Tuesday, March 31, 2020

#சீனாவைரஸ் கொஞ்சம் புதிய தகவல்கள்! Blogger சங்கடங்கள்!


சேகர் குப்தா இந்த 24 நிமிட வீடியோவில் என்னதான் சொல்ல வருகிறார்? நிஜாமுதீன் தர்காவில் கூடிய கூட்டமே இந்தியாவில் கொரோனா பரவுவதற்குக் காரணமாக இருந்தது என்பது இங்கே அரசல்புரசலாக எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்!நம்மூர் ரங்கராஜ் பாண்டே கூட ஒரு ஒன்றரை மணிநேர வீடியோவில் இதைப்பற்றிப் பேசியிருக்கிறார் என்பதை அப்புறம்தான் பார்த்தேன்.

  

உலகின் பெரும்பாலான நாடுகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் சீனாவின் அன்பளிப்புத்தான் என்று கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்கள் வெளியே கசிய ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்கர்கள்  சீனா வைரஸ், வூஹான் வைரஸ் என்று சொல்வதை சீனா கடுமையாக எதிர்த்தாலும், சீனாவின் கைவரிசை இந்த வைரஸ் தொற்றின் பின்னாலிருப்பதை மறைக்க முடியவில்லை.  கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த 28 நிமிட வீடியோவில் கொரோனா விபரீதம் எப்படி சீனாவிலிருந்து பரவியது என்பதைத் தொகுத்துச் சொல்கிறார். கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள்.




//Blogger இல் பதிவெழுதுவதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிற மாதிரித் தெரிகிறது. கொஞ்சம் தடுமாற வேண்டியிருக்கிறது. நேற்றுவரை படங்கள், யூட்யூப் வீடியோக்களை சேர்க்க முடிந்த மாதிரி, இன்று சேர்க்க முடியவில்லை. // இப்படி முதலில் சொல்லியிருந்ததில் ஒரு சின்னத்திருத்தம், எப்படி என்பதைக் கற்றுக்  கொண்டாயிற்று 
 
மாற்றங்கள் நிரந்தரமானவை. தவிர்க்கமுடியாததையும் கூட! கற்றுக்கொள்ளத் தவறுகிறவர்கள், தனிமனிதர்களோ, ஒரு சமுதாயமோ, மதப்பிரிவோ எதுவானாலும் காலாவதியாகிப் போய்விட வேண்டியதுதான் என்பதை நினைவுபடுத்துகிற  மாதிரி இன்றைய வீடியோ பகிர்வுகள் இருக்கின்றன.     

மீண்டும் சந்திப்போம்.  

    

 
 

Sunday, March 29, 2020

புதுமைப்பித்தன் சிறுகதைகள்: குற்றவாளி யார்?

தமிழ் எழுத்தாளர்களில் கொண்டாடப்பட வேண்டியவர் என்று ஒரு லிஸ்ட் எடுத்தோமானால், அதில் முதல் ஐந்து இடங்களுக்குள் புதுமைப்பித்தன் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. மிக அருமையான எழுத்தாளர், ஆனாலும் கல்கிக்கு கிடைத்த புகழும் வெளிச்சமும்  புதுமைப்பித்தனுக்குக் கிடைக்கவே இல்லை என்பது அன்றைய தமிழ் வாசகர்களுடைய ரசனை மட்டம் கொஞ்சம் குறைவுதான் என்பதைக் காட்டியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

     
பல வருடங்களுக்கு முன் ஒரு கூகிள் வலைக்குழுமத்தில் நண்பர் ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் கதை சிறுத்தாலும்  என்ற தலைப்பில், சிறுகதை, அதன் வடிவம் குறித்து எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் நானும் பின்னூட்டங்களாக எழுதிக் குழப்பிக் கொண்டிருந்தேன்  கதை எழுதத் தெரியாதவன் வேறென்ன தான் செய்ய முடியும்?

இந்தப் பக்கங்களில் கூட எது நல்ல எழுத்து, ன்ன மாதிரி எழுத்தைக் கொண்டாடுவீர்கள் என்று பல பதிவுகளை எழுதிக் கேள்விகளாகக் கேட்க முடிந்ததே தவிர எங்கள்Blog இல் சில நண்பர்கள் துணிச்சலாக சிறுகதைகள் எழுதி அவர்களும் கேட்டுவாங்கிப் போடும் கதை என்றே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வெளியிடுவதைப்பார்த்தும் கூட ஒரு சிறுகதை எழுதிப்பார்க்கிற தைரியம் இன்னமும் வரவில்லை. சிறுகதையின் வடிவம், இலக்கணம் பிடிபடவில்லையா அல்லது கற்பனை வறட்சியா என்பதை நண்பர்களே முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்! ஆனாலும் ஸ்ரீரங்கம் வி, மோகன ரங்கனுடைய கதை சிறுத்தாலும்...! இழை எழுப்பிய கேள்விகள் இன்னமும்  நினைவில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதன் தாக்கத்தில் புதுமைப் பித்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த கதை இது. நீங்களும் வாசித்துவிட்டு ஒரு நல்ல சிறுகதைக்கான கூறுகள் இதில் என்னென்ன என்று சொல்லுங்களேன்! 

குற்றவாளி  யார்? 

கிரௌன் பிராஸிகியூடர் திவான் பகதூர் அமிர்தலிங்கம் பலே ஆசாமி. கேஸ் விவாதிப்பதில் ரொம்பப் பழக்கம். உட்காரும்பொழுது ஜுரர்களுக்கு ஸ்பஷ்டமாக விளங்கும்படி செய்துவிட்டு உட்கார்ந்தார். அவர் சில வக்கீல்கள் மாதிரி கோர்ட்டின் பச்சாதாபத்தையும், இளகிய ஹ்ருதயத்தையும் எதிர்பார்ப்பவர் அல்ல. கைச் சரக்கும் உணர்ச்சி நாடகமும் இல்லாமல் வெறும் விஷயத்தை மட்டும் விளங்க வைத்துவிட்டு உட்கார்ந்தார்.

விஷயம், விஷயம், விஷயம். இதைத் தவிர அமிர்தலிங்கத்திற்கு வேறு கவலை கிடையாது. விஷயமும் தர்க்கமும் கேஸை வாதிப்பதற்கு இருக்கும்பொழுது சோக நாடகம் போட வேண்டியதில்லை என்பது அவர் துணிபு.

அவர் உட்கார்ந்ததும் எதிர்க்கட்சி வக்கீல் திரு. லக்ஷ்மண பிள்ளை குற்றவாளியின் சார்பாக வாதிப்பதற்கு எழுந்தார். திவான் பகதூர் அமிர்தலிங்கத்திற்குப் புன்சிரிப்பு வந்தது. நம்ப முடியாத கதை. ஜுரர்கள், ஆமாம், அவர்கள் எப்படி நம்புவார்கள்? அவருடைய பிரசங்க மழையைச் சிதற அடித்து மாட்சிமை தங்கிய நீதிபதியின் முன் தமது கட்சியை ஸ்தாபிப்பது கஷ்டமல்ல.

அமிர்தலிங்கம் தொழிலில் பழம் பெருச்சாளியானாலும் இந்தக் கேஸில் விவாதிப்பது அவருக்கு மிகவும் உத்ஸாகமாக இருந்தது. இருந்தாலும் அது மிகவும் சிக்கலான கேஸ். ஒரு மோசமான கிரௌன் பிராஸிக்யூடர் கேஸை ஆபாசமாக நடத்திக் குழப்பி விடலாம்.

குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம். முக்கால்வாசி அவனுக்குத் தூக்குத் தண்டனைதான். ஆமாம் நியாயம் வழங்கப்படாமல் இருக்க முடியுமா? உணர்ச்சியில் பண்பட்ட உள்ளமில்லையாயினும் குற்றவாளியின் மீது சிறிது பச்சாத்தாபம் ஏற்பட்டது. குற்றவாளி அழகன், படிப்பாளி... சகவாச தோஷம். எதிர்க்கட்சி வக்கீலின் பேச்சில் இது மட்டுந்தான் அமிர்தலிங்கம் கவனித்தார். அதன் பிறகு தனது நீண்ட யோசனையில் கோர்ட்டை மறந்தார். 

