Tuesday, March 17, 2020

சாண்டில்யனைப் போல சரித்திரக்கதை தமிழில் சொன்னவர் உண்டோ?

குறுங்கோழியூர் கிழார்! ஒரு சங்ககாலப் புலவர். கிழார் என்பதால் வேளாண் தொழில் செய்தவர். அப்புறம்  குறுங்கோழியூர் என்பது அவரது சொந்த ஊர்ப்பெயராக இருக்கலாம்! எட்டுத்தொகை எனப்படும் சங்க இலக்கியப் பாடல்தொகுப்பில் ஒன்றான புறநானூறில் 17. 20, 22 என மூன்றே மூன்று பாடல்கள் மட்டும் இவர் இயற்றியதாகக் கிடைக்கின்றன. மூன்றுமே சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடியவை. அதுவும் அந்த முதல்பாடல் இருக்கிறதே, அதில் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாண்டியனிடம் தோற்றுச் சிறையிருந்து, அதிலிருந்து தப்பித்து வந்து தன் சுற்றத்தோடு சேர்ந்த கதையைக் கொஞ்சம் சொல்கிற பாடல்.


தென் குமரி, வட பெருங்கல், குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்திப்,படுவது உண்டு, பகல் ஆற்றி, இனிது உருண்ட சுடர் நேமி முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை அகல் வயல், மலை வேலி, நிலவு மணல் வியன் கானல், தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின், தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது, நீடு குழி அகப் பட்ட பீடு உடைய எறுழ் முன்பின் கோடு முற்றிய கொல் களிறு, நிலை கலங்கக் குழி கொன்று, கிளை புகலத் தலைக்கூடி யாங்கு நீ பட்ட அரு முன்பின், பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப், பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின், ‘உண் டாகிய உயர் மண்ணும், சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்’எனவும்,
‘ஏந்து கொடி இறைப் புரிசை, வீங்கு சிறை, வியல் அருப்பம், இழந்து வைகுதும்.இனிநாம்; இவன்
உடன்று நோக்கினன், பெரிது’ எனவும், வேற்று அரசு பணி தொடங்குநின் ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய மழையென மருளும் பல் தோல், மலையெனத் தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை, உடலுநர் உட்க வீங்கிக், கடலென வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப, இடியென முழங்கு முரசின், வரையா ஈகைக் குடவர் கோவே!  

வலைப்பதிவுகளை வாசிக்க வருகிறவர்களிடம் இந்த மாதிரி சங்க இலக்கியம், பாட்டு அது இது என்று ரொம்பவும் பேசினோமானால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாக நேரிடலாம் என்பது தெரிந்து வைத்திருப்பதனால் நான் அதிகமாக இலக்கியம், பாடல்களைப் பற்றிப் பேசுவதிலலை. மேலே உள்ள பாடலின் நடுவே கறுப்பு எழுத்துக்களில் கொடுத்திருக்கும் பகுதி சொல்வது சுருக்கமாக: பெரிய பொய்குழியில் விழுந்த ஆண்யானை தன் பெருமிதம் தோன்றக் குழியைத் தகர்த்தெறிந்துவிட்டுத் தன் சுற்றத்துடன் சேர்ந்துகொண்டதைப் போல, நீ பட்டிருந்த சிறை தளர்ச்சியுற்றிருந்தபோது, பலரும் பாராட்டும் வண்ணம் விடுவித்துக்கொண்டு சென்றதை உன் தாயத்தார் பாராட்டுகின்றனர் என்பதுதான். இனிமேல் உன் பகைவர்களும் உன்னிடத்தில் பணிவாரே அன்றிப் பகைமை காட்ட மாட்டார்! இந்தப்பாட்டை வைத்துக் கொண்டு என்ன சரித்திரம், கதை சொல்லிவிட முடியும்?  கொஞ்சம் சொல்லுங்கள்! 


