இன்றைக்கு உலக புத்தக தினம்! முன்பு வலைப்பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் பலர் முகநூல் மட்டுமே உலகம் என்று குறுகிப்போய், தங்கள் வீட்டில் உள்ள புத்தக அலமாரியைப் படம் பிடித்துப்போட்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் எவர் ஒருவராவது அண்மையில் தாங்கள் வாசித்த புத்தகத்தைப்பற்றி வாய் திறந்திருக்கிறார்களா என்று பார்த்தால், எவருமே இல்லை என்பது யாருடைய சோகம்?
இப்படிப் புத்தக தினம் கொண்டாடுகிற எண்ணம் முதலில் ஒரு ஸ்பானிஷ் எழுத்தாளர் விசன்டே க்ளவல் அந்திரேஸ் Vicente Clavel Andrés என்பவருக்கு உண்டானது. புகழ்பெற்ற டான் கிவிக்ஹோட் Don Quixote பாத்திரத்தை உருவாக்கிய ஸ்பானிஷ் எழுத்தாளரான மிகெல் டெ செர்வான்டிஸ் Miguel de Cervantes ஐ கௌரவப் படுத்துகிற விதத்தில் அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 7 ஆம் தேதி புத்தக தினமானது. பின்னால் அவருடைய மறைவுநாளான ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதற்கு, ஏப்ரல் 23 அன்று வேறு சில எழுத்தாளர்கள் பிறந்த / இறந்த நாளாகவும் இருந்தது என்பதைத்தாண்டி பெரிதான காரணம் எதுவுமில்லை,
மேலைநாடுகளில் உலகப்புத்தக தினத்தை பள்ளிகள், கல்லூரிகளோடு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் சேர்ந்து வாசிப்புப்பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கிற விதத்தில் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்துகிறார்கள். புத்தகக்கண்காட்சிக்குப் போய் கிலோக்கணக்கில் புத்தகங்களை வாங்குகிறார்கள். புத்தகங்களைப்பற்றிப் பேசாமல் டெல்லி அப்பளம் கடித்ததை மட்டுமே பிரதானமாகப் பகிர்கிறார்கள் என்பதால் நம்மூர் நிலவரத்தை இங்கே பேசாமல் இருப்பதே உத்தமம்.
புத்தகங்களை விரும்பி வாசிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்களிடம் தெரிந்துகொள்ள விரும்புகிற சில தகவல்கள், இங்கே கேள்விகளாக:
A. புத்தகங்களை எப்படிப் பெறுகிறீர்கள்? 1.நூலகம் 2.நண்பர்களிடம் இரவல் வாங்கி 3. சொந்தமாகவே வாங்குவது 4. இதர வழிகள் (என்னவென்று சொல்லவும்)
என்வரையில் மதுரை சுப்ரமணியபுரம் கிளைநூலகம் தான் மாணவப்பருவத்தில் எல்லாவிதமான புத்தகங்களையும் அள்ளிக்கொடுத்தது அப்புறம் சிம்மக்கல் மாவட்ட நூலகம், அப்புறம் பல்கலைக்கழக நூலகம் என்று ஆரம்பகாலவாசிப்புக்கு பொது நூலகங்களே வித்திட்டன. நண்பர்களிடமிருந்து இரவல் வாசிப்பு மிகவும் குறைவே. என்னுடைய இரண்டாவது அண்ணன் வடக்கே என்ஜினீயராக இருந்தவர், மதுரைக்கு வரும் நாட்களில் ஏகப்பட்ட ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிவருவார் என்பதிலேயே நிறைய ஆங்கில எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானார்கள். சொந்தமாக புத்தகங்களை வாங்க ஆரம்பித்தபிறகு நூலகங்களை பயன்படுத்துவது குறைந்து போனது. சில தனியார் நூலகங்களில் பிரபலமான புத்தகங்களை காசுக்கு இரவல் வாங்கிப்படித்ததுமுண்டு. புத்தகத்தின் விலையில் 10% வாங்குவார்கள்.
