Thursday, March 4, 2010

அம்மா வந்தாள்! --தி.ஜானகிராமன்




"அம்மா வந்தாளைப் பற்றி நான் ரகசியங்கள் ஏதும் சொல்ல இல்லை. நூல் தான் முக்கியம். எப்படி, என் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப்படைப்பு என்ற ஒரு நோக்கோடு அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதைத் தூற்றி விட்டார்கள். நான் 'பிரஷ்டன்'  என்றும் சொல்லி விட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை ப்ரஷ்டர்களிடமிருந்து தான் பிறந்து வருகிறது என்று கூற விரும்புகிறேன்.

"அம்மா வந்தாள்" நான் கண்ட, கேட்ட சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள் இவற்றிலிருந்து வடிக்கப் பட்ட ஒரு முயற்சி மனத்துக்குள் ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றைப் பார்த்து ஊறி வெகு காலமாக அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெறுகின்றன. நம் உருவம் கொடுப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அம்மா வந்தாளின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், நான் பார்த்த ஏழெட்டுப் பாத்திரங்களின் சேஷ்டைகள் ஒருமித்து இருக்கின்றன.

அந்த அம்மாள் நான் கண்ட ஐந்தாறு பெண்களின் கலவை. அகண்ட காவேரி, வேத பாட சாலை, சென்னையின் பெரிய மனிதர்கள், சம்ஸ்க்ருதமும் வேதாந்தமும் படிப்பது, தஞ்சை மாவட்டத்துப் பெரிய மிராசுதார்களின் லௌகீக அடாவடிகள் இப்படி எத்தனையோ சேர்ந்து எப்படியோ ஒரு உருவமாக வந்தன.

மையக் கருத்தைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? இது நடக்குமா, நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுவார்கள். அவர்களைப் பற்றி நான் எப்போதுமே கவலைப் படுவதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை விமரிசகன், அவனுக்குப் பலம் பழங்காலம்.

கலை, அமைதி பற்றி ரசிகனுக்குத் தான் தெரியும். கலை உலகம் ஒரு மாய லோகம். அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ளக் கூடாது."

இது தி.ஜானகிராமன்  அம்மா வந்தாள் புதினத்தைப் பற்றிய தன்னுடைய கருத்தாக சொன்னது.. கதையைப் பற்றி ஏகப்பட்ட தாறுமாறான விமரிசனங்கள் கிளம்பிக் கொண்டிருந்த நேரம் அது.

அவருடைய அபிப்பிராயம் என்ன என்பதை கல்கி வார இதழில்,  அவர்கள் கேட்டதற்குப் பதிலாகச் சொன்னது தான் மேலே நீங்கள் பார்த்தது!

1968 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தக் கருத்தை, ஐந்திணைப் பதிப்பகம் தனது சமீபத்திய பதிப்பில் (ஆகஸ்ட் 2008) முன்னுரை  மாதிரி  வெளியிட்டிருக்கிறது.

அம்மா வந்தாள் புதினம் 1967 இல் வெளியானபோது ஏகப்பட்ட கண்டனங்கள்! புழுதிவாரித் தூற்றுகிற மாதிரி விமரிசனங்கள்! இதற்குத் தலைமை வகித்து நடத்தியவர், அந்த நாளில் ஆனந்த விகடனிலும் அப்புறம் 'இதயம் பேசுகிறது' என்று சொந்தமாகவும் பத்திரிகை நடத்திய   மணியன்!

காஞ்சி சங்கர மடத்தின்  மூத்த பீடாதிபதி  அனுஷ்டித்த கடுமையான நெறிமுறைகளையும், அதை ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டு உண்மையில் ஆஷாடபூதிகளாகவும் இருந்த மடத்தின் சீடர்களையும், தி.ஜானகிராமன் வெளிப்படையாகவே கண்டித்திருக்கிறார். 

மணியன் மாதிரி சனாதனக் காவலர்களுக்கு அப்பொழுதே எரிச்சல், புகைச்சல்! அம்மா வந்தாள் கதை வெளியானதும் கம்பளிப் பூச்சி ஊர்வது போல விமரிசனமாக எழுதிக் குவித்து விட்டார்கள்.

தி.ஜா சொன்ன மாதிரி, ஒரு நல்ல எழுத்தாளன், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை, அதன் இயல்புகளைக் கூர்ந்து கவனிக்கிறான். அதன் தாக்கம் ஏற்படுத்திய விதத்தில் பாத்திரங்கள் உருவாகின்றன.

