Friday, January 8, 2010

புத்தகக் கண்காட்சியும், புத்தகம் படிப்பதும்!



நேற்றைக்கு மகன் சென்னையில் இருந்து அலைபேசியில் பேசினான்.

"புத்தகக் கண்காட்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். உனக்கு ஏதோ புத்தகம் வேண்டுமென்று சொன்னாயே, இப்போது சொல்!"

கொஞ்சம் தயங்கினேன். என்னுடைய பட்டியல் மிகப் பெரியது. தவிர, புத்தகங்களை நேரில் பார்த்து, கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிட்டு, ஆசிரியரின் நடையை ஒரு சாம்பிள் பார்த்து வாங்குவது தான் எனக்குப் பழக்கம். மொட்டையாக, திடீரென்று என்ன வேண்டுமென்று கேட்டால், என்ன  சொல்வது?

இதயம் பேசுகிறது மணியன்  ஆதரவில் வளர்ந்த சில  எழுத்தாளர்களை, அவர்களுடைய அபத்தமான உளறல்களை, ஒரு பதத்திலேயே இனம் கண்டு, தவிர்த்தவன். அதே மாதிரி,  தம்பட்டம் கொட்டிக் கொண்டு, ஆர்ப்பாட்டமாக  வருகிறவர்களை எல்லாம், என்னுடைய முதல்தேர்வாக எப்போதுமே எடுத்துக் கொள்வது இல்லை.

பாலகுமாரனைக் கூட, அப்படித்தான், ஆரம்பத்தில் என்னுடைய முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதில்லை. தொழிற்சங்க வேலைகளில் மும்முரமாக இருந்த நேரம் அது. மதுரை வங்கியில் பணியாற்றி வந்த இரண்டு நண்பர்கள் பக்கத்து அறையில் தங்கியிருந்தார்கள். பாலகுமாரனை வெறியோடு வாசித்தவர்கள் அவர்கள். எனக்கும் சிபாரிசு செய்து, படிக்கக் கொண்டு வந்து கொடுத்தபோது அந்த நாட்களில் ஒதுக்கியிருக்கிறேன்.

அப்புறம் சிலகாலம் கழித்து, எனக்கு நேரம் கிடைத்த தருணத்தில் ஒரே மூச்சில் அத்தனை புத்தகங்களையும் படித்தும் பார்த்தாயிற்று! நண்பர்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் அளவுக்கு அப்படி என்ன தான் இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக ஆரம்பித்தது.

இப்போதெல்லாம் பாலகுமாரன்   என்றால் ஒருவிதமான அலுப்பும் வந்து விடுகிறது. எழுத்துச் சித்தராக, இன்றைக்கும் கூட சில வாசகர்களுக்குத் தென்படுகிற பாலகுமாரன், ஒரு கட்டத்தோடு தேங்கிப் போனவராகவே எனக்குத் தென்படுவதுதான் காரணம். ஏற்கெனெவே சொன்னதைத் தவிர, புதிதாக அவரிடம் ஏதுமில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. பொறுமை அதிகமாக இருந்தால், உடையார் ஆறு பாகங்களாக அதில் என்னதான் சொல்லியிருக்கிறார் என்பதைப் படித்துவிடும் எண்ணமும் இருக்கிறது. ஆனால், என்னுடைய முன்னுரிமைப் பட்டியலில் இல்லை.

என்னுடைய தேர்வு, சில அடிப்படைக் கேள்விகளோடு, தேடலோடு சம்பந்தப்பட்டது. எனக்குப் பிடித்தமான விஷயத்தைப் பற்றி எழுதியிருந்தால் தான் படிப்பேன் என்று எப்போதுமே இருந்ததில்லை, நேரெதிர் கருத்தைச் சொல்லியிருந்தாலுமே கூட, சொல்வதில் ஒரு லாஜிக் இருந்தால், அந்த மாதிரி எழுத்தாளர்களையும் என்னுடைய வாசித்தே தீரவேண்டியவர்கள் பட்டியலில் வந்து விடுவார்கள்.

