Tuesday, August 31, 2010

சரித்திரக்கதைகள் என்றாலே சாண்டில்யன் தான்!

"வாசிப்பு அனுபவம் உள்ள எவருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் பரிச்சயமாகி இருப்பதில்  அதிசயமில்லை!.

கல்கிக்கு  முன்னால் எத்தனை பேர் முயற்சித்தார்கள் என்பதை விட, அவருக்குப் பின்னால் எத்தனைபேர் முயற்சித்தார்கள் என்பதைப் பார்த்தாலே, சரித்திரக் கதை எழுதுவதில் உள்ள கஷ்டங்கள் புரிந்து விடும். சரித்திரக் கதை எழுதுவதற்கு நிறைய ஆதாரங்களைத் தேடிப் படித்திருக்க வேண்டும், குறிப்புக்களை வைத்துக் கொண்டு, முரண்படாமல் கயிற்றின் மேல் நடப்பதுபோல, கவனமாக சம்பவங்கள், கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்!அதனால் தானோ என்னவோ, நிறைய எழுத்தாளர்கள் சரித்திரத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்!"


இப்படி இந்தப்பக்கங்களில் வரலாறும் முக்கியம்!

கொஞ்சம் வரலாற்றையும் பார்ப்போமா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு பார்த்திருக்கிறோம்!

ஆனால், ஆடத் தெரியாதவள் தெரு கோணலாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஒதுங்குவதைப் போல, சரித்திரம் என்றால் என்ன, எங்கே நிஜமும், புனைவும் எந்த விகிதத்தில் கலவையாகி ஒரு நல்ல வாசிப்பு அனுபவமாகிறது என்பதையெல்லாம் சிந்திக்காமலேயே, வரலாறு என்பதே புனைவுகள் தான்! என்று அலட்சியமாகப் பேசி விட்டு, ஆட்டையில் கலந்து கொள்ளாமல் நழுவிக் கொள்ளும் நபர்களை நிறையப் பார்த்திருக்கிறேன்!

வரலாற்றுப் புதினங்கள் என்றாலே ஏனோ இங்கே நிறையப் பேருக்குக் கல்கி தான் முதலில் நினைவுக்கு வருகிறார். அதற்கு
டுத்தாற்போல என்று தேடினால், எவர் எவர் பெயரையோ கொஞ்சம் தயங்கித் தயங்கி சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

தமிழில் சரித்திரக் கதைகளின் தன்னிகரற்ற சக்கரவர்த்தி, பேரரசு என்று எவரையாவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அது சாண்டில்யன் ஒருவராகத் தான் இருக்க முடியும்! ஏன் என்பதை இந்தப் பதிவில் கொஞ்சம் விவரமாகவே

சொல்லியிருக்கிறேன்.

வரலாறு என்பது வாழ்ந்த மக்களின் அனுபவத் திரட்டு. அதை எவர் எந்தக் கோணத்தில் இருந்து, எப்படி எடுத்துக் கொள்கிறார் என்பதில்  வேண்டுமானால்  வேறுபடலாமே தவிர, மொத்த வரலாற்றையுமே புனைவு என்று ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்விட முடியாது! அந்த வகையில் சாண்டில்யன், சொல்ல விரும்பும்  கதையைத் தேர்ந்தெடுக்கும் விதமே அலாதி! சாண்டில்யனைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே, அவரது படைப்புக்களின் விமரிசனத்தோடு, இங்கே தொடர்ந்து எழுத ஆசை இருக்கிறது.

அதற்கு முன்னால் வரலாறு என்பதே வெறும் புனைவுகளால் ஆனது தானா என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாம்!

புறநானூற்றில், வரிசையாக ஆறுபாடல்கள்! இரண்டு வெவ்வேறு புலவர்கள் பாடியது, ஆளுக்கு மூன்று பாடல்களைப் பாடி
ருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்த காலம் என்ன, பாட்டுடைத் தலைவனுக்கு வேறு என்ன ஆதாரம் என்றெல்லாம் தேடிப் பிடிக்க முனைபவர்கள் முனையலாம்! சோம்பல் கொள்கிறவர்கள், இதெல்லாம் கதைக்கு ஆகாது, முழுக்க முழுக்க புனைவு தான் என்று சொல்லி அபீட்டாயிக்கலாம்!

