Showing posts with label வாசிப்பு அனுபவம். Show all posts
Showing posts with label வாசிப்பு அனுபவம். Show all posts

Tuesday, March 17, 2020

சாண்டில்யனைப் போல சரித்திரக்கதை தமிழில் சொன்னவர் உண்டோ?

குறுங்கோழியூர் கிழார்! ஒரு சங்ககாலப் புலவர். கிழார் என்பதால் வேளாண் தொழில் செய்தவர். அப்புறம்  குறுங்கோழியூர் என்பது அவரது சொந்த ஊர்ப்பெயராக இருக்கலாம்! எட்டுத்தொகை எனப்படும் சங்க இலக்கியப் பாடல்தொகுப்பில் ஒன்றான புறநானூறில் 17. 20, 22 என மூன்றே மூன்று பாடல்கள் மட்டும் இவர் இயற்றியதாகக் கிடைக்கின்றன. மூன்றுமே சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடியவை. அதுவும் அந்த முதல்பாடல் இருக்கிறதே, அதில் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாண்டியனிடம் தோற்றுச் சிறையிருந்து, அதிலிருந்து தப்பித்து வந்து தன் சுற்றத்தோடு சேர்ந்த கதையைக் கொஞ்சம் சொல்கிற பாடல்.


தென் குமரி, வட பெருங்கல், குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்திப்,படுவது உண்டு, பகல் ஆற்றி, இனிது உருண்ட சுடர் நேமி முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை அகல் வயல், மலை வேலி, நிலவு மணல் வியன் கானல், தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின், தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது, நீடு குழி அகப் பட்ட பீடு உடைய எறுழ் முன்பின் கோடு முற்றிய கொல் களிறு, நிலை கலங்கக் குழி கொன்று, கிளை புகலத் தலைக்கூடி யாங்கு நீ பட்ட அரு முன்பின், பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப், பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின், ‘உண் டாகிய உயர் மண்ணும், சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்’எனவும்,
‘ஏந்து கொடி இறைப் புரிசை, வீங்கு சிறை, வியல் அருப்பம், இழந்து வைகுதும்.இனிநாம்; இவன்
உடன்று நோக்கினன், பெரிது’ எனவும், வேற்று அரசு பணி தொடங்குநின் ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய மழையென மருளும் பல் தோல், மலையெனத் தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை, உடலுநர் உட்க வீங்கிக், கடலென வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப, இடியென முழங்கு முரசின், வரையா ஈகைக் குடவர் கோவே!  

வலைப்பதிவுகளை வாசிக்க வருகிறவர்களிடம் இந்த மாதிரி சங்க இலக்கியம், பாட்டு அது இது என்று ரொம்பவும் பேசினோமானால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாக நேரிடலாம் என்பது தெரிந்து வைத்திருப்பதனால் நான் அதிகமாக இலக்கியம், பாடல்களைப் பற்றிப் பேசுவதிலலை. மேலே உள்ள பாடலின் நடுவே கறுப்பு எழுத்துக்களில் கொடுத்திருக்கும் பகுதி சொல்வது சுருக்கமாக: பெரிய பொய்குழியில் விழுந்த ஆண்யானை தன் பெருமிதம் தோன்றக் குழியைத் தகர்த்தெறிந்துவிட்டுத் தன் சுற்றத்துடன் சேர்ந்துகொண்டதைப் போல, நீ பட்டிருந்த சிறை தளர்ச்சியுற்றிருந்தபோது, பலரும் பாராட்டும் வண்ணம் விடுவித்துக்கொண்டு சென்றதை உன் தாயத்தார் பாராட்டுகின்றனர் என்பதுதான். இனிமேல் உன் பகைவர்களும் உன்னிடத்தில் பணிவாரே அன்றிப் பகைமை காட்ட மாட்டார்! இந்தப்பாட்டை வைத்துக் கொண்டு என்ன சரித்திரம், கதை சொல்லிவிட முடியும்?  கொஞ்சம் சொல்லுங்கள்! 


சாண்டில்யனைப் போல சங்க இலக்கியங்களையும், வடமொழிக் காவியங்களையும் ரசித்துக் கற்ற ஒருவரிடம் இந்த மாதிரி இடியாப்பச் சிக்கல் மாதிரி ஆரம்பமென்ன முடிவென்ன என்று சொல்லாமல் விட்டு விடுகிற பாடலைக் கொடுத்தால் என்னாகும்? ஒரு அழகான சரித்திரக்கதை கோழைச்சோழன் மாதிரி இருபது இருபத்திரண்டு  பக்கங்களுக்குள் வருகிற மாதிரியோ, மூங்கில் கோட்டை மாதிரி 256 பக்கங்கள் வருகிற மாதிரி ஒரு முழுநீள சரித்திரக் கதையாகவோ ஆகிவிடும்! இதையும் சரித்திரக்கதைகள் என்றாலே சாண்டில்யன் தான் பதிவில் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா? மங்கல தேவி சாண்டில்யனின் 4 சரித்திர சிறுகதைகளின் தொகுப்பாக வந்ததில் கோழைச்சோழனும் ஒன்று. என்னிடமிருப்பது 1988 பதிப்பு 84 பக்கங்கள் வெறும் 5 ரூபாய் தான்!

மூங்கில் கோட்டை! கதையைப் படிக்கும் போதே அந்த நாளைய தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்கள் தவிர இவர்களுக்கு அடங்கியோ அல்லது சுதந்திரமாகவோ குறுநில மன்னர்களாக கொங்கு நாட்டு வேளிர்கள் பலர் இருந்தார்கள் என்ற பின்னணியோடு கதை ஆரம்பிக்கிறது. மிகவும் இள வயதிலேயே பாண்டிய அரசனாக அரியணை ஏறிய நெடுஞ்செழியனை, சிறுவன்தானே என்று இளப்பமாக எண்ணிய சேர சோழ மன்னர்கள், ஐந்து வேளிர் குறுநில அரசர்களோடு சேர்ந்து கொண்டு, பாண்டிய அரசை விழுங்க முயன்றார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் சிங்கம் போல சிலிர்த்து நின்றான். 

நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இந்த எழுவரும்  சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தான் என்பது வரலாறு  மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் இவனே! நெடுநல் வாடை என்ற காப்பியத்தின் பாட்டுடைத்தலைவனும் இவனே! 

தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்!  போரில் வென்ற பிறகு சேரனை என்ன செய்தான் என்பதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. தன்னை யானை என்று மார்தட்டிக் கொண்ட சேரனை ஒரு யானையைச் சிறை வைப்பது மாதிரியே அகழிகள் தோண்டி மூங்கிலில் ஆன ஒரு கூடையைக் கவிழ்த்து வைக்கிறமாதிரியான ஒரு கோட்டையில் சிறை வைத்திருக்கிறான். அவனை சிறைமீட்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காக இளமாறன் என்கிற ஒரு கருவூர் வஞ்சி நகரத்து வாலிபன் அழைக்கப்படுவதில் இருந்து அவனோடு நாமும் பயணிக்கிறோம். 