"அப்பா, தி.ஜானகிராமன் புத்தகங்கள் வேண்டுமென்று சொன்னாயே! இங்கே கேட்டால் எவரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். குறைந்த பட்சம் பதிப்பகம் பெயராவது தெரியுமா?  சொன்னாலாவது, சொல்லலாம் என்கிறார்கள்" ஏதோ ஒரு ஸ்டாலில் இருந்து, மகனிடமிருந்து மறுபடி கேள்வி.

"ஐந்திணைப் பதிப்பகம் என்று ஸ்டால் இருக்கிறதா என்று பார்!"

புத்தகக் கண்காட்சி பற்றிய, குவியல் குவியலான பதிவுகள், இத்தனை புத்தகம் போன வருடம் வாங்கியதே படிக்காமல் இருக்கிறது என்று ஒரு பட்டியல் போட்டு விட்டு, இந்த வருடம் இத்தனை ரூபாய்க்கு, இன்னின்ன பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தை வாங்கப் போகிறேன் என்றெல்லாம் அளந்து கொண்டிருக்கும் பதிவுகளை ஒரு பக்கம் பார்த்துக் கொண்டேவரும் நேரத்தில், தமிழ் எழுத்துலகின் மிகப் பெரிய ஆளுமையான தி. ஜானகிராமன்  புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று சொல்லக் கூடத் தெரியாத, அல்லது சொல்ல மனமில்லாத ஆசாமிகள்....புத்தகம் விற்கிறார்களாம்! 

சிறிது நேரம் கழித்து மறுபடியும் மகனே பேசினான். "என்னென்ன புத்தகம் சொல்லு!" ஐந்திணை ஸ்டாலை அடையாளம் கண்டு போய்ச் சேர்ந்து விட்டான்.

 "ஐந்திணை கதிரேசன் அங்கு இருக்கிறாரா கேள்!"  என்று நான் கேட்டதை அவனும் அங்கே எவரிடமோ கேட்க, " அதோ இருக்கிறார் பாருங்க! அவர்தான் கதிரேசன் " என்று சொல்வது இந்த முனையில் கேட்கிறது. "பேச வேண்டுமா? செல்லைக் கொடுக்கட்டுமா?" மகன் பரபரத்தான்.

"வேண்டாம், எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பார்த்தது, இப்போது அதையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்க முடியாது. மலர் மஞ்சம், உயிர்த்தேன், செம்பருத்தி இதெல்லாம் இருக்கிறதா என்று பார்!"

கேட்ட  மூன்றுமே இருந்தது. ஒன்று சேதப்பட்டதாக இருப்பதாகவும் தெரிந்தது.

ஒருவழியாக, மகன் கொள்முதல் செய்துவிட்டு, மறுடியும் பேசினான். "அப்பா! தி.ஜா புத்தகம் மட்டும் வாங்கவில்லை. ஒரு புத்தகம் இருநூற்றைம்பது ரூபாய் என்று சொன்னார்கள்! அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்."

"சரி! வேறு என்ன தான் வாங்கினாய்?"

"ஒரு பத்துப் பனிரண்டு புத்தகம்! இதுவே ஆயிரத்தைநூறு ஆகிவிட்டது! The Moneychangers வாங்கியிருக்கிறேன்! நூற்று முப்பது ரூபாய் தான்! அடிக்கடி இது படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்வாயே!"

"நல்ல சாய்ஸ்! ராஜீவ் காந்தி கொலைவழக்கைப் பற்றி ஒரு புத்தகம் வந்திருக்கிறதே, அதை வாங்கினாயா? ராமச்சந்திர குஹா எழுதிய காந்தியை பற்றிய நூலின் மொழிபெயர்ப்பும் கிடைக்கிறதே பார்த்தாயா?"

"இல்லை.ஜெயமோகனுடைய காந்தி வாங்கினேன். மற்றதை அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம்!"

