Saturday, August 21, 2010

இது என் குற்றமா....? டாக்டர் மு.வரதராசன்



ஆயிரம் பக்கங்களுக்கு மேல், நூற்றுக்கணக்கான பாத்திரங்களை  வைத்துக் கதை பண்ணிவிடலாம்! அது கூட அவ்வளவு கஷ்டமான ஒன்றில்லை! ஆனால், நாலைந்து அல்லது ஒன்றிரண்டு பக்கங்கள் கூடுதலாகக் கூட இருக்கலாம், அதற்குள், ஒரு மையக் கருவைக் குழப்பமில்லாமல் ஒரு நல்ல சிறுகதையாகப் படைப்பதற்கு அதிகத் திறமை இருக்க வேண்டும்! சிறுகதை, வடிவத்தில் தான் சின்னது!  சின்னஞ்சிறுவனாக வாமன மூர்த்தியாய் வந்தவன்,  தன் காலடி மூன்றினால்  மூவுலகையும் அளந்தது போல, ஒரு நல்ல சிறுகதையின் கீர்த்தியும் கூடப் பெரியது தான் என்று எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு! இந்தப் பக்கங்களில், சிறுகதை என்று பேச முனைகிறபோதே, இந்த வாமன மூர்த்தியை நினைத்துக் கொண்டு தான், ஒரு சிறுகதைக்குள் எப்படி ஒரு அழுத்தமான கருத்தை கதாசிரியரால் படைக்க முடிகிறது என்று ஆச்சரியப்படுவதுண்டு!


தூய தமிழில், பிறமொழிக் கலப்பு இல்லாமல் கதை எழுதியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் டாக்டர். மு.வரதராசன்! பள்ளிப் பருவத்தில், அந்த நல்ல தமிழுக்காகவே,  அவருடைய புதினங்களை ஆசையோடு படித்திருக்கிறேன். அகல் விளக்கு, கரித்துண்டு, கள்ளோ காவியமோ என்று அவருடைய புதினங்களைப் படிக்க, மதுரை சுப்ரமணியபுரத்தில் இருந்த பொது நூலகம் தான் அந்த நாட்களில் உதவியிருக்கிறது. என்னுடைய வாசிப்பு அனுபவத்தைப் பரந்ததாக மாற்றத் தூண்டுதலாகவும் உதவியாகவும்  இருந்த இரண்டு, மூன்று நூலகர்களை இப்போது கூட நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்!

இந்தக் காதல் இருக்கிறதே, இது தான் எப்படிப் பட்ட பெருமிதத்தை அல்லது ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கிறது!

காதல் வசப்பட்டவன், வேறெதையும் நினைத்துப் பார்க்க முடியாத பரவசத்தில் ஆழ்ந்து விடுகிறான்! அதனால் தானோ என்னவோ ஷேக்ஸ்பியர் உலகம் முழுவதுமே காதலர்களை நேசிக்கிறது என்று சொன்னார்! காதல் தோற்றுவிட்டால், சொல்லவே வேண்டாம், இந்த வானமே இடிந்து தலைமீது விழுந்து விட்டதைப் போல, அப்படி ஒரு சோர்வு, ஏமாற்றம்!

இந்தச் சிறுகதையில் கூட, ஒருவன் தன்னுடைய காதலைப் பற்றிப் பேசுகிறான். காதல் தோற்றபின், அந்த ஏமாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவனாகத் தான் துவளுகிறான்! அப்படித்  துவளுகிற எல்லோருமே தேவதாஸ் மாதிரி 'துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே' என்று சோகமான பாட்டைப் பாடிக் கொண்டு, காதல் ஏக்கத்திலேயே மரணத்தைத் தழுவுவதில்லை!  


யாருக்காக, இது யாருக்காக என்று பாட்டுப் பாடித் தன்னையும் பிறரையும் தொந்தரவு செய்வதில்லை. வாழ்க்கை அதன் போக்கில் அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறது!

