Friday, August 27, 2010

நெருப்புக் கோழி....! ந.பிச்சமூர்த்தி

 

பூவனம் வலைப்பதிவில் ஜீவி சார் எழுத்தாளர்களைப் பற்றிய தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகிற விதத்தில், சென்ற மாதம், ந.பிச்சமூர்த்தியை பற்றிய ஒரு சித்திரத்தை அழகாக வரைந்திருந்தார். 


"அசப்பில் தாகூர் மாதிரி ஒரு தோற்றம். போதாக்குறைக்கு 'காபூலிக் குழந்தைகள்' என்று கதையொன்றும் எழுதியிருக்கிறார். அவரது பல கதைகள் பொறி போன்ற ஒரு வெளிச்சத்தைத் தாங்கி கொண்டிருக் கும். அந்தப் பொறி எதுவொன்றையும் உன்னிப்பாகப் பார்த்து ரசித்த அவர் மனத்தின் வெளிப்பாடாக இருக்கும்; அவராகப் புனைவாக ஒரு விஷயத்தை நீட்டி முழக்கிச் சொல்லாமல் அவர் பார்த்த காட்சி பற்றிய அதிசயப் படப்பிடிப்பாய் இருக்கும். சில அன்றாடம் நாம் பார்க்கக் கூடியவை தான் என்றாலும், 'அடடா! இந்த மனிதர் இதை இப்படி நோக்கியிருக்கி றாரே. அவருக்குத் தோன்றியது நமக்குத் தோன்றவில்லையே' என்று அவர் பார்த்த பார்வையை ரசிக்கவும் தோன்றும். அடுத்த தடவை அப்படியான ஒரு காட்சி நமக்கு எதிர்ப்படும் பொழுது ந.பி.யின் நினைவு நிச்சயம் நினைவுக்கு வந்து விட்டுப் போகும்."


இந்த வார்த்தைகளே, ந. பிச்சமூர்த்தியின் எழுத்து எப்படிப்பட்ட தாக்கத்தை, படிப்பவர் மீது ஏற்படுத்தியது என்பதைச் சொல்வதற்குப் போதுமானது என்று நினைக்கிறேன்!அன்றாடம் பார்க்கக் கூடியவைதான், பார்த்துக் கொண்டிருப்பவைதான்! பார்ப்பவர் கண்ணுக்கு வித்தியாசமாகத் தெரிவது ஏன் என்பதெல்லாம், பார்த்ததை எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டோம் என்பதில் தான் இருக்கிறது!  

"நெருப்புக் கோழி" 

என்ற இந்தச் சிறுகதையில் கூட, எப்படி, சாதாரணமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் இருந்து, வாழ்க்கையின் யதார்த்தத்தைச் சொல்கிறார் என்று பாருங்கள்!

"நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.

லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப் பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள் தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன்.

வாலிபத்தில் ஒரு ஆற்றங்கரை வழியாகப் போவது வழக்கம். லயன் கரையின் புருவத்தில் கொய்யா மரங்கள் நெடுக இருந்தன. 'கனி வர்க்கத்தில் கொய்யா அப்படி ஒன்றும் சிறந்ததல்ல' என்று இப்பொழுது தானே தெரிகிறது? நாட்டு வைத்தியருடன் கறி, பழ வகைகளின் குண தத்துவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வது நடு வயதிற்கப்பால் தானே!

பால்யத்தில் கொய்யா என்றால், அலாதி மோகம். கொய்யா மரத்தின் வழவழப்பான உடலே இந்தக் கவர்ச்சிக்குக் காரணமாய் இருக்கலாம்; அல்லது கிட்டுப்புள்ளுக்குக் கொய்யாக் கழியை விடச் சிறந்ததொன்றில்லை என்ற நினைப்பாய் இருக்கலாம். தவிர, கை எட்டக் கூடிய தூரத்தில் கொய்யா தொங்கிக் கொண்டிருந்தால், நாளைக்கு வரும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கிளாக்காய் மேல் என்று தோன்றாதா? கருவேப்பிலைப் பழத்தைக் கூட ருசித்துச் சாப்பிடக்கூடிய வயதாயிற்றே!

