திரு வி.திவாகர் எழுதிய புத்தகங்கள் கிடைக்கிறதா என்று பாருங்கள் என்று புத்தகத் தலைப்பு, பதிப்பகங்கள் பெயரைச் சொன்னேன். திருமலைத் திருடன் மட்டும் இருப்பதாகவும் வாங்கிவிடலாமா என்றும் கேள்வி வந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்து விட்டது.
திரு வி.திவாகர் எழுதிய S M S எம்டன் 22-09-1914 வரலாற்றுப் புதினத்தைப் பற்றி ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். ஆசிரியர் எழுதிய நான்கு புதினங்களுமே சரித்திரப் புதினங்கள் தான்!
சரித்திரப் புதினங்களை எழுதுவதில் உள்ள பெரிய சிக்கலே, ஒரு சரித்திர நிகழ்வை எடுத்துக் கொண்டு அதனுடன் ஓட்டிப் போகிற மாதிரிக் கதைக் களத்தையும், பாத்திரங்களையும் உருவாக்க வேண்டும். கொஞ்சமல்ல, நிறையவே படிக்க வேண்டும், ஆதாரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அத்தனையையும் ஒரே இடத்தில் கொட்டி விடவும் முடியாது, தேவைப்படுகிற இடத்தில் பொருத்தமானவைகளை மட்டும் கதையோடு சேர்த்துப் பின்ன வேண்டும். கொஞ்சம் கூடுதல் உழைப்பு இல்லாவிடில், சரித்திரக் கதை எழுதுவதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது!
இங்கே தமிழில் சரித்திரக் கதை படிப்பதில் கல்கி ரா.கிருஷ்ண மூர்த்தி ஒரு மிகப் பெரிய ஆர்வமுள்ள வாசகர்களை உருவாக்கினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கல்கியை வைத்து மட்டுமே சரித்திரக் கதைகளை எடை போடுகிறவர்களாகவுமே அந்த நேரத்துத் தமிழ் வாசகர்கள் குறுகிப் போனார்கள் என்பதும் உண்மை. அதனால் தான், கல்கியை அடுத்து சரித்திரக் கதைகளை எழுதியவர்களுக்கு, கல்கிக்குக் கிடைத்தது போல வெளிச்சமோ வாசகப் பரப்போ கிடைக்கவில்லை என்பது என்னுடைய கருத்து.
கல்கியில் அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் புதினம் வாசகர்களுடைய பேராதரவைப் பெற்றது என்பது உண்மை. ஆனால் அந்தப் புதினத்தில் எந்த அளவு சரித்திரம் இருந்தது என்பது கேள்விக்குரியதுதான். அகிலனுடைய படைப்பில் வேங்கையின் மைந்தன், வெற்றித் திருநகர், கயல்விழி என்று மூன்று சரித்திரப் புதினங்கள் வந்ததில் வெற்றித் திருநகரில் கொஞ்சம் கூடுதலாக சரித்திரம் இருந்தது, அதையடுத்துப் பாண்டியர்களுடைய வரலாற்றில் ஒரு பகுதியைக் கயல்விழி கொஞ்சம் சொன்னது என்பதை அளவுகோலாக வைத்துப் பார்த்தால், வேங்கையின் மைந்தன் புதினம் பெரிய அளவில் சரித்திர நிகழ்வுகளை ஆதாரம் கொண்டு எழுதப்படவில்லை என்பதும் தெரியும்.