மதுரையின் கோட்டைக்குச் செல்லும் வழியில் இரண்டு பெரிய மூங்கில் பாலங்களை எடைபோட்டுக் கொண்டே வீரனான இளமாறன் மதுரைக்குள் நுழைகிறான். பாண்டிய வீரர்கள் கண்காணிப்பு பலமாக இருந்தாலும் மிகவும் மரியாதையுடன் விசாரித்து உள்ளே அனுப்புகிறார்கள். தன்னை எதற்காக பிரதான வாயில் வழியாக வரச்சொல்லாமல் பக்கத்திலிருக்கும் திட்டிவாசல் கதவைத் தட்டச் சொன்னார்கள், யாரைப்பார்க்க வந்திருக்கிறோம் என்ற விவரங்கள் எதுவுமே தெரியாமல் சேர அரச இலச்சினை பொறிக்கப்பட்ட ஓலைக்குப் பணிந்து மதுரைக்கு வந்து திட்டிவாசல் கதவைத் தட்டியும் ஆயிற்று! கதவை அவனுக்குத் திறந்துவிடுகிறவள் ஒரு அழகான இளமங்கை. அவனைப்பார்த்ததும் அவள் விழிகளில் ஒரு பரிதாபம் தெரிகிறதே ஏன்? பதில் தெரியாமலேயே அவளை பின்தொடர்கிறான் இளமாறன்!   

   
மூங்கில் கோட்டையின் முதல் அத்தியாயத்தை இங்கே  14 நிமிட ஆடியோவாக யூட்யூபில் வாசித்துக் காட்டுகிறார்கள்!  சாண்டில்யன் இன்னமும் நிறையப் பேரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு மேல் என்ன சொல்ல!

குறுங்கோழியூர் கிழார் என்ற புலவரும் அவருடைய பணிப்பெண்ணாகச் சொல்லிக் கொண்ட இளமங்கையும் அவனை எதற்காக வரவழைத்தார்கள் என்பதை விரிவாகச் சொல்வதற்கு முன்னாலேயே, தூக்கம் வராமல் புலவர் மாளிகைக்கு வெளியே மதுரையைப் பார்த்து வரலாம் என்று கிளம்பியதில் பாண்டிய மன்னன், அவனது தளபதி இருவருடனும் வாட்போர் செய்கிற மாதிரி ஒரு சூழ்நிலை உருவாகவே, புலவரும் இமயவல்லி என்கிற அந்த இளமங்கையும், சேரனை மீட்கும் பணியில் அவசர அவசரமாக, இளமாறனைத் தயார் செய்கிறார்கள். மூடுதிரை போட்ட ஒரு தேரில் இமயவல்லியும் இளமாறனுடன் தனித்துப் பயணிக்கிறாள். இடையில் பாண்டியன் தளபதி வீரர்களுடன் வழிமறிக்கிறான். இளமாறனிடம் காயப்படுகிறான். சித்தர் என்றொரு கதா பாத்திரம் குறுக்கிடுகிறது. இமயவல்லி பாண்டிய மன்னனின் சகோதரி என்ற மர்மத்தையும் உடைக்கிறது. பாலில் மயக்க மருந்தளித்து இருவரையும் மூங்கில் கோட்டையின் முகப்புக்கு முந்தைய பகுதியில் கிடத்திவிட்டும் போய்விடுகிறது.

மூங்கில் கோட்டையின் சூட்சுமத்தை இளமாறன் புரிந்து கொள்கிறான். சேரமன்னனை விடுவிக்கிறான். பாண்டியன் படைத்தளபதியிடம் தானாகவே சரண் அடைகிறான். பாண்டியனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் என்ற வகையில் குறுங்கோழியூர் கிழாரும், சேரனின் முன்னாள் படைத்தலைவனாக இருந்து அவமானப்படுத்தப்பட்டவனும், சித்தர் என்று அழைக்கப்படுகிறவரும் (இளமாறனுடைய தந்தை அவர்தான் என்ற மர்மம் கடைசியில் உடைகிறது) பாண்டியனிடத்தில் இளமாறனுக்காக உயிர்ப்பிச்சை கேட்கிறார்கள்! சேரனுடைய அவைப்புலவராகவோ அல்லது அபிமானியாகவோ இருந்த குறுங்கோழியூர் கிழார் சேரனை வியந்து பாடிய மேலே காட்டிய பாடலை பாண்டியனிடம் காட்டுகிறார்! பாண்டியன் தனது சகோதரியின் நிரந்தரக்காவலில் இளமாறனை வைத்துவிட்டதாகச் சொல்வதோடு கதை சுபமாக முடிகிறது.

உண்மையைச் சொல்லப்போனால் புறநானூறில் 17. 20, 22 ஆகிய மூன்று பாடல்களில் குறுங்கோழியூர் கிழார் சொல்லியிருக்கும் சரித்திரத்தை விட பாடல்  72 இல் பாண்டியன் நெடுஞ்செழியன் தன் கூற்றாகச் சொல்லும் தலையாலங்கானத்துப் போருக்கு முந்தைய சூளுரையில் இன்னும் நிறைய வரலாறு, சுமார் 1800 - 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதை இருக்கிறதென்பதை நான் அப்புறமாகத்தான் தேடித் தெரிந்து கொண்டேன். சாண்டில்யன் கதைகளில் ஆதாரமாகக் காட்டியிருக்கும் தமிழ், ஆங்கில நூல்களில் பலவற்றைப் படித்த பிறகுதான் சரித்திரத்தை எப்படி எப்படியெல்லாம் பார்க்கலாம் என்கிற நுட்பமே பிடிபட்டது என்று கூட சொல்லலாம்!

தமிழில் சரித்திரக்கதைகள் என்றால் அது சாண்டில்யன் ஒருவர் தான்! அவர் ஒருவர் மட்டும் தான் என்றும் சொல்லுவேன்!

மீண்டும் சந்திப்போம்.                         
      

Sunday, September 15, 2019

புத்தகங்கள்! படிக்க விரும்புகிறவை!

புத்தக வாசிப்பு என்பது என்னைப்  பொறுத்தவரை,  கட்டுப் பெட்டியாக ஒரு கூட்டுக்குள் இருந்து விடாமல் சிறகு விரித்துப் பறக்கிற மாதிரியானதொரு அனுபவம்! ஒரு குறிப்பிட்ட எல்லை,  ரசனை என்பதைத் தாண்டி ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாய் சிறகுகளுக்குக் கீழே தெரிகிற நிலப்பரப்பும் கண்முன்னே விரிந்து பறந்து கிடக்கிற வான்வெளியுமாக, வாசிப்பு என்பது நம்மையும் விரிவடையச் செய்கிற ஒரு அற்புதமான அனுபவம்.



இன்றைக்கு இணையத்தில் புதிய விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், இந்தப் புத்தகத்தைப் பற்றிய வீடியோக்கள் சில கிடைத்தன. கூடவே Google Books தளத்தில் இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு எல்லைக்குட்பட்ட பக்கங்களைப் படிக்க முடிந்தது. முன்னுரை முடிவுரை தவிர்த்து 14 அத்தியாயம் மொத்தம் 368 பக்கம்! இந்தியாவில் விலை 1657 ரூபாய் என்பது மட்டும்தான் மிகவும் நெருடலாக இருக்கிறது. இங்கே  நண்பர்கள் பலர் அமேசான் கிண்டில் வாங்கி விட்டுப் பயன் படுத்தாமலோ பயன்படுத்தத் தெரியாமலோ வைத்திருப்பதை பார்த்ததனாலோ என்னவோ இதுவரை எனக்கு  கிண்டில் வாங்கும் யோசனை கூட வரவில்லை. முன்னர்  டெஸ்க் டாப் என்றிருந்தது ஆறேழு வருடங்களாக லேப்டாப் என்றானது மட்டும் தான் முன்னேற்றம். 