இந்த ஆறுபாடல்களிலும், சாத்தந்தையார் என்ற புலவர் எழுதிய முதல் பாடலில் மட்டும் தான் ஒரு குறிப்புக் கிடைக்கிறது. மற்ற ஐந்திலும் வேறு பெரிதாக விவரமேதும் கிடைப்பதில்லை. அதனால் முதற்பாடலை இங்கு பார்க்கலாம்! மற்ற ஐந்தையும் பார்க்க வேண்டுமானால், புறநானூற்றின் 81 முதல் 85 வரையிலான பாடல்களை Project Madurai தளத்தில் இருந்து பார்க்கலாம்.




இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

புற நானூறு பாடல் எண்: 80 பாடியவர் சாத்தந்தையார், தும்பைத் திணை, எருமை மறத் துறை, பாடல் தலைவன் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி

இந்தப் பாடலில் சரித்திரம், புனைவு ஏதேனும் தென்படுகிறதா என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்! சாண்டில்யன் மாதிரி, திறமையான எழுத்தாளரின் கைகளில் எப்படி ஒரு அற்புதமான சித்திரம் வெளிப் படுகிறது என்பதை அடுத்துப் பார்க்கலாம்! 




14 comments:

  1. சாண்டில்யனுக்கு தமிழ் எழுத்துலகில் ஒரு தனி இடம் உண்டு. அவருடைய வர்ணனைகள்,கிறங்க வைக்கும் நடை,இலக்கிய செறிவும்,ஊட தெறிக்கும் அவர் வடமொழி ஆளுமையும்,நகைச்சுவையும் மறக்க முடியாதவை. வருடத்திற்கு ஒரு முறை அவரின் யவன ராணியும்,கடல் புறாவும் ரிவிசன் போல் மீண்டும் படிக்காமல் இருக்க இயல்ல்து அவருடைய வாசகர்களால். ஆரவாரமான தொடக்கம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சரித்திரக் கதை எழுதுவதற்கு நிறைய ஆதாரங்களைத் தேடிப் படித்திருக்க வேண்டும், குறிப்புக்களை வைத்துக் கொண்டு, முரண்படாமல் கயிற்றின் மேல் நடப்பதுபோல, கவனமாக சம்பவங்கள், கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்!அதனால் தானோ என்னவோ, நிறைய எழுத்தாளர்கள் சரித்திரத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்!"


    ......உண்மை..... சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.


    ......legend!

    ReplyDelete
  3. அற்புதமான விவரிப்பு. வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி. வராலாற்று புனைவுகள் இவர்களை தவிர வேறு யாரும் எழுதியதாக நினைவில்லை.

    ReplyDelete
  4. சரித்திரக் கதைகள், சாண்டில்யன் என்றவுடனேயே ஓடிவந்து படித்துப் பின்னூட்டமும் எழுதிய முதல் மூவருக்கும் எனது நன்றி!

    தமிழில் சரித்திரக் கதை என்றவுடன், உடனேயே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கல்கியின் பொன்னியின் செல்வன் தான்! ஜனரஞ்சகமாக கல்வெட்டுக்கள், செப்பேடுகள் சிலவற்றின் அடிப்படையில் கல்கி அந்தப் புதினத்தைப் படைத்தார். கல்கிக்கு இருந்த இமேஜ், அவருக்கு இருந்த வணிக, விளம்பர உத்திகளைப் பயன்படுத்தும் நிறுவன வசதி, எல்லாமாகச் சேர்ந்து, எழுத்தின் அளவுக்கும் மேலேயே அந்தப் புதினம் வாசகர்களை வசீகரித்தது. இன்றைக்கும் படிக்க வேண்டிய தமிழ்நூல்களின் பட்டியலில் பலராலும் பரிந்துரை செய்யப்படுவதாக இருக்கிறது.

    பொன்னியின் செல்வனின் ஐந்தாம் பாகத்தின் பெயர் "தியாக சிகரம்"! தன்னுடைய சித்தப்பன் முறையான மதுராந்தகத் தேவனுக்குப் பட்டம் சூட்டி, மதுராந்தகன் உயிருள்ளவரையில் ஒதுங்கி நின்ற ராஜ ராஜ சோழனின் "தியாகம்" கல்கியின் கற்பனையில் உருவான ஒன்று தான்! அதற்குத் தோதாகவே ஒரு செப்பேட்டில் "திருவயிறு உதித்த" என்ற ஒரு வாசகத்தை வைத்துக் கொண்டு சேந்தன் அமுதன் பாத்திரத்தைப் படைத்து, சின்னப் பழுவேட்டரையர் மருமகனான "மதுராந்தகத் தேவனை" போலி என்றும், வீரபாண்டியன் மகனென்றும் கொஞ்சம் குழப்பியிருந்ததை வாசகர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கதை படிக்கும் சுவாரசியத்தில் எவருக்கும்,சரித்திர நிகழ்வுகளை ஆதாரம் தேட வேண்டுமென்ற எண்ணம் வரவேயில்லை!