எதிர்க்கட்சி வக்கீல் லக்ஷ்மண பிள்ளை பேசி முடித்து உட்கார்ந்தார். அமிர்தலிங்கம் மெதுவாகப் பொடியை உறிஞ்சிவிட்டு கோர்ட்டைக் கவனித்தார். 'லன்ச்'சுக்காகக் கோர்ட்டு ஒத்திவைக்கப்பட்டது. திவான் பகதூர் அமிர்தலிங்கம் பக்கத்து வாசல் வழியாக வெளியே செல்லும்பொழுது, தனது வழியைத் தடை செய்துகொண்டு ஒரு வாலிபப் பெண் இருப்பதைக் கண்டார்.

 "உங்களிடம் சற்று பேசலாமா? ஒரு நிமிஷம்" என்றாள். முகம் இளைத்தவள்; கிழிந்த உடைகளைக் கட்டியிருந்தாலும் அவள் நல்ல அழகி என்று கவனித்தார். அவள் மனம் மிகவும் குழம்பியிருப்பது போல் தோன்றியது.

"என் குமாஸ்தாவைப் பாருங்களேன். உங்களிஷ்டப்படி நடக்க முடியாததற்கு வருந்துகிறேன். நீங்களே பாருங்கள் எனக்குக் கொஞ்சமாவது ஒழிவு இருக்கிறதா என்று."

     "ஆமாம் நீங்கள் டிபன் சாப்பிட வேண்டியதுதான்."

     "ஆமாம் டிபன் சாப்பிடாமல் இருக்க முடியுமா?"

அமிர்தலிங்கம் சற்று வெறுப்புடன் பேசினார். திவான் பகதூருக்கும் வயிறு என்று ஒன்றிருக்கிறது என்று யாராவது ஞாபகப்படுத்தலாமா?

     "கொஞ்ச நேரமாவது என்னுடன் பேச முடியாதா?"

     "நீங்கள்தான் பாருங்களேன். சரி - சரி... காரியத்தையாவது சொல்லுங்கள்."

     "இங்கேயா! இந்தக் கூட்டதிலா, சமாசாரம் மிகவும் முக்கியமானது. அதுவும் கொஞ்சம் இரகசியமானது. உங்களைத் தனியாகக் கண்டு பேச முடியுமா?"

     "அது முடியாது."

     இப்படிச் சொன்னாலும் அவர் மனம் சிறிது இளகியது. அவள் முகம், சோகம் தேங்கிய முகம் கவர்ச்சித்தது. என்னவென்று அறிய ஆவல்.

     "கேஸ் முடிந்ததும் எனது அறைக்கு வாருங்கள். அதாவது நீங்கள் சொல்லப்போகும் விஷயம் அவ்வளவு முக்கியமானது, எனது உதவி அவசியம் என்று பட்டால்" என்று சொன்னார்.

     "நீங்கள் மனம் இரங்கியதற்கு நான் என்ன சொல்லுவது. ஆனால் அப்பொழுது நான் உங்களைச் சந்திப்பதில் பிரயோஜனமில்லை." பிறகு மிகவும் தணிந்த குரலில், "கிட்டுவைப் பற்றி" என்றாள். அவள் முகம் சிவந்து வியர்த்தது. எப்படியிருந்தாலும் ஹிந்துப் பெண் அல்லவா? வேறு வழியில்லை.

     திவான் பகதூர் திடுக்கிட்டார். யாரோ நெஞ்சில் சம்மட்டியால் அடித்தது போல் கலங்கினார்.

     "கிட்டுவைப் பற்றி என்ன? நீ யார்?"

     "நான் அவருடைய... மனைவி" என்றாள்; நாணம், சோகம், அவர் பெயரைக் கூறுவதினால் ஏற்படும் ஒரு இன்பம் அலைபோல் எழுந்து மறைந்தது.

     திவான் பகதூருக்குக் கலக்கம் அதிகமாயிற்று. முகமே அதைக் காண்பித்துவிட்டது.

     "கிட்டுவின் மனைவி!"

     அவள் அவருடைய முகத்தை ஆவலுடன், சோகத்தில் பிறந்த ஆவலுடன் கவனித்தாள்.

     "என் பின்னே வா!" என்று சடக்கென்று கூறினார்.

     திவான் பகதூர் அவளைக் கோர்ட்டில் தனக்கென்றிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே சென்றதும் அவளை ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். அவள் உட்காரவில்லை. மூலையில் ஒதுங்கி நின்றாள். திவான் பகதூருக்கு இருக்கும் உள்ள கலக்கம் அவரைப் பரபரப்புடன் அறையைச் சுற்றி நடக்கச் செய்தது.

     "என் மகனுடைய மனைவி என்று கூறுகிறாய். அது உண்மையா? நீ சொல்லுவது நிஜமாக அப்படித்தானா? நிஜமாக உங்களுக்குள் கலியாணம் நடந்ததா?" என்று கேட்டார்.

     "ஆறு மாசத்துக்கு முன்னே ரிஜிஸ்தர் கலியாணம் செய்துகொண்டோம்" என்றாள் அவள். அவள் வார்த்தையில் அவளது களங்கமற்ற உள்ளம் பிரதிபலித்தது.

     "அப்படியா?"

     "நேற்றுவரை அவர் உங்கள் மகன் என்று எனக்குத் தெரியாது."

     "நிஜமாக!" அவர் வார்த்தைகளில் சந்தேகமும் கேலியும் கலந்திருந்தது.

     "இது ரொம்ப - ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. நீ இந்தப் 'பெரிய' சமாசாரத்தைச் சொல்லாவிட்டால் எனக்குத் தெரிந்தே இருக்காது. புது மருமகள் இருக்கிறாள் என்று தெரியாமல் போயிற்று. இந்தச் 'சந்தோஷ' சமாசாரத்தைக் கேட்ட பிறகு காது குளிர்ந்துவிட்டது. இன்னும் என்னமோ சொல்லவேண்டும் என்று வந்தீர்களே! அதைச் சொல்லுங்கள். கேட்கிறதற்குத் தயார். நேரமும் கொஞ்சம். ஆமாம் நான் டிபன் சாப்பிட வேண்டாமா?" என்று கேலியும் குத்தலுமாக மனதிலுள்ள வெறுப்பை எல்லாம் தமது வக்கீல் வேலையுடன் சேர்த்துக் காண்பித்தார். அமிர்தலிங்கத்திற்கு ஒரு புறம் கோபம், ஒரு புறம் வெறுப்பு. "வீட்டு விலாசம் 6, அய்யப்பன் பிள்ளைத் தெரு, மைலாப்பூர்" என்று சொல்லிக்கொண்டே வெளியே செல்லயத்தனித்தார்.

     "போகாதேயுங்கள். கேட்டுவிட்டுப் போங்கள். இந்தக் கேஸிலிருக்கும் குற்றவாளியைத் தப்பவைக்க முக்கியமான சாட்சியம் அவரிடம் இருக்கிறதென்று சொல்லச் சொன்னார்."

     "குற்றவாளி! எந்தக் குற்றவாளி?" என்றார் அமிர்தலிங்கம்.

     "இப்பொழுது நடக்கிற கேஸில்... அந்தக் குற்றவாளி..."

     "இந்தக் கேஸில் என் மகனுமா! உளறாதே. பயப்படாமல் சொல்லு. என்ன சொல்லுகிறாய்?"

     "என்னுடைய அண்ணனை அவர் சாட்சியம் தப்புவிக்கும் என்று."

     "உன் அண்ணன்!" திவான் பகதூருக்குப் புதிருக்கு மேல் புதிராக சமாசாரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

"உன் அப்பா பெயரென்ன?"

     "ஜம்புநாத அய்யர்."