இந்த யதார்த்தத்தைச் சொல்கிற கதை ..கதை சொல்கிறவன் தன்னுடைய பெயரைச் சொல்வதில்லை! காதலித்து ஏமாற்றம் தந்தவளுடைய பெயரோ, வாழ்க்கையில் இணைந்து கொண்டவளுடைய பெயரோ கூட ஒற்றை எழுத்திலேயே நின்று விடுகிறது.கதையைப் படித்து முடிக்கும்போது, இது உங்களுடைய சொந்தக் கதையாகவுமே கூட இருக்கலாம் என்று நினைக்க வைக்கிறார் பாருங்கள், அங்கே தான் மு.வ எழுத்தின் வசீகரம் இருக்கிறது! படித்துப் பாருங்கள்!



எவர் குற்றம்? டாக்டர் மு.வரதராசன்

"வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள் வந்து வந்து போகின்றன. ஆனால் இத்தகைய கொடிய ஏமாற்றத்தை - எதிர்த்து நின்று என்னோடு போராடும் ஏமாற்றத்தை இது வரையில் கண்டதில்லை. மற்ற ஏமாற்றங்கள் வரும் போது பெருமூச்சு விட்டுத் தெளிவேன்; போகும்போது பெருமூச்சு விட்டுக் கலங்குவேன்; இந்த ஏமாற்றமோ வரும்போதே என் உயிரைப் பணயமாக வைத்துக் கொண்டு வந்தது. என் உயிரைப் பணயமாகப் பெற்றுக் கொண்டே செல்லும் போல் இருந்தது.

பரந்த உலகம் என்று சொல்கின்றார்கள். இருக்கலாம். உணவுத்துறையிலே பரந்த உலகம் தான். விருப்பான உணவை அல்லது விருப்பான உடையை வேண்டிய இடத்தில் வேண்டிய போது ஒருவன் பெற முடியும். நாளுக்கு நாள் மாறும் உடையா? வாழ்க்கையிலே ஒரு முறை தோன்றி எந்நாளும் நிலைத்து நின்று வாழ்க்கையோடு முடிந்துபோகும் உணர்வு. இந்த உணர்வுத் துறையிலே, உலகத்தைப் பரந்த உலகம் என்று சொல்ல மனம் இல்லை. இது மிக மிகக் குறுகின உலகம். ஒரு சிறு வீடு அல்லது ஒரு சிறு கூடு எனலாம்.

இந்த உணர்வுத் துறையிலே எனக்கும் ஒருத்திக்கும் தான் இடம் உண்டு. அந்த 'ஒருத்தி' யார்? இதுதான் பெருங் கலக்கத்தின் வித்து; ஏமாற்றத்தின் காரணம்; என் உயிரைப் பணயமாகக் கேட்ட போர்.

ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் பழகிய எனக்கு ஒரு சிலரே நண்பர்களாகக் கிடைத்திருக்கின்றார்கள். இரண்டாயிரம் பேருடன் பழகினேன். அவர்களும் என்னைப் பொறுக்க முயன்றார்கள், நானும் அவர்களில் பலரைப் பொறுக்க முயன்றேன். இது பரந்த உலகம் என்று தவறாக எண்ணியதால் அவ்வாறு முயன்றேன். முயற்சியின் பயனாக நண்பர்கள் இருவரே கிடைத்தனர். நட்புத் துறையிலும் இது குறுகிய உலகமே என்ற உண்மை உணர்ந்தேன். ஆம் நட்பும் உணர்ச்சிதானே? 'உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என்ற திருவள்ளுவரைக் கேட்டிருந்தால், அவரும் இது குறுகின உலகம் தான் என்று உடன்பட்டிருப்பார். அப்போது 'மாயிரு ஞாலம்' என்று இதனை வாழ்த்தியிருக்கமாட்டார்!

இந்த இரண்டு நண்பர்களும் எனக்குத் துணை செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். உள்ளத்தையெல்லாம் ஒளிக்காமல் எடுத்துரைத்தேன். இரவெல்லாம் பேசினேன். வைகறையில் வாய் திறந்து அவர்கள் கருதியதை எடுத்துச் சொல்லிவிட்டார்கள். மருந்து இல்லாமலே என் மனப் புண்ணை ஆற்ற முயன்றார்கள். அது ஆறவில்லை.

