சில ஆளுமைகளைப்பற்றி நம்மிடமிருக்கும் தரவுகளை வைத்து ஒரு பிம்பத்தை உருவாக்கிவைத்திருப்போம் . அது பலநேரம் நிதர்சனத்தில் உண்மையாய் இருப்பதில்லை. கிக்கிரி பிங்கிரி என கோமாளித்தனம் செய்யும் நகைச்சுவை நடிகர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த சந்திரபாபு , காளி N .ரத்தினம் போன்றவர்களின் உண்மையான ஆளுமை பற்றி தெரிந்த போது விக்கித்து நிற்க வேண்டியிருந்தது . அந்த வரிசையில் இன்று வாசித்த `'நூற்றாண்டு கண்ட T.S. பாலையா `' புத்தகம் அவர் பற்றிய நிறைவானதொரு பிம்பத்தை கொடுத்து பிரமிக்க வைத்தது .
1.பாலையா ஒரு நல்ல குணச்சித்திர & நகைச்சுவை நடிகர் , 2. அவர் சிவாஜி எம்ஜிர் காலத்திய நடிகர் . என்று இதுநாள் வரை நினைத்திருந்தது எவ்வளவு தவறு என்று புரியவைத்தது புத்தகம் . 1936 ல் திரைத்துறையில் நுழைந்தவர் 1950 ல் உச்சம் தோட்டிருக்கிறார் . அந்த காலகட்டத்தில் தொடர்ந்து பாகவதர் , பியூ சின்னப்பா விற்கு எதிராக வில்லன் என்றால் பாலையாதான் என்று நின்று களமடியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் எல்லிஸ் .டங்கன் சதிலீலாவதி ,அம்பிகாபதி , மீரா என தன் படங்களில் பாலையாவை தொடர்ந்து நடிக்க வைத்திருக்கிறார். இவரது திறமையை இனங்கண்டு கொண்டதையும் தன் நடிப்புக்கு உயிர் தண்ணீர் ஊற்றியதையும் நன்றியுடன் நினைவு கூருகிறார் பாலையா .
`பி எஸ் வீரப்பா & எம் `ஆர்`ராதா போன்றோர்களுக்கு முன்னோடி வில்லனாக துலங்கியவர் .செறிவான கதாபாத்திரங்கள் என்றால் கூப்பிடுங்கள் பாலையாவை என்ற நிலையில் இருந்திருக்கிறார் . உதாரணமாக அண்ணாவின் வேலைக்காரி நாடகம் படமாக்க பேச்சுவார்த்தை நடந்தபோது , இயக்குனரிடம் அண்ணா இரண்டு கேள்விகள் கேட்டிருக்கிறார் அதில் ஒன்று யாருக்கு முக்கிய எதிர்மறை கதாபாத்திரத்தை கொடுக்கப்போகிறீர்கள் என்பது ! "பாலையா" என்றதும் நிறைவாய் ஒப்புக்கொண்டுள்ளார்.ஆரம்பகாலங்களில் பாலையாவின் பெயருக்கு பின்னேதான் எம்ஜிரின் பெயர் திரையில் தோன்றுமென்பதிலிருந்து அவரின் செல்வாக்கு நமக்கு புரிகிறது . இருவரும் ஒன்றாக "சதிலீலாவதி "யில் அறிமுகமானவர்கள் , எம்ஜியார் முக்கியநட்சத்திரமாக 20 ஆண்டுகள் ஆனது . பாலையாவுடன் இணைத்து நடிக்கையில் அவரே ரசிகர்களை ஆக்ரமிக்கிறார் என்று ஒரு கட்டத்தில் அவருடன் நடிப்பதையே தவித்திருக்கிறார் எம்ஜிஆர் .
பாலையாவின் நடிப்பில் அடிப்படையிலேயே நகைச்சுவை தொனி உண்டென்பதை ஆரம்பகாலங்களில் சில வில்லன் கதாபாத்திரங்களில் பளிச்சிட செய்தவர் ,ஒரு கட்டத்தில் கொடூர வில்லனிலிருந்து குணச்சித்திர நடிப்புக்கு நகர்ந்திருக்கிறார் அதற்கு தகுந்தாற்போல கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைந்திருக்கிறது பிற்காலத்தில் AP நாகராஜன் ,ஸ்ரீதர், K .பாலசந்தர் போன்றோர் அவரின் மகோன்மதம் உணர்ந்து தங்கள் படைப்பில் பயன்படுத்தியுள்ளனர் .
காதலிக்க நேரமில்லையில் அந்த கதாபாத்திரத்திற்கு பாலையாதான் என்ற முடிவோடு பாலையாவை பார்க்க போகும் ஸ்ரீதரிடம் ரேஸ் ஆர்வமுள்ள பாலையா சனி ஞாயிறு படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்ற விஷயம் சொல்லப்படுகிறது . கதையை சொல்லி ஒப்புகொள்ளவைத்துவிட்டு பாலையாவிடம் கேட்டேவிடுகிறார் . ஆமாப்பா உண்மைதான் எனக்கு கிண்டில மனச வச்சிக்கிட்டு ஸ்டுடியோக்குள்ள நிக்கமுடியாதப்பா , என்னையும் ஏமாத்திகிட்டு எல்லாரையும் ஏமாத்திட்டு எதுக்கு . அதான் படப்பிடிப்புக்கு போறதில்லை என்கிறார் பாலையா .புரியுது இருந்தாலும் இந்த படத்துக்கு நீங்க சனி ஞாயிறும் படப்பிடிப்புக்கு வரணும். உங்க கதாபாத்திரம் படம் முழுதும் இருக்கு . கொஞ்சம் யோசிச்சவர் . சரி வரேன் என்றவர் சொன்னபடி காலத்தால் அழியாத அந்த கதாபாத்திரத்தை நடித்து கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆரம்ப அத்தியாயமாக விளங்கியவர் .தனது 58 வயதில் மரணமடைந்தார் .
மீண்டும் சந்திப்போம்
T S பாலையா பற்றிய விஷயங்கள் சுவாரஸ்யம்.
ReplyDeleteஉண்மைதான் ஸ்ரீராம்!
Deleteஎனக்கு மிகவும் பிடித்த நடிகர் திரு TS பாலையா அவர்கள்...
ReplyDeleteஅவரைப் பற்றிய செய்திகள் மகிழ்ச்சி.. நன்றி..
பாலையாவின் நடிப்பு எனக்கும் ரொம்பப்பிடிக்கும் துரை செல்வராஜூ சார்!
Delete