Thursday, July 8, 2010

பெண்ணுக்குப் பெண்ணே!! எண்டமூரி வீரேந்திரநாத்



எண்டமூரி வீரேந்திரநாத்  எழுதிய கதைகளைத் தொடராகவும், புத்தகங்களாகவும் படித்திருந்த எனக்கு அவருடைய சிறுகதைகளைப் படிக்கிற வாய்ப்பு சமீபத்தில் தான் கிடைத்தது. 

ஆயிரம் பக்கங்களில் எழுதப்படும் நாவல் வடிவத்தை விட சிறுகதை களின் வீரியம் அதிகம் என்பதை இந்தப் பக்கங்களில் சில சிறு கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பேச ஆரம்பித்திருக்கிறோம்.

சிறுகதையின் மிகப் பெரிய பலமே, அது வர்ணனைகளில் அதிகம் பூசி மெழுகாது சொல்ல வரும் விஷயத்தை நேரடியாகவே சொல்லி விடுவது தான். மிகவும் பிரபலமான நாவலாசிரியர் என்றாலுமே கூட சிறுகதை என்று வரும்போது அவ்வளவாக சோபிக்காத தருணங்களும் நிறைய உண்டு என்பதைப் பார்த்திருக்கிறேன்.

இந்த சிறுகதையைப் பாருங்கள்! பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்கள்.ஆனால் நடைமுறையில் பார்த்தால் பெண்ணுக்குப் பெண்ணே பெரிய எதிரியாகவும், சோதனையாகவும் இருப்பதைப் பார்க்க முடியும்.

பெண்ணீயம் என்று பேசும்போது, ஆண்களிடமிருந்து விடுதலை அல்லது ஆண்களுக்கு சமமாக என்பதை விட, சக பெண்ணிடமிருந்தே விடுதலை, சக பெண்ணுக்குச் சமமாக என்பது தான் உள்ளார்ந்த பொருளாகவும் இருக்கிறது என்பதே இங்கே பெண்ணீயம், பெண்விடுதலை பற்றிப் பேசுகிற புண்ணியவான்கள், புண்ணியவதிகளுக்குப் புரிவதில்லை. இங்கே சமத்துவம் என்று பேச முற்படுகிறவர்கள் ஏதோ உச்சாணிக் கொம்பில் இருந்துகொண்டு உபதேசங்களை அள்ளித் தெளிப்பதைப் பார்க்கும்போது சிரிக்கத் தான் தோன்றுகிறது.

ஒரு சிறுகதை தான்! இரண்டே பெண் பாத்திரங்கள் தான்! எப்படி பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகவும் சோதனையாகவும் இருக்கிறாள் என்பதை நெஞ்சில் தைக்கிற மாதிரி....

"வணக்கம். என் பெயர் சரோஜா." கைகளை கூப்பிக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். சத்யவதி அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள்.

"உங்கள் வீட்டில் வாடகைகு போர்ஷன் இருப்பதாய் ... " பாதிலேயே நிறுத்திவிட்டாள்.

"வாங்க ... வாங்க" என்று வெளியே வந்தாள் சத்யவதி. முன் பக்கத்தில் இருந்த சாமந்தி பூஞ்செடிகளுக்கு நடுவில் இருந்த பாதை வழியாக பக்கத்தில் இருக்கும் போர்ஷனுக்கு அழைத்துப் போனாள். சாத்தியிருந்த தாழ்பாளை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

"மூன்று அறைகள். கடைசியில் இருப்பது சமையல் அறை. கொல்லையில் குழாய் இருக்கு."

""வாடகை எவ்வளவு?" சரோஜா கேட்டாள்.

"அறுநூறு. கரெண்ட் சார்ஜ் தனி."

"எனக்குப் பிடித்திருக்கு. நாளைக்கே வந்துவிடுகிறேன்" என்றாள் சரோஜா.

சரோஜாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த மூன்று வயது பாலு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான். வெளியில் பேச்சுக் குரல் கேட்டு சத்யவதியின் கணவன் சுதாகர் உள்ளே இருந்து வெளியில் வந்து இருவரையும் பார்துவிட்டு மறுபடியும் உள்ளே போய்விட்டான்.

சரோஜா பாலுவின் கையை விட்டுவிட்டு ஹேண்ட்பேக்கில் கையை நுழைத்து "ஒருமாத வாடகையை அட்வான்ஸாக தரட்டுமா?" என்றாள்.

