Showing posts with label இன்றைய வாசிப்பு. Show all posts
Showing posts with label இன்றைய வாசிப்பு. Show all posts

Friday, December 25, 2020

#பாரதிகவிதைகள் சில தெளிவுகள்! படித்ததில் பிடித்தது!

நல்லதொரு வாசிப்பு அனுபவத்துக்கு காலம் தடையாக இருந்ததே இல்லை என்பதை இன்றைக்கு முகநூலில் பார்த்த ஒரு மீள்பதிவு, அதற்கு இன்னும் வலுசேர்த்த ஒரு பின்னூட்டம் எனக்குப் புரிய வைத்தது. வாசிக்கிறேன், வாசிப்பை நேசிக்கிறேன் என்ற பெயரில் புத்தகங்களுக்கு தத்துப்பித்து விமரிசனங்களாக எழுதிக் குவித்துக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இந்த மாதிரி அற்புதமான பகிர்வைப் படித்தால் உவகை ஏன் பெருகாது!! 


 Jataayu B'luru

"ஹிந்து மத சாரம் அறிந்தவன் பாரதி அவன் சொல்லியிருக்கிறான் இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து" என்கிறார் Venkateswaran Chittor Venkatsubramanian.  சும்மா மேம்போக்காக பாரதி பாடல்களைப் படித்த நினைவில் சொல்லப்படும் அபத்தமான, சாரமற்ற கூற்று இது. 

இயேசு கிறிஸ்து என்று தலைப்பிட்ட மூன்று பாடல்கள் கொண்ட அக்கவிதையில் பாரதி சொல்லும் "உயிர்த்தெழுதல்" சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை.  உண்மையில் அந்தக் கவிதையில்  இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்*  முற்றிலும்  இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில்  குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார் என்பதை அதை வாசிப்பவர்கள் எளிதாகவே உணர முடியும். கிறிஸ்தவர்கள்  நம்புவதைப் போல அதை ஒரு வரலாற்று சம்பவமாகவோ அல்லது  அதன்மூலம் இயேசு அனைவரது பாவங்களை ரத்தத்தால் கழுவியதாகவோ எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்.  

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,

எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;

நேசமா மரியாமக்த லேநா

நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள். 

தேசத் தீர்! இதன் உட்பொருள் கேளீர்:

தேவர் வந்து நமக்குட் புகுந்தே

நாசமின்றி நமை நித்தங் காப்பார்,

நம்அகந்தையை நாம்கொன்று விட்டால்.   (1) 

கவிதை முழுவதும்,  முதலில் அதிகம் அறியப்படாமலிருந்து, பின்பு அண்மைக்காலங்களில் டாவின்சி கோட் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமாக அறிய வந்த மரியா மக்தலேனா (Mary Magdalene) என்ற பைபிள் கதாபாத்திரத்தை  பாரதி கொண்டு வந்திருக்கிறார். 

அன்புகாண் மரியா மக்தலேநா,

ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;

முன்பு தீமை வடிவினைக் கொன்றால்

மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;

பொன்பொலிந்த முகத்தினிற் கண்டே

போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை

அன்பெனும் மரியா மக்தலேநா

ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.  (2) 

ஏசு சிலுவையில் அறையப் பட்டதை "தீமை வடிவினைக் கொல்லுதல்" என்று இந்தப் பாடலில் பாரதி கூறுகிறார். எந்தக் கிறிஸ்தவ மதப்பிரிவுக்காவது இந்தக் கருத்து ஏற்புடையதாகுமா என்ன? 🙂 

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி

உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்,

வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து

வான மேனியில் அங்கு விளங்கும்

பெண்மைகாண் மரியா மக்த லேநா,

பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.

நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்

நொடியி லிஃது பயின்றிட லாகும். (3) 