எதற்காக இந்தப்பல்லவி என்கிறீர்களா? இந்தமாதிரி கொஞ்சம் உருப்படியான விஷயங்களைப் படிப்பதற்கு கிண்டில் அன்லிமிட்டட்  உபயோகமாக இருக்குமே என்கிற ஒரே ஆதங்கம், யோசனைதான்!  


இங்கே ஒரு 9 நிமிட வீடியோவில், புத்தக ஆசிரியர் லாரி டயமண்ட் , புத்தகத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறார்.  ஒரு 77 நிமிட ஆசிரியரின் அறிமுக உரையைப் பார்க்க கேட்க  

“In earlier reverse waves, military coups were the main method of the democraic recession. Not today. The death of democracy is now typically administered in a thousand cuts. In one country after another, elected leaders have gradually attacked the deep tissues of democracy—the political independence of the courts, the business community, the media, civil society, universities, and sensitive state institutions like the civil service, the intelligence agencies, the military, and the police.” 

“Ultimately, what sustains democracy is a deep and unconditional belief in its legitimacy. Unless a country’s people and politicians are unconditionally committed to democracy as the best form of government—one worth obeying and defending even when their preferred parties, candidates, and policies lose out—democracy will rest on tenuous footing. Then, any crisis could topple it.” 

1. Begin to demonize the opposition as illegitimate and unpatriotic
2. Undermine the independence of the courts
3. Attack the independence of the media (recall Trump’s tweet that America’s biggest enemy is not Russia, ISIS, or North Korea, but our own news media)
4. Gain control of any public broadcasting
5. Impose stricter control of the internet
6. Subdue other elements of civil society
7. Intimidate the business community
8. Enrich a new class of crony capitalists
9. Assert political control over the civil service and the security apparatus
10. Gerrymander districts and rig the electoral rules
11. Gain control over the body that runs elections
12. Repeat steps 1 to 11

என்று நூலாசிரியர் புத்தகத்தில்  சொல்வதாக Good Reads தளத்தில் வந்திருக்கும் ஒரு விமரிசனத்தைப் படித்தபிறகு இந்தப் புத்தகத்தை நான் படிக்க விரும்புகிற பட்டியலில் சேர்த்தாயிற்று! ப்பூ! இதெல்லாம் மேட்டரா? 2014 தேர்தலில் நரேந்திர மோடி ஜெயிப்பதற்கு முன்னாடி இருந்தே காங்கிரசும் மற்றவர்களும் சொல்லிவருகிற அதே பல்லவி தானே என்று கேட்கிறீர்களா? முழுசாய்ப் படித்துவிட்டு வந்து பதில் சொல்கிறேன்!!  

எப்போது நேரம் வாய்க்கும் என்பது அடுத்த கேள்வி .

**இது இந்தப்பக்கங்களில் 400வது பதிவு. இந்த வருடத்தில் எழுதிய 314வது பதிவு என்பது வெறும் தகவல் மட்டுமே. இந்தப் பக்கங்களில் எழுத ஆரம்பித்து டிசம்பர் 2018 எழுதிய 6 பதிவுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், 2009 டிசம்பரில் இருந்து 2018 நவம்பர் முடிய உள்ள பத்தாண்டுகளில் எழுதிய மொத்தப் பதிவுகளே 80 தான் என்பதும், 2019 பிப்ரவரிக்குப் பிறகே இந்தப் பக்கங்களுக்கு வாசகர்களுடைய வருகை அதிகரித்தது என்பதும் தான் முக்கியமான விஷயம்!  

நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்.     

Saturday, April 6, 2019

ஆலிவர் ட்விஸ்டும் ஏய்ப்பதில் கலைஞனும்...!

இந்தப் பக்கங்களுக்கு வாசிக்க வருகிறவர்களிடம் பொருளாதாரம், வங்கிகள், அரசியலைத் தொட்டு எழுதிய சில பதிவுகளில், சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் கதையைப் படிக்கும்படி சிபாரிசு செய்வது உண்டு. 


முக்கியமான காரணம், அந்தக் கதையின் தொடக்கமே இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி எப்படி கிராமங்களில் இருந்து மக்களை நகர்ப்புறத்துக்கு, சேரிகளில் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து தள்ளியது என்பதை விவரிக்கும், காலத்தின் கண்ணாடியாக இருப்பதை அறிந்து கொள்வதற்காகத் தான்.

ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறான். அவனைப் பாதித்த விஷயங்கள், சமூகத்தில் அவன் பார்த்த, அவனைப் பாதித்த நிகழ்வுகள், அவனுடைய ஆதங்கத்தோடு சேர்ந்தோ, அல்லது அவன் புரிந்து  கொண்ட விதத்தை ஒட்டியோ தான் அவன் படைப்புக்கள் இருக்கும். மனிதனை நேசிக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரிடத்திலும் காணக் கிடைக்கிற பொதுவான பண்பு இது.

தமிழில் மட்டுமல்ல, பொதுவாகவே வலைப் பதிவுகளைப் படிக்க வருபவர்கள், மேலோட்டமாகவே பார்த்து விட்டுப்போய் விடுகிறார்கள்.அவர்களைக் குறை சொல்லியும் பயனில்லை. இன்றைக்கு எழுத்து என்பது, அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு  ஓட வைக்கிற  ஃபாஸ்ட் ஃபுட் சமாச்சாரமாகவே ஆகிப்போன நிலையில், ஆழ்ந்த வாசிப்பு என்பது மிகவும் அரிதாகிப்போன விஷயமாகவே படுகிறது.

இப்படிக் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு,அவஸ்தையோடு  பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியின் பக்க விளைவுகளில் எழுந்த கதை ஆலிவர் ட்விஸ்ட்! சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய இரண்டாவது கதை இது. ஒரு சிறுவனை மையமாக வைத்து எழுதிய கதை என்று பார்த்தால், அவருக்கு இது முதலாவது முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் பரவியதாக இருக்கும் இரண்டு சுவாரசியமான வாக்கியங்கள், உங்களுக்கும் கூடத் தெரிந்தது தான்,  இந்தக் கதையில் தான் இருக்கிறது!

ஒன்று, 
"சட்டம் ஒரு கழுதை!" 
கிட்டத் தட்ட  நூற்றெண்பது வருடங்களுக்கு முன்னால் டிக்கென்ஸ் எழுதிய  இந்த வார்த்தை, இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!
n
இன்னொன்று, "தயவு செய்து ஐயா, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்!"
சாதாரண ஜனங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்து, இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் கெஞ்சல்!

தொழிற்புரட்சியின் முக்கியமான அம்சம், தேவை இருக்கிறதோ இல்லையோ, உற்பத்தி செய்து அதை நுகர்வோர் தலையில் கட்டி விடுவது! கிராமப் பொருளாதாரத்தின் வலிமை இருப்பதைப் பகிர்ந்து கொண்டு, வளர்ச்ச்சி இல்லை என்றாலும் தேய்மானமாவது இல்லாமல் இருந்தது. தொழிற்புரட்சி அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டதையும், ஏழைகளையும் உற்பத்தி செய்ததையுமே, அதன்  ஆரம்ப காலத்தைத் தொட்டுச் செல்லும் கதை ஆலிவர் ட்விஸ்ட்.
Bentley's Miscellany என்ற பத்திரிகையில். 1837 பெப்ருவரியில் தொடங்கி, 1839 ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக வெளிவந்த தொடர்கதையாகத் தான், பிரிட்டிஷ்  வாசகர்களுக்கு அறிமுகமானது.