சாண்டில்யனைப் போல சங்க இலக்கியங்களையும், வடமொழிக் காவியங்களையும் ரசித்துக் கற்ற ஒருவரிடம் இந்த மாதிரி இடியாப்பச் சிக்கல் மாதிரி ஆரம்பமென்ன முடிவென்ன என்று சொல்லாமல் விட்டு விடுகிற பாடலைக் கொடுத்தால் என்னாகும்? ஒரு அழகான சரித்திரக்கதை கோழைச்சோழன் மாதிரி இருபது இருபத்திரண்டு  பக்கங்களுக்குள் வருகிற மாதிரியோ, மூங்கில் கோட்டை மாதிரி 256 பக்கங்கள் வருகிற மாதிரி ஒரு முழுநீள சரித்திரக் கதையாகவோ ஆகிவிடும்! இதையும் சரித்திரக்கதைகள் என்றாலே சாண்டில்யன் தான் பதிவில் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா? மங்கல தேவி சாண்டில்யனின் 4 சரித்திர சிறுகதைகளின் தொகுப்பாக வந்ததில் கோழைச்சோழனும் ஒன்று. என்னிடமிருப்பது 1988 பதிப்பு 84 பக்கங்கள் வெறும் 5 ரூபாய் தான்!

மூங்கில் கோட்டை! கதையைப் படிக்கும் போதே அந்த நாளைய தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்கள் தவிர இவர்களுக்கு அடங்கியோ அல்லது சுதந்திரமாகவோ குறுநில மன்னர்களாக கொங்கு நாட்டு வேளிர்கள் பலர் இருந்தார்கள் என்ற பின்னணியோடு கதை ஆரம்பிக்கிறது. மிகவும் இள வயதிலேயே பாண்டிய அரசனாக அரியணை ஏறிய நெடுஞ்செழியனை, சிறுவன்தானே என்று இளப்பமாக எண்ணிய சேர சோழ மன்னர்கள், ஐந்து வேளிர் குறுநில அரசர்களோடு சேர்ந்து கொண்டு, பாண்டிய அரசை விழுங்க முயன்றார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் சிங்கம் போல சிலிர்த்து நின்றான். 

நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இந்த எழுவரும்  சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தான் என்பது வரலாறு  மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் இவனே! நெடுநல் வாடை என்ற காப்பியத்தின் பாட்டுடைத்தலைவனும் இவனே! 

தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்!  போரில் வென்ற பிறகு சேரனை என்ன செய்தான் என்பதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. தன்னை யானை என்று மார்தட்டிக் கொண்ட சேரனை ஒரு யானையைச் சிறை வைப்பது மாதிரியே அகழிகள் தோண்டி மூங்கிலில் ஆன ஒரு கூடையைக் கவிழ்த்து வைக்கிறமாதிரியான ஒரு கோட்டையில் சிறை வைத்திருக்கிறான். அவனை சிறைமீட்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காக இளமாறன் என்கிற ஒரு கருவூர் வஞ்சி நகரத்து வாலிபன் அழைக்கப்படுவதில் இருந்து அவனோடு நாமும் பயணிக்கிறோம். 

மதுரையின் கோட்டைக்குச் செல்லும் வழியில் இரண்டு பெரிய மூங்கில் பாலங்களை எடைபோட்டுக் கொண்டே வீரனான இளமாறன் மதுரைக்குள் நுழைகிறான். பாண்டிய வீரர்கள் கண்காணிப்பு பலமாக இருந்தாலும் மிகவும் மரியாதையுடன் விசாரித்து உள்ளே அனுப்புகிறார்கள். தன்னை எதற்காக பிரதான வாயில் வழியாக வரச்சொல்லாமல் பக்கத்திலிருக்கும் திட்டிவாசல் கதவைத் தட்டச் சொன்னார்கள், யாரைப்பார்க்க வந்திருக்கிறோம் என்ற விவரங்கள் எதுவுமே தெரியாமல் சேர அரச இலச்சினை பொறிக்கப்பட்ட ஓலைக்குப் பணிந்து மதுரைக்கு வந்து திட்டிவாசல் கதவைத் தட்டியும் ஆயிற்று! கதவை அவனுக்குத் திறந்துவிடுகிறவள் ஒரு அழகான இளமங்கை. அவனைப்பார்த்ததும் அவள் விழிகளில் ஒரு பரிதாபம் தெரிகிறதே ஏன்? பதில் தெரியாமலேயே அவளை பின்தொடர்கிறான் இளமாறன்!   