இது நிஜமாகவே, நேற்றைக்கு இரவு என்னுடைய மகனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல். மதியம் தான் ஆர்தர் ஹைலியின் The  Moneychangers புத்தகத்தைப் பற்றி ஒரு விமரிசனமாக இங்கே எழுதி வலையேற்றம் செய்து முடித்தபோது மின்வெட்டு! மகனிடம், அந்த வலைப் பக்கத்தைக் கொஞ்சம் பார்க்கச் சொன்னேன். என்னுடைய  பதிவுகளை எட்டிக் கூடப் பார்க்காதவன், ஒரு நான்கைந்து மாதங்களுக்கு முன்னால்,  காந்தி, நேரு, சாஸ்திரி, பொருளாதாரம் என்று தொட்டு எழுதிய பதிவுகளைப் பார்த்திருக்கிறான்.

இந்தப் புத்தகக் கண்காட்சி,  சென்னையில் நடக்கும் பத்தோடு பதினொன்றாக, ஒரு பொழுதுபோக்காக ஆகிவிட்டதோ என்று கூட, சில பதிவுகளைப் படித்த போது எண்ணம் வந்தது. ஒரு பொருட்காட்சிக்குப் போனால், அங்கே கூடத்தான் ஏதோ ஒன்றினால் உந்தப் பட்டுத் தேவை  இருக்கிறதோ இல்லையோ  எதையாவது வாங்கி வருகிறோமே, அதுபோலத்தானா இதுவும்?

நல்ல புத்தகங்கள், மிகப்பெரிய தோழனாகவும் துணையாகவுமே இருக்கக் கூடிய வல்லமை பெற்றவை. வெறும் சந்தைப் பொருள் மட்டுமே அல்ல!
வலைப் பதிவுகளில் கிறுக்கித் தள்ளுவதைஎல்லாம் தொகுத்து, அதையும் புத்தகமாக்கி விற்பனை செய்யும் வியாபார உத்திகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

அது போதாதென்று, வலைப் பதிவர்கள் சிலருடைய படைப்புக்களில் இருந்து கொஞ்சம் உருவி, அதையும் பதிப்பிக்கும் போக்கும்,பதிப்புலகமும், வாசகர்களும் என்ன திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அப்படிக் காட்டுவதும்  ஆரோக்கியமான போக்காகத் தெரியவில்லை என்ற வருத்தம் தான் மேலிடுகிறது.

குறைந்தது மூன்று அல்லது நான்கு பதிவுகளிலாவது, சென்ற வருடம் வாங்கினதையே  இன்னமும் படித்து முடிக்கவில்லை என்ற வாக்கியத்தைப் பார்க்க முடிவதும், அப்படியும் சொல்லிவிட்டு, இந்த வருடம் நான் இன்ன பதிப்பகத்தின் இந்த இந்தப் புத்தகங்களை வாங்கப் போகிறேன் என்றும் சொல்வது பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடியவை தானா?

வீணை இருந்தும் பயனேது? -வந்து
மீட்டும் வரையில் இசையேது?


இந்தப்  பழைய திரைப்படப் பாடல் தான் இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருகிறது!

என்னுடைய அடுத்த கேள்வி!

இப்போதெல்லாம் புத்தகம் வெளியிடுவது என்பது இன்றைய தலைப்புச் செய்திகள் மட்டும் தானா?
 

வாசிப்பது என்பது அதை மட்டும் வாசித்து விட்டுப் போய் விடுவது தானா?

13 comments:

  1. i agree with you. keep writing best wishes

    ReplyDelete
  2. \\இந்தப் புத்தகக் கண்காட்சி, சென்னையில் நடக்கும் பத்தோடு பதினொன்றாக, ஒரு பொழுதுபோக்காக ஆகிவிட்டதோ என்று கூட, சில பதிவுகளைப் படித்த போது எண்ணம் வந்தது.//
    \\குறைந்தது மூன்று அல்லது நான்கு பதிவுகளிலாவது, சென்ற வருடம் வாங்கினதையே இன்னமும் படித்து முடிக்கவில்லை என்ற வாக்கியத்தைப் பார்க்க முடிவதும், அப்படியும் சொல்லிவிட்டு, இந்த வருடம் நான் இன்ன பதிப்பகத்தின் இந்த இந்தப் புத்தகங்களை வாங்கப் போகிறேன் என்றும் சொல்வது பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடியவை தானா?//
    சரியாகச் சொன்னீர்கள் கிருஷ்ணமூர்த்தி! நான் ஒப்புக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி டாக்டர் ருத்ரன், திரு ரவி பிரகாஷ்!