சரித்திரக்கதைகளை எழுதுவதில் தனக்கென்று ஒரு தனிப்பாணியைக் கையாண்டவர், வெறும் சோழர்கள், பல்லவர்கள் என்று குறுகிப்போய் விடாமல், இந்த தேசத்தின் பல பகுதிகள், இனங்களையும் தொட்டு சுவைபட எழுதியவர் என்றால் அவர் சாண்டில்யன் ஒருவர் மட்டுமே. மலைவாசல் புதினத்தில் ஹூணர்களுடைய படையெடுப்பைப் பற்றி, குப்த சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைத் தொட்டு எழுதினாரென்றால், ராஜபுத்ரர்களுடைய வீரம் செறிந்த போராட்டத்தை, தங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமல் அடித்துக் கொண்டு மொகலாயர்களுக்கு இரையாகிப்போன அவலத்தைப் பத்துப் பதினைந்து கதைகளில் சுவைபடச் சொல்லியிருக்கிறார். மராத்திய சிவாஜி, அதற்குப் பின்னால் வந்தவர்கள் என்று மகாராஷ்டிர மண்ணின் கதையைத் தொட்டும் எழுதியிருக்கிறார். யவன ராணி புகார்ச் சோழர்களையும், கடல் புறா அநபாயன் என்ற குலோத்துங்க சோழனுடைய கதையோடு அவனது படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்ற பல்லவ வம்சத்தவனைத் தொட்டும் எழுதியிருக்கிறார்.
கலிங்கத்துப் பரணியில் செயம் கொண்டார் எப்படி ஒரு வெறிபிடித்த கவிதையை அல்லது அன்று இருந்த வெறி பிடித்த சமூக இயல்பைக் காட்டினார் என்பதோடு, சோழர்கள் தங்களுடைய கடல்வாணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான், கலிங்கத்தின் மீது படையெடுத்தார்கள், அதற்கு மொழி இன உணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் கடல் புறா புதினத்தைப் படித்துவிட்டு, அதன் பின்னணியில் கொடுக்கப் பட்ட ஆதாரக் குறிப்புக்களையும் படித்தால் எளிதாக விளங்கும்!
விலை ராணி கதையில் சந்திர குப்த மௌரியன் காலத்தைத் தொட்டு எழுதியிருக்கிறார். மோகனச் சிலையில் சேர, சோழர்கள் கதையைப் பின்னியிருக்கிறார். தஞ்சைச் சோழர்களின் முதல்வனான விஜயாலயன் கதையைத் தொட்டிருக்கிறார்.முத்தரையர்களையும் தொட்டுக் கதை நகருகிறது. பாண்டியர்களைப் பட்டி, அதுவும் பிற்காலப் பாண்டியர்களைப் பற்றி பல கதைகள் சாண்டில்யன் கைவண்ணத்தில் வந்தன. பல்லவர்களுடைய வரலாற்றைக் குறித்த பல கதைகளும் எழுதியிருக்கிறார். என்னுடைய மதிப்பீட்டில், தமிழில் சரித்திரக் கதைகள் என்றால் அது சாண்டில்யன் தான் என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.
களப்பிரர்களைத் தொட்டு எழுதிய ஒரே கதாசிரியர் நா.பார்த்தசாரதி தான்! நித்திலவல்லியில் களப்பிரர் காலத்தை எடுத்துக் கொண்டிருந்தாலும் களப்பிரர்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவுமே இல்லை. சைவம் தலை தூக்க ஆரம்பித்த காலத்தில், புத்த சமண சமயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த களப்பிரர் காலத்தை தமிழக வரலாற்றின் இருண்ட காலமாக இருட்டடிப்புச் செய்ததில் சைவம் தன்னை எப்படி ஒரு அரசியல் சார்ந்த மதமாகத் தமிழகத்தில் ஸ்தாபித்துக் கொண்டது என்பது கொஞ்சம் சுவாரசியமான வரலாற்றின் பழைய ஏடுகள்!