சட்டம் ஒரு கழுதைஎனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்என்று சில வாக்கியங்களை அறிமுகப் படுத்திப் பிரபலப் படுத்தியது மட்டுமல்ல, அந்த நாளைய சரித்திரக் குறிப்பேடுகளில் கூடப் பதிவு செய்யப் படாமல் இருந்த ஏழை மக்களின் துயரங்களை விரிவாகப் பதிவு செய்த, சமூகப் பிரக்ஞையோடு  வெளிவந்த  முதல் ஆங்கிலப் புதினம் இது தான்
 

மற்ற எழுத்தாளர்கள், பணம் படைத்தவர்களைப் பற்றியே எழுதி எழுதி மாய்ந்துகொண்டிருந்த நேரத்தில், வெளிவந்த வித்தியாசமான எழுத்து இது.

கதை ஆலிவர் ட்விஸ்ட் என்ற சிறுவனைச் சுற்றியே ஆரம்பிக்கிறது. இவனைப் பெற்றுப்  போட்டதும் தாய் இறந்து விடுகிறாள். தந்தை யார் என்று தெரியவில்லை. ஏழைகளுக்கான சட்டம் என்ற ஒன்றின் கீழ் நிர்வகிக்கப் படும் ஒரு விடுதியில் முதல் ஒன்பது வருடங்கள்! இல்லாதவர்கள் அனுபவிக்கும் கொடுமை, பசியுடன் அந்த ஒன்பது வருடங்கள் இருப்பதை,கானா காப்பீடு, சமூகக் காப்பீடு என்று இப்போதுகூடச் சொல்லப் படுவதில் உள்ள ஓட்டைகளை, அந்தக் காலத்திலேயே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்! காப்பீடுகள், சமூகப் பாதுகாப்பு என்ற வார்த்தை ஜாலங்கள், வாக்குறுதிகள்  எல்லாம் இன்னும் அதிகமாகச் சுரண்டுவதற்காகவே!

ஒன்பது வயது நிறைந்ததும், திருமதி மான் நிர்வகித்து வரும் அமைப்பில் இருந்து, வேலை செய்வதற்கு வேறோர் இடத்திற்கு அனுப்பப் படுகிறான் ஆலிவர் ட்விஸ்ட்! அங்கே தான், பசி தாங்க முடியாமல், "தயவு செய்து ஐயா! இன்னும் கொஞ்சம்!" என்று உணவுக்குக் கெஞ்சுகிறான்.
போனால் போகிறதென்று கொஞ்சம் சோறு போட்டால் இன்னும் கொஞ்சம் என்று கேட்பாயா என்று அங்கே இவன் மீது கோபம் வருகிறது ஐந்து பவுண்ட் கொடுக்கும் எவர் வேண்டுமானாலும் இவனை அழைத்துச் செல்லலாம் என்று முடிவாகிறது. 
அந்த நாளைய பிரிட்டிஷ் சமூக அமைப்பு, தங்களுடைய சொந்த ஜனங்களையே எப்படி நடத்தியது, ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் எப்படி, வீட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள் என்பதைக் கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக, ஆழ்ந்து யோசிக்க வைக்கிற பகுதி இது. பணம் படுத்தும் பாடு எப்படிப் பட்டது என்பதைப் போகிற போக்கிலேயே சொல்கிற இடமாகவும் இந்தப் பகுதி இருக்கிறது.

உள்ளூர் பாரிஷில் (ஒரு சர்ச் அமைப்பு) இருக்கும்  சோவெர்பெரி என்பவர்,  வேறு ஒரு மோசமான நபரிடம் தள்ளிவிட இருந்த நிலையில் தலையிட்டுத் தன வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மனிதர் நல்லவர் தான்! ஆனால், அவர் மனைவிக்கு, இந்தச் சிறுவனைப் பிடிக்கவில்லை. அங்கே இருந்த வேலையாட்களுமே கூட இவனைக் கொடுமைப் படுத்துகிறார்கள். அதில் ஒருவனைத் திருப்பித் தாக்கியதால், தண்டிக்கப் படுகிறான். ஆலிவர். கொடுமை தாங்காமல், அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுகிறான்! பசியும், துயரமும் தொடர்ந்து துரத்துகிறது.

லண்டனை நோக்கிப் பயணப்படும் நேரத்தில்,  ஜாக் டாகின்ஸ் என்ற சம வயதுள்ள ஒருவனைச் சந்திக்கிறான்.

ஏய்ப்பதில் கலைஞன் (the artful dodger) என்றே அவனைத் தெரிந்து வைத்திருந்த வட்டாரத்தில்  அழைக்கப்படுவதில் காரணமில்லாமல் இல்லை. பிக் பாக்கெட் அடிப்பதில் கலைஞன் மட்டுமில்லை, ஆலிவர் மாதிரி ஆதரவற்ற சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய கூட்டத்தில் சேர்க்கும் வலைஞனும் கூட! தன்னுடைய குரு ஃபாகின்சிடம் அழைத்துப் போகிறான். எளிதாகச் சம்பாதிக்கலாம், சுகமாக வாழலாம் என்ற கனவுகளைத் தந்திரமாக இப்படிப்பட்ட ஆதரவற்றவர்களிடம் விதைத்து, அவர்களை உபயோகிக்கும் ஒரு கொடூரமான கும்பல் அது.

கைக்குட்டை விற்கிற சாக்கில் தங்களைப் பிக்பாக்கெட் அடிப்பதற்குத் தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்து, ஆலிவர் இந்தக் கும்பலை விட்டு விலக முனைகிறான். பிக்பாகெட் அடிக்கிற முயற்சியில் டாகின்ஸ் அம்பலப்பட்டு, ஆலிவரும் இன்னொருவனுமாக டாகின்சுடன் தப்பித்து ஓடுகிறார்கள். மற்ற இருவரும் தப்பித்து விட, ஆலிவர் மட்டும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறான். நடந்ததைப் பார்த்த சாட்சிகளில் ஒருவர், ஆலிவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை எடுத்துச் சொல்லவும், விடுவிக்கப் படுகிறான். பிரவுன்லோ என்ற முதியவர் இவன் மேல் இரக்கப் பட்டுத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ஆனால், அதுவும் நிலைக்காமல் போகிறது. கும்பல் தலைவன்  ஃபாகின்ஸ், தன்னுடைய கையாளான நான்சி என்ற பெண்ணை அனுப்பித் தந்திரமாக ஆலிவரை மறுபடி கும்பலுக்குள் கொண்டு வந்து விடுகிறான். வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் முயற்சி ஒன்றில் ஆலிவர் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப் படுகிறான். எதிர்பாராத விதமாக அந்த முயற்சி தோற்றுவிடுகிறது, ஆலிவர் சுடப்படுகிறான். அந்த வீட்டில் இருப்பவர்களால், 
ஆலிவர் காப்பாற்றப் பட்டு, அவர்களுடைய அரவணைப்பும் கிடைக்கிறது.

இவனை மறுபடி கும்பலுக்குள் சிக்க வைத்த நான்சி, இவன் மீது இரக்கம் கொள்கிறாள். ஆலிவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தவிக்கிறாள். அதே கும்பலில் இருக்கும் இவளது காதலன் சைக்ஸ் எதிராக இருக்கிறான். திருட்டுக் கும்பலுக்குள்  மோன்க்ஸ் என்ற புது நபர் வந்து சேர்கிறான். ஆலிவரைத் தீர்த்துக் காட்டுவதில் அவன்  அதிக அக்கறை காட்டுகிறான். தொடர்ந்து நிகழும் மோதல்களில் சைக்ஸ் தன் காதலி நான்சியைக் கொன்று விட்டு, தப்பியோட முயலும்போது தானும் கொல்லப் படுகிறான்.