    புத்தகங்களை நேசிப்பவன், சிறுவயதில் இருந்தே வாசிக்கப் பழகியவன் என்ற வகையில், என்னுடைய வருத்தம் இது தான்!பொழுதுபோக்கவும், காற்று வாங்கவும் புத்தக கண்காட்சிக்கு வருவது கூடத் தவறு இல்லை!

    வாசித்தேன் என்று சொல்வதை விட வாங்கினேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது தான் அதிகமாக இருக்கிறது. வாங்கியதில் ஒரு நான்கு பக்கங்களையாது படித்துவிட்டு அப்புறம், அதைப் பற்றிய கருத்தை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஒரு ஆதங்கம் தான்!

    ReplyDelete
  4. பாலகுமாரன் பற்றி சரியாய்ச் சொன்னீர்கள். என்னைப் பொறுத்தவரை அவரது நல்ல கதைகள் என்பது மெர்க்குரிப் பூக்கள், மற்றும் இரும்புக் குதிரைகள் மட்டும்தான். பிறகு படிக்கும்போது ஒரு செயற்கைத் தனம் வந்துவிடுவதாகப் படுகிறது. அடல்ட்ரி என்பது அவர் கதைகளில் சகஜம். அவருக்கு வரும் வாசகர் கடிதங்களும் அவர் பாஷையிலேயே (நமஸ்கரிக்கிறேன்...குரு தேவா...) எழுதப் பட்டு நெளிய வைக்கும்.

    போன வருடம் வாங்கிய புத்தகங்களே படிக்காத நிலையில் இந்த வருடமும்....உண்மைதான். ஆனால் தவிர்க்க முடியவில்லை. என்றாவது படித்து விட மாட்டோமா என்ன..?!

    இந்த ஞாயிறு Readers Club போகிறீர்களா?!!

    வாங்கினேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள புத்தகம் வாங்குவதில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. //தி. ஜானகிராமன் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று சொல்லக் கூடத் தெரியாத

    நீங்கள் திரும்பவும் இதைப் படித்து பாருங்கள். தி.ஜானகிராமன் புத்தகம் படிக்கவில்லை என்றால் அவன் வாசகனே கிடையாது என்ற தொணியில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த படகு, நீச்சல் அடிக்கத் தெரிந்தவன் கதை தான் நினைவுக்கு வருகிறது. பலவிதமான வாசகர்கள், பல விதமான புத்தகங்கள். ஓவ்வொன்றும் ஒரு செய்தியைத் தாங்கி வருகிறது. அவ்வளவே. இது மட்டமான புத்தகம், நல்ல புத்தகம் என்பது ஒவ்வொருவரின் படிப்புத்திறனைப் பொறுத்தது. உங்கள் பார்வையில் தி.ஜானகிராமன் பற்றி தெரியாதவர்கள் புத்தகம் விற்கக் கூடாது என்பது.


    //வலைப் பதிவுகளில் கிறுக்கித் தள்ளுவதைஎல்லாம் தொகுத்து

    ஏன் இந்த கிறுக்கல்களில் இருந்து, அடுத்த 50 ஆண்டுகள் கொண்டாடப்படப்போகும் எழுத்தாளர் ஒருவராவது இருக்க மாட்டார் என்று நினைக்கிறீர்களா ?. அப்படி நினைத்தால், தொழில் நுட்ப வளர்ச்சியை சரியாக கணிக்கத் தெரியாதவர்களாக ஆகிவிடும் நிலை இருக்கிறது. எனவே அனைவரையும் உற்சாகப் படுத்துவோம். நல்ல நூல்கள் மட்டுமே காலத்தால் அழியாத வகையில் இருக்கும். புற்றீசல்கள் இறந்து போகும். கவலை வேண்டாம்.