தி.ஜானகிராமனுடைய கதைகளில் இருக்கும் ஒரு பொதுவான அம்சம், அங்கே கதையை எழுத்தாளன் முன்கூட்டியே தீர்மானித்து எழுதிய மாதிரி எதுவுமிருப்பதில்லை; அதற்குப் பதிலாக, ஒவ்வொரு பாத்திரமும் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்கிறது. படிக்கிற நாமும் அந்தப் பாத்திரங்களோடு, கூடவே வாழ்ந்து கொண்டு, நம் கண்முன்னாலேயே நிகழ்வதைப் பார்க்கிற விதத்திலேயே கதை அங்கே நிகழ்கிறது!

தி.ஜானகிராமனுடைய எழுத்தின் வசீகரம், இன்றைக்குக் கூடக் கொஞ்சமும் குறையாமல் இருப்பதற்குக் காரணம், கதாபாத்திரங்களுக்கும், நமக்கும் நடுவே எழுத்தாளன் குறுக்கே வருவதில்லை. பாத்திரங்களைக் குறித்த முன்கூட்டிய அபிப்பிராயங்களை சொல்வதில்லை! பாத்திரங்கள் நம்மோடு வாழ்கிறார்கள், அவர்களே அவர்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை நமக்குள் வரைந்துவிட்டு, நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

கால இடைவெளி கூட, அந்த வசீகரமான  எழுத்தின் வீரியத்தைக் குறைப்பதில்லை. நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால்   அவர் பார்த்து அனுபவித்துப் பழகிய மனிதர்களைப் பற்றிய சித்திரம், இன்றைக்கும் அப்படியே உயிரோவியமாக அப்படியே நிற்கிறது. படிக்கும்போது, இது அந்தக் காலம் என்ற நினைவே வராமல், கால இடை வெளியையும் தாண்டி நிற்கிறது.

அம்மா வந்தாள் கதையின் நாயகன்  அப்பு காவிரிக் கரையில், ஒரு நிமிஷமாக ஓடிவிட்ட பதினாறு ஆண்டுகளை நினைத்துப்பார்த்து ஆச்சரியப் பட்டு உட்கார்ந்திருக்கிறான். வேத பாட சாலையில் படிக்க வந்தது இப்போது போலத் தான் இருக்கிறது, இதோ சிக்ஷை முடிந்து வீட்டுக்குத்   திரும்பும் நேரமும் வந்தாயிற்று. வேத பாடசாலையை நிறுவின பவானி அம்மாள் ஊருக்குப் போயிருக்கிறாள். அவள் திரும்பி வந்தவுடன் ஊருக்குப் புறப்பட வேண்டியது தான்! இப்படி நினைவுகளில் முழுகியிருக்கும் அவனுக்கு, இந்து தனியாக இருப்பாளே என்ற  நினைவும் வர பாட சாலைக்குத் திரும்புகிறான்.

இந்து பவானியம்மாளின் உறவுப் பெண், விதவை. சம வயது. அவளிடம் அப்புவுக்கு ரகசியமாக ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதே மாதிரி  இந்துவுக்கும் அப்புவிடம் ஒரு வெறித்தனமான ஈர்ப்பு இருக்கிறது.  ஆற்றங்கரைக்குப் போனவன் வெகு நேரம் கழித்துத் திரும்புகிறான், பவானி அம்மாள் இல்லாத தனிமை, இந்துவுக்கு அசாத்திய தைரியத்தைக் கொடுக்கிறது. அப்புவைக் கட்டித் தழுவுகிறாள். அப்பு, தயங்குகிறான், உதறுகிறான். மறுநாள் கிளம்பும் போதும் இந்து அவனிடம் நெருக்கமாக இருக்க முயற்சிக்கிறாள்.

.....வந்த வேகத்தில், எதிர் பாராமல் சிக்கின திகைப்பில், அப்பு ஒரு கணம் மூச்சுத்  திணறி விட்டான். பின்னால் சற்றுத் தள்ளாடினான். மறுகணம் சமாளித்துக் கொண்டான். "சீ, என்ன இது அசுரத்தனம்! அம்மாவை கட்டிக்கறாப்பல ......எனக்கு என்னமோ பண்றது"  என்று வேகமாகத் தள்ளினான். இந்து பின்னால் தள்ளாடினாள். சுவரில் தலை முட்டிக் கொள்ளும் போலிருந்தது. "செத்துத் தொலையாதே!"என்று நகர்ந்தான்.