மோன்க்ஸ் ஏன் ஆலிவரைத் தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறான் என்ற மர்மமும் உடைகிறது. அவன் ஆலிவருக்கு சகோதரன் முறையானவன்.  ஆலிவர் ஒரு பணக்காரனின் வாரிசு என்றெல்லாம் தெரிய வருகிறது. ஃபாகின்ஸ் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறது. அப்புறம், பிரிந்திருந்த உறவுகள் எல்லாம் சேர சுபம் சுபமே என்று கதை முடிகிறது.

புத்தக விமரிசனம் என்று முழுக்கதையுமே சொன்னால் எப்படி என்று கேட்கிறீர்களா?

இங்கே கதையில்  பெரிதாக ஒன்றுமே இல்லை.தமிழில்அனாதை ஆனந்தன் என்ற பெயரில் ஏவிஎம் தயாரிப்பில்,  ஏவிஎம் ராஜன், ஜெயலலிதா, மாஸ்டர் சேகர் நடித்து, இதே கதை படமாகவும் வந்தது. இப்போது சொன்ன அவுட்லைனை வைத்து படமாக வந்திருந்தாலும், முக்கியமான ஒன்று மிஸ்ஸிங்! அது தான், எழுத்தாளன், தான் வாழ்ந்த காலத்தை எழுத்தில் பிரதிபலித்துக் காட்டியிருந்த விஷயங்கள்!  அதை விட்டு விட்டு படமாக எடுத்தபோது, அங்கே எதுவுமே இல்லை!

எழுத்தில் தெரியும் ஜீவனை, வாசிப்பின் வழியாக உணர முடிவது போல, மாற்று ஊடகமாகப் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடுவதுமில்லை. முக்கியமான காரணமாக எனக்குப் படுவது என்னவென்றால் மாற்று ஊடகத்தில் கொண்டு வரும்போது, எழுத்தின் ஜீவனைப் புரிந்துகொண்டு சொல்ல இங்கே எவரும் முனைவதில்லை என்பது தான்!

கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தீர்களானால், ஏழாவது உலகம் கதை, (இன்னமும் படிக்கவில்லை) நான் கடவுள் படம் (பார்த்தாயிற்று) இவற்றில் பேசப்படும் பிச்சை எடுப்பவர்களின் நதி மூலம் இங்கே ஆலிவர் ட்விஸ்ட் கதையில் ஃபாகின்ஸ் கும்பலை வைத்து ஆரம்பிப்பதையுமே பார்க்க முடியும். இந்த அவலங்கள்,  பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை அடிமைப் படுத்தியவுடன் செய்த முதல் காரியம், கிராமங்கள் அழிக்கப் பட்டு, மக்கள் நகர்ப்புரங்களுக்குக் கூலிகளாக விரட்டப் பட்டதில் இருந்து ஆரம்பித்தது தான்! அதற்கு  முன்னால் இத்தகைய அவலங்கள்  இந்திய சமூகத்தில் இருந்ததே இல்லை! இந்திய கிராமப் பொருளாதாரம், சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரமாக, பகிர்ந்து கொள்கிற தன்மையில் இருந்தது, அங்கும் இங்குமாக சில கொடூரமானவர்கள் இருந்தாலும், ஒட்டு மொத்த சமுதாயமும் ஒரு தர்மகர்த்தா இயல்பில், எளியவர்களையும் அரவணைத்துச் சென்றதைக் கொஞ்சம் வரலாறு படித்தவர்களுமே தேடித் தெரிந்து கொள்ள முடிகிற விஷயம். இன்றைக்குக் குறிவைத்துத் தாக்கப் படுகிற இந்தியக் கலாசாரம், எளியவர்களுக்கு ஆதரவாகவே இருந்தது.

ஆலிவர் ட்விஸ்ட்! நூற்றெண்பது வருடங்களுக்கு முன்னால் எழுதிய கதை தான்! இன்றைக்கும் கூட, சமூகம், பொருளாதாரம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு சொன்ன படைப்பாகவும் இருப்பது தான் இதன் சிறப்பு.
நாவலை முழுதாகப் படித்துப் பாருங்கள்! எழுத்தின் ஜீவனை அங்கே தான் கண்டு கொள்ள முடியும்!
 

இது 2010 இல் இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதியதன் மீள்பதிவு 

Tuesday, April 2, 2019

புத்தக வரவு!

புத்தகங்கள், வாசிப்பு அனுபவம் பற்றிப் பேசுவதற்காக ஆரம்பித்த வலைப்பக்கங்கள் இவை. சமீபத்தில் நானாகப் பார்த்து வாங்கிய புத்தகங்கள் என்று எதுவுமில்லை. மகன் ஆர்டர் கொடுத்து மதுரைக்கு நேற்று வந்து சேர்ந்த மூன்று புத்தகங்களில் ஒன்று இது.

    
மூன்றுமாகச் சேர்த்து எடுத்த படம் இது.


முதல் புத்தகம் இந்தியர்களாகிய நாம் எங்கிருந்து வந்தோம் என்று ஒரு ஆராய்ச்சி. கொஞ்சம் படிக்க சுவாரஸ்யமான் அக்கப்போராகத் தானிருக்கும் என்று தோன்றுகிறது.

சு. வெங்கடேசன் எழுத்தையெல்லாம் படிக்கிற அளவுக்கு நான் அத்தனை வெட்டியில்லை! ஜெமோ எழுதிய காவியம் கொற்றவை முதல் ஐந்துபக்கங்களுக்கு மேல் தாண்ட முடியாமல் கண்ணெதிரே கிடக்கிறது. எடுத்துப்படிக்க ஏனோ தோன்ற மாட்டேன் என்கிறது.       


Wednesday, January 23, 2019

வாசிப்பதில் காதலும்! கிறுக்கு மாய்க்கான்களும் !

 என்றொரு பதிவர்! முந்தைய பதிவில் அவருடைய பின்னூட்டம் ஒன்றிருந்ததைத் தவிர வேறு பரிச்சயம் இருந்ததில்லை! புத்தகங்கள் காமிக்ஸ் சினிமா என்று நிறைய எழுதியிருக்கிறார். 2015க்கு பின்னால் எதுவும் எழுதக்காணோம் என்று இங்கே எழுதும்போதே, இந்த மெய் நிகர் உலகத்தில் ,  யார் யாரோடெல்லாம் தொடர்பிலிருந்தோம், சிறு பிள்ளைகள் போலே பின்னூட்டங்களில் பேசித் திரிந்தோம் என்பதெல்லாம் மனக்கண் நிழலாட்டம் காண்பிக்கிறது! புத்தகங்கள், வாசிப்பு, என்பது சேர்கிற போது எங்கெங்கோ இருப்பவரும் சொந்தங்கள் ஆகி விடுகிற ஒரு அனுபவம்! அப்படி அவர் எழுதிய ஒரு புத்தக அறிமுகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா?