    //சென்ற வருடம் வாங்கினதையே இன்னமும் படித்து முடிக்கவில்லை

    இதில் தவறு இருப்பதா எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவரின் படிப்பு வேகம் வித்தியாசப்படும். சிலர் ஒரு நாளில் படிப்பதை, சிலர் ஒரு வருடம் கூடப் படிக்கலாம். அன்றே படிக்க அது ஒன்றும் நாளிதழ் அல்லவே. மேலும், அவ்வளவு செலவு செய்து புத்தகம் வாங்குபவர்கள் அதை தூக்கி எறிய வேண்டும் என்று வாங்குவது இல்லை. சில புத்தகங்கள், சில வருடம் கழித்து கிடைக்காமல் போய் விடும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் கிடைக்கும் போது வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது ? நீங்களே சில புத்தகம் கிடைக்க வில்லை என்று வருத்தப் பட்டிருக்கிறீர்கள். இந்த அவசரகதி வாழ்க்கையில், டி.வி மற்றும் பல்வேறு இடையூறுகளில், புத்தகம் படிக்கும் வேகம் குறைந்து இருக்கிறதே தவிர மறைந்து விடவில்லை.

    வாசிப்பு அரிதாகிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், ஊக்குவிப்பது முக்கியம். இவையாவும் என் கருத்து மட்டுமே. நன்றி.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி. பின்னோக்கிப் பார்ப்பதோடு, பதிவில் சொல்லியிருப்பதையும் கொஞ்சம் பாருங்கள்.
    ஜானகி ராமன் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு, ஒரு புத்தக ஸ்டாலில் என் மகனுக்குக் கிடைத்த பதில், தெரியாது, எந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது என்பதாவது தெரிந்தால் ஏதாவது சொல்லலாம் என்பது!

    என்னிடம் பேசியவுடன், ஐந்திணைப் பதிப்பகம் என்று கேட்டுப் பார் என்று சொன்னேன். தி. ஜானகி ராமன் தமிழ் எழுத்தின் ஆளுமை என்று தானே சொல்லியிருக்கிறது!படிக்காதவன் வாசகனே இல்லை என்று எங்கே சொன்னேன்? எழுதியிருக்கிற, வெளியிடப் பட்டிருக்கும் அத்தனையையும் படித்தால் தான் வாசகன் என்று சொல்லவில்லையே! தெரிவு செய்து படித்தல் என்பதை என்னுடைய பழக்கமாகச் சொல்லியிருக்கிறேன் அவ்வளவுதான்!

    உங்களுடைய பதிவில் கூட, கீரி-பாம்பு சண்டை வித்தை காட்டிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் இரண்டு பேருடைய புத்தகம் வாங்கினீர்களா, படித்தீர்களா என்ற கேள்வியை நீங்களாகவே எழுப்பி, ஹீஹீஹீ என்று பதிலையும் சொல்லியிருப்பதைப் படித்த போது, ஒரு முன்கூட்டிய முடிவுகளோடு தான் எதையுமே பார்க்கிறீர்கள் என்பது தெரிகிறது.

    அடுத்த ஐம்பது ஆண்டுகளில் கொண்டாடப் படப் போகும் பதிவர்-எழுத்தாளர்..!!??
    ஜே கே ரித்*************மாதிரி, சீரியசாகவே நல்ல காமெடி செய்திருக்கிறீர்கள் தானே :-))

    வாசிப்பது ஊக்குவிக்கப் படவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! ஆனால், அது புத்தகக் கண்காட்சிகளில், அல்லது தெருவோரத்தில் விற்கும் பஞ்சு மிட்டாயோ, பலூனோ இல்லை!


    வாசிப்பதும், கேட்பதும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தவிக்கும் மனிதனுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிற தோழமை அது! ஒரு பண்பு! இதமாக, வாசகனோடு ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிற காதல்!

    என்னுடைய புத்தகங்களோடும், வாசித்த அனுபவங்களோடும் கிடைத்த கருத்து இது!

    ReplyDelete
  7. நன்றி உங்களின் பதில்களுக்கு.

    இரண்டு எழுத்தாளர்களின் சில புத்தகங்களை வாசிக்க முயன்று புரியாமல் (என் படிப்பு அறிவு அவ்வளவு தான்) போய்விட்ட காரணத்தாலேயே அந்த மாதிரி எழுதியிருக்கிறேன். பின்னூட்டத்தில் அதன் விளக்கம் எழுதியிருக்கிறேன்.