    அந்தமாதிரி வாசகர்களுக்கு, இன்னும் கொஞ்சம் தீனி போடுகிற வகையில், கல்கியில் அகிலன் எழுதிய "வேங்கையின் மைந்தன்" கதையும் தொடராக வந்தது.

    வரலாறு எது புனைவு எது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், தமிழில் சாண்டில்யன் எழுதிய கதைகளையும், மற்றவர்கள் படைப்புக்களையும் எடுத்துக் கொண்டு, கதை எந்த அளவுக்கு சரித்திர நிகழ்வுகள், ஆதாரத்தின் மீது எழுதப்பட்டது என்பதைக் கொஞ்சம் கதாசிரியர்கள் தாங்கள் கதை எழுதப் பயன்படுத்திய ஆதாரங்களின் பட்டியலை சுயமாகவே சோதித்துப் பார்த்தால், சரித்திரக் கதைகளில் சாண்டில்யன் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்ததுமே தெரிய வரும்.

    இதை சொல்வது, மற்றவர்களைக் குறை சொல்வதற்காக இல்லை. சாண்டில்யனுக்குக் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பதிவு செய்வதற்காகத் தான்!

    ReplyDelete
  5. திரு மோகன்ஜி!

    என்னுடைய பதிவில் வங்கித் துறையை சேர்ந்த ஒருவர் பின்னூட்டமிடுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.(அதாவது,சுய விவரத்தில், வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டு)

    உங்களுடைய பின்னூட்டத்தைக் கொஞ்சம் கவனமாகத் திரும்ப வாசித்தீர்கள் என்றால், சாண்டில்யனுடைய பலமாகவும், பலவீனமாகவும் எது இருந்தது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விடும்.

    சாண்டில்யன் கதைகளை, இதில் ஒன்றுமே இல்லை, குப்பை என்று சொல்கிறவர்கள் முன்வைக்கும் வாதமே, அவருடைய வர்ணனைகள் தான்! கொஞ்சம் விரசமாகக் கூட சிலர் எண்ணியதுண்டு. அடுத்து, அவர் கதை எழுதியது பெரும்பாலும் குமுதம் வார இதழில். ஒவ்வொரு வாரமும், ஒரு இக்கு அல்லது சஸ்பென்ஸ் வைத்து முடித்து விட்டு, அடுத்த வாரம் அந்த சஸ்பென்ஸ்/இக்கு என்னவென்று மறுபடியும் recap செய்து எழுதியது நிறையப் பேரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு பத்திரிகையில் தொடர்கதையாக எழுதுவதில் இருக்கும் பெரிய சிக்கலே இது தான்! முந்தின அத்தியாயத்தில் என்ன நடந்தது என்பதை, அடுத்தவாரமோ, அல்லது கொஞ்ச அதிக நாட்கள் கழித்தோ வந்து வாசிக்கிற வாசகருக்கு நினைவு படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் எழுத்தாளருக்கு இருக்கத் தான் செய்கிறது. ஆனால், அதையே ஒரு முழுப் புத்தகவடிவில் கொண்டு வரும்போது, திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைப் படிக்க வேண்டிய கட்டாயம், அலுப்பு கூடவே வந்து விடுகிறது. இதில் சாண்டில்யன் மட்டுமல்ல, தமிழில் வேறு எந்த எழுத்தாளருக்கும் எடிட் செய்யப் பட வேண்டியவை என்ன என்பதில் தெளிவான ஞானம் இருந்ததில்லை என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

    இந்த ஒரு குறையை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், சாண்டில்;யன் அளவுக்குத் தமிழில் வேறு எவரும் சரித்திர நிகழ்வுகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, தன்னுடைய கற்பனைக் குதிரையையும் தட்டிவிட்டு, அழகான கதை படைக்க முடிந்தவர் எவருமில்லை என்பது தான் நான் முன்வைக்கும் கருத்து.