ஆனால், எவ்வளவு ஆசைப் பட்டாலும் மரத்து நிழலைக் கூட மிதிக்க முடியாது. ஏனென்றால், தோட்டக் காவல்காரன் லயன் கரையின் மேல் நந்தியைப் போல் எப்பொழுதுமே உட்கார்ந்து கொண்டிருப்பான். ஆகையால், தினம் கொய்யா மரத்தின் தரிசனத்துடன் திருப்தி அடைந்தேன்.

நரி முகத்தில் விழிப்பது என்பது மெய்யாகக் கூட இருக்கலாம். இல்லாவிட்டால் நானும், என் நண்பர்களும் லயன் கரைப் பக்கம் போன பொழுது தோட்டக்காரன் இல்லாமல் இருப்பானேன்? எங்கள் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது! வேகமாகச் சென்று, ஆளுக்கொரு பக்கம் கொய்யாவைக் கொய்து கொண்டிருந்தோம். 'மளக்'கென்று ஏதோ குச்சி ஒடியும் சத்தம் கேட்டது. மரத்தின் மேலிருந்த நான், உஷாரடைந்து இறங்கத் துவங்கினேன். மறுபடி இலைகளில் நடப்பது போன்ற சலசலப்பின் ஓசை காதில் விழுந்தது. தொடர்ந்து புதரை விலக்கிக் கொண்டு ஒரு கையும், முண்டாசும் தெரிந்தது. தோட்டக்காரன்! அவ்வளவுதான்; என் நண்பர்கள் சிட்டாய்ப் பறந்து விட்டனர்; நான் பாதி மரத்திலிருந்து குதித்தேன். அதற்குள் தோட்டக்காரன் என்னண்டை வந்துவிட்டான். நான் அலங்கமலங்க விழித்தேன்.

"ஏம்பா கொய்யாக்காய் பறித்தாய்?"

நான் மௌனம் சாதித்தேன். வெறும் துண்டை மட்டும் நான் போட்டுக் கொண்டிருந்ததால், அவன் வெடுக்கென்று சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதுதான் சாக்கென்று நான் நடந்து செல்ல ஆரம்பித்தேன்.

"என்ன தம்பி, கொய்யாக்காயைத் திருடிவிட்டு, டம்பமாய் கம்பி நீட்டுகிறாயே?"

"திருட்டென்னப்பா? வேணுமென்றால் கொய்யாக்காய்க்குக் காசு வாங்கிக்கொண்டு போயேன். சின்னப் பையன் என்றுதானே சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டாய். அதை எடுத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே முறைப்பாய் நின்றேன். மனதிற்குள் உதைப்பு தான்.

"சவுக்கத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறாயோ... போ... போ" என்று அவன் கருவினான்.

இதுதான் சாக்கென்று நான் நடையைக் கட்டினேன்.

இந்த சம்பவம் நடந்தபொழுது என் மனம் பட்ட பாட்டைப்பற்றிப் பின்னர் எண்ணும் போது வெற்றி உணர்ச்சிதான் தலைதூக்கி நின்றது.

என் வாக்கின் திறமையல்லவா வெற்றி கொண்டது. அதை மனத்திற்குள் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. இல்லாவிட்டால் கன்னம் பழுத்திருக்காதா? இதைப் போலவேதான் மற்றொரு நிகழ்ச்சியும். எங்கள் வீட்டில் நான்கு குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையக் குழந்தைகள்! தினந்தோறும் வீட்டில் ஒரு தமாஷ்! குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டு வரும். எதுவோ வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொண்டு, பிறகு எல்லாமாகக் கொல்லைக் கட்டு திண்ணையில் வந்து கூடிவிடும். 1-ம் நம்பர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு திண்ணையில் உட்காரும். 2, 3, 4 குடும்பத்துக் குழந்தைகள் எதிர்த்தாற் போல் வந்து நிற்கும்.