B. பொதுநூலகங்கள் / தனியார் நூலகங்கள் பயன் படுத்துவதுண்டா? உங்களுடைய அனுபவம் எப்படி?
மேலேயே இதற்கான பதிலையும் சொல்லிவிட்டேனே!
C. என்னமாதிரி வாசிப்பை விரும்புகிறீர்கள்? புனைவு /அபுனைவு சமூகக்கதை/சரித்திரக்கதை அறிவியல் / தத்துவம் /அரசியல் / இதர தலைப்புக்கள் (என்னவென்று குறிப்பிடவும்)
பொதுநூலகங்களில் கிடைத்த புத்தகங்கள் அத்தனையையும் வாசித்த மாணவப்பருவம் என்னுடையது. தாகூரின் கோரா நாவலை தமிழில் படித்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா? இன்றைக்கு அதை சீந்தக்கூட மாட்டேன். தமிழில் ஐசக் அசிமாவ் எழுதிய அறிவியல்நூல்கள் அனைத்தையும் படித்தநாட்கள் அவை. தோல்ஸ்தோய் அ லெ நடராஜன், ரா க்ருஷ்ணய்யாவின் மொழிபெயர்ப்பில் மிக சரளமாக அறிமுகமானார். அரசியல், தத்துவம் என்று எல்லா விஷயங்களையும் படித்தே ஆகவேண்டுமென்று மிகத் தீவீரமாக வாசித்த நாட்கள்! நூலகர்கள் அந்தநாட்களில் இதைப்படி, அதைவிட இது இன்னும் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தே வாசிப்பு வேள்வியை எனக்குள் வளர்த்தார்கள்.
சராசரியாக ஒருநாளைக்கு /ஒருவாரத்தில் எவ்வளவு பக்கங்கள் வாசிப்பீர்கள்?.
ஆரம்ப நாட்களில் ஒருநாளைக்கு இருநூறு முதல் முன்னூறு பக்கங்கள் வாசிக்கும் வழக்கம் இருந்தது. இப்போதும் ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து விட்டால் அதை அதிகபட்சம் மூன்று தவணைகளுக்குள் வாசித்து விடுவேன். கடந்த டிசம்பரில் சாண்டில்யன் கதைகளை ஒரு மீள்வாசிப்பு செய்தேன். சுமார் 7600 பக்கங்கள்.
இந்தவருடத்தில் படித்த/படிக்க எடுத்துக்கொண்ட புத்தகங்கள் என்னென்ன? நூல் பெயர் மற்றும் நூலாசிரியர் பெயருடன்
பழையதும் புதியதுமாக ஒரு பட்டியலே இருக்கிறது. படிக்க ஆரம்பித்து இன்னும் முடிக்காமல் இருக்கிற ஒரு புத்தகம் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் NSA வாக இருந்த ஜான் போல்டன் எழுதியது. அலுப்புத்தட்டுகிற மாதிரி இருந்ததால் முதல் 250 பக்கங்களை ஒட்டி அப்படியே நிற்கிறது.
நீங்கள் வாசித்ததிலேயே மிகவும் பிடித்ததான புத்தகம் எது? எதனால் பிடித்தது என்பதைச் சொல்ல முடியுமா?
தி ஜானகிராமனின் அன்பே ஆரமுதே, செம்பருத்தி, உயிர்த்தேன், நளபாகம், அப்புறம் சிறுகதைகள்.
ஜெயகாந்தனின் கதைகளை இன்னொருமுறை மீள்வாசிப்புக்காக எடுத்திருக்கிறேன். எண்டமூரி வீரேந்திரநாத் கதைகள் முழுதும். இவர்களுடைய எழுத்துநடை வித்தியாசமானது, கதைக்களம், கதை சொல்கிற உத்தி எல்லாமே வித்தியாசமானவை.இது ஒரு சிறு fraction மட்டும்தான். ஆங்கிலத்தில் படிப்பதற்கு ஏராளமான எழுத்தாளர்கள் இருந்தாலும் அலெக்ஸாண்டர் டூமா, சார்லஸ் டிக்கென்ஸ் போன்ற பழைய எழுத்தாளர்களை மிகவும் பிடிக்கும்.
மீண்டும் சந்திப்போம்.
