் கிடைக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.              

14 comments:

  1. >>> மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு பார்த்த படம்.. <<<

    அடேங்கப்பா... இதற்குள் இத்தனை இருக்கின்றதா!...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் துரைராஜு சார்! முதலில் அந்த டூயட் பாட்டை மட்டும் பார்த்ததில், முழுப்படத்தையும் பார்ப்பதற்கு மனதைத் தைரியப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது!

      Delete
  2. ஓ.. தங்களது அழகிய விமர்சனம் ரோஷக்காரியைப் பார்க்கத் தூண்டுகிறது (!)...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாகப் பார்க்கலாம் சார்! அதற்காகத்தான் யூட்யூப் லிங்கையும் கடைசியில் கொடுத்திருக்கிறேன்! தொய்வில்லமல் படம் போகிறது. எம் எஸ்வி இசையமைப்பு சுத்தமாக சரியில்லை! பாடல்கள், காட்சிகள் குப்பை!

      Delete
  3. ஆஹா... ஆனந்த மயக்கம்...   எஸ் பி பி குரல்.  இந்தப் பாடலை நெடுநாள் கழித்து கேட்கிறேன்.  

    திரண்டெழுந்த - மகாராஜபுரம் சந்தானம் திரையில் குரல்கொடுத்த ஒரே படமாம்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! எம்எஸ்வி இசையமைப்பில் SPB சுசீலாவுக்கு கிடைத்த மோசமான பாடல்கள் என்றால் இந்தப்படமாகத் தான் இருக்கும்!

      Delete
  4. நேத்தைக்கே பின்னூட்டம் போட முயற்சி செய்தேன். அதிசயமா கரண்ட் கட்.

    ரோஷக்காரி இடைவேளை வரைல பார்த்தே. Time well spent. அப்புறம் நேர கிளைமாக்ஸ் பார்த்தேன். அப்போ மாதிரி பாசிடிவ் ஆக பலவருடங்களாக சினிமா இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெ.த. சார்!

      இப்போது வரும் பல படங்களுக்கு இது எவ்வளவோ மேல். ஆனால் யாராவது பிலஹரி என்கிற பழைய எழுத்தாளரைப் பற்றிக் கேட்பார்கள் என்று நினைத்ததில் ஏமாந்து போனேன்!

      Delete
    2. மின் அஞ்சல் வழியாக இன்று வந்து சேர்ந்து விட்டது. நன்றி. மீண்டும் வருகிறேன்.

      Delete
    3. //ஆனால் யாராவது பிலஹரி என்கிற பழைய எழுத்தாளரைப் பற்றிக் கேட்பார்கள்//

      என்ன கேட்கவேண்டும்?   ஜீவி ஸார் படித்திருந்தால் இரண்டு வார்த்தை எழுதி இருப்பார்!

      பிலஹரி கதைகளை அந்தக் காலத்தில் சில வாசித்ததுண்டு. நினைவில் எந்தக் கதையும் இல்லை.   ராகத்தின் பெயரில் பெயர் வைத்திருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர்.  

      Delete
    4. ஸ்ரீராம்! ஆனந்த விகடனில் பிலஹரி எழுதிய கதைகளைப் படித்த நினைவிருக்கிறது. இப்போது தேடினால் இவரைப்பற்றி விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஜீவி என்னுடன் கா'' விட்டு மாதங்கள் ஆகிறதே! followers list இலிருந்து அவராகவே இரண்டுபதிவுகளிலும் விலகிக் கொண்டுவிட்டார் என்பதால் படித்திருந்தால் என்கிற உங்களுடைய கேள்விக்கு, அவரை வரமாட்டார் பதில் தரமாட்டார் என்று இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

      Delete
    5. ஜோதிஜி! பிரச்சினைக்கு எப்படியோ தானாகவே தீர்வு கிடைத்துவிட்டதோ? மிக நல்லது!

      Delete
    6. என்னுடைய பைண்டிங் கலெக்ஷனில் பிலஹரி கதைகள் இருக்கிறது கிருஷ் ஸார்.   முடிந்தால் எப்போதாவது எங்கள் பிளாக்கில் ஒரு வியாழனில் அவர் கதை ஒன்றைப் பகிர்கிறேன்.

      Delete
    7. மிகவும் நன்றி ஸ்ரீராம்! மறந்துபோன ஒரு பழைய எழுத்தாளரைப்பற்றி இன்னும் கொஞ்சம் தகவல்களை சேகரித்துக் கொண்டு, அவருடைய கதையைப் பகிருங்கள்!

      Delete