"அம்மாவாம் அம்மா! உங்கம்மா ரொம்ப ஒழுங்குன்னு நினைச்சுக்காதே. நானாவது உன்னியே நினைச்சுண்டு சாகறேன். உங்கம்மா யாரையோ நினைச்சுண்டு சாகாம இருக்கா பாரு. நான் உங்கம்மா இல்லை. நான் உன்னைத்தவிர யாரையும் நினைச்சதில்லேடா பாவி, அம்மா அம்மான்னு என்னை அவளோட சேர்க்காதே. எனக்கு ஏமாத்தத் தெரியாது!"

"என்ன சொன்னே?"

"சொன்னதைத்தான். உங்கப்பா அவ நல்லவள்னு ஏமாந்திருக்கார். நீ நான், பொல்லாதவள்னு ஏமாந்து கிடக்கே."

இந்த ஒரு இடத்திலேயே இரண்டு பெண்கள், இரண்டுவிதமான குணாதிசயங்களைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைத்து விடுகிறது.

அப்பு அவன் அம்மாவை இதயத்தில் ஒரு சிம்மாசனத்தில் வைத்திருக்கிறான். அவளுடைய கம்பீரமான தோற்றம் மட்டுமே அவனுக்கு எல்லாமாகவும் இருக்கிறது. எங்க அம்மா எங்க அம்மா என்று ஒரு குழந்தை தன்னுடைய தாயைப் பற்றிப் பெருமிதமாக எண்ணிக் கொள்வதைத் தவிர இங்கே வேறு எந்தவிதமான ஈடிபஸ் சிக்கலும் இல்லை.  எப்படி இந்த மாதிரி ஒரு விகாரமான கற்பனை அல்லது விமரிசனம் எழுந்தது என்று எனக்குப் புரியவில்லை. இந்துவுடைய நேசிப்பில் விரகதாபம் இருக்கிறது, உண்மையான காதலும் இருக்கிறது.

அப்பு, தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் இரண்டு சக்தியின் ஆளுமைகள், ஒரு பக்கம் அம்மா! இன்னொரு பக்கத்தில் இந்து!

கதை, அப்பு ஊருக்குத் திரும்புவதைப் போல அடுத்த திருப்பத்திற்குத் திரும்புகிறது. அம்மாவைப் பார்க்கிறான். கூடவே, சங்கடமான கேள்விகளை எழுப்பும் சிவசுவையும்!

அப்பா தண்டபாணி, வேதாந்தம் சொல்லிக் கொடுக்கிறவர். ஆனாலும், அம்மா அலங்காரத்துக்கு முன்னாடி, அவள் உத்தரவுக்குக் காத்திருக்கிற சேவகன் மாதிரித் தான்!  அவனுடைய உடன்பிறந்தவன் மனைவி, சிவசுவைப் பற்றி அப்பு கேட்கும் கேள்விகளுக்கு தெரியாது என்று ஒரே வார்த்தையில் எல்லாம் தெரியும் என்கிற மாதிரிப் பதில் சொல்கிறாள். தகப்பனிடமே பேசுகிற தருணத்தில், அவர் நான் என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்க்கத் தான் முடியும் என்று வேதாந்தம் பேசுகிறார். தண்டபாணி  கையாலாகாத மனிதர் இல்லை, அலங்காரத்தம்மாளின் ஆளுமைக்கு முன்னால் அவர் ஒன்றுமே இல்லை என்பது தண்டபாணி பாத்திரத்தின் வழியாகவே நுட்பமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.  

அம்மா அலங்காரத்தைப் பற்றிய சித்திரத்தை,  பெற்ற மகன், கட்டிய கணவன் இருவரது பார்வை வழியாகவும் அருமையாகச் செதுக்கியிருக்கிறார் தி.ஜா. அலங்காரத்தின் கம்பீரத்துக்கு முன்னால், தண்டபாணி மண்டிபோட்டுக் கிடக்கிறவர் என்று ஒரு புறம். என்னத்தைக் கண்டு மயங்கினாள் என்று விவரிக்காமலேயே, சிவசு-அலங்காரம் இருவருக்குமிடையிலான உறவு, பிறந்த குழந்தைகள் என்று சுருக்கமாகவே கதை பேசிவிட்டு நகர்கிறது.