    இல்லை சிரிப்புக்காக இல்லை. நீங்கள் பதிவுலகில் இருந்து எந்த ஒரு பெரிய, அடுத்த 50 ஆண்டுகள் கொண்டாடபடப்போகும் ஒருவர் வரப்போவது இல்லை என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்களோ அதே நம்பிக்கையில் தான் நல்ல எழுத்தாளர் ஒருவராவது வருவார் பதிவுலகிலிருந்து என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  8. பின்னோக்கி பார்ப்பதோடு உங்கள் பதிவையும் இன்னும் ஒரு முறை ஆழ்ந்து படித்தேன்.என்னுடைய புரிதல்.

    //தி. ஜானகிராமன் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று சொல்லக் கூடத் தெரியாத, அல்லது சொல்ல மனமில்லாத ஆசாமிகள்....புத்தகம் விற்கிறார்களாம்!


    புத்தகம் விற்கிறார்களாம்! என்பதன் பொருள் எனக்கு புரியவில்லை சார். மன்னிக்கவும்.

    ReplyDelete
  9. பதிவர் பின்னோக்கி!
    பதில்கள் கொஞ்சம் காயப் படுத்தின மாதிரி ஆகி விட்டதோ?
    ஒரு கோர்வையாக, மூன்று அல்லது நான்கு பத்திகளில் சொல்லி, ஒரு கருத்தைச் சொல்ல முனையும் போது, நடுவில் ஏதோ ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சொல்லவந்தது இது தான் என்று தீர்மானித்துக் கொண்டு பேசுவது சரியாக இருக்குமா?

    ......புத்தகம் விற்கிறார்களாம்! என்று முத்தாய்ப்பாகச் சொன்னதற்கு முந்தைய மூன்று பத்திகளைச் சேர்த்துப் பாருங்கள்! உங்களுக்குக் கிடைத்த அனுபவம் எப்படி என்று எனக்குத் தெரியாது, எனக்கு, புத்தகக் கடைகளில் கிடைத்த அனுபவங்களே வேறு! மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையில், புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், பின்னால் மென்மையான குரலில், அந்தப் புத்தகத்தை பற்றியோ, அதை விட இன்னும் சிறப்பான புத்தகம் ஒன்றையோ அறிமுகம் செய்யும் குரல்! புத்தகத்தை விற்பனை செய்யவேண்டுமே என்ற விற்பனையாளனின் குரல் அல்ல அது! புத்தகங்களை நேசித்த, அதை முழுமையாக வாசித்தஒரு வாசகன், இன்னொரு வாசகனோடு ஆர்வமாகப் பகிர்ந்துகொள்ளும் குரல்!
    திரு நவநீத கிருஷ்ணன், அந்தப் புத்தக நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து, அதன் செயலாளராகவும் ஆனவர். சென்ற அக்டோபரில் தான் காலமானார்!
    பள்ளி இறுதிப் படிப்பை மட்டுமே முடித்த அவரால், வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கடைக்கு வருகிறவர்களிடமும் உண்டாக்கத் தெரிந்த வித்தையை நிறையத் தரம் அனுபவித்தவன் நான்.

    வாசிப்பை ஊக்குவிப்பது எப்படி என்பதை நான் பார்க்கும் விதம் வேறு! ஆர்ப்பாட்டமான கண்காட்சிகளை நடத்தி, அங்கே காண்டீனில் என்ன சாப்பிட்டோம் எந்த எந்தப் பிரபலங்களைப் பார்த்தோம் என்று பட்டியலும் புகைப்படமும் வெளியிடுவது மட்டுமே ஊக்குவிப்பது என்று நீங்கள் கருதினால், அதற்கு நான் தடையாக இருக்கப் போவதில்லை.