     இந்த குற்றவாளியின் தகப்பனாரும் அவர்தான். உள்ளத்தில் ஏற்பட்ட குழப்பத் திரையை விலக்க முயல்வதுபோல் அமிர்தலிங்கம் முகத்தை, நெற்றியை, துடைத்தார்.

     "அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்."

     இந்த வார்த்தைகள் வக்கீலைக் கோபமூட்டின.

     "அப்படியா! கிட்டு, பிறகு எங்கே ஒளிந்து இருக்கிறான். அவன் ஏன் மனிதன் மாதிரி வெளியில் வரக்கூடாது?"

அவள் கலங்கிய கண்களைக் கவனித்தார். அவர் கோபம் விலகியது. அவளுடைய பதிலை அவர் உள்ளம் எதிர்பார்த்தது போல் இருந்தது. அவர் உள்ளமும் உடைந்து உடலும் சோர்ந்தார்.

"அவர் பாயும் படுக்கையுமாய்... மிகவும் அபாயத்திலிருக்கிறார். டாக்டர் பிழைப்பதுகூட..." என்று சொல்லி விம்மி விம்மி ஏங்கினாள். உள்ளத்தின் கஷ்டம் பொருமிக்கொண்டு வெளிப்பட்டது.

"நாம் இருவரும் என்ன கனவு காண்கிறோமா?" என்றார் அமிர்தலிங்கம்.
"டாக்டர் அன்று வந்துவிட்டுப் போன பிறகு உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இன்னும் ரொம்ப நேரங்கூட... இருக்கமாட்டார் என்று டாக்டர் சொன்னார். அவர் எங்கள் அண்ணனைக் காப்பாற்ற முடியுமாம். நீங்கள் தான் அதை முதலில் கேட்க வேண்டுமாம். எங்கள் அண்ணனுக்குத் தெரிந்த வக்கீல் ஒருத்தரையும் கூப்பிடச் சொன்னார். அதை உங்களால் செய்ய முடியுமா? என் அண்ணாவுக்காக இல்லை. அவர் கஷ்டப்படுவதைப் பார்க்க சகிக்கவில்லை. அதுதான் அவரது மனதை வாட்டிக் கொண்டு இருக்கிறது. அந்த வக்கீலைப் பார்க்கும்வரை நெஞ்சு வேகாது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அண்ணன் உயிரை அவர் காப்பாற்ற முடியுமாம். அது முடியுமா?"

     அமிர்தலிங்கம் அவள் சொன்னதைக் கேட்கவேயில்லை.

     "நான் அவனைப் பார்க்கவேண்டும். இரு, இதோ வருகிறேன். யாரையும் உள்ளே வரவிடாதே இரண்டு நிமிஷம்."

     அவருடைய ஜுனியர் பக்கத்தறையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

     "கேஸை நீ பார்த்துக்கொள். நான் ஒரு நோட் வேண்டுமானால் ஜட்ஜிற்கு அனுப்பி வைக்கிறேன்."

     ஜுனியரும் நல்ல பழகின ஆசாமிதான்.

     அமிர்தலிங்கம் தமது வக்கீல் சட்டையைக் கழற்றிவிட்டு, ஜட்ஜிற்கு ஒரு 'நோட்டும்' எழுதி அனுப்பிவிட்டுத் திரும்பி வந்து அவளையழைத்துக் கொண்டு பின்புற வழியாக ஒரு வாடகை மோட்டாரில் மகனுடைய வீட்டிற்குச் சென்றார்.

     திவான் பகதூர் அமிர்தலிங்கம் தனது மகன் இருக்கும் வீட்டைக் கண்டதும் திடுக்கிட்டார். சென்னையில் பணமில்லாவிட்டால் நல்ல வீடு எங்கு கிடைக்கும்? ஒண்டுக்குடித்தனம்; இருட்டறை; சமையலும் அதற்குள்தான். மகன் கிழிந்த ஓலைப்பாயில் படுத்திருந்தான். அவள் உள்ளே சென்றதும் மாமனாரைப் பற்றிக் கவனிக்கவில்லை. கிட்டுவின் தலை, தலையணையைவிட்டுச் சற்று விலகியிருந்தது. அவனை மெதுவாக எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டு தலையணையில் அதை உயரமாக வைத்துச் சாய வைத்தாள்.

     "அப்பா வாருங்கள்" என்றான் கிட்டு ஹீனஸ்வரத்தில். "உங்களால் வரமுடியும் என்று நினைக்கவேயில்லை. இருக்கிறதைப் பார்த்தால் இன்னம் கொஞ்ச நேரம் இருப்பேன்."

     அமிர்தலிங்கத்திர்கு ஈட்டியால் குத்தியது மாதிரி இருந்தது.

     "ஏன் உடம்பிற்கு குணமில்லை என்று முன்னமே சொல்லிவிடக் கூடாது?" என்றார்.

     "உங்களை இதுவரை தொந்திரவு செய்தது போதாதா? மங்களத்தைப் பற்றி உங்களிடம் சொல்ல எனக்குக் கொஞ்சம் பயம். நான் சொல்லுவது உங்களுக்கு அர்த்தமாகாது. ஏதாவது கோபமாக சொல்லுவீர்கள்" என்று சொன்னான்.

     மங்களம் அவன் பக்கத்திலிருந்து அவனுக்குப் பால் ஆற்றிக்கொண்டிருந்தாள். தனது வாடிய கைகளால் அவளது கரத்தை மெதுவாகத் தடவிக் கொண்டு, அவள் கண்களில் நோக்கினான். ஒரு சோகம் கலந்த அன்பு தவழ்ந்தது. மங்களத்தின் கண்களில் கண்ணீர் பொங்கியது.

     "எனது வாழ்க்கையில் மங்களம் இடம் பெற்றவுடன் எனது வாழ்க்கையே மாறிவிட்டது. ஆனால் கடவுளுக்குக்கூட பொறுக்கவில்லை."

     அவன் குரலில் ஒரு புதிய சக்தி பிறந்தது.

     "இவளுடைய அண்ணனின் வக்கிலை அழைத்து வந்தீர்களா?" என்றான்.

     "அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்."

     "இன்னும் கொஞ்ச நேரத்திலா? கொஞ்ச நேரம் கழித்து எதற்கு?"

     "நான் தான் உன்னை முதலில் பார்ப்பது நல்லது என்று நினைத்தேன். கிட்டு, என்மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?"

     "உங்களை நம்பாமலா? ஆனால் எவ்வளவு நேரம் இருப்பேனோ?"

     "இந்தக் கேஸில் உனக்கு என்ன சம்பந்தம், முதலில் இருந்து சொல்லு."

     கிட்டு மறுபடியும் களைத்துவிட்டான். மிகவும் கஷ்டப்பட்டு பேச வேண்டியிருந்தது.

     "எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறேன். டாக்டர் அன்றைக்குச் சொல்லிவிட்டுப் போன பிறகு எல்லாவற்றையும் எழுதி வைத்தேன். இவளுடைய அண்ணன் வக்கீல் வந்ததும் கை எழுத்துப் போட்டுவிடுகிறேன். இத்தனை நாள் தாமதியாமல் இருந்தால்... மங்களம் நீ கொஞ்சம் வெளியே போய்விட்டு வா. அப்பாவிடம் பேச வேண்டியிருக்கிறது.

     "அவரைக் களைத்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்" என்றாள் மங்களம்.

     அமிர்தலிங்கம் தலையை அசைத்தார்.

     "மங்களத்திற்கு நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரியாது. அவளுக்கும் உங்களுக்கும் திடுக்கிடும்படியாகத்தான் இருக்கும்."

     தலையணையின் கீழ் இருந்த காகிதத்தை எடுத்தான்.

     "எல்லாம் இதில் இருக்கிறது. அவர் வந்ததும் கை எழுத்துப் போட்டுவிடுகிறேன்."

     அமிர்தலிங்கம் அதை வாங்கி, கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். அதை வாசித்து முடித்த பிறகும் அவர் குரல் மாறவில்லை.

