Pages

Sunday, February 3, 2019

All for one! One for all! இந்த முழக்கத்தைக் கேட்டிருக்கிறீர்களா?

 அதென்ன முழக்கம்? Self what ? 

இப்படி மார்க் சன்பார்ன்  ஒரு பகிர்வில் எழுப்பி ருந்த கேள்வி, கொஞ்சம் யோசிக்க வைக்கிறது!

இந்தப் பதிவில் மார்க் சன்பார்ன் ஒரு முக்கியமான உளவியல் சார்ந்த கேள்வியை முன்வைக்கிறார். தன்னை மையப்படுத்தித் தன்னிலேயே மூழ்கிக் கிடப்பதும் (Self absorption), தன்னைப் பற்றிய சிந்தனையும் (Self reflection) ஒன்றாகிவிடுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

தன்னைப் பற்றிய யோசனைகளிலேயே மூழ்கிக் கிடப்பது என்பது ன்ன? தன்னைத் தவிர அது வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்வது ல்லை. எல்லாமே தான், தனது என்ற ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்து போய் விடுகிறது! ஒரு பாயைச் சுருட்டி வைத்திருப்பது  போல சுருண்டு குறுகிக் கிடப்பது தான் என்கிறார். 

ஒரு உதாரணமாக,பயணம் செய்யும்போது, எவரும் அடுத்தவருக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்றெல்லாம் கவலைப்படாமல், அல்லது அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய சௌகரியங்களை மட்டும் நீட்டிக் கொள்ள முயற்சிப்பது போலத் தான்! இப்படிப்பட்ட மனோபாவம் சுருக்கமாகச் சொல்வதானால், தன்னுடைய சுயநலத்தை மட்டும் எல்லா வகையிலும் முன்னிறுத்திக் கொள்வது தான்!

சுற்றிக் கவனித்துப் பார்த்தோமேயானால், நம்மில் பெரும் பாலானோரிடம் இப்படிக் குறுக்கிக் கொள்கிற குணம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் தன்னையே கவனிக்கப் பழகினோம் என்றால், இப்படிக் குறுக்குவதில் இருந்து விடுபடவும் முடியும்.

தன்னைக் கவனிப்பது, தன்னைப் பற்றிய சிந்தனை என்பது இந்த சுருண்டு விடுகிற அல்லது குறுக்கிக் கொள்கிற மனோ நிலைக்கு நேர் எதிரானது. தன்னை, மற்றவற்றோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முடிகிற விசாலமான பார்வையாக, புரிந்துகொள்ள முயற்சிக்கிற விதமாகத் தன்னைக் கவனித்தல், தன்னைப் பற்றிச் சிந்தனை செய்தல் என்பது பரந்து விரிகிறது.  

தன்னை மையப் படுத்தித் தனக்குள்ளேயே சுருண்டு அல்லது குறுகிப் போய் விடுவதற்குச் சரியான மாற்றாக, தன்னை மற்றவற்றோடு சம்பந்தப்படுத்தி பார்க்கப் பழகிக் கொள்வது என்பது ஒரு விசாலமான பாதையை ஏற்படுத்துகிறது இல்லையா? 

இப்படி மார்க் சன்பார்ன் முத்தாய்ப்பாக இன்னொரு கேள்வியை முன்வைக்கிறார்.

சுயநலம் என்பது உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தேவையாக இருந்தது என்னவோ  வாஸ்தவம் தான்! ஆனால், தங்களுடைய சுயநலத்திலேயே ஒவ்வொருவரும் கண்ணாய் இருந்துவிட்டால் எவருமே ஜீவிக்க முடியாது. 

தனித் தீவுகளாகத் தங்களை மட்டுமே முழு உலகமாக நினைத்துக் கொண்டிருந்தோம் என்றால் தீவுகளிலேயே முழுகிப்போய் விட வேண்டியதுதான்! எல்லோரும் பிழைத்திருக்க வேண்டுமானால், கொஞ்சம் பொதுநலம் கலந்த சுயநலமாக உயர்ந்தால் தான் உண்டு.

ஆனால், நம்மைச் சுற்றி நடப்பதென்ன? கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! நாமே எப்படி நடந்து கொள்கிறோம் என்பதையும் சேர்த்து யோசித்துப் பாருங்கள்!சுயநலம் ஒன்றை மட்டும் குறிவைத்துச் செயல்படுவதில், இருப்பதையும் பறிகொடுத்து விட்டு நிற்கவேண்டி வருகிற நிலைமையும் வருகிறதா என்பதையும் பாருங்கள்!

மிருகங்களைப் போல தனியாக வாழ மனிதன் படைக்கப் படவில்லை. அதனால் தான், மனிதனை ஒரு சமூகப் பிராணி என்கிறோம். மண்ணில் பிறந்த தருணம் முதல், கடைசி வரை, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைச் சார்ந்தே, ஒரு சமுதாயமாக இயங்கும் வகையில் தான், மிருக நிலையில் இருந்து உயர்ந்து மனிதனாக மாறிய பரிணாமம் இருக்கிறது. ஒரு கூட்டமாக, கூட்டத்தின் நலன் தன்னுடைய நலனை விட முக்கியமானதாக உணரப்படும், செயல் படுத்தப்படும் தருணங்களில் எல்லாம், அந்தக் கூட்டமும் ஜெயித்திருக்கிறது, அதில் இருந்த தனி மனிதனுமே ஜெயித்திருக்கிறான்.