The Passion of Christ போன்ற படங்களின் வாயிலாக சிலுவையில் அறைதல் என்ற காட்சியை ரத்தமும் சித்ரவதையும் வலியும் வன்முறையும் நிரம்பியதாக, உணர்ச்சிவசத்தை உண்டாக்குவதாக கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகின்றனர். ஆனால், பாரதி அது ஒரு குறியீடு மட்டுமே என்பதை மீண்டும் இந்தப் பாடலில் வலியுறுத்துகிறார்.  சிவபெருமான் திரிபுரங்களை எரித்த புராணத்தைக் குறித்து "முப்புரம் செற்றனன் என்பர் மூடர்கள்;  முப்புரமாவது மும்மல காரியம்" என்று திருமூலர் கூறும் அதே வகையான விளக்கம் தான் இது.   அத்துடன் மக்தலேநா - இயேசு இணையை  பெண்மை - அறம் என்பதன் வாயிலாக பிரகிருதி - புருஷன் (சாங்கிய தரிசனம்), சிவ - சக்தி, சீன மதங்களின் யிங் - யாங் என்பது போன்ற ஒன்றாக பாரதி சித்தரிக்க முயல்கிறார். இத்தகைய குறியீட்டாக்கம் மூலமாக கிறிஸ்தவ மதத்தில் உள்ள மதமாற்ற/ஆக்கிரமிப்பு  வெறித்தனத்தை கொஞ்சம் நீர்த்துப் போகச் செய்யலாம் என்று பாரதி கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது.  ஏனென்றால் கிறிஸ்தவ மதமாற்றம்,  கிறிஸ்தவ பள்ளிகள் செய்யும் கலாசார/பண்பாட்டு அழிப்பு ஆகியவை பற்றி மிகவும் தீவிரமாகவும் காட்டமாகவும் தனது கட்டுரைகளில் பாரதி எழுதியிருக்கிறார் (உதாரணமாக, மிஷன் பள்ளிகளை விலக்கி வைத்தல் என்ற இந்தக் கட்டுரை https://goo.gl/wF6SRx). 

சர்ச் அதிகாரபீடம், மதவெறி, ஆக்கிரப்பு, காலனியம் ஆகியவை அடங்கிய கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து  இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது  என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்துள்ளனர்.  ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீஅரவிந்தர் போன்றவர்களின் கருத்துக்களில் கூட இத்தகைய இழையைக் காணமுடியும். அதன் தாக்கமே இந்தப் பாரதி கவிதையிலும் உள்ளது. இவ்வாறான ஒருவகை நல்லெண்ணத்துடன் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் உண்மையில்  கிறிஸ்தவ மனநிலையில்  பெரிய அளவில் எந்தவகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதில் ஆச்சரியமே இல்லை. மாறாக, அப்பாவி இந்துக்களைக் குறிவைத்து செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரங்களில்  அந்த சான்றோர்களின் கருத்துக்கள் செலக்டிவ்வாக எடுத்தாளப் பட்டு கிறிஸ்தவத்தால் இன்றளவும் துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வருகின்றன.  அதுதான் கண்ட பலன். 

நமது சமகாலத்தில் கிறிஸ்தவ/இஸ்லாமிய மதங்களையும் அவற்றின் சில கூறுகளையும்  நல்லிணக்கம் என்ற பெயரில் சும்மாவாவது  புகழ்ந்துரைக்கும் இந்து ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோர் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும். அத்தகைய தேவையற்ற புகழ்ச்சிகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.   பரம சத்தியமும் என்றும் நிலைத்திருக்கும் தர்மமுமாகிய இந்துமதத்தின் கருத்துக்களை  நேரடியாக உள்ளது உள்ளபடி எடுத்துரைத்தாலே போதும்; உண்மையான ஆன்மீக நாட்டமும்,  இந்துப் பண்பாட்டின் மீது மரியாதையும் கொண்ட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தாமாகத் தேடி வருவார்கள். அப்படி வருபவர்களை ஏற்கவும், இந்து ஆன்மீகத்திலும், இந்து சமூகத்திலும் முறையாக சேர்க்கவுமான வழிகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்குவதே  இந்து ஆன்மீகத் தலைவர்களின் பணியாக இருக்கவேண்டும். அதைவிட்டு, சும்மா அன்னிஇன்னும் ய மதங்களின் கூறுகளைப் புகழ்வதால் எந்த நல்லிணக்கமும் ஏற்படாது.  அத்தகைய புகழ்ச்சிகள் இந்துக்களை மேலும் குழப்பவே பயன்படுத்தப் படும். :

(மீள்பதிவு. முதற்பதிவு December 23, 2018. நன்றி Facebook Memories)  

இந்தப்பகிர்வுக்கு வந்திருக்கும் ஒரு பின்னூட்டம் இன்னும் கொஞ்சம் மெருகேற்றுவதைப் பாருங்கள்

உண்மையே. நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர் " தத்துவத்திற்குத் தான் முக்கியம் கொடுத்தார் என்பதை பின்வரும் பாடல்கள் மூலம் தெளிவாகிறது

#நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்

அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்

அதற்கடுத்த ராமனுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!

மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான்,

மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே

நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.

