கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும்! வீட்டிலேயே இரு என்று அரசின் மிகக்கனிவான வேண்டுகோளை ஏற்று வீட்டிலேயே முடங்கி கிடக்கிற காலம் இது! பொழுதைக் கடத்துவது என்பது வரவர மிகவும் கடினமாகிக் கொண்டே வருவதில் டிவி பார்ப்பது முதலில் கசந்து அதன்பின் நெட்பிலிக்ஸ் முதலானவையும் கசந்ததில் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று என்னிடம் யாரும் வந்து கேட்கவில்லைதான்! அவர்களுக்கும் அதே மாதிரிப் பிரச்சினை தான் போல என்று முடிவு செய்துகொள்ளலாமா என்பது கூட சரியாகத் தெரியவில்லை! லோகோ பின்ன ருசி! அவரவர் அவஸ்தை அவரவருக்கு என்று வேறு சொல்லியிருக்கிறார்களே!
வலதுபக்கம் சொல்லியிருக்கிறமாதிரி முதல் இரண்டுவாரங்கள் ஓடிப்போயின. அதற்காக Money Heist அல்லது Narcos மாதிரிக்கு காவியங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? காய்ச்சல் கண்டவனுக்கு வாய்கசந்துபோல வெப் சீரீஸ் பார்ப்பதும் ஆகிவிட்டது . இருக்கவே இருக்கிறது புத்தக வாசிப்பு என்று ஆரம்பித்தால் நம்முடைய ராசிக்கு ஹரிகேசநல்லூர்க்காரர் ஜோசியம் சொல்கிற மாதிரி ஆகிவிடும் என்று கண்டேனா?
டாவின்சி கோட்! தமிழில் இருக்கிறது வாசிக்கிறாயா என்று நண்பர் பரம கருணையோடு கொடுத்த புத்தகம்! நண்பருக்கு என்மீது தீராதவஞ்சம் எதோ இருக்கப்போய், வசமாகத் தீர்த்துக் கொண்டு விட்ட மாதிரி அப்படி ஒரு கரடு முரடான மொழிபெயர்ப்பு. மேலே பார்த்தீர்களானால் இரா செந்தில், பெரு முருகன் என்று இரண்டுபேர் கூட்டாக முழிபெயர்த்திருக்கிறார்கள். டான் ப்ரவுன் அல்லது அவருடைய பதிப்பாளரிடமிருந்து முறையான அனுமதி பெற்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதான அறிகுறி எதுவும் சொல்லப்படவில்லை. 700+ பக்கங்கள் தானே என்று எடுத்துக் கொண்டதில், என்னுடைய பொறுமை அளவுக்கு மீறியே சோதிக்கப்பட்டதுதான் மிச்சம்.
மதம் மதம் சார்ந்த குறியீடுகள் என்று பேசவரும் அயல்மொழிப் புத்தகங்களை அவை ரொம்ப பிரபலம் என்பதாலேயே மொழிபெயர்த்து விடுவதில் உள்ள முதல்தடையே வாசிப்பவருக்கு அதைப்பற்றிய பரிச்சயம் ஏதோ கொஞ்சம் இருக்கும் என்று கற்பனை செய்துகொள்வதுதான்! அதேபோல மொழி பெயர்த்தவர்களுக்காவது அப்படிப் பரிச்சயம் இருந்ததா என்றால் அதுவும் படுசுத்தம். ஆக ஆங்கிலத்தில் ஏற்கெனெவே படித்து படமாகவும் பார்த்த ஒரு த்ரில்லர் ரக நாவலைத் தமிழில் படித்த அனுபவம் ஒரு சொத்தைக்கடலையைக் கடித்து நேரமானபின்னாலும்கூட ஒரு அடிக்கசப்பு இருக்குமே அதைவிடக் கொடுமையானது.
தமிழில் டாவின்சி கோட் படித்து முடித்ததில் ஏற்பட்ட தைரியம், மகனுடைய புத்தக சேகரத்தில் இங்கே வந்து சேர்ந்தவற்றில் ஜெயமோகனுடைய விஷ்ணுபுரம் நாவலை நேற்றைக்குப் படிக்க எடுத்துக் கொள்கிற அளவுக்கு நெஞ்சுரத்தைக் கொடுத்திருக்கிறது.
கொரோனா சோதனைக்காலத்தை வெல்ல ஜெயமோகனை வாசிப்பது என்றாகியிருக்கிறதே, அது ஒன்று போதாதா? மீண்டும் சந்திப்போம்.