Imperium

சுருக்கெழுத்து என்பது குறிந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு காலத்தில் காரியதரிசிகளிற்கும், பத்திரிகையாளர்களிற்கும் தட்டச்சுக் கலையுடன் சுருக்கெழுத்துக் கலையும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. Robert Harris ன் நாவலான IMPERIUM ஐ படிக்கும்வரை சுருக்கெழுத்தை சீரான முறையில் உபயோகிப்பதை கண்டுபிடித்தவர் யார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

இம்பிரியம் என்பது அதிகாரம் என்பதை குறிக்கும் சொல்லாகும். பண்டைய ரோமில் இதுவே உச்ச அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக இருந்தது. சாதாரண செனெட்டராக இருந்து பின் இம்பிரியம் எனும் உச்ச அதிகாரத்தை கொண்ட Consul பதவியை அடைவது வரை பிரபல பேச்சாளரும், வழக்காடுனருமான Cicero வின் கதையை நாவல் கொண்டிருக்கிறது.

நாவலின் கதை சொல்லியாக Tiro. சிசோரோவின் அடிமை + காரியதரிசி. இவரே சுருக்கெழுத்து முறையையும் அதை தகுந்த விதத்தில் உபயோக்கிக்கும் விதத்தையும் கண்டுபிடித்ததாக நாவல் கூறுகிறது. Tironian Notes என அழைக்கப்படும் குறியீடுகளை இவர் உருவாக்கி சிசோரோவின் பேச்சுக்களை சுருக்கெழுத்து முறையில் பிரதி செய்தார்.

நாவலின் ஆச்சர்யமான அம்சம், இன்று அரசியலில் நாம் எதை கேவலம் எனக் கருதுகிறோமோ அது அன்று இருந்திருக்கிறது என்பதுதான். கொடும்பாவியில் இருந்து மேடைப்பேச்சு வரை, வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது முதல், ரவுடித்தனம் வரை என ஏறக்குறைய எல்லாமே அன்றைய ரோம் அரசியலில் இருந்திருக்கிறது.

காலங்கள் மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும், மனிதகுலம் முன்னேற்றம் கண்டாலும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியும், அதை சூழ உள்ள தந்திரங்களும், அதிகாரத்தை அடைவதற்காக ஒருவர் செய்யக்கூடிய செயல்களும் அதிக மாற்றத்தை கண்டிடவில்லை. காலம் எனும் மாற்றத்துடன் அதிகாரத்திற்கான வேட்கை ஒரு மாறிலியாக இருந்து கொண்டே இருக்கிறது.

எவ்வளவுதான் ஒரு மனிதன் நேர்மையான லட்சியங்களுடன் தன் அரசியல் பயணங்களை ஆரம்பித்தாலும் அதிகாரத்தை வெல்லுவதற்கு அவன் சமரசங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் நாவல் தெளிவாக கூறுகிறது. ஊடவே கதை சொல்லியும் அடிமையுமான டைரோவின் வாழ்வையும் அது சிறிய சித்திரமாக வரைகிறது.

ராபார்ட் ஹாரிஸின் எழுத்துக்கள் வெகுஜன வாசிப்பிற்குரியவை. ஆனால் மிக சிறப்பான எழுத்துநடையை அவர் கொண்டிருக்கிறார். அவர் கதை சொல்லலில் ஆடம்பர அலங்காரங்கள் இல்லை. எடுத்த விடயத்திற்கு நேரே வாசகனை இட்டு செல்லும் எழுத்துக்கள் அவை.

பண்டைய ரோமின் அரசியல் சதுரங்க ஆட்டம் குறித்த ஒரு தெளிவான, எளிதான பார்வையை முன்வைக்கும் நாவல், பொம்பெய், சீசர் , ஹார்டென்சியஸ் போன்ற புகழ் பெற்ற வரலாற்று பாத்திரங்கள் மீதான ஒருவரின் பார்வையையும் மாற்றம் கொள்ள வைக்கிறது

*******
ந்தப்பதிவில் அவர் இரண்டு புத்தகங்களைப்பற்றி எழுதியிருப்பதில் முதல் புத்தக்த்தைப் பற்றிய குறிப்பு தான் மேலே நீங்கள் வாசித்தது.

கால ஓட்டத்தில் இவரைப் போல எழுத்தை நேசித்த எத்தனை பதிவர்களுடைய தொடர்பை இழந்து விட்டோம் என்பது திரும்பிப் பார்க்கும்போது நிறையவே  அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது!  

ணையத்தில் செய்திகளைப் பார்க்கும் போது வேறு விதமாக! காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்கள் செத்துப் போன இந்திரா திரும்பவும் வந்துவிட்டதாக உத்தரப் பிரதேசத்தில் போஸ்டர் அடித்துக் கலக்கிக் கொண்டிருப்பதாக!


134 வருட பாரம்பரியம் உள்ளதாகத் தப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிற ஒரு கட்சி, கடந்தகாலத் தவறுகளில் இருந்து எந்தவொரு படிப்பினையும் பெறவில்லை என்பதும், இன்னொருமுறை கடுமையான படிப்பினை புகட்டவேண்டிய அவசியம் எழுந்திருப்பதையும் இங்கு சொல்ல வேண்டியதாக இருக்கிறது!   

       

Tuesday, January 22, 2019

எழுத்து, வாசிப்பு என்பது வெறும் வார்த்தைகளின் அடுக்கு மட்டும் தானா?

எழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம் என்ற சிறுகுறிப்போடு எழுதிவரும் பூ வனம் பதிவரும் எழுத்தாளருமான ஜீவி முந்தைய பதிவில் எழுத்து சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் கதையை யாரேனும் அறிந்திருப்பார்களா என்று பின்னூட்டத்தில் இப்படி ஆதங்கப்பட்டிருந்தார். 
பொங்கல் என்றாலே ஏறு தழுவுதல் என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். அதன் பிரதிபலிப்பு புத்தகக் கண்காட்சியில் இருக்க வேண்டாமா?.. சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. தெரிந்தாலல்லவா வாங்குவதற்கு?.. ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் தான்
எளிதில் வாங்குவோரை கவரும் என்பதனை இந்தப் பதிப்பகங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புத்தகங்களின் உள்ளடக்கத்தைக் குறித்து அத்தனை அலட்சியம்!
   
இங்கே ஒன்பது வருடங்களுக்கு முன்னால் எழுதியதை மீண்டும் நினைத்துப் பார்க்க வைத்துவிட்டதோ? 

எழுத்து! இந்தப் பதிவைப் படித்த போது, எது எழுத்து, எழுத்து என்ன என்னவெல்லாம்  செய்யக் கூடியது என்ற சிந்தனைகள் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தன. புத்தகக் கண்காட்சியைப் பற்றிய முந்தைய பதிவில்  ஒரு சக பதிவர் நான் சொன்னதைப் பற்றி கொஞ்சம் வருத்தப் பட்டிருந்ததுமே நினைவுக்கு வந்தது. தி.ஜானகிராமனை வாசிக்காதவர் வாசகரே இல்லை என்ற தொனியில் நான் எழுதியிருந்ததாக,  வலைப்பதிவுகளில் கிறுக்கிக் கொண்டிருப்பவர்களில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் கொண்டாடப்படும் எழுத்தாளர் எவரும் வரப்போவதில்லை என்று நான் நினைப்பது போல ரொம்பவுமே வருத்தப் பட்டிருந்தார்.