இது ஒரு தத்துவப் பாடல். புத்தன், ஏசு, ராமன், கிருஷ்ணன் ஆகிய அனைவரும் இயற்கைக்கு மாறான மரணம் அடைந்தனர். ஆனாலும் ஆன்மா அழியாது. அவர்களுடைய பூத உடல் அழிந்தாலும் புகழ் உடம்பு நீடிக்கிறது. இந்தப் பொருளிலேயே பாரதியும் நான் சாகாதிருப்பேன் என்கிறார்.

#பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,

நாமமுயர் சீனத்துத் ‘தாவு’மார்க்கம்

நல்ல ‘கண்பூசி’ மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கொன்றே.

எல்லா மதங்களும் “சாமி நீ, சாமி நீ, கடவுள் நீயே, தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்” — என்று அடுத்தவரிகளில் சொல்லி, பெரிய அத்வைத கருதுக்களை “தத்வமஸி” என்ற உபநிஷத வாக்கியம் மூலம் போதிக்கிறார்.

இத்தகைய தத்துவப் பாடல்களை எடுத்துக் கொண்டு " ஏசு கிறிஸ்துவத்தை ஆதரித்தார் என விஷமப் பிரச்சாரம் செய்கிறது மெஷினெரிகள் 

வாசிப்பு அனுபவமும் ருசியும் பெரிதிலும் பெரிதுகாண் என்று சொல்வதைத்தவிர வேறென்ன சொல்லிவிட முடியும் சொல்லுங்கள்! 

Sunday, February 23, 2020

இன்றைய வாசிப்பு! "எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன்!

கல்கியில் 1965 வாக்கில் தொடர்கதையாக ஜீவகீதம் வெளிவந்து கொண்டிருந்தது. இளம் வாசகனாக,  என்னை அந்தநாட்களிலேயே மிகவும் ஈர்த்தவர் எழுத்தாளர் ஜெகசிற்பியன்! பிறகு அவருடைய பல கதைகளை தேடி வாசிக்க ஆரம்பித்தேன். இன்னமும் அவருடைய சிறுகதைகள் எதையுமே  வாசிக்கவில்லை என்று பார்த்தால் நாவல்களிலுமே  வாசிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை நினைவு படுத்துகிற மாதிரி அவருடைய திருச்சிற்றம்பலம் நாவல் சமீபத்தில் கிடைத்தது. அதை இன்றைக்கு வாசிக்க எடுத்துக் கொண்டிருக்கிறேன்.


2012 செப்டெம்பரில் அமுதசுரபி ஆசிரியராக இருந்த எழுத்தாளர் விக்கிரமன் தினமணி நாளிதழில் ஜெகசிற்பியனைப் பற்றி எழுதிய சொற்சித்திரம் இணையத்தில் காணக்  கிடைத்ததில் நண்பர்களுக்கும் பயன்படட்டுமே என்று இங்கே தினமணிக்கும் எழுத்தாளர் விக்கிரமனுக்கும்  ந்ன்றி தெரிவித்துப் பகிர்கிறேன்.

"எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன்


துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதித்தவர்களுள் அமரர் ஜெகசிற்பியனுக்கு சிறந்த இடமுண்டு. அவர் எழுதுகோலை ஏந்தியபோது தக்க வரவேற்பு அவருக்கு இல்லை. துப்பறியும் நாவல்கள், ஒழுக்கம் குலையாத பாக்கெட் நாவல்கள் என்று வியாபார நோக்கமுடைய இதழாசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப "ஆர்டர் இலக்கியங்கள்' எனத் தொடக்க காலத்தில் அவர் எழுதினாலும், ஒரு கால கட்டத்தில் சரித்திரப் புதினங்கள் தாம் அவரைத் தமிழ் வாசகர் உலகுக்கு அடையாளம் காட்டியது.
பெரும் வருவாய் அவருக்குக் கிடைக்கவில்லை என்றாலும், எதிர்பாராத பரிசும் பாராட்டும், வாசகர் வரவேற்பும் கிடைத்தன. இறுதிநாள் வரை ஆடம்பரமின்றி, தக்க வசதிகளின்றி, எழுத்து ஒன்றையே ஆராதித்து வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெகசிற்பியன்.
மயிலாடுதுறையில், 1925-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பொன்னப்பா - எலிசபெத் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர்கள் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவராயினும் ஜெகசிற்பியன் எழுத்துகளில் சமயச் சார்பு, காழ்ப்புணர்ச்சி, தூஷணை ஏதுமில்லை. சைவ-வைணவ சமய வரலாறு தொடர்பான புதினங்களை எழுதியபோதுகூட அவருடைய எழுத்துகளில் சமயச் சார்பு, வெறுப்பு எள்ளளவுக்குக்கூடப் புலப்படவில்லை.
அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலையன். "நல்லாயன்' இதழில் 1939-ஆம் ஆண்டு முதல் கதை வெளிவந்தபோதும், தொடர்ந்து சில இதழ்களில் அவர் எழுதியபோதும் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் என்ற பெயரில் எழுதினார்.
தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்றார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். தொழிற் கல்வியைப் பயன்படுத்தி பணம் பண்ணாமல் எழுத்தை "தமக்குத் தொழில்' ஆக்கிக் கொண்டார்.
முதல் புதினமான "ஏழையின் பரிசு' எழுதிய 1948-ஆம் ஆண்டிலிருந்து நான் அவரை அறிவேன். "காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் அவர் எழுதிய "கொம்புத் தேன்' முதல் பரிசைப் பெற்றது. அந்தப் புதினத்தைத் தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று ஜெகசிற்பியன் புகழப்பட்டார். அந்த முதல் போட்டியில் அவர் பெற்ற முதற்பரிசு ஒரு சவரன், ஜெகசிற்பியனின் வளர்ச்சிக்குக் கொடியேற்றம் அந்தப் பரிசு.
பிற்காலத்தில், "ஆனந்த விகடன்' நடத்திய வரலாற்று நாவல் போட்டியில் அவருடைய சரித்திரப் புதினம் "திருச்சிற்றம்பலம்' முதல் பரிசு பெற்றது. சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றார்.
ஜெகசிற்பியன் பரிசுகள் பல பெற்றாலும் தன் இயற்கையான, அடக்கமான குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இறுதிவரை எழுத்து ஒன்றையே தெய்வமாக நினைத்து வாழ்ந்தவர்.
"திருச்சிற்றம்பலம்' நாவலுக்கு முன்பே கனமான வரலாற்று நாவல்களும் சமூக நாவல்களும் அவர் படைத்திருக்கிறார். அவர் எழுதி பரிசு எதுவும் பெறாத ஆனால், வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட "நந்திவர்மன் காதலி' படிப்பதற்கு விறுவிறுப்பான வரலாற்று நாவல்.  
சங்க இலக்கியச் சம்பவங்களுக்குப் பாடல் ஆதாரம் சிறிது இருக்கும். மற்றவை ஆசிரியரின் கற்பனை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் கொடி பதித்த மாவீரன் - அவரைக் கதையுடைத் தலைவராகக் கொண்ட "நாயகி நற்சோணை' என்ற புதினத்தை ஜெகசிற்பியன் படைத்தார். இந்த வரலாற்று ஆதாரம் குறித்து விவாதம் ஏற்பட்டது.
 கால வழுக்களைக் கூறுபவர்களுக்கு அவர் அமைதியாக, ""அது என் தவறன்று. ஆராய்ச்சியாளர்கள் பலர் தந்த குறிப்பேயாகும்'' என்று அடக்கமாகக் கூறியுள்ளார். "ஆலவாய் அழகன்' என்ற ஜெகசிற்பியன் படைப்பு உன்னதமானது என்று பாராட்டப்பட்டது.
நாவல் எழுதப் புகுவதற்கு முன்பு ஜெகசிற்பியன் சிறுகதைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தார். பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன.