அலங்காரத்துக்கு உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு, அல்லது ஒரு குற்ற உணர்வு. செய்த தவறைத் தீயில் பொசுக்கிப் புடம் போடுவதற்காகத் தான் பெற்ற பிள்ளை அப்பு, வேத பண்டிதனாகித் தன்னைக் கரை சேர்ப்பான் என்று ஆசைப்பட்டு, அவனை வேத பாடசாலையில் சேர்க்கிறாள். இதோ மகனும் வீடு வந்து சேர்ந்து விட்டான்.

பவானியம்மாளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வருகிறது. அப்பு வேத பாடசாலைக்குத் திரும்புகிறான். பவானி அம்மாள் உடல் நலம் மெதுவாகத் தேறுகிறது.இந்துவின் மனதைப் படித்தவளாக,  பவானி அம்மாள் முதிர்ச்சியோடு பேசுகிறாள்.

"அதுக்குத் தான் சாசனத்தை மாத்தி எழுதிவிடலாம்னு பாக்கிறேன். முடிஞ்சா வேதத்தைச் சொல்லிக் கொடு. இல்லாட்டா பத்துப் பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட்டு வச்சிண்டு தமிழ்ப்பள்ளிக் கூடத்துக்கோ இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துக்கோ அனுப்பிச்சிண்டிரு. அதுகளோட இஷ்டம் அது. வேதம் படிச்சா என்ன? வாதம் படிச்சா என்ன? இல்லாததுகள் வயித்திலே ரண்டு சாதம் விழனும். பசி தான் சுவாமி, அதுக்கு நைவேத்யம் பண்ணினாக் கூடப் போதும்...அது கூட அகம்பாவம் தான், நாம் எத்தனை பேருக்கு நைவேத்யம் பண்ண முடியும்?.......பசி ரூபத்திலேதானே இருக்கான் அவன்..இதை நீ ஞாபகம் வச்சிண்டாப் போறும்...எனக்காக."

அப்பு இந்துவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள. தன்னுடைய வாழ்நாள் கனவான வேத பாடசாலை தடையாக இருக்குமானால், அதைக் கூட உதறத் தயாராயிருக்கும் பவானியம்மாளின் விசாலமான மனசு வெளிப்படும் நெகிழ்ச்சியான இடம் இது.  அப்பு அழுகிறான்.பவானி அம்மாள் அவனைத் தேற்றுகிறாள்.  நீ ஒரு தவறுமே செய்யவில்லையடா! இந்து கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு சகித்துக் கொண்டிருக்க முடியாது அதற்காகத் தான் இது என்று அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

அன்பு, காதல்  இவைகளுக்கு முன்னால் நெறிகள், சாத்திரங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை அழகாகக் கோடிட்டுக் காட்டும் இடம் இது.

அலங்காரம் அப்புவைத் தேடிக்கொண்டு வேதபாடசாலைக்கே வருகிறாள். இந்துவும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மகன் தன்னோடு திரும்பப் போவதில்லை என்பதைத் தெரிந்து கொண்டதும் அம்மா ஊருக்குக் கிளம்புகிறாள். காசிக்குப் போகப் போவதாக அப்புவிடம் சொல்கிறாள்.

அலங்காரம் சொல்கிறாள்: " நீ ஒண்ணுதான் என் பிள்ளைன்னு நினைச்சுண்டிருந்தேன். நீ ரிஷியாயிட்டே, உன் காலில் விழுந்து எல்லாத்தையும் பொசுக்கிண்டு விடலாம்னு நினைச்சேன். நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே. இப்பக் காசிக்குப் போய் இருக்கப் போறேன்."

"எனக்கு வேற வழியே தெரியலே. எத்தனை பாட்டிகள் அங்கே செத்துப் போகரதுக்காகப் போய்க் காத்துண்டேயிருக்கா! நானும் போய் காத்துண்டிருக்கப் போறேன்."


பெண்கள் சக்தியின் வடிவங்கள்!. கட்டுப் படவும் செய்யும்!, கட்டை உடைத்து மீறவும் துணியும்! 