உண்மை என்னவென்றால், தி.ஜானகிராமனை நான் ஒரு வெறியோடு வாசித்திருக்கிறேன் என்பது எந்த அளவு உண்மையோ, அதைவிட வெறித்தனமாக நா.பார்த்தசாரதி, அகிலன், பி.வி.ஆர், ரா.கி.ரங்கராஜன், கண்ணதாசன், மு.மேத்தா, வைரமுத்து, வல்லிக் கண்ணன், அசோகமித்திரன், மௌனி, லா.ச.ராமாமிருதம், இப்படி  இன்னும் நிறைய எழுத்தாளர்களை வாசித்த காலம் உண்டு. நாடோடி என்ற பெயரில் நகைச்சுவையாக எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளரை நண்பர் அறிந்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது!

கல்கி, புதுமைப் பித்தன்,தேவன் முதற்கொண்டு,பல எழுத்தாளர்களுடைய படைப்புக்களை, அவர்களுக்குப் பிந்தைய தலைமுறையில் பிறந்தவன் என்றாலுமே கூட  தேடிப்பிடித்துப் படித்த அனுபவமும், அலுப்பூட்டுவதாக இருந்த போதிலுமே கூட, வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய மர்ம நாவல்களைக் கூட விடாமல் படித்த காலம் ஒன்று இருந்தது. ஆக, நபரை வைத்து அல்ல என்னுடைய மதிப்பீடு! அவர்களுடைய எழுத்து எனக்குள் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியது என்பது ஒன்றே, ஒரு புத்தகத்தை அல்லது எழுத்தாளரை மதிப்பிட, இன்றைக்கும் நான் பயன்படுத்துகிற ஒரே அளவு கோலாக இருந்துவருகிறது. இன்றைக்கு ஜெயமோகன் கூட அம்மா வந்தாள் கதையை அவருக்குத் தெரிகிற  கோணத்தில் அவரது வலைப்பக்கங்களில் விமரிசித்திருக்கிறார். ஜெயமோகன் விமரிசனம் சரியா தவறா என்ற கேள்விக்குள்ளேயே நான் போகப்போவதில்லை. ஜெயமோகனை எனக்குப் பிடிக்கிறது என்பதற்காக ஆதரிப்பதோ, அல்லது பிடிக்காது என்பதால் கல்லெறியும் ரகத்தையோ சேர்ந்தவனில்லை.

எந்த ஒரு இருவரும் ஒரே வானவில்லைப் பார்க்க முடியாது என்கிறது நவீன அறிவியல். அதே மாதிரித் தான், சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ, அந்த அளவுக்குள் நம்முடைய பார்வையும் குறுகிப் போய் விடுகிறது. அதே மாதிரித்தான், எழுத்தும்! வார்த்தைகளில் இல்லை உண்மையான ஜாலம்! எழுத்து, வாசிப்பு என்பது வெறும் வார்த்தைகளின் அடுக்கு மட்டும்அல்ல. 

தில்லானா மோகனாம்பாள் என்றவுடன் சிவாஜி கணேசனும், பத்மினிப் பாட்டியும் தான் நினைவுக்கு வருகிறார்கள்  இல்லையா? 

எனக்கோ, கொத்தமங்கலம் சுப்பு, எழுத்தில் வடித்த வடிவம் மட்டும் தான் முன்னுக்கு வந்து நிற்கிறது!தஞ்சை மண்ணின் இசை வேளாளர்களை, அந்த மண்ணுக்கே உரிய இசை ஞானத்தை அறிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பாகவே தான் தெரிகிறது. ராவ் பகதூர் சிங்காரமும், இன்னும் பிற கதை வடிவங்களும் கூட கொத்தமங்கலம் சுப்புவின் எழுத்தாளுமையை  நினைவுபடுத்திக் கொண்டிருப்பதாகவே இன்றைக்கும் படுகிறது. 

கதைகளில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் உயிரோடு வந்து என்னோடு பேசுவதாகவே, ஒவ்வொருமுறையும்  இவர்களது எழுத்தைப் படிக்கும் போது உணர்கிறேன். அந்த மாதிரித் தான், மோகமுள் பாபுவாகட்டும், அன்பே ஆரமுதே நாயகன் அனந்தசாமியாகட்டும்,  அம்மா வந்தாள் அப்புவாகட்டும்,  இந்தக் கதைகளில் வரும் சின்னச் சின்னப் பாத்திரங்களைக் கூட, என்னைச் சுற்றியுள்ள மனிதர்களில் பார்க்க முடிவது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!

திரு ஜீவி, பூவனம் என்ற தனது வலைப்பதிவில் எழுத்தைப் பற்றி எழுதியிருந்த ஒரு சிறு பதிவு, வரிசையாக எனக்குள் ஒரு தொடர் சிந்தனையாக ஓட  ஆரம்பித்தது.அவருடைய பதிவில் பின்னூட்டமாக 

"உணர்வுகள் எல்லோருக்கும் பொது என்றாலும் 
உணர்வதில் பலவிதமான படித்தரம்!
உணர்ந்ததுபோதாதென்று அதை நளினமாய் பிறருக்கும் 
வெளிப்படுத்துவதே எழுத்து!அதுவே அதன் தனிச் சிறப்பு!

எழுதுவதனால் கவிஞனோ எழுத்தாளனோ பிறப்பதில்லை!
அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டு அதனைப் பக்குவமாய்ச் சொல்ல 
அதைப் படிப்பவர் தங்கள் சொந்த அநுபவமாய் அங்கே அறியும்போது 
எழுத்தும் பிறக்கிறது! எழுத்தாளன், கவிஞனும் கூடவே பிறக்கிறான்!

அனுபவமே எழுத்து! அந்த எழுத்தே சுகமான அனுபவம்! வாசிக்கும் அனுபவம்! 

வீணையும் மீட்டும் விரல்களும் கூடும்போது பிறக்கும் இசை போல
எழுத்தும் வாசிப்பும் ஒருசேரக் கூடிடும்போது அங்கே விளைவது அற்புதம்! 
அதியற்புதம்!அதிசயம்!"
இப்படி எழுதிவிட்டுத் திரும்பிப் பார்த்தால், கிட்டத்தட்ட இதே நிலையை திரு R P ராஜனாயஹம் தன்னுடைய வலைப்பதிவில்சொல்லியிருக்கிறார்!

"1951வது ஆண்டில் அப்படி அந்த விளையாட்டை விளையாடிய ஒரு நாள் வில்லியம் பர்ரோஸ் குறி பார்த்து ஜோன் வோல்மரின் இரு கண்ணுக்கு நடுவே சுட்டு விட்டான். ஜோன் வோல்மரின் மரணம் நிகழ்த்தப்பட்டது இவ்விதமே.

எட்டு வருடம் கழிந்த பின் வில்லியம் பர்ரோஸ் எழுதிய நாவல் 'Naked Lunch' .

ஹென்றி மில்லர் உணர்ச்சிப்பூர்வமாக ' அமெரிக்காவின் என் காலத்து ஒரே எழுத்தாளன் வில்லியம் பர்ரோஸ் தான்!' என்று சொல்லும்படியானது.

வில்லியம் பர்ரோஸ் சொன்னான் :"I would have never become a writer but for Joan's Death."

எழுத்து என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்?