""கொடுங்க" என்றாள் சத்யவதி. சரோஜா பணத்தை எடுத்துக் கொண்டிருந்த போது "உங்களுடைய மகனா?" என்று கேட்டாள்.

 "ஆமாம்."
 "
ஒரே குழந்தைதானா?"

 "ஒரே குழந்தைதான்."

இந்தப் பதிலைக் கேட்டு சத்யவதி திருப்தி அடைந்தாள். எவ்வளவு குறைந்தபேர் இருப்பாங்களோ அவ்வளவு நன்றாக இருக்கும் வீடு. "மொத்தம் மூணுபேர்தான் இருக்கீங்களா?" சாதாரணமாக கேட்பது போல் கேட்டாள்.

"இல்லை. இருவர்தான்."

சத்யவதி திடுக்கிட்டாள். "இருவர் மட்டும்தானா?" சரோஜாவை கூர்ந்து பார்த்துக்கொண்டே கேட்டாள். "அப்படி என்றால் உங்கள் கணவர்..."

 "இல்லை." தாழ்ந்த குரலில் சொன்னாள்.

 "ஐயோ பாவம்!" வருத்தப்பட்டாள். "எத்தனை வருடங்களாச்சு?" சரோஜாவின் நெற்றியைப் பார்த்துக்கொண்டே கேட்டாள். சிவப்பு வண்ணத்தில் குங்குமம் சரொஜாவின் நெற்றியில் பளீரென்று மின்னிக் கொண்டிருந்தது. கணவர் இறந்து போய் ஒருவருடம் கூட ஆகாமல் மறுபடியும் குங்குமப்பொட்டு வைத்துக் கொள்பவர்களை அவள் பார்த்ததில்லை. அதனால்தான் கேட்டாள், எத்தனை வருடங்களாச்சு என்று.

"எது?" "

"அதான். அவர் இறந்துபோய்."

"இல்லை என்றால் இறந்து போய் விட்டார் என்று அர்த்தம் இல்லை." பதில் சொன்னாள் சரோஜா.

"அப்படி என்றால் திருமணம் ஆகவில்லையா?"

"ஊஹ¤ம். ஆகவில்லை."

சத்யவதிக்குப் புரியவில்லை. "அப்போ .... இந்தப் பையன்?" என்றாள்.

 "என் மகன்."

தலையில் பெரிய குண்டைப் போட்டாற் போலிருந்தது சத்யவதிக்கு. அதே நேரத்தில் சுதாகரின் தந்தை ஆ·பீஸிலிருந்து வந்தார். சைக்கிளை திண்ணையில் தூக்கி வைத்துவிட்டு உள்ளே போனார். மறுபடியும் வந்து சைக்கிள் ஸ்டாண்ட் சரியாக போட்டிருக்கிறோமோ இல்லையோ என்று பார்த்தார்.
 "
அப்படி என்றால் கல்யாணம் ஆகாமலேயே..." இந்தக் கேள்வியைக் கேட்கும் போது சத்யவதிக்கு அருவருப்பாக இருந்தது.

சரோஜா உடனே பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்து
கொண்டு தாழ்வான குரலில் "ஆமாம்" என்றாள்.

 "உனக்கு அப்பா அம்மா இல்லையா?"

பன்மையிலிருந்து ஒருமைக்கு மாறியதை சரோஜா கவனித்தாள். இருந்தாலும் பதில் சொன்னாள். "இருக்காங்க."

 "எங்கே?"

 "இதே ஊரில்."

 "அப்போ அவர்களுடனே இருக்கலாமே?"

"வெளியில் போகச் சொல்லிவிட்டார்கள்." தீனமான குரலில் சொல்லவில்லை. ஆனால் கண்களில் வேதனை தென்பட்டது.

மேற்கொண்டு என்ன கேட்பது என்று சத்யவதிக்குப் புரியவில்லை. இவ்வளவு இன்ட்ரெஸ்டிங்காக இருந்த அவளை இப்படி பாதியில் அனுப்புவதற்கும் மனம் வரவில்லை.

 "எத்தனை நாளாச்சு?

 "மூன்று வருஷம் எட்டு மாதம் ஆகிறது."

"மூன்று வருஷம் இரண்டு மாதங்கள் வயதுடைய பாலு இருவரின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

 "அப்போ இத்தனை நாள்?"