சக்தியாகவும், காணுகின்ற அனைத்தையும் உருவாக்கும் சகதியாகவும் பெண்மையின் எல்லாமுமாகி  நிற்கிற விதத்தை புரிந்துகொள்ள பெரிய நுட்பம், அறிவு எல்லாம் வேண்டாம். மனம் திறந்து நம் வாழ்வில் காண முடிகிற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தாலே போதும்! 

ஜெயமோகன்கள், சிலாகித்து ஏழெட்டு வரி சொல்லி விட்டு, அப்புறம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, தி.ஜானகிராமனின் கதைகள் அனைத்திலும் 'காமம் முதிர்ந்த பெண்கள்' என்ற மாதிரி பொதுமைப் படுத்தி, சிறுமைப் படுத்தும் வேலைக்கு அவசியமே இருக்காது!

இப்படிப்  பெண்மைக்குள் இருக்கும் இந்த சக்தி விநோதத்தை, இந்து, அலங்காரம் என்ற இரண்டு கதாபாத்திரங்கள் வழியாக, ஒரு முற்றுப் பெறாத சித்திரமாக, படிப்பவர்களே மிச்சத்தைப் பூர்த்தி செய்துகொள்ளட்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியாது! இந்துவிடமிருந்து விலகிப் போக எத்தனிக்கிற அப்பு மறுபடியும் இந்துவிடமே வந்து சேருகிறான். ஜெயமோகன் தனது அவதானிப்பில் சொன்ன படிக்கு அலங்காரத்தம்மாள் இதைப் புரிந்து கொண்டதால் தான் "நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே" என்று சொல்கிறாளோ என்னவோ!

தி.ஜானகிராமன் எழுத்தில் என்னை மிகக் கவர்ந்தவை உயிர்த்தேன், அன்பே ஆரமுதே, மோக முள் என்று சொன்னால், என்னை அதிகம் யோசிக்க வைத்தவை அம்மா வந்தாள் மற்றும் மரப்பசு இரண்டும் தான்!

"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கேல்லாமோ ஆசைப் பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

மனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும்.தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியோர்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையும்தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும் (பிறர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப்படையாக இருக்கும்பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத்  தான் இருக்கும்."

அம்மா வந்தாள் புதினத்தின் பின் அட்டையில் தி.ஜானகிராமன் எழுதிய வேறொரு கட்டுரையில் இருந்து எடுத்துப் போட்டிருந்த வாசகங்களைப் படித்தபோது, (மேலே நீங்கள் படித்தது) எது நல்ல எழுத்து என்பதற்கு ஒரு அடையாளம், ஒரு தெளிவு இருப்பதைக் கண்டேன்.

இங்கே வலைப்பதிவுகளில், நிறையப் பதிவுகள், புத்தகம் படித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாக வருவதைப் பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரம், தி.ஜாவைப் படிக்காமலேயே, மேம்போக்கான விமரிசனங்களை வைத்து மட்டும் பேசுகிற சில பதிவுகளையும் படிக்க நேர்ந்தபோது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது

வாசகன் என்பவன் வெறுமே படித்து விட்டு போகிறவன் அல்ல! எழுதுகிறவனைப் போலவே அவனும் ரசிகன்! 

ரசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே நல்ல எழுத்து, இலக்கியம் உருவாகிறது! அவர்களால் மட்டுமே அது ஜீவிக்கிறது!


தமிழின் வாசிக்கப் படவேண்டிய எழுத்தாளர் யார் எவர் என்று கேட்டால், தயங்காமல் முதலில் தி.ஜானகிராமன் தான் என்று சொல்லுவேன்!

மற்றவர்கள் புனைந்து  சொன்னார்கள். அனுபவம் இல்லாமலேயே, உபதேசம் செய்கிற மாதிரிச் சொன்னார்கள்! தி.ஜானகிராமன் மனிதர்களை, அவர்களுக்குள் பெருகும் உணர்வுகளைப் படித்துவிட்டு, தன்னுடைய பாத்திரங்களைப் படைத்தார். அவரே சொன்ன மாதிரி, ஒவ்வொரு பாத்திரமும் அவர் நேரில் பார்த்து உணர்ந்த மனிதர்களின் எழுத்துக் கலவை. அதனால் தான் இன்னமும் உயிரோட்டத்துடன் இருக்கிறார்கள்.

அம்மா வந்தாள்
ஐந்திணைப் பதிப்பக வெளியீடு
பக்கங்கள் 172+6 விலை ரூ.90/- 




 

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)