 "வாழ்க்கை என்பது ஒரு கலை. அதற்கு அனுபவம் உடையவர்களின் துணை வேண்டும். ஏட்டுக் கல்வியைக் கொண்டு அதனை எட்ட முடியாது. நாங்கள் சொல்வதைக் கேள். நீ விரும்பிய காதல் நல்லதுதான். விரும்பியபடி நீ அதைப் பெற்று வாழலாம். விருப்பத்தை மறந்து விட்டும் வாழலாம். ஆனால் எது நல்லது என்பதை எண்ண வேண்டாவா? உலகத்தை ஒட்டிச் செல்லாமல் சுற்றுப் புறத்தை புறக்கணித்து, எவரையும் பொருட் படுத்தாமல் ஒதுங்கி நீ அவளை மணந்து கொண்டு வாழ்ந்தால் அந்த வாழ்க்கை இன்பமான வாழ்க்கை ஆகுமா? காதல் வாழ்க்கை கட்டற்று விளங்குவது கற்பனை உலகத்தில் தான்! நீ நினைப்பதுபோல உலகத்தை மறந்து சுற்றுப் புறத்தைப் புறக்கணித்து ஒருத்தியோடு வாழ்க்கை நடத்த முடியாது".

இவ்வாறு நண்பர்கள் உரைத்த உபதேசம் என் மனத்தை ஓரளவு மாற்ற முயன்றது; மாற்றியது என்று சொல்வதற்கில்லை. மாற்ற முயன்றது, அவ்வளவு தான்!

அந்த அழகிய முகத் தோற்றத்திற்கு நான் அடிமையாகவில்லை. அவளுடைய புன்முறுவலில் விளங்கும் கலைக்கதிருக்கு நான் அடிமை ஆகவில்லை. அவளுடைய இனிய பேச்சில் மிதக்கும் அறிவொளிக்கு நான் அடிமையாகவில்லை. அந்த அழகையும், நகையொளியையும், கூரிய அறிவையும் நான் மதிக்கிறேன். ஆனால் இவற்றிற்கு நான் அடிமையாகவில்லை. அழகும், சிரிப்பும், அறிவும் நான் எங்கெங்கும் காண்கின்றேன். நான் அவற்றைத் தேடித் திரியும் இளைஞனாயிருத்தால் இன்று இவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லையே! அழகையும் சிரிப்பையும் அறிவையும் கடந்து அவள் உள்ளத்தில் வாழும் உணர்வு, நான் எங்கும் காணாத உணர்வு; இதனை நினைக்கும்போது இந்த உலகத்தில் நானும் அவளும் தவிர வேறொன்றும் இல்லை என்று தோன்றுகின்றது. இதை அந்த நண்பர்கள் அறிந்தே இருக்கின்றார்கள். அறிந்தும் என்னைத் திருத்த வேண்டும் என்று எண்ணி என்னவோ சொல்கின்றார்கள்.

இந்த உலகில் நான் வாழவேண்டும். வாழ்வதற்கு உணர்வு வேண்டும். என் உணர்வுக்கு ஒரு துணை வேண்டும். அதற்குத்தான் அவளை நாடினேன். உணர்வுலகத்தில் பழகிய நண்பர்களும் அதைத் தடுக்கிறார்கள். உணர்வை விட உலகம் பெரியது என்கிறார்கள். நான் உலகம் சிறியது என்கிறேன்.

எங்களுக்குத் தனித் தனி மனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் உள்ளத்தில் உணர்வது போலவே நான் உணர்கின்றேன். நான் உணர்வது போலவே அவளும் உணர்கின்றாள். எங்கள் வாழ்வு ஒரு மனத்தின் வாழ்வாக இருக்கிறது. அத்தகைய வாழ்விற்கு இடம் இல்லையா? இரண்டு வேறு பட்ட மனங்கள் இடையறாமல் போர் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையே வேண்டும் என்பது படைத்தவன் நோக்கமா?

"அவளை மறந்து வாழ்வதனால்-" இப்படி மூன்று மாதங்களுக்கு முன் நான் எண்ணியிருந்தால், அந்த எண்ணமே எமனாய் மாண்டிருப்பேன். எண்ணிய எண்ணம் அடுத்த நொடியிலே என்னை மாய்த்திருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று இந்த எண்ணத்தை எண்ணவும் முடிகின்றது. ஏமாற்றம் விளையுமே என்று நடுங்கவும் முடிகின்றது. அவளை மறந்துவிட்டு இன்னொருத்தியை மணந்து கொள் என்று நண்பர்கள் சொல்லும் சொல்லைக் கேட்கவும் முடிகின்றது.