     "இந்த கேஸில் புதிய விஷயங்களைச் சொல்லியிருக்கிறாய். இதனால் உன் குடும்பத்திற்கு என்ன நேரும் என்பதை யோசித்திருப்பாய் என்று நம்புகிறேன். ஆனால் இதைத் தவிர வேறு வழியில்லை. உனது தாய் நல்ல காலமாக இது எல்லாம் கேட்காமல் இறந்து போகக் கொடுத்து வைத்தவள். நீ உனது மனைவியின் பேரில் மிகவும் பிரியம் வைத்திருக்கிறாய். உனக்கு என் பேரில் கொஞ்சமாவது பிரியம் கிடையாது என்று எனக்குத் தெரியும்."

     "அப்படியல்ல அப்பா. உங்கள் பேரில் எனக்கு எவ்வளவு பிரியம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்களும் எனக்கு எவ்வளவோ செய்து பார்த்தீர்கள். அது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்று எனக்குத் தெரியும். என் குணத்தில் எங்கோ ஒரு கோளாறு இருந்திருக்க வேண்டும். மங்களம் இதற்கு முன்பு என்னைச் சந்தித்திருந்தால் எனது வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். மங்களம் எனது வாழ்க்கையில் வரும்பொழுது நான் பலவீனமாகிவிட்டேன். எல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும்" என்றான். அமிர்தலிங்கம் முகத்தை மூடிக்கொண்டார்.

கிட்டுவிற்கு அர்த்தமாகவில்லை.      "கொலை கொலைதான். நீ எனது வாழ்க்கையின் ஏமாற்றம். எனது புகழையும் பட்டத்தையும் தேடும் அவசரத்தில் உன்னை மறந்தேன்."

     "அப்பா அதற்காக வருத்தப்பட வேண்டாம்."

     "கை எழுத்தைப் போடு."

     கிட்டு கையெழுத்திட்டான்.

     "கவலைப்படாதே. அரை மணி நேரத்தில் இதை கோர்ட்டிற்குக் கொண்டு போய் விடுகிறேன்."

     பத்திரத்தைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.

     "என்னை நம்பு. உம்! உன்னிடம் சில விஷயங்கள் கேட்க வேண்டும். கேஸில் சில விளங்கவில்லை. நீ கேஸைப் பேப்பரில் பார்த்தாயா?"

     "ஆமாம் நேற்றுவரை அவன் தப்பித்துக் கொள்ளுவான் என்று நம்பியிருந்தேன்."

     "இதிலிருந்து கேஸென்றால் உனக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிகிறதே. இறந்தவன் எப்படி இருப்பான் என்று சொல் பார்ப்போம்."

     "அப்படி ஒன்றுமில்லையே."

     "அவன் கையிலிருந்த மோதிரம் அதைப் பற்றி..."

     கிட்டு தலையை அசைத்தான்.

     "போலீஸார் வரும்பொழுது பிணத்தின் மீது அது இல்லை. ஒரு சாட்சி அதைப் பற்றிச் சொன்னான். கொலை செய்யப்பட்டவன் அதை அவனிடம் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காட்டியிருக்கிறான்."

     "ஆமாம்."

     "அதைப் பற்றி உனக்குத் தெரியுமா? ஞாபகப் படுத்திப் பார்; அது ஒரு மலையாளப் பெண் கொடுத்தது என்று உனக்குச் சொல்லி இருக்கிறானா?"

     "ஆமாம் சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கிறது."

     "அதைப் பிணத்தின் மீது காணோமே! நீ எடுத்தாயா?"

     "ஆம்! நான் தான் எடுத்தேன்" என்றான் கிட்டு.

     ஒரு மௌனம். அமிர்தலிங்கம் விரல்களைச் சுடக்கிக் கொண்டார். "அதை எங்கே வைத்தாய்?"

     "அப்பா நீங்கள் என்னை இந்த ஸ்திதியில் இப்படி 'கிராஸ் எக்ஸாமினேஷன்' செய்தால்! மிகவும் களைப்பாக இருக்கிறது. மங்களத்தைக் கூப்பிடுங்கள்..."

     "கிட்டு அப்படி ஒன்றுமில்லை. தெரிந்தவரை சொன்னால் அனாவசியமாக நேரம் கழியாது..."

     "அந்த மோதிரத்தை எடுத்து நானே எறிந்துவிட்டேன். எங்கே போட்டேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை."

     "மனம் குழம்பியிருந்திருக்கும். ஞாபகப்படுத்திப் பார்."

     "பிரயோஜனமில்லை" என்றான் கிட்டு சற்றுநேரம் கழித்து.

     "நீதான் அவனுடைய புஸ்தகத்திற்குப் பின் ஒளித்துவைத்தாயா?" என்றார்.

     கிட்டுவின் முகம் மலர்ந்தது. "ஆமாம் இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. அங்கேதான் வைத்தேன்" என்றான்.

     "அப்படியா நன்றாக அர்த்தமாகிவிட்டது. சின்ன விஷயம். குழப்பத்தை விளக்கிவிட்டாய்."

     "போய் வாருங்கள் அப்பா! நீங்கள் வந்ததற்கு... மங்களத்தைப் பார்த்துக் கொள்ளுவீர்களா?"

     அமிர்தலிங்கத்தின் கண்களில் நீர் துளித்தது.

     "இன்னும் சந்தேகமா?" என்றார்.

     அமிர்தலிங்கம் வெளியே வந்து மோட்டாரில் ஏறினார். உள்ளிருந்து விம்மியழும் அழுகைக் குரல் கேட்டது.

     அந்தக் கேஸில் அமிர்தலிங்கம் கடைசியாகப் பேசும்பொழுது மோசமாக இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரே குற்றவாளிக்குப் பரிந்து பேசுவது போல பட்டது.

     அவர் தமது மகனுடைய கடிதத்தை வெளியில் எடுக்கவேயில்லை.

     ஜுரர்கள் அவனைக் குற்றவாளி என்று அபிப்பிராயப் பட்டார்கள். தீர்ப்புக் கூற நீதிபதி கருப்புக் குல்லாவை அணிந்து கொண்டார். திவான் பகதூர் அமிர்த லிங்கமும் ஜுனியரும் வெளியே வந்தார்கள்.

     "கேஸ்தான் முடிந்துவிட்டதே இவன் தான் குற்றவாளி என்று நீர் திட்டமாக நினைக்கிறீரா?" என்றார்.

     ஜுனியர் ஆச்சரியப்பட்டு விழித்தார்.

     "கேள்வி அதிசயமாக இருக்கலாம். உமக்குச் சந்தேகம் இருக்கிறதா?"

     "சந்தேகம் இல்லை."

     தனது மகன் கொடுத்த கடிதத்தைக் கொடுத்தார்.

     "இதை வாசியும். இதற்காகத்தான் மத்தியானம் சென்றிருந்தேன்."

     அவர் வாசித்து முடிக்கும்வரை காத்திருந்தார்.

     "அப்புறம்?" என்றார் ஜுனியர் ஆச்சரியத்துடன்.

     "எனது மகனைச் சில கேள்விகள் கேட்டேன். செத்தவன் போட்டிருந்த மோதிரத்தைப் பற்றிக் கூறினான்."

     ஜுனியருக்கு இன்னும் ஆச்சரியம் அதிகரித்தது.

     "அவன் அதை எடுத்துவிட்டானாம். அது அவன் மீது இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லையாம்."

     "அப்படியா?"

     "அவன் தான் அதை புஸ்தகத்தின் பின்புறம் ஒளித்தானாம்."

     "ஆமாம் ஸார். கேஸில் மோதிரத்தைப் பற்றியே பேச்சில்லையே!"

     "ஆமாம். அது தான் செத்தவன் மோதிரம் வைத்திருந்ததே கிடையாது. அதைப் பற்றி என் மகனுக்கு எப்படித் தெரியும்? அவன் அங்கிருந்தால்தானே!" என்றார்.