அலெக்சாண்டர் டூமா என்ற பிரெஞ்சுக் கதாசிரியர் எழுதிய The Three Musketeers கதையில் ஒரு முழக்கம்! All for one! One for all! என்று ஒரு கோஷம் வரும்! ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்த நாட்களில், தொழிற்சங்கத்தின் நோக்கமே இப்படித் தனிநபருக்காக அமைப்பும், அமைப்புக்காகத் தனிநபரும் என்ற அஸ்திவாரம் இருந்தால் தான் அந்த நோக்கமே நிறைவேறும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். 

ஒவ்வொரு தனி மனிதனுக்காகவும் அனைவரும்! அனைவருக்குமாக ஒவ்வொரு தனி மனிதனும்!

இப்படி இருவழிப் பாதையாக உயரும்போது  அது ராஜ பாட்டையாகிறது! மாறாக ஒருவழிப் பாதையாகக் குறுக்கிக் கொண்டே போனால், சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் முட்டுச் சந்தாகி முடங்கி விடுகிறது!

சுயநலம் வேண்டியது தான், பொதுநலத்தில் கலந்த சுயநலத்துக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல் படும்போது, அங்கே வெற்றிக்கான பாதை திறக்கிறது.

அப்புறம் என்ன! 

குறுகிய பார்வையைத் தவிர்த்து, ஜெயிக்கலாம் வாருங்கள்!

2010 இல் எழுதியதன் மீள்பதிவு 

7 comments:

  1. //தொழிற்சங்கத்தின் நோக்கமே இப்படித் தனிநபருக்காக அமைப்பும், அமைப்புக்காகத் தனிநபரும் //

    'தனி நபர்களுக்கான அமைப்பும், அமைப்புக்காகத் தனிநபரும்' என்று இருந்திருக்க வேண்டுமோ?

    'அமைப்பிற்காக தனிநபர்' என்பது அற்புதமான நிலை.

    ஒரு தனிநபர் எவ்வளவோ மாறுபட்டக் கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். தன் கருத்துக்களுக்கு
    முழு உருவம் கொடுக்க அமைப்பிற்குள் போராடலாம். ஆனால் அமைப்பு எல்லா கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவு எடுத்து விட்டதென்றால் அந்த முடிவுக்கு மாறுபட்ட கருத்தை தனி நபர் கொண்டிருந்தாலும் அமைப்பு எடுத்து விட்ட அந்த ஒன்றுபட்ட முடிவுக்கு கட்டுப்பட்டு தானும் அதற்காகப் போராடுதல்...

    ReplyDelete
    Replies
    1. பொதுநலம் கலந்த சுயநலமாக தனிநபர் சுயநலம் மாறவேண்டும் என்பதுதான் உட்கருத்து.

      தனிநபர் விருப்பம் சுயநலம் சார்ந்தது. ஆனால் அது பொதுநலத்துக்காகக் கொஞ்சம் தழைந்துபோகையில் ஒரு அமைப்பு உயிர்பெறுகிறது, வலிமையோடு எழுகிறது. இதை உணருகிற எந்தவொரு சங்கமும் கட்சியும் நிலைத்து நிற்கும், நிற்கவேண்டும்! டூமாவின் வார்த்தைகளை வைத்து என்னுடைய தொழிற்சங்க ஈடுபாடு, எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் ஜீவி சார்!

      Delete
  2. //All for one! One for all! //

    பாசமலர் படத்தில் இதே வரியைக் கொஞ்சம் மாற்றி, "ALL FOR EACH AND EACH FOR ALL" என்று தொழிற்சங்கத் தலைவன் ஜெமினி, முதலாளி சிவாஜியைப் பார்த்துச் சொல்வதாக ஒரு வரி வரும்.

    ReplyDelete
    Replies
    1. அதே ஜெமினி நிஜவாழ்க்கையில், தன்னுடைய மகள் ஜெயஸ்ரீ, ஸ்ரீதர் (கண்சிவந்தால் மண்சிவக்கும் பட இயக்குனர்) என்கிற இடதுசாரியைத் திருமணம் செய்துகொண்டபோது, இடதுசாரித்தனத்தை மூட்டை கட்டி அனுப்ப வைத்து வீட்டோடு மாப்பிள்ளையாக ஆக்கினார் என்ற கதை தெரியுமா ஜீவி சார்?

      Delete
    2. ஜெமினி சொல்வதாகத் தான் சொன்னேன். நடிகர் ஜெமினிக்கு அந்த அளவே அந்த வசனத்தினுடனான தொடர்பு. அதற்குப் போய் அவர் குடும்ப ஜாதகத்தை அலசுவானேன்?..

      மற்றபடி அந்த படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் என்று நினைக்கிறேன். அவரோ (அல்லது வெளியுலகிற்குத் தெரியாத) அவரது உதவியாளர் யாராவதோ எழுதிய வசன வரிகளாக இருக்க வேண்டும்.

      Delete
  3. உள்ளடக்க மேட்டருக்காக அல்ல; அந்தக் குடும்பப் படம் அழகாக இருந்தது. அதற்காக..

    https://www.vikatan.com/news/miscellaneous/126943-this-movie-separated-our-family-now-kamala-selvaraj-opensup.html

    ReplyDelete
    Replies
    1. ஜெமினி கணேசனுடைய வேறு பல நல்ல குணங்களும் எனக்குத் தெரியும் ஜீவி சார்! காதல் மன்னனாக, நிஜ வாழ்க்கையில் gigolo என்றலைந்ததையும் கூட வெளிப்படையாகப் பேசுகிற தைரியம் அவருக்கிருந்தது. தனித்துவமான அவரது குணம் ஒன்று தான் எம்ஜியார் சிவாஜி என்று இரண்டு ஸ்டார்களுக்கு இணையாகத் திரையுலகில் வலம் உதவியாக இருந்தது

      Delete