 இன்னொருத்தியும் - அவளும் அழகிதான்; கலை வல்லவள்தான்; அறிவு நிரம்பியவள் தான். ஆனால் என் மனம் நடுங்குகிறது. அவளுடைய உள்ளம் எப்படிப்பட்டதோ? அறிவார் யார்? அறிவது எப்படி? அறியாமல் துணிவது எவ்வாறு? கரவற்ற பார்வை, அடக்கமான நடை, ஒழுக்கமான வாழ்வு... இந்தச் சிறந்த பண்புகள் காண்கின்றேன். ஆயினும்-.........


oooOooo
நான் எங்கோ நடந்து போய்க் கொண்டிருந்தேன். அழகான பாதையாக இருந்தது.

என் கையில் திருக்குறளோ வேறு எதுவோ இருந்தது, அதை ஊர்ப்பயணம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் என் நடையிலே ஒருவகை ஊக்கம் இருந்தது. ஊக்கத்திற்குக் காரணமாக என்னை அடுத்தாற்போல் க---  நடந்து வந்து கொண்டிருந்தாள். என் பக்கத்தில் என்னோடு கைகோத்து நடந்துவர வேண்டும் என்று விரும்பினேன். அவள் அதற்கு இணங்கவில்லை. என் பின்னே மெல்ல நடந்து வந்தாள். நான் முன்னே சென்றேன். அந்தப் பாதையில் நடப்பதில் ஓர் இடையூறும் இல்லை என்பது என் எண்ணம். ஆனால் என்ன காரணத்தாலோ அவள் பின் வாங்கினாள். எனக்கு முன்னும் செல்லாமல், என் பக்கத்திலும் வராமல், பின்னே நடந்து வந்தாள். அதுவே போதும் என்று மகிழ்ந்து நான் ஊக்கத்துடன் நடந்தேன். திரும்பித் திரும்பி அவளைப் பார்த்துக் கொண்டே சென்றேன். நெடுந்தூரம் நடந்தேன். நின்றேன். திரும்பி நோக்கியபோது அவள் நெடுந்தொலைவில் காணப்பட்டாள்.

அப்போது என் பின்னே சிறிது தொலைவில் அடக்கத்தோடு அச்சத்தோடு இன்னொருத்தி நடந்து வருவதைக் கண்டேன். அவள் தான் த------

இந்தக் கனவு எவ்வளவு பொருளுடைய கனவு என்பதை நான் அன்று உணரவில்லை. கனவு கண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கனவு கண்ட அன்று விடியற் காலையில் என் நெஞ்சம் பட்டபாடு சொல்ல முடியாது. அந்தக் கனவை இன்று நினைத்துப் பார்க்கின்றேன். அமைதியோடு நினைக்கின்றேன். அவள் எனக்கு முன்னே சென்றிருப்பாளானால், என்னை ஒருவரும் தடுத்திருக்க முடியாது. அவள் எவ்வளவு வேகமாகச் சென்றிருந்தாலும் நான் அவளை விடாமல் தொடர்ந்திருப்பேன். என்னை ஒருவரும் இழுத்துப் பிடித்திருக்க முடியாது. அல்லது, அவள் என்னுடன் கைகோத்துப் பக்கத்தே நடந்துவந்திருந்தாலும் நாங்கள் பிரிந்திருக்க மாட்டோம். நண்பர்களின் உபதேசம் எங்களுக்குத் தடையாக இருந்திருக்க முடியாது.

ஆனால், நல்ல பாதை என்று அறிந்தும், இல்லாத இடையூறுகளை நினைந்து அஞ்சி, பின்வாங்கி, என்னை முன்னே நடக்க விட்டுத் தான் பின்னே வந்து கொண்டிருந்தாள். நான் திரும்பிப் பார்த்தபோது என் கண்ணுக்கு எட்டாத் தொலைவில், என் வாழ்க்கைக்கு எட்டா நிலையில் தனித்து, நின்று விட்டாள்.