ஜெக சிற்பியன், விக்கிரமன், கோவி.மணிசேகரன், கௌசிகன், அரு.ராமநாதன், சுஜாதா என்று பலரும் சரித்திரக் களங்களை வைத்துக் கதை பின்னியிருக்கிறார்கள். ஆனால், கல்கிக்குக் கிடைத்த வரவேற்பில் ஒரு சிறு பகுதியைக் கூட அவர்களுடைய முயற்சி பெறவில்லை என்பதில் இரண்டு விஷயங்கள் தெளிவாயின. ஒன்று, கல்கியைப் படித்த வாசகர்கள், அதே மாதிரி நடை, சோழர்களுடைய பெருமை இதை மட்டுமே விரும்பி வரவேற்றார்கள் என்பது! இரண்டாவது, வாசகர்களுடைய முன்னுரிமைகள் வேறு இடங்களுக்கு மாறிவிட்டன. ஒரு பல்லவனைப் பற்றியோ, கனோஜி ஆங்கரே பற்றியோ இல்லை! சினிமா நட்சத்திரங்களின் பூர்வோத்தரங்கள், கிளுகிளுப்பான கிசு கிசுக்கள் என்று மாறிப் போயின.
இப்படி ரசனைகள் மாறிப்போன ஒரு கால கட்டத்தில் எப்படி தைரியமாக சரித்திரக் கதைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார் என்று திரு வி. திவாகரைப் பற்றி எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம் எழுந்ததுண்டு. கல்கி, சாண்டில்யன் போன்றவர்களுடைய சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் மிகவும் கவனமாகக் கதையை, கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்துப் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார் என்பதை எம்டன் கதை விமரிசனத்திலேயே சொல்லியிருக்கிறேன்.
திருமலைத் திருடன் புதினத்தின் முன்னுரையை முனைவர் சிற்பி பால சுப்பிரமணியன் அவர்கள் எழுதியிருக்கிறார். வரலாற்றுப் புதினங்களுக்கே உரியதாக மர்மங்களையும், முடிச்சுக்களையும் வால்டர் ஸ்காட் தன்னுடைய ஆங்கில வரலாற்றுக் கதைகளில் பயன்படுத்தியதாகச் சொல்லி இருக்கிறார்.
வால்டர் ஸ்காட் எழுதியவரலாற்றுப் புதினங்களில் வரலாறு கொஞ்சமும் கிடையாது என்பதை, கொஞ்சம் மேலோட்டமாகப் புரட்டிப் பார்க்கிற வாசகர் எவரும் கண்டுபிடித்து விட முடியும். ஆங்கிலேயர்களிடம் உள்ள பெரிய குறையே, அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறார்போல நீண்ட நெடிய வரலாறு என்பது இருந்ததே இல்லை. ராபின் ஹூட், கிங் ஆர்தர் என்று அவர்களுடைய வரலாறு எல்லாமே வெறும் புனைவுகள் தான்!
அதனால்தானோ என்னவோ, இந்திய வரலாற்றையும் "வரலாறு என்பது வெறும் புனைவுகளால் ஆனது" என்கிற மாதிரிச் சொல்லி வைத்து, இன்றைக்கு பல பதிவர்கள் அதையே கிளிப் பிள்ளைகள் மாதிரி சொல்லிக் கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது
அடுத்து வரும் பதிவுகளில் கொஞ்சம் சரித்திரப் புதினங்களைப் பற்றிப் பேசுவோம்! தொடர்ச்சியாக வரும் என்று சொல்வதற்கில்லை, ஆனாலும் தமிழின் மிகச் சிறந்த சரித்திரக் கதைகளை, அதை எழுதிய கதாசிரியர்களைப் பற்றி, சமகாலத்து ஆங்கில, பிரெஞ்சு சரித்திரக் கதைகளோடு சேர்த்தும் எழுத எண்ணமிருக்கிறது.
முயற்சிக்கிறேன்!
2004 இல் வெளிவந்த திருமலைத் திருடன், மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு சுவாரசியமான விவாதத்திற்கு இட்டுச் சென்றது. சைவ வைணவ மத விவாதமாக எப்படி மாறிப் போனது என்பதை இங்கே இந்த இழையில் படிக்கலாம். இது, விஷயத்தை 360 டிகிரியிலிருந்தும் பார்த்துப் புரிந்துகொள்வதற்காக மட்டும்.