கொஞ்சம் நீளமாக இருப்பதால் சிறுகதை இல்லை எனச் சொல்லிவிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

மீண்டும் சந்திப்போம்  

Saturday, March 28, 2020

வைரஸ் ! ஒரு சிச்சுவேஷன் திரைப்பட விமரிசனம்!

மல்லுதேசத் திரைப்படங்களை தொடர்ந்து பார்க்கிற வியாதி தொற்றிக் கொண்டிருப்பதில், 2019 ஜூன் முதல் வாரம் வெளியான ஒரு திரைப்படம், படத்தின் பெயரே வைரஸ் தான்,   கொரோனா வைரஸ் தொற்று உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிற தருணத்தில், மிகவும் பொருத்தமான திரைப்படமாகப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங்காகவும், உங்களுக்குப் பரிச்சயமான சில தளங்களில் தரவிறக்கம் செய்துகொள்கிற மாதிரியும் கிடைக்கும்.

      
மல்லுதேசத் திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு தீர்க்க தரிசனம் இருந்தது என்று கதைகட்டவெல்லாம் நான் முயற்சிக்கப் போவதில்லை. 2018 இல் கேரளாவை ஆட்டிப் படைத்த நிபா வைரஸ் தாக்கத்தை வைத்து எடுக்கப் பட்ட ஒரு மெடிகல் த்ரில்லர்! 152 நிமிடங்கள்! திரைக்கதை, களத்தைப் பக்காவாக ரெடிபண்ணி வைத்துக் கொண்டு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே ஷெட்யூலில்,52 நாட்களில் படமாக எடுத்திருக்கிறார்கள். குழப்பமே இல்லாத வகையில் படமாக்கப்பட்ட விதம் ஜனங்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே செமஹிட்!

  
வெற்றிப்படமாக அமைந்த சந்தோஷத்தில் வைரஸ் படத்தில் நடித்த நடிகர் பட்டாளம் மனோரமா ஆன்லைன் சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்  ஜெயித்தால் கொஞ்சம் அலட்டலும் ஜாஸ்தியாகத்தான் இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள முடிந்தால் இந்த 35 நிமிட வீடியோவைப் பார்க்கலாம்! இல்லையேல் கடந்தும் போய்விடலாம்!

குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி,டொவினோ தாமஸ்,இந்திரஜித் சுகுமாரன், ரேவதி, பார்வதி, பூர்ணிமா இந்திரஜித், ரகுமான், மடோனா செபாஸ்டியன், ரம்யா நம்பீசன் இன்னும் மலையாள சினிமையின் அறியப்பட்ட பல திரை முகங்கள் எல்லாம் சேர்ந்து நடித்திருக்கிற திரைப்படம் இது என்பது தமிழகத்தில் நமக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம்! தமிழ் சினிமாவில் பலபிரபலங்களை ஒரே இடத்தில் சேர்த்துப் பார்ப்பதே மிக அபூர்வம்தான் இல்லையா? ஜெயராமின் மகன் காளிதாஸ் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்து, தவற விட்டார். அவர் நழுவவிட்ட  இடத்தை ஸ்ரீநாத் பாஸி என்கிற இளம் நடிகர் பிடித்துக் கொண்டார். 

ஆஷிக் அபு இயக்கத்தில் உருவாகியிருக்கிற இந்தப் படம், 2018 இல் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று ஆட்டிப்படைத்த நிஜ சம்பவங்களைஅடிப்படையாகக் கொண்டது. ஆக இந்தப்படத்தில் கதைக்களம் தான் நிஜமான ஹீரோ, வில்லன் என்று எல்லாமாகவும்! நடிகர்கள் கதைக்களத்தோடு ஒன்றி, ஒரு நோய்த் தொற்றை கேரளாஎப்படி எதிர்கொண்டது என்பதை எடுத்துச் சொல்கிறார்கள். எப்படி நிபா வைரஸ் ஒரு தொற்றாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது, பரவுகிற விதம், வேகம் இவற்றைக் கணிப்பது, 21 நாட்கள் கணக்கு என்று பலவிதத்திலும் கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தோடு ஒத்துப் போகிறது என்பதுதான் சிலமாதங்களுக்கு முன்பு பார்த்த ஒரு படத்தை ரீவைண்ட் செய்து இங்கே ஒரு திரைப்பட அறிமுகம் அல்லது விமரிசனமாகவும்!

இந்தப்படத்தை பத்தோடு பதினொன்றாக வெறும் documentary film மாதிரி ஆகிவிடாமல் திரைக்கதையை முஸின் பராரி, சுஹாஸ், சஹரஃபு  என  ஒரு மூன்று பேர் கூட்டணி மிகத்திறமையாக எழுதி இருக்கிறார்கள். ஒன்றன்மீது ஒன்றாகக் கதைக்களம் விரிவதை இயக்குனர் ஆஷிக் அபு மிகத்திறமையாகப் படமாக்கி இருக்கிறார். கட்டாயமாக இந்த படத்தைப் பார்க்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன். நிபா வைரஸ் குறித்த பயம், தொற்று ஏற்படாமல் இருக்கப் போராட்டம், இவைகளைத் தாண்டி உயிர் மேல் ஆசை எல்லாம் இந்த கொரோனா தொற்று விஷயத்திலும் அச்சுப்பிசகாமல் அப்படியே இருப்பதுதான் முக்கியமான விஷயம்.

மீண்டும் சந்திப்போம்.     
    

Friday, March 27, 2020

கொரோனா காமெடிகள்! இன்றைக்கு வாசிக்க எடுத்த புத்தகம்!

கொரோனா வைரஸ் தொற்று பயம் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற இந்த சமயம் கண்ணில் படுகிற சில வீடியோக்கள் சிரிப்பையும் வரவழைக்கிற மாதிரி! அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பது ஒருவகையில் நிஜம் தான் போல!



ஊரடங்கின் போது ஏன் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகிறாய் ? என்று கேட்கும் காவலர்களிடம் ..
'ஏன் எதற்கு எப்படி எங்கே எப்போ எப்பொழுது' [ pheww] ..என்று துள்ளிக் குதித்து அடுக்குமொழியில் நரம்பு புடைக்க..'முதலமைச்சரை இங்கு வரச்சொல்லு' என்று பேசும் பொடியன்..
'நீ ஓவரா ஆடிக்கிட்டிருக்க' - பெண் காவலர் 
கடைசியில் காவல்நிலையத்தில் வைத்து கையில் பிரம்பால் அடி வாங்கும் போதும்...
பொடியன் : இனி வெளியில் வந்தால் மாஸ்க் போட்டு வருகிறேன். 
ஊரடங்கு வெளிப்படுத்தும் வேடிக்கைகளில் சிறப்பான ஒன்று...
பொடியனிடம் இருக்கும் எனர்ஜி, துறுதுறுப்பு அனைத்தும்.... அண்ணன்களின் அரசியல் மேடைகளில் இருந்தும், தமிழ் சினிமாக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு .. நேர் மறையாக திருப்பிவிடப்பட்டால் ...சிறப்பானதொரு மனிதனாக உருவாகி வருவார்.
பானு கோம்ஸ் இந்த நாம்தமிழர் சவடால் பையன் வீடியோவை மிகவும் ரசித்து எழுதியிருக்கிறார்போல! ஆனால் இதெல்லாம் தனியாகச் சிக்கிக் கொள்கிற ஏப்பை சாப்பைகள் மீதுமட்டும் தானோ? 