   
மூங்கில் கோட்டையின் முதல் அத்தியாயத்தை இங்கே  14 நிமிட ஆடியோவாக யூட்யூபில் வாசித்துக் காட்டுகிறார்கள்!  சாண்டில்யன் இன்னமும் நிறையப் பேரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு மேல் என்ன சொல்ல!

குறுங்கோழியூர் கிழார் என்ற புலவரும் அவருடைய பணிப்பெண்ணாகச் சொல்லிக் கொண்ட இளமங்கையும் அவனை எதற்காக வரவழைத்தார்கள் என்பதை விரிவாகச் சொல்வதற்கு முன்னாலேயே, தூக்கம் வராமல் புலவர் மாளிகைக்கு வெளியே மதுரையைப் பார்த்து வரலாம் என்று கிளம்பியதில் பாண்டிய மன்னன், அவனது தளபதி இருவருடனும் வாட்போர் செய்கிற மாதிரி ஒரு சூழ்நிலை உருவாகவே, புலவரும் இமயவல்லி என்கிற அந்த இளமங்கையும், சேரனை மீட்கும் பணியில் அவசர அவசரமாக, இளமாறனைத் தயார் செய்கிறார்கள். மூடுதிரை போட்ட ஒரு தேரில் இமயவல்லியும் இளமாறனுடன் தனித்துப் பயணிக்கிறாள். இடையில் பாண்டியன் தளபதி வீரர்களுடன் வழிமறிக்கிறான். இளமாறனிடம் காயப்படுகிறான். சித்தர் என்றொரு கதா பாத்திரம் குறுக்கிடுகிறது. இமயவல்லி பாண்டிய மன்னனின் சகோதரி என்ற மர்மத்தையும் உடைக்கிறது. பாலில் மயக்க மருந்தளித்து இருவரையும் மூங்கில் கோட்டையின் முகப்புக்கு முந்தைய பகுதியில் கிடத்திவிட்டும் போய்விடுகிறது.

மூங்கில் கோட்டையின் சூட்சுமத்தை இளமாறன் புரிந்து கொள்கிறான். சேரமன்னனை விடுவிக்கிறான். பாண்டியன் படைத்தளபதியிடம் தானாகவே சரண் அடைகிறான். பாண்டியனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் என்ற வகையில் குறுங்கோழியூர் கிழாரும், சேரனின் முன்னாள் படைத்தலைவனாக இருந்து அவமானப்படுத்தப்பட்டவனும், சித்தர் என்று அழைக்கப்படுகிறவரும் (இளமாறனுடைய தந்தை அவர்தான் என்ற மர்மம் கடைசியில் உடைகிறது) பாண்டியனிடத்தில் இளமாறனுக்காக உயிர்ப்பிச்சை கேட்கிறார்கள்! சேரனுடைய அவைப்புலவராகவோ அல்லது அபிமானியாகவோ இருந்த குறுங்கோழியூர் கிழார் சேரனை வியந்து பாடிய மேலே காட்டிய பாடலை பாண்டியனிடம் காட்டுகிறார்! பாண்டியன் தனது சகோதரியின் நிரந்தரக்காவலில் இளமாறனை வைத்துவிட்டதாகச் சொல்வதோடு கதை சுபமாக முடிகிறது.

உண்மையைச் சொல்லப்போனால் புறநானூறில் 17. 20, 22 ஆகிய மூன்று பாடல்களில் குறுங்கோழியூர் கிழார் சொல்லியிருக்கும் சரித்திரத்தை விட பாடல்  72 இல் பாண்டியன் நெடுஞ்செழியன் தன் கூற்றாகச் சொல்லும் தலையாலங்கானத்துப் போருக்கு முந்தைய சூளுரையில் இன்னும் நிறைய வரலாறு, சுமார் 1800 - 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதை இருக்கிறதென்பதை நான் அப்புறமாகத்தான் தேடித் தெரிந்து கொண்டேன். சாண்டில்யன் கதைகளில் ஆதாரமாகக் காட்டியிருக்கும் தமிழ், ஆங்கில நூல்களில் பலவற்றைப் படித்த பிறகுதான் சரித்திரத்தை எப்படி எப்படியெல்லாம் பார்க்கலாம் என்கிற நுட்பமே பிடிபட்டது என்று கூட சொல்லலாம்!