    ReplyDelete
  6. திருமதி சித்ரா!

    இங்கே நிறையப்பேருக்கு சரித்திரக் கதைகள் பக்கம் திரும்ப நாட்டமே இல்லை என்பதற்கு முக்கியமான காரணம், நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என்பதால் தான்! இதோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்--இப்படி சொல்வது வாசகருக்கும் கூடப் பொருந்தும்!

    ReplyDelete
  7. திரு.சரவணன்!

    மதுரையில் தான் இருக்கிறோம், ஒருதரம் கூட நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை! திரு குமரன் மல்லியின் பதிவில் உங்கள் படத்தைப் பார்த்ததோடு, அங்கே கொஞ்சம் அதிக விவரங்கள் தெரிந்து கொண்டதோடு சரி!

    தமிழில் கிட்டத் தட்ட முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் (நான் வாசித்தவர்கள்) சரித்திரக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். கல்கி என்றொரு எழுத்தாளர் வேப்பமரமாக வளர்ந்து, அதனடியில் வேறெதுவும் வளர முடியாமல் போவது போல, பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவை ரசித்தவர்கள், அதை சொல்லி சொல்லியே மாய்ந்துபோனவர்களுடைய பரிந்துரைகள், இதுதான் சிகரம் என்று கூவிக் கூவியே மற்ற எழுத்தாளர்களை மறக்கடித்து விட்டது.

    இதில் கல்கியின் பாவம் ஒன்றுமில்லை! ஆனாலும், வாசகர்களாகிய நாம் நம்மை எந்த அளவுக்குக் குறுக்கிக் கொண்டு வாசிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதற்காக மட்டுமே இந்த உதாரணம்!

    ReplyDelete
  8. ஆஹா! சாண்டில்யனைப் பார்த்ததும் சந்தோஷம். தொடருங்கள்.. வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  9. வாருங்கள் ஜீவி சார்!

    யாருமே, புறநானூற்றில் வரும் 80-85 இந்த ஆறுபாடல்களையும் படித்து விட்டு, அதில் சரித்திரம் எங்கே இருக்கிறது, புனைவு எங்கே இருக்கிறது என்பதை சொல்ல மாட்டேன் என்கிறார்கள்! இத்தனைக்கும் அந்த ஆறையும் மொத்தமாகக் கொடுக்காமல், முதல் பாடல் ஒன்றைத்தான், அதில் தான் கதைக்கான களம் இருக்கிறது என்று க்ளூ வேறு கொடுத்திருக்கிறேன்!

    ReplyDelete
  10. ஏதோ நம்மால் முடிந்த ஒரு க்ளூ :-

    ஆமூர் மல்லனும் சோழநாட்டு உறையூர் வாழ் தித்தன் என்னும் சோழநாட்டு மல்லனும் பொருந்திய மற்போரைச் சொல்லும் புறப்பாடல்.

    ReplyDelete
  11. ஜீவி சார்!

    ஆமூர் மல்லனோடு மல்யுத்தத்தில் வென்றது வரை சரி! ஆனால் அது தித்தன் அல்ல!

    தித்தன் சோழ மன்னன், அவன் மகன் போர்வைக்கோ பெருநற் கிள்ளியைப் பற்றியது இந்தப்பாடல்!

    ReplyDelete
  12. கேஸெஸ் சார்!

    ஆமூர் மல்லன் ஞாபகத்தில் இருந்தான். தித்தன் என்கிற பெயர் நினைவுக்கு வரவே நெடுநேரம் ஆயிற்று. மல்லனுக்கும் மன்னனுக்கும் குழறுபடி. ஹோம்வொர்க் பண்ணவும் வழியில்லை. ஆனாலும் ஓரளவு க்ளூ கொடுத்ததுக்கு மார்க் கொடுங்கள். மேலும் தொடருங்கள்.

    ReplyDelete
  13. ஸாரி, எஸ்கே, கேஸெஸ் என்று எழுத்துக்கள் மாறி தட்டச்சு ஆகிவிட்டது. இப்பொழுது தான் பார்த்தேன்.

    ReplyDelete
  14. ஜீவி சார்! அதை விடுங்கள்! ரொம்பச் சின்ன விஷயம்!
    சாண்டில்யன் பவனி வருகிறார், அடுத்த பதிவில்! இன்னும் சிறிது நேரத்தில் பராக்! பராக்!

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)