"உட்கார். வாய்மேல் கை வை" என்றதும், குழந்தைகள் உட்காரும்.

"பிரார்த்தனை கீதம்", "அருள் புரிவாய் கருணைக் கடலே" என்று குழந்தைகள் ஆளுக்கொரு ஸ்தாயில் கத்தும். காமாட்சி வந்து கை நீட்டியதும், அதில் இரண்டடி விழும். வாங்கிக்கொண்டு, தன் இடத்திற்குத் திரும்பி விடுவாள். இதற்கிடையில் வாத்தியார் பிள்ளைகளை அடித்தால், கசமுசவென்று பேசுவார்களே, அதே மாதிரி இந்தக் குழந்தைகள் பேசிக் கொண்டிருக்கும்.

"பேசாதே, அடிச்சூடுவேன்."

கப்சிப் என்ற மௌனம். இம்மாதிரி மாலைக் காட்சி ஒன்று தினம் வீட்டில் நடைபெறுகிறது. வாத்தியார் அடித்து விட்டார் என்று பள்ளிக் கூடம் போன உடனே திரும்பும் குழந்தைகளும், வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும் குழந்தைகளும் சேர்ந்து இந்த மாலைப் பள்ளிக் கூடத்தை நடத்துவது வியப்பல்லவா?  


எந்த அடியைப் பள்ளிக்கூடத்தில் வாங்க இஷ்டப் படவில்லையோ, அந்த அடியை இங்கே வாங்குவதில் அவர்கள் இன்பம் காணுகிறார்கள்! எந்தக் கட்டுப்பாடு பள்ளிக் கூடத்தில் வேம்பாக இருக்கிறதோ, அதற்கு இங்கே அளவு கடந்த மதிப்பு!

இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த துறை ஒன்றிருக்கிறது. நாடகங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் காணும் வெற்றி தோல்விகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டுவதுதானே நாடகம்? வாழ்க்கையில் தாங்க முடியாத இன்பம் ஒன்று மனத்தில் பிறக்கிறதே, அது ஏன்?

இவைகளை எல்லாம் நினைக்கும் பொழுது ஒரு இயற்கை நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது.

சூரியன் தினம் நம்மைப் பொசுக்குகிறான். சூரியனிடமிருந்து சக்தியைக் கடன் வாங்கும் சந்திரன், நமக்கு ஒளியையும், குளுமையையும் தான் தருகிறான். சூரியனின் வெப்பத்தைச் சந்திரன் என்ன செய்தான்?

இந்த அதிசயத்தின் ரகசியம் தான் என்ன? இப்படி இருக்கலாமோ?

உண்மை என்று ஒன்றிருக்கிறது. காலம் என்று மற்றொன்று  இருக்கிறது. உண்மைக்கும் நமக்கும் இடையே காலம் குறுக்கிடுகிறது. காலம் ஒரு மந்திரவாதி. நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, அவைகளுக்குப் புதிய வர்ணத்தைக் காலம் பூசிக்கொண்டே இருக்கிறது.
அதன் விளைவாகத்தான் செத்தவன் கண் போல் மனத்தில் காட்சி அளிக்கிறான். அடிபட்ட பள்ளிப் பிள்ளைகள் போலிப் பள்ளிக் கூடம் நடத்தி இன்பம் அடைகிறார்கள். ஒரு வேளைச் சோற்றுக்குத் தாளம் போடுகிறவன், நாடகத்தில் ராஜாவாக நடைபோடுகிறான். சூரியனின் கிரணம் சந்திரனை வந்து அடையும்பொழுது, காலம் கடந்து விடவில்லையா? வெப்பத்தை மாற்றிக் குளுமை அளிப்பது காலத்தின் மாய ஜாலமா?

அல்லது,

சூரிய வெப்பத்தை விழுங்கிவிட்டு அமுத ஒளி பொழியும் மாயவித்தை ஏதேனும் சந்திரனிடத்தில் இருக்குமோ?