தமிழில் சரித்திரக்கதைகள் என்றால் அது சாண்டில்யன் ஒருவர் தான்! அவர் ஒருவர் மட்டும் தான் என்றும் சொல்லுவேன்!

மீண்டும் சந்திப்போம்.                         
      

7 comments:

  1. உண்மை.  சங்க இலக்கியம் அக நானூறு, புறநானூறு இதெல்லாம் படித்தால் புரிவதில்லை.  எனவே ஓடத்தான் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. அகநானூறு புரியும் ஸ்ரீராம். என்ன, அலைகள் ஓய்வதில்லை படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போல் இருக்கும். 

      Delete
    2. ஸ்ரீராம்! பா.வெ அம்மா!

      பா.வெ அம்மா பயமுறுத்துகிற மாதிரி ஒரேயடியாகத் திரும்பத் திரும்ப ஒரேவிஷயமாக சங்க இலக்கியங்கள் எதுவும் இல்லை.

      மூங்கில் கோட்டையின் சுருக்கப்பட்ட வடிவத்தை ராணிமுத்து ஒரு ரூபாய்க்கு வெளியிட்டதாக நினைவு. என்னிடம் வானதி பதிப்பக வெளியீடாக. இப்போது விலை ரூ.250 என்பது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கும்.

      கோழைச்சோழன் மாதிரியே ஒரு பாடலை மட்டும் எடுத்துக் கொண்டு இந்தக் கதையைப் பின்னியிருக்கிற மாதிரி இப்போது எனக்குத் தோன்றுகிறது. தவிர பாண்டியன் கூற்றாக அதே புறநானூறில் 72வது பாடலை எடுத்துக் கொண்டால், கூடுதலாக மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை இவைகளையும் சேர்த்துப்பார்க்க முடியுமானால் அந்தநாளைய தமிழகம் ஒட்டுமொத்தமாகப் பாண்டியன் குடைக்கீழ் வந்த வரலாறு நெடுக்கவே பேசப்பட்டிருக்கிறது.

      Delete
  2. சாண்டில்யனை படித்ததே இல்லை. நீங்கள் எழுதியிருப்பதை படித்ததும் மூங்கில் கோட்டை படித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. நம் ஊரில் கல்கியை படித்தவர்கள் சாண்டில்யனை படிக்க மாட்டார்கள், சாண்டில்யன் ரசிகர்கள் கல்கியை விரும்ப மாட்டார்கள். நான் கல்கி ரசிகை. ஆடியோ புத்தகம் கேட்டேன், எனக்கு என்னவோ அவ்வளவாக ரசிக்கவில்லை. பகிர்வுக்கு நன்றி. 

    ReplyDelete
    Replies
    1. மூங்கில் கோட்டை ராணிமுத்துவாக வந்து படித்த ஞாபகம்.  சாண்டில்யன் படித்ததே இல்லை என்பது ஆச்சர்யம்.  நான் சாண்டில்யனின் ரசிகன். கல்கியும் படிப்பேன்.

      Delete
    2. நான் கல்கியையும் படிக்கிறேன்! அப்படி ஒன்றும் மறக்கச் செய்கிற எழுத்து இல்லை! ஆ னால் சாண்டில்யனை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் வெவ்வேறு காரணங்களுக்காக வாசிக்கிறேன். சாண்டில்யன் அளவுக்கு பாத்திரங்களுடன் ஒன்றச்செய்கிற அளவுக்கு வேறு யாருடைய எழுத்தும் தமிழில் இதுவரை பார்த்ததில்லை.


      அதில் ஒரு காரணமாக ஒரு சின்ன ஆதாரம் சான்று இருந்தாலே போதும், அதைவைத்து லாவகமாகக் கதை பின்னுகிற சாமர்த்தியம் சாண்டில்யனிடம் மட்டுமே காணக் கிடைக்கிறது என்பதைத் தான் இந்தப்பதிவில் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறேன்

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)