 "காந்தி தெருவில் குடியிருந்தோம். வீட்டுக்காரர்கள் ரொம்ப நல்லவர்கள். ஆனால் அவர்கள் அந்த வீட்டை விற்கப் போகிறார்கள். அதான் வீடு மாற வேண்டியதாகிவிட்டது" என்று சொல்லிக்கொண்டே ஹேண்ட்பேக்கிலிருந்து பணத்தை எடுத்தாள். "இந்தாங்க அறுநூறு."

சத்யவதி வாங்கிக்கொள்ளவில்லை. "வீட்டில் அவரைக் கேட்கணும்" என்றாள்.

"உங்க கணவர் உள்ளே இருக்கிறார் போலிருக்கே? கேளுங்கள்."

உண்மையில் யாரையும் கேட்க வேண்டியதில்லை. அந்த வீட்டில் சத்யவதி வைத்தது தான் சட்டம். ஆனால் இவளிடமிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யைச் சொல்லி விட்டாள். இனிமேல் எந்தச் சாக்கு சொல்லித் தப்பித்துக் கொள்வது என்று தெரியவில்லை.

ஆனால் அதைப் புரிந்துகொண்ட சரோஜா, "உங்களுக்கு வாடகை விஷயத்தில் எந்தப் பிரச்னையும் வராது. மாதா மாதம் முதல் தேதி அன்றே கொடுத்து விடுவேன். வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு பதில் இரண்டு மாத வாடகையை அட்வான்ஸாகத் தருகிறேன். கடவுள் கிருபையால் கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் சம்பளம் வருகிற வேலைதான் செய்து வருகிறேன்" என்றாள்.
"அது வந்து .. வாடகையைப் பற்றி இல்லை."

"பின்னே?"

சத்யவதியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. உண்மையில் தன்னுடைய பிரச்னை என்னவென்று அவளுக்கே புரியவில்லை. வீட்டை வாடகைக்குக் கொடுப்பதில் மட்டும் விருப்பம் இல்லை. "ஏதாவது ·பேமிலிக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறோம்" என்றாள்.

சரோஜா சிரித்தாள். "ஸ்டேட் கவர்ன்மெண்ட் டி.ஏ. ரூல்ஸ் படி நாங்களும் ·பேமிலிதானே?"

அந்தச் சிரிப்பு சத்யவதிக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. "கௌரவமான குடும்பத்துக்கு" என்றாள். 'கௌரவம் ' என்ற சொல்லை வேண்டும் என்றே அழுத்தமாக உச்சரித்தாள்.

சரோஜாவின் முகம் ஒரு வினாடி களையிழந்தது. ஆனால் இந்த அவமானங்களுக்கு எல்லாம்  பழக்கப்பட்டு விட்டதால் உடனே தேறிக்கொண்டு. "மனிதன் கௌரவத்துடன் வாழ்வதற்கும், மனதளவில் ஒரு நிமிடம் பலவீனமாகி விடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பலவீனம் என்பது எல்லோரிடமும் இருக்கும்" என்றாள்.

தன்னுடைய பாயிண்டையே பிடித்துக்கொண்டு வாதம் செய்து கொண்டிருந்த சரோஜாவைப் பார்க்கும் போது சத்யவதியின் கோபம் மேலும் அதிகரித்தது. வீட்டுக்காக அவள் கண்ணீர் விட்டு  வேண்டு கோள் விடுப்பாளோ என்று எண்ணியிருந்தாள். அதனால் சட்டென்று சொல்லிவிட்டாள். "அவ்வளவு பலவீன மனம் படைத்தவர்கள் எங்கள் வீட்டு போர்ஷனில் குடியிருக்க வேண்டாம்."

அந்த வார்த்தையை சரோஜா முன்னாடியே ஊகித்திருந்தாள் போலும். அதனால் இந்த முறை நிலை தடுமாறாமல், உணர்ச்சியற்ற குரலில் நிதானமாக சொன்னாள். "ஒரு காலத்தில் இருந்த பலவீனம் அது. அப்பொழுது உலகத்தைப் பற்றி அதிகம் தெரியாது. காதலுக்கும் கல்யாணத்திற்கும் வித்தியாசம் தெரியாது. ஒரு விதமாக பார்த்தால் அதை பலவீனம் என்று கூட சொல்ல முடியாது. உங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கு? இது போன்ற விஷயங்களில் ஆண்தான் பெண்ணை வழி நடத்துவான். தன்னுடைய எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக இருக்கப் போகிறது என்ற விஷயம் ஒரு பெண்ணுக்கு எல்லாம் முடிந்த பின்தான் தெரியும். நீங்க சொன்னீங்க இல்லையா பலவீன மனம் படைத்தவர் உங்க வீட்டு போர்ஷனில் குடியிருக்க வேண்டாமென்று? எனக்கு இப்பொழுது எந்த பலவீனங்களும் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் இந்நேரத்திற்கு மறுபடியும் ..."