இது கர்நாடகாவில்!
தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்க முடியாது  


கொஞ்சம் பயனுள்ளதாகப் பொழுதுபோக்க உதவும் புத்தகங்கள்  இன்றைக்கு வாசிக்க எடுத்துக் கொண்ட புதினம்: 

 நீலரதி - சாண்டில்யன் 


தமிழக வரலாற்றின் இருண்ட காலமாக களப்பிரர்கள் ஆண்ட காலம் குறிப்பிடப் படுகிறது. களப்பிரர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்ற செய்திகளே கிடைக்க விடாமல் பிற்கால சைவசமய எழுச்சி இருட்டடிப்பு செய்ததனாலேயே இருண்டகாலமாக சொல்லப்படுகிறது என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. வடுகக் கரு நாடர் என்றே பெரிய புராணம் இவர்களைச் சொல்கிறது. கிபி முதல் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரை இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ததாக, வைதீக மதத்தை எதிர்த்தவர்களாகவும், சமண, பவுத்த மதங்களை ஆதரித்தவர்களாகவும் இருந்தார்கள். தமிழ்மொழியை ஆதரிக்காவிட்டாலும் களப்பிரர் காலத்தில்தான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பிறந்தன என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

கிபி முதலாவது நூற்றாண்டில் தமிழகம் முழுதையும் ஆண்ட அச்சுத விக்கண்டன் என்கிற அச்சுத விக்கிராந்தன் என்கிற அச்சுத விக்கந்தக் களப்பாளன் ஒருவன் மட்டுமே சாண்டில்யனின் நீலரதி கதையில் வரலாற்றுப் பாத்திரம். கதையில் மற்ற எல்லோருமே கற்பனைப் பாத்திரங்கள் என்பதால், இதை சரித்திரக் கதை என்று வகைப்படுத்த முடியுமா என்பது எனக்குப் புரியவில்லை. கதை கடல்கொண்டதுபோக மீதம் இருந்த புகாரில் ஆரம்பிக்கிறது. நாற்பதை ஒட்டிய  இளமாரன், இருபதுவயதே ஆன உதயகுமாரன் என்ற இருவரிடம் வந்து சேர்கிற நீலரதி என்கிற இளம்பெண் அவளைத் துரத்திவருகிற புத்தமடத் துறவிகள், புத்த மடக் காவலர்கள் என்று விறுவிறுப்பாகக் கதை தொடங்குகிறது. மடத்துக்காவலர் தலைவனைக் கொன்றுவிட்டாள் என்ற குற்றச்சாட்டு நீலரதிமீது. புத்தமடத்தில் நடக்கும் விசாரணையில் அடுத்தடுத்து சில சுவாரசியமான ட்விஸ்ட், அச்சுத விக்கண்டனே விசாரணையை நடத்த வந்துசேருகிறான். அவனிடம் பணிபுரிபவனான இளமாரனிடம் நீலரதியை தனது உறையூர் அரண்மனைக்கு அழைத்துவருமாறு சொல்லி விட்டுப் போகிறான்.

சாண்டில்யன் கதை என்றால் வரலாறு கொஞ்சம், வர்ணனைகள் கொஞ்சம், பாத்திரங்களை அறிமுகம் செய்வதிலிருந்தே திருப்பம், அந்தத் திருப்பத்துக்கு இன்னொரு திருப்பம் என்று தொடர்ந்து கொண்டே போவதில் மயங்குகிற வாசகர் கடைசி வரை அந்த மயக்கத்தில் இருந்து விடுபடுவதே இல்லை என்பதை தனியாகச் சொல்லவேண்டியதே இல்லை. இந்தக் கதையும் அப்படித்தான்! என்ன, நீலரதியின் எகிப்திய பின்னணி, ஐசிஸ் (Isis) என்கிற பெண் தெய்வம் காவல் தெய்வமாக கூடவே இருப்பது என்கிற fantasy  சரித்திரக் க்தைக்குப் பொருத்தமாக இல்லையே என்பது படித்து முடித்த பிறகுதான் உறைக்கிறது! அது போலவே வேறு சில விஷயங்களும்! களப்பிரன் நியாயம் என்று கதை சுபமாக முடிவதில், களப்பிரர்களைப் பற்றி எதுவுமே தெரிந்துகொள்ள முடியவில்லை என்பது பெருங்குறை! போதாக்குறைக்கு கொஞ்சம் நெருடலான பாத்திரப் படைப்பும் சேர்ந்து கொள்கிறது.

ஆனால் படித்து முடிக்கிறவரை இந்தமாதிரிக் குறை எதுவுமே தெரியவில்லை என்பது சாண்டில்யனின் கதை சொல்கிற திறம்!       
           
குங்குமம் வார இதழில் தொடராக வெளிவந்த நீலரதி 1985 இல் பாரதி பதிப்பக வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. 57அத்தியாயங்கள். 420+ பக்கங்கள்   

மீண்டும் சந்திப்போம். 

Tuesday, March 24, 2020

ஜெயமுண்டு! #கொரோனா பயம் வேண்டாம் மனமே!

கரோனா தொற்று! ஓடவும் வேண்டாம், ஒளியவும் வேண்டாம்! இப்படிப் பதினைந்து நாட்களுக்கு முன்பு இந்தப் பக்கங்களில் எழுதியதைத்தான் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் சொந்த ஊர்ப்பக்கம் இன்று கிளம்பிய பெருங்கூட்டமும், தள்ளுமுள்ளுகளும் ஒரு மருத்துவ நெருக்கடியை மனவுறுதியுடன் எதிர்த்து வெல்கிற இயல்பைத் தமிழகத்தில் தொலைத்து விட்டு நிற்கிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க உதவுகிற KIT இந்தியாவிலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது விலை வெறும் 80000 ரூபாய்கள் தான்! ஒருவரைச் சோதனை செய்ய ஆகிற செலவு ரூ.1500/- க்குள் தான் ஆகும் என்கிற செய்திகள் வந்து கொண்டு இருக்கும் அதே நேரம், தேவையில்லாத பயம் ஜனங்களைத் தவறுக்கு மேல் தவறாகத் தொடர்ந்து செய்ய வைத்துக் கொண்டிருக்கிறதோ? 

 

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு மறுபடியும் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், சுகாதார அமைச்சகமும் என்ன தான் நிலைமையை சமாளிக்க சுறுசுறுப்பாக இயங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், ஜனங்களுடைய பங்களிப்பில்லாமல் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்காக   இன்று நள்ளிரவிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஜனங்களும் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்திலிருந்து விடுபட முடியும்.   


அதே வேளையில் குறுகிய உள்நோக்கம் கொண்ட கட்சி அரசியல் செய்கிற நேரமில்லை இது என்பதை இங்கே இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ், கழகங்களுக்கும் யார் எடுத்துச் சொல்வது?  

கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் பொது இடங்களில் சுற்றியுள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து கடந்த மார்ச் 11-ம் தேதி கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் வந்துள்ளார். அப்போதே அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் பொது நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், கால்பந்து போட்டி நடந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார். இரண்டு எம்எல்ஏ.க்களை சந்தித்து அவர்களோடு கைகுலுக்கி ஆரத்தழுவி பேசி இருக்கிறார். அதன் பிறகு மார்ச் 14-ம் தேதி அவருக்கு காய்ச்சல் அதிகமாகி இருக்கிறது. காசர்கோடு அரசு மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதன் பிறகே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார். இதற்கிடையில், கோவிட்-19 காய்ச்சலோடு குறைந்த பட்சம் 3000 பேரை அவர் சந்தித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மல்லுதேச துபாய் ரிடர்ன் ஆசாமி ஒருவருடைய பொதுநல சேவையை இந்து தமிழ்திசை நாளிதழ் செய்தி இன்றைக்குச் சொல்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருப்பவர்கள் இவர்மாதிரி வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தான் என்பது என்னமாதிரியான சமூகப் பொறுப்புணர்வு? 


ஈரோட்டுக்கு கொரோனா வந்தவிதம் இதே போலத்தான் என்பது நினைவிருக்கிறதா? இப்போது சேலத்துக்கும்,


ஜெயமுண்டு பயமில்லை மனமே என்கிற பாரதியார் கவிதை வரியிலிருந்துதான் பதிவுக்குத் தலைப்பு உருவானதே! பதிவை முடிப்பதும் கூட பாரதியார் கவிதை வரிகளோடுதான்என்றால் பொருத்தமாக இருக்கும்!