1958-இல் அவருடைய "அக்கினி வீணை' என்ற கதைத் தொகுதி 17 சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்தது. இலக்கியத் தரத்துடன் கூடிய சிறுகதைகள் படைத்தவரும், கவிஞருமான மீ.ப.சோமு அந்தத் தொகுதிக்கு முன்னுரை வழங்கியுள்ளார். தொடர்ந்து ஊமைக்குயில், பொய்க்கால் குதிரை, நொண்டிப்பிள்ளையார், நரிக்குறத்தி, ஞானக்கன்று, ஒருநாளும் முப்பது வருடங்களும், இன்ப அரும்பு, காகித நட்சத்திரம், கடிகாரச் சித்தர், மதுரபாவம், நிழலின் கற்பு, அஜநயனம், பாரத புத்திரன் என்ற தொகுதிகள் வெளிவந்தன. இப்படி ஏழத்தாழ 14 சிறுகதைத் தொகுதிகள் வெளியாகி இருக்கின்றன. "பாரத புத்திரன்' சிறுகதைத் தொகுதிக்கு, தமிழ் வளர்ச்சித் துறை பரிசளித்துச் சிறப்பித்தது (1979-1981).
"நரிக்குறத்தி' சிறுகதைத் தொகுதியைப் பாராட்டிய கி.வா.ஜகந்நாதன், ஜெகசிற்பியன் கதைகளின் உள்ளுணர்வைப் பாராட்டி அந்தக் கதையின் பெயரில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கு அளித்த முன்னுரையில் சரியான மதிப்பீடு வழங்கியுள்ளார்.
வரலாற்றுப் புதினங்களால் பெரும் புகழ் பெற்ற ஜெகசிற்பியனின் சமூக நாவல்களைப் பற்றித் தனியே ஆராயலாம். 16 சமூகப் புதினங்கள் எழுதியிருக்கிறார். கொம்புத்தேன், தேவ தரிசனம், மண்ணின் குரல், ஜீவகீதம், மோக மந்திரம், ஞானக்குயில் ஆகிய புதினங்கள் பாராட்டப்பட வேண்டியவை. அவரது கதைகள் பெரும்பாலும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றவை.
சிறுகதை, புதினங்கள், சமூகம் - வரலாறு மற்றும் மூன்று நாடகங்களையும், வானொலிக்காகப் பல நாடகங்களையும் படைத்திருக்கிறார். ஜெகசிற்பியன், "நாடகத்துறைக்கு முழு மூச்சுடன் தன் கவனத்தைச் செலுத்தவில்லை' என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.  எழுதியே வாழ்ந்த எழுத்தாளர்களைக் கணக்கிட்டால், ஜெகசிற்பியன் வளமாக வாழ்ந்தவர் இல்லை. "எழுத்தே ஜீவன்; நாட்டுக்கு உழைத்தல்' என்கிற லட்சியத்தோடு வாழ்க்கைத் தோணியை வெற்றிகரமாகக் கரைசேர்க்க சோம்பலின்றி உழைத்தவர்.
கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய புகழ் பெற்ற மொழியாக்கப் புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரை "செகப்ரியர்' என்று பெயரிட்டு எழுதியிருந்தார். பாலையனுக்கு அந்தப் பெயர் பிடித்தது. அதையே தன் புனைபெயராக வைத்துக்கொள்வது என்று முடிவு செய்தார். இதனால்,  மற்றொரு ஷேக்ஸ்பியர் தமிழ் உரைநடைக்குக் கிடைத்தார்.
""இந்த உலகத்தில் நான் என் உயிரைவிட மேலாக நேசிப்பவை இரண்டு. ஒன்று என் அருமைப் பிள்ளைகள். மற்றொன்று என் அழகான புனைபெயர்'' என்று ஜெகசிற்பியன் ஓரிடத்தில் குறிப்பிட்டதாகப் பேராசிரியர் வேலுச்சாமி எழுதியுள்ளார்.
பொருளாதாரத்தில் அவர் சிறக்கவில்லையே தவிர, வாழ்க்கையில் அவர் சிறப்பைக் கண்டார். வாழ்க்கைத் துணைவி தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்ற பெயருடைய மூன்று மகள்கள். திருமணத்தின்போது பயிற்சி பெற்ற ஆசிரியராக தவசீலி இருந்தாலும், அவரைப் பள்ளி ஆசிரியர் பணிக்கு அனுப்பாமல் உள்ளதைக் கொண்டு நிறைவடைந்தார் ஜெகசிற்பியன்.
எழுத்தாளர்களுக்கே உரித்தான "சொந்தமாக பத்திரிகை' நடத்திய முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், தொடர்ந்து நடத்தமுடியவில்லை.
அவருடைய "ஊமத்தைப் பூக்கள்' என்ற சமூகப் புதினம் "குமுதம்' வார இதழில் தொடராக வெளிவரத் தொடங்கிய சில வாரங்களிலேயே அதாவது, 1978-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி ஜெகசிற்பியன் காலமானார்.
அவர் மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று தமிழ் எழுத்தாளர் சங்கம் நினைத்தது. சங்கத்தின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்த அன்றைய அமைச்சராய் இருந்த இராம.வீரப்பனால் "திரு.வி.க. பரிசு' மற்றும் ரூ. 5000 தமிழக அரசால் ஜெகசிற்பியன் குடும்பத்துக்கு  வழங்கப்பட்டது.
"எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன், 53 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் ஆழமும், அகலமுமுள்ள அவர் படைப்புகள் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

இன்றைக்கு யார்யாரோ கதை எழுதுகிறேன் பேர்வழி என்று எழுத்தாளர்களாக உலா வருவதில் எது நல்ல எழுத்து என்பதை அடையாளம் கண்டுகொள்வது மிகக் கடினமானதுதான். ஒரு நல்ல எழுத்தை தமிழுக்குத் தந்தவராக, ஜெகசிற்பியனை வாசித்தவனாக, நண்பர்களுக்கு மறுபடியும் நினைவுபடுத்துவதில் மகிழ்கிறேன்.     

மீண்டும் சந்திப்போம்.   

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)