"சிவ சிவா " என்று சொல்லிக்கொண்டே காதுகளைப் பொத்திக்கொண்டாள் சத்யவதி.

சரோஜா மேலும் ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் பாலு சுண்டு விரலைக் காட்டி" அம்மா!" என்றான். "ஒரு நிமிஷம் இரு கண்ணா!" என்று சொல்லிவிட்டு சத்யவதியை நோக்கித் திரும்பினாள். "நீங்கள் சொல்லலாம். இப்போ எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருப்பதால் அப்படி எதுவும் ஆகாமல் முன் ஜாக்கிரதையாக இருக்கிறேனோ என்று. மனச்சாட்சியை ஏமாற்றும் மனப்பான்மை படைத்தவளாக இருந்தால் இவனை என் தம்பி என்று சொல்லி இருப்பேன். இல்லையா பிறந்ததுமே ஏதாவது அநாதை இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருப்பேன். நீங்களும் ஒரு பெண்தானே? ஒரு தடவை ஏமாந்துபோன பெண் இனி ஜென்மத்தில் ஆணை அருகில் வரவிடமாட்டாள் இல்லையா? இப்போ எனக்கு எந்த பலவீனங்களும் இல்லைங்க" என்றாள்.  

பலவீனம் என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னாள். "அதெல்லாம் எனக்கு பதினெட்டு வயது இருக்கும் போது நடந்த கதை. காலையில் உதிக்கும் சூரியனின் அழகில், கனவுலகில் கரைந்து போவதை பலவீனம் என்று நீங்கள் சொன்னால் அப்போ எனக்கு இருந்தது அதுதான். இப்போ என்னுடைய லட்சியமெல்லாம் இவனை வளர்த்து ஆளாக்குவதுதான். உண்மையை விட ஒழுக்கம் உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் உண்மையை மாற்ற முடியாது இல்லையா. போகட்டும், உங்களுக்கு அவ்வளவு அவநம்பிகையாக இருந்தால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் எங்கள் வீட்டு வாசற்கதவை வெளியே பூட்டிக்கொண்டு விடுங்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு என்ன ஆட்சேபணை  இருக்கப் போகிறது? உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரலாம். ஆபீசுக்குப் போவதாக சொல்லிவிட்டு மதிய நேரத்தில் நான் யாருடனாவது சுற்றலாமே என்று. இந்த பிராபபிலிடீ நீங்க ஒரு பேமிலிக்குக் கொடுத்தாலும் இருக்கும் இல்லையா?"

சத்யவதிக்கு திடீரென்று அடுப்பின் மீது வைத்த குழம்பு பற்றி நினைவுக்கு வந்தது. அதன் கமறல்  வாசல் வரை வந்து மூச்சுத் திணறுவது போல் தோன்றியது. இவ்வளவு துணிந்தவளுடன் தனக்கு பேச்சு எதற்கு என்று நினைத்தவளாய், கைகளை கூப்பி வணங்கி விட்டு, "போயிட்டு வாம்மா. நீ நல்லவளாகவே இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பலவீனங்கள் இருக்கலாம்"  என்றாள்.

சரோஜா சிரித்தாள். வேதனையும், இரக்கமும் கலந்த சிரிப்பு. நதியில் மூழ்கிக் கொண்டிருப்பவன் துரும்பைப் பிடித்துக்கொண்டு நீந்திக் கொண்டிருப்பனைப் பார்த்து சிரித்த சிரிப்பு. "உங்கள் வீட்டு ஆண்களுக்கு பலவீனங்கள் இருக்கு என்று ஒப்புக் கொள்கிறீர்கள் இல்லையா? பலவீன மனம் படைத்த ஒரு பெண் பக்கத்து போர்ஷனுக்குக் குடிவருவதை விரும்பாத நீங்கள் பலவீனங்கள் இருக்கும் ஆணின் பக்கத்தில் எப்படி தினந்தோறும் படுத்துக்கறீங்க?"  