தேடி உன்னை சரணடைந்தேன் தேச முத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
 பாடி உனை சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய்

கோடி நலம் செய்திடுவாய் குறைகளெல்லாம் களைவாய்       

மீண்டும் சந்திப்போம்.

Saturday, March 21, 2020

சாணக்யா தள முதலாம் ஆண்டு விழா! சொல்ல விடுபட்டவை

கொஞ்சம் பழசாகிப்போன விஷயம் தான்! சாணக்யா தளம் அறிவித்த விருதை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு ஏற்கமாட்டார் இது கட்சியின் கொள்கை முடிவு என்று அறிவித்த விஷயம் தான்! CPI இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொள்கை என்ற ஒருவிஷயம் இருப்பதே அந்தக் கேலிக்கூத்தான அறிவிப்புக்குப் பிறகுதான் தெரிந்தது. எமெர்ஜென்சி நாட்களில் இந்திராவுடன் சேர்ந்து கொண்டு இந்திராதான் இந்தியா என்று முழங்கியபோது, எமெர்ஜென்சிக்குப் பிறகு தேர்தலில் செம அடி வாங்கியபிறகு, சிபிஎம்முடன் சேர்ந்து கொண்டது, முதல் சமீபத்தில் திமுகவிடம் தேர்தல் கொடையாக 15 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டது வரை அவர்களுடைய லட்சியம், கொள்கை எல்லாம் வசதிக்குத் தகுந்தபடி காற்றில் பறக்க விடப் பட்டிருக்கிற கதையெல்லாம் நினைவுக்கு வருகிறது.

12 நிமிட சப்பைக்கட்டு 

வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் சாணக்யா பெயரில் விருது என்பதால்தான் ஏற்க மறுத்தார்கள் என்று புதிதாக ஒரு  சப்பைக்கட்டு கட்டுகிறார். அந்த விருதை ரங்கராஜ் பாண்டேவின் தளம் வழங்குகிறது. அதுவும் ரஜனிகாந்த் கையால்! இரண்டு விஷயமும் இப்போது ஒட்டிக்கொண்டிருக்கிற திமுக கூட்டணிக்கு  குறிப்பாக திமுக வுக்குப் பிடிக்காது. திமுகவுக்குப் பிடிக்காத எதையும் செய்யக்கூடாது என்பதுதான் CPI கட்சியின் இப்போதைய கொள்கை என்று             வாய் திறந்து உண்மையைச் சொல்லிவிட முடியுமா? 15 கோடி ரூபாய் கொடுத்தவர்களுக்கு கொஞ்சமாவது நேர்மை, விசுவாசத்துடன் இருக்கவேண்டாமா?  

 வீடியோ 17 நிமிடம் 

குமரி அனந்தன்! ஒரு நல்ல பேச்சாளர்! காமராஜரின் தொண்டராக இருந்தவர் சோனியாவின் குடும்பக் கட்சியில் தொடர்வது என்பது நகை முரண். என்னமோ தேசியம் இவரிடம்தான் வாழ்வதாக எதைவைத்து ரங்கராஜ் பாண்டே முடிவு செய்தாரோ? கொடுத்தார், குமரி அனந்தனும் பெரிய மனது பண்ணி வாங்கிக் கொண்டார் என்பதற்குமேல் வேறென்ன இருக்கிறது? 

 வீடியோ 10 நிமிடம் 

பிஜேபியின் இல. கணேசன்! எளிமைக்கான சாணக்யா விருது அறிவிக்கப்பட்டதை, ஏற்றுக் கொண்டது மிகவும் பொருத்தமானதுதான்! ஆனால் யார் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கப்போகிறார்கள்? அவரை ஞாபகப் படுத்துவதற்காகவே கொடுத்தமாதிரி இருக்கிறது.

ரங்கராஜ் பாண்டே ரஜினிகாந்தை வைத்து நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சி, ரஜனியின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்துகிற மாதிரி மட்டுமே இருந்தது. அவ்வளவுதான்! தமிழருவி மணியன் இடத்தை ரங்கராஜ் பாண்டே பிடித்துக் கொண்டாரா அல்லது இது தனி டிராக் தானா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.  

மீண்டும் சந்திப்போம்.      

Friday, March 20, 2020

கொஞ்சம் செய்தி! கொஞ்சம் புத்தகம்!

கொரோனா வைரஸ் தொற்று மீது பயமில்லை ஆனால் NRC NPR மீதுதான் பயம் என்ற முழக்கத்தோடு டில்லி ஷாஹீன் பாகில் போராட்டத்தைக் கைவிட மறுக்கிற அசட்டுத்தனம் இஸ்லாமிய சகோதரர்களிடம் ஊட்டி வளர்க்கப் படுகிறதோ? இங்கே இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பேரணி நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.மதுரை ஷாஹீன்பாக் என்றொரு பேனருடன் சிலர் இருக்கிற புகைப்படத்தைப் பார்த்தேன்.

பொதுவாகவே இந்தியர்களிடம் ஒழுங்கீனம் கொஞ்சம் அதிகம் தான்! குறிப்பாக தமிழேண்டா, மல்லு சனம் என்றால் அடுத்தவருக்கு உபதேசம் தங்களுக்கு இல்லை என்கிற மாதிரியான கூடுதல் மிதப்பு வேறு! மதுரை விமான நிலையம் இரண்டுநாட்களாக துபாய் ரிடர்ன் அசாமிகளிடம் படாத பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.
துபாயிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 143 பயணிகள் கொரோனா பரிசோதனை கண்காணிப்புக்கு செல்ல மறுப்பு
துபாயில் இருந்து கோரெண்டல் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 143 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். தொடர்ந்து பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா அறிகுறிகள் குறித்த பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களை இரண்டு கண்காணிப்பு மையத்திற்கு அழைத்து செல்ல 5 அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களாக பயணிகளை பிரித்து ஒரு குழுவினரை மதுரை சின்ன உடப்பு பகுதியில் உள்ள அரசு கூட்டுறவு பயிற்சி கல்லூரிக்கும் (120 படுக்கை வசதி) மற்றும் மற்றொரு குழுவினர் ஆஸ்டின்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் (60 படுக்கை வசதிகள்) கொண்ட கண்காணிப்பு மையம் தயார் நிலையில் உள்ள மையத்திற்கு 14 தினங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது துபாயில் இருந்து வந்த பயணிகளை கண்காணிப்பு மையத்திற்கு அழைத்து செய்வதற்கு இரண்டு பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நீண்ட நேரமாக தண்ணீரும், உணவும் வழங்காமல் பரிசோதனை என்ற பேரில் அதிக காலதாமதம் செய்துவருவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு மையத்திற்கு செல்வதற்கு பயணிகள் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கொரோனா குறித்து பரிசோதனை விமான நிலையத்திலேயே பண்ணவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையிலும் 60 மாதத்திற்கு முன் கணவன் துபாய்க்கு சென்று திரும்பி வந்தவரை அவரது மனைவியும் குழந்தையும் கண்ணீர் மல்க கண்காணிப்பு மையத்திற்கு சென்று தங்குமாறு கூறிய நெகிழ்வான சம்பவத்தால் பரபரப்பாக இருந்த விமான நிலைய வளாகம் சிறிது நேரம் அமைதி நிலவியது.
- மாரி கண்ணன், மதுரை 

இது நேற்று நடந்த கூத்து! மதுரை என்றாலே வெட்டி அராத்து என்ற கெட்ட பெயரை தமிழ் சினிமா உருவாக்கி விட்டதை இந்த துபாய் ரிடர்ன் ஆசாமிகள் மேலும் உறுதிப்படுத்துகிற மாதிரி நடந்து கொள்வது,  ஒரு மதுரைக்காரனாக என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.