இது என் குற்றமா?

oooOooo

இன்று .....................


இந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு, இந்தக் கனவை அமைதியாக எண்ணும் வாய்ப்புக் கிடைத்த போது, என் வாழ்க்கைத் துணைவியாக விளங்குகின்றாள், த-----. இந்தக் கூட்டில் நான் எதிர்பார்த்த கிளி என்னோடு இல்லை. அது கூட்டினுள் புகுவதற்கு அஞ்சி இன்னும் பறந்து திரிந்து கொண்டிருக்கிறது. இந்த அமைதியான கிளி த....... என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அன்று அவள் இல்லாத குறையால் என் நெஞ்சமே வெடித்து விடும் போல் தோன்றியது; என் உயிர் வாழ்வு முறிந்து போகும் போல் இருந்தது.

ஆனால் இன்று இவளோடு நானும் வளமாகத்தான் வாழ்கின்றேன், என் நெஞ்சமும் அமைதியாகத்தான் இருக்கின்றது."


மு.வ படைத்த இந்த சொற்சித்திரம் எப்படி இருக்கிறது என்பதைக் கொஞ்சம் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்!

பின்னூட்டத்தில்; திரு ராஜு மு.வ பற்றி விக்கிபீடியா பக்கங்களில் எதுவும் கிடைக்கவில்லை என்று முதலிலும், அப்புறம் வேறு இரண்டு பக்கங்களின் தொடுப்பையும் கொடுத்திருந்தார்.சென்னை லைப்ரரி டாட் காமில் டாக்டர் மு.வரதராசன் எழுதிய அகல் விளக்கு புதினமும், வேறு பல சிறுகதைகளும் இணையத்திலேயே படிக்கக் கிடைக்கிறது.
 
 கொஞ்சம் விரிவான விக்கி பக்கம் இங்கே.


Friday, August 20, 2010

தி ஆர் டாகுமென்ட்.....! இர்விங் வாலஸ்!

 
இர்விங் வாலஸ் எழுதிய "மனிதன்" என்ற புதினத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுக விமரிசனத்தைப் பார்த்திருக்கிறோம்!

சுதந்திர தினச் சிந்தனைகளாக இன்னொரு வலைப் பக்கங்களில் எழுதிக் கொண்டிருந்ததில், தேடும்போது இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட் (The R Document) என்ற புதினத்தைப் பற்றிய இந்த TIF (பட வடிவில்) அந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு பக்கம் காணக் கிடைத்தது.

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்

இர்விங் வாலஸ் எழுதிய, தி ஆர் டாகுமென்ட்! 1976 ஏப்ரலில் முதல் முறையாகப் புத்தகவடிவில் வெளியானது. 

இந்தப்  புத்தகத்தை 1977 இல் மைக்கேல் ஹெண்டெர்சன் என்பவர் படித்துவிட்டு, தன்னுடைய கருத்தை இப்படிச் சொல்கிறார். அவர் எழுதிய இந்தப் பகுதியின் முதல் பக்கம்(மேலே பட வடிவில் காண்பது), இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டு, இருபது மாதங்கள் இந்திய ஜனநாயகம் கழுத்து நெறிக்கப்பட்டுக் கிடந்த அந்த இருண்ட தருணங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. 

ஹெண்டெர்சன் சொல்கிறார்:

"1975-1977 இந்திய நெருக்கடி நிலைப் பிரகடனத்தைப் பற்றி விரிவாகப் படித்து முடித்துவிட்டு, வீடு திரும்புகிற நேரத்தில் படிப்பதற்காக சுவாரசியமான புத்தகத்தைத் தேடிய போது, இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட் புதினத்தைப் பார்க்க நேர்ந்தது. அதன் அட்டையில் அதிர்ச்சியூட்டக் கூடிய யதார்த்த நிலை என்று போட்டிருந்ததைப் பார்த்தேன்.