வேதனை கலந்த புன்முறுவல் அவள் இதழ்களில் நெளிந்தது. "இப்படி வெளிப்படையாக கேட்டதால் உங்கள் கண்களுக்கு நான் ஒரு அரக்கியைப் போல் தென்படுகிறேன் இல்லையா?" 

சட்டென்று அவள் குரல் தழுதழுத்தது.

"நானும் உஙகளைப் போல் அப்பாவியாய், மலரைப் போன்ற சுகுமாரத்துடன் கனவுலகில் ஆடிபாடிக் கொண்டிருந்தவள்தான். கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இதில் பலவீனம் எதுவும் இல்லை. எல்லாம் ஹீனம்தான். தாலி கட்டவில்லை என்பதால் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அப்பாவின் முதுகிற்குப் பின்னால் மறைந்து நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மகன், தனக்கு நியாயம் வழங்கும் படி கேட்க வந்த பெண்ணைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிய மாமனார், தவறு செய்தவள் சம்பாதிக்கும் மகள் என்பதால் ரொம்பவும் கோபித்துக் கொள்ள முடியாமல் அபார்ஷன் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக சொன்ன தந்தை. இவர்கள் எல்லோரும் சேரந்து ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணின் மென்மையான மனதை காலடியில் போட்டு நசுக்கிவிட்டார்கள்.

அப்பொழுதுகூட எனக்கு வேதனைஏற்படவில்லை! செய்த தவறை ஒப்புகொண்டு இத்தனை ஆண்களை தைரியமாக எதிர்த்து, சொந்தக் கால்களில் நின்று தன் மகனை வளர்த்துவரும் ஒரு பெண்ணை, நீங்களும் ஒரு பெண்ணாக இருந்தும் பக்கத்து போர்ஷனுக்கு குடி வரக்கூடாது என்று தடுப்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. அவ்வளவுதான்

எனக்கு வீடு வேண்டாம். நீங்களே வீட்டிலிருந்து வெளியில் வந்து பாருங்கள்.  

பெண்களுக்கு நிகழும் அநியாயங்களுக்கு மறைமுகமாக துணைபுரிவது ஒரு பெண்தான் என்று புரியும். ஆண்களின் உலகத்திலிருந்து பெண் இனத்தை தனியாக பிரித்து அவர்களை அந்நியப்படுத்துவதும் பெண்ணேதானோ என்று தோன்றுகிறது." 

அவள் திரும்பினாள்.

அவள் கையைப் பிடித்துக்கொண்டு பாலுவும் நகர்ந்தான்.

"தி பெஸ்ட் ஆ·ப் எண்டரி வீரேந்திரநாத்"


சிறுகதைத் தொகுப்பு

அல்லயன்ஸ் பதிப்பக வெளியீடு 

எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் 


3 comments:

  1. இந்தக் கதைக்கு 'இருபெண்கள் இரு வேறு பிரச்னைகள்' என்று தலைப்பிட்டிருந்தால்
    பிரச்னையின் உண்மை சொரூபம் புரிந்திருக்கும்.

    ReplyDelete
  2. கதையின் தலைப்பு பெண்/பெண் என்று தான் இருந்தது. அதை பெண்ணுக்குப் பெண்ணே என்று பதிவின் தலைப்பாக வைத்தது மட்டும் தான் நான் செய்த மாற்றம்.

    இந்தக் கதை ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்கிறது. ஒரு பெண்ணுடைய பிரச்சினையை மற்றொரு பெண் எப்படிப் பார்க்கிறாள் என்பதில் தான், பெண்கள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வோ பதிலோ இருக்கிறது என்பது தான்.இங்கே பெண்ணீயம், பெண் விடுதலை என்று பேசிக் கொண்டிருக்கிறவர்களை விட, மிகத் தெளிவாகவே பிரச்சினையின் வேர் எங்கிருக்கிறது என்பதை இந்தச் சிறுகதை சொல்வதாகவே எனக்குப் படுகிறது.

    ReplyDelete
  3. இந்தச் சிறுகதையின் உடனடித் தாக்கம் என்ன என்பதைத் தனிவண்ணத்தில் வித்தியாசப் படுத்திக் காட்டியதே, இந்தச் சிறுகதை எனக்குச் சொன்ன செய்தியாகப் பார்க்க முடியுமே ஜீவி சார்!

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)