ஜிப்சி! படம் என்பதைவிட எழுத்தாளர் ராஜு முருகனுடைய லேட்டஸ்ட் இடதுசாரிக் கிறுக்குத்தனம் என்றே சொல்லிவிடலாம்! கிறுக்குத்தனத்தின் உச்சம்! படத்தை ப்ரொமோட் செய்வதற்காக யூட்யூபில் உசுப்பேத்துகிற வீடியோக்களாகப் போட்டுக்கொண்டே வந்து கடைசியில் சரக்கு எதுவுமில்லை என்பதைத் தாங்களே வெளிப்படுத்திக் கொண்டதுதான் மிச்சம் போல! ப்ளூ சட்டை மாறன் இந்த 5 நிமிட வீடியோ விமரிசனத்தில் கிழித்திருக்கிறார்.
இந்த விமரிசனம் கொஞ்சம் அதிகமாகவே டேமேஜ் செய்திருக்கும் போல! பல இடங்களிலிருந்தும் எதிர் வினைகள் வந்துகொண்டே இருக்கின்றன. வெறும் கோஷங்களையே முழுநீளப் படமாக எடுத்தால் என்ன ஆகுமாம்? நானும் நீண்டகாலமாகவே பார்த்து வருவதில், இந்திய இடதுசாரிகளுக்கு அரசியல் தான் சரிப்பட்டு வரவில்லை என்றால், சினிமா, நாடகம் கூடக் கைகொடுக்க மாட்டேனென்கிறதே! ஜனங்களுக்கு அண்ணாயிசம் கூடப்புரிந்துவிடும் போல! ஆனால் இடதுசாரிகள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிய வைக்கவே முடியாதோ? இடது சாரிகளைத் தொட்டுப் பேசிய ஏதாவது ஒருபடம் நினைவுக்கு வருகிறதா? கொஞ்சம் சொல்லுங்கள்! இத்தனைக்கும் கலை, இலக்கியம் எல்லாம் மக்களுக்காகவே என்று எழுத்தாளர் சங்கம், கிராமிய இசைக்குழு, என்று ஏகப்பட்ட புரட்சிகர முன்னெடுப்புக்களைத் தொடர்ந்து செய்துவருகிற இடதுசாரிகளுக்கு, ஒரு சின்ன விஷயத்தைக் கூடக் குழப்பமில்லாமல் சொல்ல முடியவில்லையா? கடலை உருண்டையில் கூட சர்வதேசியம் பேசியவர்கள், இப்போது சரவதேசியத்தைக் கைவிட்டு லோக்கல் பாலிடிக்ஸ் ஒன்லி என்று இறங்கிவந்தும் கூட, இப்படி சறுக்கிக் கொண்டே வருகிறார்கள் என்றால் ....?
ராஜூமுருகனுடைய ஜிப்சி படத்தைப் பற்றியதே அல்ல இந்த விமரிசனம் என்பது நண்பர்களுக்குப் புரிந்தே இருக்கும் இல்லையா? காலாவதியாகிப் போன இந்திய இடதுசாரிகள், காங்கிரஸ் மாதிரிக் கரிக்கட்டையாக மறுபடி உயிர்த்தெழ முடியாத அளவுக்குப் போய் விட்டார்களே என்பது தான் என் விசனமாக!
சினிமா மாயையை விட திராவிட மாயை ஆபத்தானது! இப்படிச் சொல்வதற்குக் கூட விடாமல் டாக்டர் கிருஷ்ணசாமியை புதியதலைமுறை சேனலின் கார்த்திகேயன் குறுக்கே விழுந்து மறிப்பது வேடிக்கை! டாக்டர் கிருஷ்ணசாமியோ அவருடைய புதிய தமிழகம் கட்சியினரோ குறையில்லாத, விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லதான்! ஆனால் இவருக்குக் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச கவனத்தைக் கூட தமிழக அரசியல் களத்தில் கொடுக்கவில்லை என்பது தற்செயலானது அல்ல. எதற்கெடுத்தாலும் பாமகவுடன் ஒப்பீடு, மோதுவதில் மட்டுமே குறியாக இருக்கும் திருமாவளவன் தன்னை தலித் சமூகத்தின் ஏகப் பிரதிநிதியாக பொசிஷன் செய்துகொள்வதற்கு இங்குள்ள ஊடகங்களும், கழகங்களும் துணையாக இருந்தார்கள்! அதன்பின்னாலும் ஒரு அரசியல் இருந்தது.
முகநூலில் இந்தப்புத்தகத்தைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகக்குறிப்பை வாசித்தேன். இந்த வருடம் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் உடனே சேர்த்துக் கொள்ள வைத்த ஒரு அறிமுகம்.
நிவேதிதா லூயிஸ் தனது முதல் பெண்கள் புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறார் . வீடியோ 58 நிமிடம்.
சென்னை மைத்ரி புக்ஸ் வெளியீடாக 224 பக்கங்களில் ரூ.200/-
மீண்டும் சந்திப்போம்.