இருபது மாதங்கள் இந்தியாவில் அமலில் இருந்த சர்வாதிகாரத் தன்மையை  அதிரச் செய்யும் அளவிற்கு இந்த நாவல் எதிரொலித்தது என்பது உண்மை. இந்தக் கதையை, 1977 இல் படித்ததற்குப் பதிலாக, 1974 இல் படித்திருந்தால், மிக சுவாரசியமான கற்பனை, ஆனால் எப்போதுமே நடக்க முடியாதது என்று தான் நினைத்திருப்பேன். 

இந்தியாவின் அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 42 வது திருத்தம் மாதிரி, அமெரிக்காவிலும் நடக்கிற மாதிரி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டது, அங்கே எழுத்தாளரின் வெறும் கற்பனை என்று மட்டும் ஒதுக்கி விட்டுப் போக முடியவில்லை.

நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டபோது நாடாளு மன்றம்,ஆட்சியாளர்களின் மனமறிந்து ஒத்து ஊதுகிற ஒரு இடமாக மட்டுமே ஆகிப் போனது,  பத்திரிகைகளின் வாய்கள் கட்டப்பட்டன, நீதித்துறை செயலிழந்து நின்றது........



இப்படிப் போகிறது ஹென்டர்சனின் வர்ணனை!

இந்திய அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 42 வது திருத்தம், திருத்தம் செய்யப்பட்ட அந்த சில வரிகளில் வாக்கியங்களில், அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அலங்காரக் கோஷங்கள் சேர்க்கப் பட்டன.  இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு என்பது வார்த்தைகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, இறையாண்மையுள்ள, சோஷலிச, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக ஆகிப் போனது! 

வார்த்தைகளில் மட்டும் தான்என்பதைச் சொல்லித் தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன!?

அதிகமான விவரங்கள் வேண்டுமானால் இந்த லின்கில்
கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்!

எமெர்ஜென்சி அமலில் இருந்த தருணங்களில் வெளியான இந்தப் புத்தகம் இந்தியாவில் தடை செய்யப் பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் தீய அம்சங்களை தோலுரித்துக் காட்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லப் பட்ட இந்தப் புத்தகத்தை, 1985 வாக்கில் தான் படிக்க முடிந்தது. தற்சமயம் பெங்களுர், வாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் ரூ.90/- இற்குக் கிடைக்கிறது.

The R Document! 

நீதிமுறையில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள ஒரு கதாபாத்திரத்தோடு கதை ஆரம்பிக்கிறது! நீதிமுறையைப் பாதுகாக்க முனைகிற அவருடைய உயிருக்கே உலை வைப்பதாகவும்  கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

கிறிஸ்டோபர் காலின்ஸ்!

அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெனரலாகப்  பதவியேற்கிறார்.  அந்தத் தருணத்தில், அமெரிக்காவில் பெருகி வரும் வன்முறை, குற்றங்களைக் களைவதற்காக, அமெரிக்க அதிபர் அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஒரு திருத்தம் கொண்டு வர உத்தேசித்திருக்கிறார். 35 வது திருத்தம் என்று அந்த  முயற்சி  அழைக்கப் படுகிறது. தேச நெருக்கடி காலங்களில், உரிமைகள் குறித்த அரசியல் சாசன  உத்தரவாதத்தை அடியோடு ரத்து செய்ய இந்தத் திருத்தம் வகை செய்வதாக இருக்கிறது. எப்போதும் போல ஆதரிக்கிறவர்கள், எதிர்க்கிறவர்கள் என்று இரண்டு தரப்புமே, இந்த உத்தேசத் திருத்தத்தின் மீது சவுண்டு கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

அட்டர்னி ஜெனரலான  காலின்சுக்கோ இந்த உத்தேசத் திருத்தம், அவசியமில்லை என்று பட்டாலும், அதை அடியோடு எதிர்க்கிறவர்கள் கூச்சலிடுகிற மாதிரி,  அதிகார துஷ்ப்ரயோகம் செய்யப் படாது, இருக்காது  என்றே நம்புகிறார். உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