    அடுத்தது, வலைப்பதிவுகளில் எழுதுபவர்களில், இன்னும் ஐம்பதாண்டுகளில் கொண்டாடப் படப் போகிறவர்களைப் பற்றி...அப்படி யாராவது வருவார்கள், அல்லது வரவே மாட்டார்கள் என்பதெல்லாம் என்னுடைய நம்பிக்கைகளின் சுமையில் சேர்த்துக் கொள்வதாக இல்லை. வலைப் பதிவுகளின் வடிவமும், வெளிப்படுத்துகிற கலையும், புத்தகங்கள், கவிதை எழுதுவதை விட வேறானது.

    அதைக் கண்டுகொள்வதற்கு ஐம்பதாண்டுகள் போகவேண்டாம்! இப்போதே, இங்கேயே R P ராஜ நாயஹம் ஒருவர் இருக்கிறார். அவரை விட, வலைப் பதிவுகளைத் திறமையாகக் கையாளத் தெரிந்த வித்தைக் காரரைப் பார்ப்பது மிகவும் கடினம். இதை சொல்லும்போதே வேறு யாருமே இல்லை என்று சொல்வதற்காக இல்லை, இன்னும் பல பதிவர்கள் வெவ்வேறு வடிவங்களில் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், நானும் அவர்களை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

    இந்த வலைப்பதிவு வடிவம் வேறு, புத்தகமாகப் படிக்கிற வடிவம், உள்ளடக்கமே வேறு. நான் சொல்ல வந்தது, கொஞ்சம் பேர் தெரிய வந்தவுடன், அல்லது சும்மா எழுதிக் கிறுக்கியதை எல்லாம் வெளியிட்டு, மாப்பிள்ளை மச்சான் படைப்பும் அதில் ஒரு ஓரத்தில் வந்திருக்கிறது என்ற ஒன்றை மட்டும் வைத்துக் காசு பார்ப்பவர்களைக் குறித்தானது மட்டுமே! அதே மாதிரி, இணையத்தில் எழுதியதையே, புத்தகமாக வாந்தி எடுக்கும் ரிபீட்டு கல்ச்சரை மட்டுமே!

    ReplyDelete
  10. வாசிப்பனுபவம் மிக மிகக் குறைவு எனக்கு. இல்லை என்றே கூட சொல்லலாம். கல்லூரிக்காலங்களில் பாலகுமாரனின் ரசிகனாக இருந்தவன்தான் நானும. அதனால் அதிகம் கருத்து சொல்ல முடியாவிட்டாலும் பல விஷயங்களில் ஒத்துப்போகிறேன்.

    ///நல்ல புத்தகங்கள், மிகப்பெரிய தோழனாகவும் துணையாகவுமே இருக்கக் கூடிய வல்லமை பெற்றவை. வெறும் சந்தைப் பொருள் மட்டுமே அல்ல!///

    மிகச்சரியாகச் சொன்னீர்கள்

    வலைப் பதிவுகளில் கிறுக்கித் தள்ளுவதைஎல்லாம் தொகுத்து, அதையும் புத்தகமாக்கி விற்பனை செய்யும் வியாபார உத்திகள் முகம் சுளிக்க வைக்கின்றன.///

    இதில் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக சொல்லிவிடமுடியாதென்றே நினைக்கிறேன். சில நல்ல படைப்புகளும் படைப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு தொடக்கமாகவும் கூட அமையலாம் அல்லவா.

    ReplyDelete
  11. வாருங்கள் நவாஸுதீன்!

    வலையில் எழுதுவது ஒரு விதமான வடிவம். புத்தகங்கள் வேறு விதம் தெருக்கூத்து, சினிமா இரண்டையுமே எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டிலுமே சொல்லப்படுவது ஒரே கதை உரையாடல் ஒன்றே என்று வைத்துக் கொண்டாலும், அது வெளிப் படுகிற விதமே வேறு வேறாகத் தான் இருக்கும் இல்லையா?பதிவுகளில் பின்னூட்டக் கும்மிகளுக்காக என்ன எழுதுகிறோம் என்பது புரியாமலேயே எழுதிக் கொண்டிருப்பவர்கள் தமிழில் அதிகம்! வித்தியாசமான சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள்,மறுக்கவில்லை!