சந்திரனிலிருந்து மனம் உண்டாகிறதென்று உபநிஷதம் கூறுகிறது. ஜோதிடத்திலும் சந்திரனைக் கொண்டு மனத்தின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். ஆகையால், சந்திரனுக்குள்ள மாய சக்தி மனத்திற்கும் இருக்கலாம் அல்லவா? இரும்பாணியையும், மண்ணையும் தின்னும் நெருப்புக் கோழி மென்மையான அழகிய சிறகுகளைப் போர்த்திக் கொள்கிறதல்லவா? இந்த மாதிரி அற்புத சக்தி மனத்திற்கும் இருக்குமோ? இந்த சக்தியிலிருந்து பிறப்பதுதான் கலையோ?

அல்லது வினையை விளையாட்டாக்குவது தான் கலையோ?"



கதை சொல்லிக் கொண்டு போகிற போக்கில் வரும் கேள்விகள் என்னவோ மிக சாதாரணமாகத் தான் இருக்கின்றன! விடைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தால்......?!

விடை தேட வேண்டுமென்ற உந்துதல் எழுந்தால்....?!



2 comments:

  1. குழந்தைப்பருவத்தை அசைபோடுவது என்பது நம் அனைவரின் இனியதொரு நிகழ்வு.

    அதுவும் வயதானவர்கள் பேரன்,பேத்திகளிடம் காண்பதும்,தாங்கள் இது பொன்ற பருவத்தில்...என நினைத்தாலே சொல்லமுடியாத உணர்ச்சிகள்...

    எத்தனை பேர் முதியோர் இல்லத்தில் இது போன்ற நினைவுகளுடன்......

    வாழ்க்கை...ஒரு வினோதப் பாத்திரம்....!!!!!!

    ReplyDelete
  2. வாருங்கள் சௌமியன்!

    ந.பிச்சமூர்த்தியின் எழுத்துக்களை, அப்படிக் கடந்த காலத்தை அசைபோடுவது என்ற ஒன்றாக மட்டுமே பார்க்க முடியாது!

    ஜீவி சார் தனது பதிவில் சொல்லியிருக்கும் பகுதியை ஆரம்பப் பத்தியாகப் போட்டிருக்கிறேனே, அதை மறுபடி படித்துப் பாருங்கள்! ந.பிச்சமூர்த்தி, தான் காணும் மனிதர்களை, உலகத்தைப் பற்றி உள்வாங்கிக் கொண்ட சித்திரத்தை அதிகப்படியான வர்ணனைகள், புனைவுகள்,எதற்கும் அவசியமே இல்லாமல் அப்படியே நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டு, அப்புறம் அதிலிருந்து தன்னுடைய பார்வையை ஒரு நெருப்புப் பொறி மாதிரிப் படர விடுகிறார் பாருங்கள்!

    இங்கே ஒருவர் தன்னுடைய நினைவில் இருந்து சொல்வதாக ஆரம்பிக்கிற சித்திரத்தை மட்டும் கவனித்தீர்கள் இல்லையா? அங்கே பழைய நினைவுகள் மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒரு தெளிவுக்கு இட்டுச் செல்வதாக இருக்கிறதே, அதுதான், ந.பிச்சமூர்த்தி! அந்தப் பகுதிகளைக் கொஞ்சம் தடித்த எழுத்தில் இருப்பதை மறுபடி படித்துப் பாருங்கள்! அந்தத் தெளிவைக் கூடத் தன்னுடைய கருத்தாக வலியுறுத்தாமல் கேள்விகளாக மட்டும் எழுப்பி, உங்களையே பதில் தேடச் செய்கிறாரே, அதையும் கொஞ்சம் அனுபவித்து விட்டுச் சொல்லுங்கள்!

    நினைவுகள்...அதில் இருந்து எழும் கேள்விகள் எல்லோருக்குமே பொதுவானவை! அதை எப்படி ஆரம்பிக்கிறார், பாருங்கள்!

    "லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப் பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள் தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன்"

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)