  

6 comments:

  1. கதைகளில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் உயிரோடு வந்து என்னோடு பேசுவதாகவே, ஒவ்வொருமுறையும் இவர்களது எழுத்தைப் படிக்கும் போது உணர்கிறேன். அந்த மாதிரித் தான், மோகமுள் பாபுவாகட்டும், அன்பே ஆரமுதே நாயகன் அனந்தசாமியாகட்டும், அம்மா வந்தாள் அப்புவாகட்டும், இந்தக் கதைகளில் வரும் சின்னச் சின்னப் பாத்திரங்களைக் கூட, என்னைச் சுற்றியுள்ள மனிதர்களில் பார்க்க முடிவது கூட ஒரு காரணமாக இருக்கலாம்//வெகு உண்மையான வார்த்தைகள்.
    தி.ஜா,
    திரு .ராஜநாராயணன்,ஜயகாந்தன்,இன்னும் ராஜம் கிருஷ்ணன் ,அநுத்தமா
    வித விதமான எழுத்துகள் .ஒவ்வொன்றும் ஒரு அனுபவம்.
    அனந்தசாமியும் ருக்குவும் ,டொக்கியும்,சந்திராவும், இன்னும் அம்மாவந்தாளின் அம்மாவும், அவள் மகனும்,

    அவனை வளர்க்கும் வேதபாடசாலை,காவிரிக்கரை, இந்து,அந்தப் பாட்டி.
    ஒரு, கதா பாத்திரத்தை மறக்கமுடியுமா.??
    நன்றி.
    ReplyDelete
  2. யாஞவல்கியர் தனது மனைவி மைத்ரேயி உபதேசம் வேண்டி நின்றபோது சொன்னது எழுத்து, வாசிப்புக்கும் பொருந்தும் அம்மா!

    ஒருவன் தன்னை, தன்னுடைய மனைவி மக்களுள் கானுவதாலேயே, தன்பொருட்டே அவர்களை நேசிக்கிறான் என்கிறது அவரது உபதேசம். அதே மாதிரி, ஒரு கதையாக இருந்தால் கூட, அதில் வரும் பாத்திரங்களோடு, அந்த மொழியோடு தன்னை, தன்னுடைய அனுபவங்களை ஒன்றுபடுத்திக் கொள்ள முடியும் போது ஏற்படும் லயிப்பு, அதுவே வாசிக்கும் அனுபவமாகவும்விரிகிறது.

    அன்பே ஆரமுதே புதினத்தில், நீங்கள் சொல்லும் பிரதான பாத்திரங்கள் மட்டுமே அல்ல, சினிமா நடிகனாக டாம்பீகத்தைக் காட்டிக் கொண்டு அறிமுகமாகும் அருண், அனவது மனைவி, உடல் குறைபாட்டோடு பிறந்த அவர்கள் குழந்தை, இப்படி எந்தக் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டாலும் நினைவில் தங்குகிற மாதிரி, அதே மாதிரி ஆனந்தசாமி தங்கியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரியாக வரும்கிழவி இப்படி ஒவ்வொரு பாத்திரமுமே முழுமையாகச் செதுக்கப்பட்டிருப்பதும், அவர்களில் நாம் அன்றாடம் பார்க்கும் பழகிய மனிதர்களாகவே நம் முன் உயிரோடு கொண்டுவந்து நிறுத்துகிற வல்லமையைத் தான் எழுத்து என்றுசொல்கிறேன்!i
    ReplyDelete
  3. நண்பரே,

    சிறப்பான பதிவு. வாசகன் தனக்கென எல்லைகளை கொண்டிருந்தாலும் அவனது வாசிப்பனுபவம் அவன் எல்லைகளை பெரிதுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

    படைப்பு குறித்த விமர்சனம் என்பது, நான் விரும்பிய புத்தகங்கள் மீது நான் கொண்ட கருத்தை பெரிதும் மாற்ற உதவியதில்லை. என் பார்வை வேறாகவும், விமர்சகரின் பார்வை வேறாகவும் இருக்கிறது. அவ்விமர்சகர் யாராகவிருப்பினும் ஒரு நாவல் எனக்கு தந்த வாசிப்பனுபவத்தை அவர் விமர்சனம் தந்து விடுவதில்லை. விமர்சனங்கள் வழியாக பல பார்வைகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கிறது என்பதால் அதுவும் தேவையானதே.
    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி!

    ஒரு வாசகனாக எனக்கென்று இது தான் எல்லை என்று எதையும் எல்லை கட்டி வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்ததில்லை!

    விமரிசனங்களை, ஒரு புத்தகத்தைக் குறித்த அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை! தான் படித்ததை, தன்னுடைய அனுபவமாகப் பகிர்ந்துகொள்கிற நிலையில், வாசகன் தான் படித்ததை மட்டுமல்ல, தன்னையுமே ங்கே வெளிப்படுத்திக் கொள்கிற அனுபவமாக ஆகிவிடுகிறது. இங்கே ஒரு வலைப்பதிவில், எழுத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற ஒரு அனுபவத்தைப் படித்தபோது, ஏற்பட்டஉணர்வுகள் இவை!
    ReplyDelete
  5. எழுத்து எண்ணங்களின் தொகுப்பு.
    எண்ணங்கள் மனதை பாதிக்கும் விஷயங்களால் உருவாவது.
    நீங்கள் சொல்லியுள்ள எழுத்தாளர்களை நானும் படித்திருக்கிறேன். நன்றாகச்சொல்லியுள்ளீர்கள். அடுத்தவர்களுடைய விமர்சனங்களால், அல்லது அறிமுகத்தால் புதிய எழுத்துக்கள் அறிமுகமானால் சந்தோஷம். அவரவர் ரசனை அவரவர் மனதைப் பொறுத்து. எனக்குப் பிடித்தது மற்றவர்க்குப் பிடிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. படித்தவற்றை படமாகப் பார்க்கும்போது ஒன்ற முடியாது. படிக்கும்போது மனதில் உருவாகும் பிம்பங்கள், திரையில் வேறு நடிகர்கள் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது ஒத்துப் போவதில்லை. கதை படிக்காமல் பார்த்தால் ஒட்டலாம்.உணர்ந்தவைகளை உணர்வு மாறாமல் சொல்லத் தெரிந்தாலே போதும்
    ReplyDelete
  6. வாருங்கள் ஸ்ரீராம்!

    கொத்தமங்கலம் சுப்புவின் இரண்டு புதினங்கள் திரைப்படமாக சிவாஜி நடிப்பில், ஒன்று தில்லானா மோகனாம்பாள், இன்னொன்று ராவ் பகதூர் சிங்காரம் விளையாட்டுப் பிள்ளை என்ற பெயரில் வந்தன. திரைக்கதை கதையின் மைய நீரோட்டத்தை விட்டு விலகியிருந்தது கதையைப் படித்துப் பார்த்தால் தான் புரிந்துகொள்ள முடியும்.

    கதையில் மைய நீரோட்டம், திரைக்கதையில் எந்த அளவுக்கு விகாரப் படுத்தப் பட முடியும் என்பதற்கு இந்த இரண்டு படங்களே போதும்.

    அதே மாதிரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில், துப்பறியும் சாம்பு கதையில் இருந்து சில பகுதிகளை எடுத்து நாகேஷை வைத்துத் தனியாகக் காமெடி ட்ராக் பண்ணியிருந்ததற்கும், நாவலைப் படிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருந்தது என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

    தொலைக் காட்சியில், ஒய் ஜி மகேந்திரா துப்பறியும் சாம்புவாக வந்ததுமே கூட அவ்வளவாக எடுபடவில்லை என்பதையும் இந்த நேரத்தில் சொல்லத்தோன்றுகிறது.

    இது கதையைப் படித்திருந்த என்னுடைய கருத்து மட்டுமில்லை! இந்தக் கதைகளைப் படிக்காதவர்களே கூட சொன்னதும் கூட!
    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)