    அது போலத்தான்! வலைப் பதிவர்களில் நல்ல எழுத்தாளர்கள் உருவாக முடியாது என்ற அர்த்தத்தில் நான் சொல்லவரவில்லை. எழுதுவது, ஒரு கலை! பதிவாக இருந்தாலும், புத்தகமாக இருந்தாலும், யாருக்காக, எதற்காக எழுதப் படுகிறது என்ற தெளிவு இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். ஒரு உதாரணத்திற்கு, பாலகுமாரனையே எடுத்துக் கொள்ளலாம்! அவர் எழுத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள் என்று சொன்னதாலேயே, அவரை உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன், மற்றபடி அவரைத் திறனாய்வு செய்வதற்காக இல்லை.

    பெண்களின் சுயம், அவர்களுக்கென்று நிறைய ஆசைகள், கனவுகள், இதைத் தொட்டு எழுத ஆரம்பித்தவராக அறியப்பட்ட தருணங்களில் பாலகுமாரன் புகழின் உச்சத்திற்கு சென்றார். களவொழுக்கம், தடுமாறுதல், காமம் காதல் முதலானவைகளைத் தோளில் கைபோட்டு சிநேகித பூர்வமாகப் பேச ஆரம்பித்தபோது, பாலகுமாரன் அற்புதமானவராகத் தெரிய ஆரம்பித்தார். அப்புறம் என்ன ஆயிற்று?

    ஒரே பாணியில் தான் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். என்பது புரிய ஆரம்பித்த தருணங்களில், நிறையப் பேருக்கு அன்னியமாகியும் போனார். போதாக்குறைக்கு, சினிமாவுக்குள் நுழைந்தபோது, அந்த உலகத்துக்குத் தகுந்த மாதிரி, கொஞ்சம் குல்லாப் போட வேண்டியும் இருந்தது! கொஞ்சம் கூடக் கூசாமல் செய்தார்!

    எழுதுவது முதலில் தனக்காகவே, தன்னுடைய திருப்திக்காகவே என்ற நிலையில் இருந்து தடுமாறும் எழுத்து, சமரசங்கள் செய்துகொள்ள ஆரம்பிக்கிறது. அப்புறம், நேற்றுப் பேசியதை மாற்றி மாற்றிப் பேச ஆரம்பிக்கிறது, சண்டை போட்டுக் கொள்கிறது., தன்னுடைய எழுத்து வலிமையால், தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்க முடியாமல், எவரோ காலிசெய்துவிட்டுப் போன இடத்திற்காகக் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்கிறது. இன்றைக்கும்கூட இதைப் பார்க்கிறோமல்லவா?

    ReplyDelete
  12. // தி. ஜானகிராமன் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று சொல்லக் கூடத் தெரியாத, அல்லது சொல்ல மனமில்லாத ஆசாமிகள்....புத்தகம் விற்கிறார்களாம்! //

    தி.ஜா. ரா. வின் புத்தங்களை படித்திருக்க வேண்டும் என்று இல்லை. தமிழில் அப்படி ஒரு பெயருடன் ஒருவர் இருந்தார் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் இங்கு நிறைய. இது முற்றிலும் உண்மை. இப்படி இருபது பற்றி இங்கு யாரும் அலட்டிகொள்வதில்லை.

    தி.ஜா.ரா. வின் நாவல்களை முதலில் மீனட்சி புத்தகாலயம் தான் பதிபித்தார்கள். இப்போது யாரிடம் உரிமைகள் உள்ளதோ தெரியவில்லை. மற்றவைகளிபோல கண்காட்சிகளில் புத்தகம் வாங்குவதும் ஒரு பாஷன் என்ற அளவில்தான் இருக்கிறது.

    ReplyDelete
  13. தி.ஜாவின் புத்தகங்களை இப்போது ஐந்திணைப் பதிப்பகம் தான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. பதிவிலேயே, ஐந்திணை கதிரேசன் ஐயாவைப் பற்றி வருமே, கவனித்தீர்களா மாணிக்கம்! இது ஓராண்டுக்கு முன்னால் எழுதிய பதிவு, இன்னமும் இங்கே சொல்லப்பட்ட நிலை மாறியிருப்பதாகத் தெரியவில்லை என்பது கொஞ்சம் வருத்தத்துடன் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)