காலின்சுக்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், தன்னுடைய மரணப் படுக்கையில், அவரை அழைத்து, இரகசியமானதும் அபாயமானதுமான ஆர் டாகுமென்ட் என்ற ஒன்றைப் பற்றி எச்சரிக்கை
செய்ய விரும்புகிறார். காலின்சை அழைத்துவரச் சொல்லித் தகவல் அனுப்பி, இவர் அங்கே போய்ச் சேர்வதற்குள்  அவர் மரணமடைந்து விடுகிறார். கடைசித் தருணங்களில் ஒரு பாதிரியாரிடம், பாவ அறிக்கையைச் சொல்கிற தருணத்தில், இந்த விஷயத்தையும் சேர்த்தே சொல்கிறார். ஆனால் அந்தப் பாதிரியார், அது ரகசியமானது என்று காலின்சிடம் மேற்கொண்டு எந்த விவரமும் தர மறுத்து விடுகிறார். அது என்னவாக இருக்கும் என்ற கேள்வி, கிறிஸ்டோபர் காலின்சைத் துரத்திக் கொண்டே இருக்கிறது இந்த எச்சரிக்கையை காலின்ஸ் தொடர்ந்து ஆராய்கிறார்.  

The R Document!  

அது என்ன ஆர் டாகுமென்ட்? அதற்கும், உத்தேசித்திருக்கும் முப்பத்தைந்தாவது திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?

அமெரிக்க அதிபர் வாட்ஸ் ஒர்த்துக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது! சட்ட அமைச்சகத்துக்கும் எதுவும் தெரியாது! ஆனால், சிலந்தி லாவகமாக வலையைப் பின்னுவது போல, இந்த ஆர் டாகுமெண்டை மையமாக வைத்து என்னென்னமோ நடந்து கொண்டே இருக்கின்றன!

ஒவ்வொரு மாநிலமாக, இந்த சட்டத் திருத்தத்தை அங்கீகரித்து நிறைவேற்றிக் கொண்டிருக்கையில், காலின்ஸ் இந்தத் திருத்தத்தின் தலைமைச் செயலகமாக, மாக்கியவல்லி தனது இளவரசன் என்ற படைப்பில் சொல்கிற மாதிரி, நேர்மைத்திறமில்லாமல்  வஞ்சகமும், சூதும், மோசம் செய்கிற இயல்பும், கொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை கட்டமைக்கிற விதமாக எப் பி ஐ டைரக்டர் வெர்னான் டி. டினன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்ற டினன் முயற்சிப்பதை அறிகிறார்.தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சாக்காக இந்த சட்டத் திருத்தத்தை ஒவ்வொரு மாநிலமும் நிறைவேற்றித் தர, டினன் கொலை செய்கிறார், ப்ளாக்மெயில் செய்கிறார், தன்னுடைய  முழு சாமர்த்தியத்தையும் பிரயோகிக்கிறார்.

எப்படி இந்தக் கதை முடிச்சை கதாசிரியர் அவிழ்க்கிறார் என்பதைப் புத்தகத்தை வாசித்து அனுபவிப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
முன்னூற்று அறுபது பக்கங்களுக்குள்ளாகவே, மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது! அதிகாரம் ஒரே இடத்தில் மையம் கொள்ளும்போது ஏற்படக்  கூடிய விபரீதங்களை இந்த நாவல் மிக அழகாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது. எச்சரிக்கிறது.

இங்கே இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனம் என்ற ஜனநாயகப் படுகொலையை, ஜெயப் பிரகாஷ் நாராயணன் என்ற காந்தீய வாதி, வினோபா பாவேயின் சீடர் எப்படி  தடுத்து நிறுத்தினார் என்பதை, இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போராகவே கூடச் சொல்ல முடியும்! 


இந்திரா காந்தி என்ற சர்வாதிகாரிக்கு எதிராக, எப்படி இந்த தேசத்தின் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜெயப்ரகாஷ் நாராயணனுடைய போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றன, காங்கிரஸ் எப்படி பிரிட்டிஷ் குள்ள நரிகளிடமிருந்து கற்றுக் கொண்ட பிரித்தாளும் கலையைப் பயன்படுத்தி அந்த ஒற்றுமையைப் பிளந்தது என்பது கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் சமகால சரித்திரம்!

தி ஆர் டாகுமென்ட்! 


அவசியம் படிக்க வேண்டிய ஒரு புதினமாக நான் பரிந்துரை செய்யக் கூடிய நூல்களில் ஒன்று! வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் அல்ல! நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் கூட!




இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)