இன்று மதுரை விமானநிலையத்துக்கு வந்திறங்கிய இரண்டாவது பேட்ச்  155 துபாய் ரிடர்ன் ஆசாமிகள் ரகளையில் இறங்கவில்லையாம்! இந்தச் செய்திக்காக சந்தோஷப்படுவதா, தலையில் அடித்துக் கொள்வதா என்றே எனக்குப் புரியவில்லை.  அதனால் ஆறுதல் தேடக் கொஞ்சம் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்து விட்டேன்!


சாண்டில்யனைப் போல சரித்திரக்கதை தமிழில் சொன்னவர் உண்டோ? என்று கேட்டிருந்த பதிவில் வந்த முதல் 3 பின்னூட்டங்கள்:

உண்மை.  சங்க இலக்கியம் அக நானூறு, புறநானூறு இதெல்லாம் படித்தால் புரிவதில்லை.  எனவே ஓடத்தான் தோன்றுகிறது.
ReplyDelete
Replies
  1. அகநானூறு புரியும் ஸ்ரீராம். என்ன, அலைகள் ஓய்வதில்லை படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போல் இருக்கும். 
    Delete
  2. ஹா...  ஹா...  ஹா....
  3. சங்க இலக்கியங்களை எளிதாகப் புரிந்து கொள்ள நிறையப் புத்தகங்கள் கிடைக்கின்றன. புறநாநூற்றுப்பாடல்களில் 40 சுவாரசியமான  பாடல்களுக்கு கதைப்போக்கிலேயே தீபம் நா,பார்த்தசாரதி, அந்தநாட்களில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதியது புத்தகமாகவும் கிடைக்கிறது. அதே போல கலித்தொகை பரிபாடல் காட்சிகள் என்று இன்னொரு புத்தகமும்! தமிழ் இணைய நூலகத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சோம்பலாக இருந்தால் இங்கே சொல்லுங்கள் நான் அனுப்பி வைக்கிறேன்! 
  4. மீண்டும் சந்திப்போம்.

Thursday, March 19, 2020

கொரோனா வைரஸ் தொற்று: பிரதமர் நரேந்திரமோடியின் உரை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயப்பட அவசியமிருக்கிறதோ இல்லையோ தேவையே இல்லாத பரபரப்பும், வதந்திகளும், பீதியும் வாட்சப் முதலான சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கிற வினோதத்துக்கு பஞ்சமில்லை. சதீஷ் ஆசார்யா தொடர்ந்து பொறுப்பற்ற விதத்தில் கார்டூன்கள் வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். இவைகளுக்கு மத்தியில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு சில முக்கியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்

     
கொரோனாவின் அச்சுறுத்தல் பற்றி விளக்கி இருக்கிறார்.
Social Distancing ஆக இருப்பதின் தேவையை குறிப்பிட்டு இருக்கிறார்.
தனியாக இருப்பதற்கு மக்கள் பழகுவதற்கு வரும் ஞாயிறு 'மக்கள் ஊரடங்கு' (Janata Curfew) என்று அறிவித்து இருக்கிறார். சட்டரீதியாக எதுவும் இல்லாமல், மக்கள் தாங்களே காலை முதல் மாலை வரை வீட்டை விட்டு வராமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
இந்த வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப் படுபவர்களுக்கு உதவ ஒரு நிபுணர் குழு அமைக்கப் பட்டு இருக்கிறது. அவர்கள் விரைவில் முடிவுகள் எடுத்து தேவைப்படும் உதவிகளை செயல் படுத்துவார்கள்.
உணவு, மாளிகை, காய்கறி, மருந்துகள் போன்றவை விற்பனைக்கோ, கடைகளுக்கோ எந்தத் தடையும் வராது. மக்கள் வாங்கிக் குவித்து வைத்து ஸ்டாக் தீர்த்து வைக்காமல் இருக்க கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த அச்சுறுத்தல் நடுவிலும் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் முதல் பால் டெலிவரி செய்பவர் வரை செய்யும் சேவைகளை நினைத்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் பிரதமர் பேசி இருக்கிறார்.
தீவீர மோடி எதிர்ப்பாளரிடமிருந்து முகநூலில் இப்படி ஒரு உடனடி பகிர்வை நான் எதிர்பார்க்கவே இல்லை.

ஞாயித்துக்கிழமை ஒரு நாள் ஒரே ஒரு நாள் மட்டும் வீட்டிலே இருந்து பாருங்க என சொல்லியிருக்கார். மற்றபடிக்கு ஊரடங்கு உத்தரவெல்லாம் இல்லை.
பொருட்களை வாங்கி ஸ்டாக் வைக்கவேண்டாம் எல்லாம் பொருட்களும் கிடைக்க அரசு வழி செய்யும் என சொல்லியிருக்கார்.
சூப்பர் மார்க்கெட்டை கொதறதாதீங்க. 
இப்படி மிகச்சுருக்கமாக நண்பர் ராஜசங்கர் பகிர்வில் சொல்லியிருந்ததை கூட ஸ்ரீதர் கொடுத்த அதிர்ச்சி, பாராட்டுப் பத்திரம் மறக்கடித்துவிட்டது. இருந்தாலும் சேட்டைக்காரன் பதிவர் விலாவாரியாகச் சொன்னது போல வருமா?
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதிஜி அவர்களின் வேண்டுகோள்:
1. அடுத்த சில நாட்கள் / வாரங்களுக்கு அத்தியாவசியமான காரணம் தவிர்த்து பிற காரணங்களுக்காக தயவு செய்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.
2. இன்னும் கொரோனாவுக்கு சரியான மருந்துகள்/ உபாயங்கள் கண்டுபிடிக்காத நிலையில், அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவர்களுக்கும், அவர்களது உற்றார், உறவினர்களுக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பானதாகும்.
3. வெளியே செல்ல முடியாதவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அவர்களது விடுப்புகளுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் இருக்குமாறு நிறுவனங்கள் /தனியார்களிடம் வேண்டுகோள்.
4. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் என்பதால், அனாவசியமாக பெருமளவில் பொருட்களை வாங்கிக் குவித்து விடாதீர்கள்.
5. கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினர் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்வகையில் தனி நபர்களும் கொரோனாவை எதிர்கொள்ள, அரசாங்கம் விதிக்கிற கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்கவும்.
6. இந்த இக்கட்டான சூழலில், உறுதியும், கட்டுப்பாடும் அனைவருக்கும் மிக அவசியம்.
7. பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அதுகுறித்து ஆராய்ந்து உரிய முடிவுகளை எடுக்க நிதியமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
8. 60/65 வயதுக்கு மேற்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியேற விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.
9. வழக்கமான உடற்பரிசோதனைகள்/ தள்ளிப்போடத் தக்க அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றை தயவு செய்து ஒத்திப்போடவும். மருத்துவமனைகள், சுகாதார ஊழியர்கள் மீது அனாவசியமான அழுத்தம் தராமலிருக்க இது உதவும்.
10. வருகிற மார்ச் 22-ம் தேதி ( ஞாயிறு) காலை 07:00 மணி முதல் இரவு 09:00 வரை பொது ஊரடங்கு (Janata Curfew) கடைபிடித்து அனைவரும் வீட்டிலேயே இருக்கவும்.
11. மார்ச் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு, சைரன் ஒலிக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவும். சைரன் அடித்ததும் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில், ஜன்னலில் நின்றபடி 5 நிமிடங்களுக்கு கரவொலி எழுப்பி கொரோனாவுக்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும்.
அனைவரும் பிரதமர் சொன்னதைக் கடைபிடிப்போம். பாரதத்தை கொரோனாவிலிருந்து காப்போம்.
பாரத் மாதா கீ ஜே! வந்தே மாதரம்!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிஜம் தான்! அதற்காக பயந்து ஓடவும் வேண்டாம்! ஒளியவும் வேண்டாம். சுயகட்டுப்பாட்டுடன், சுகாதாரத்துறை சொல்கிற விஷயங்களைக் கடைப்பிடித்தாலே , நம்மால் இந்த அச்சுறுத்தலை வெற்றிகரமாக சமாளிக்க முடியும்

மீண்டும் சந்திப்போம்.         

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)